Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
வல்லிக்கண்ணன்



தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

தொகுப்பாசிரியர்

வல்லிக்கண்ணன்

ஞானியாரடிகள் தமிழ் மன்றம்

ப.எண்.7, பு.எண்.17, நாகமணிதெரு,

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002.



★ பதிபாசிரியர் : அ. நா. பாலகிருஷ்ணன்

சென்னை - 600 002.

போன் : 28589314

★ உரிமை : பதிப்பாசிரியருக்கே

★ விற்பனையாளர்கள் :

விஜயா பதிப்பகம்

20. ராஜவீதி,

கோயமுத்தூர் - 641 001

போன் 2394614

கெளரா ஏஜென்சீஸ்

எண்.6. தோப்பு வெங்கடாசலம் தெரு,

திருவல்லிக்கேணி,

சென்னை-5.

போன் 28443791, 044-31019286

★ அட்டை பட வடிவமைப்பு :

எம்.ஏ.எஸ். கம்யூனிகேஷன்ஸ்

திருமலைபிள்ளை ரோடு,

தி.நகர், சென்னை - 17.

போன் 98400 - 25535

★ ஒளி அச்சுக்கோப்பு :

சுகன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சென்னை- 2

போன் 284159

★ ஒருங்கிணைப்பு :

ராஜ் எண்டர்பிரைசஸ்,

சென்னை-14 போன் 28111754

பக்கங்கள் : 208

விலை ரூபாய் : 60.00


உள்ளடக்கம்

1. சிவத்திரு ஞானியாரடிகள் ⁠ ⁠வல்லிக்கண்ணன்

2. சிவத்திரு ஞானியாரடிகள் பெருந்தவயோகி ⁠ ⁠டாக்டர் கே. ஏ. மணவாளன்

3. ஞானியாரெனும் சமரசச் சமுதாயத் துறவி ⁠ ⁠டாக்டர் இரத்தினசபாபதி

4. தமிழ் வளர்த்த ஞானியாரடிகள் ⁠ ⁠சின்னகுத்தூசி

5. ஞானியாரடிகளின் வாழ்வும் - பணியும் ! ⁠ ⁠க. திருநாவுக்கரசு

6. ஞானியார் சுவாமிகள் ⁠திரு. மு. அருணாசலம் எம்.ஏ.

7. சமயதீபம் ⁠ ⁠ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார்

8. ஞானியார் அடிகள் ⁠ ⁠உவமைக் கவிஞர் சுரதா

9. ஞானியாரடிகள் மறை. திருநாவுக்கரசு

9. சிவத்திரு. ஞானியாரடிகள் வரலாறு புலவர் க. ப. முருகவேல்


பதிப்புரை

ஞானியாரடிகள் பற்றி புரிதல் தோன்றியது முதல் அவரைப் பற்றிய வரலாறுகளையும், அவர் எழுதிய புத்தகங்கள் எவை என்றும் ஆராய முற்பட்டேன். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தின் நினைவில் வாழும் ஏழாம் குருநாதர், ஐந்தாம் பட்டத்து ஞானியாரடிகளின் நாற்றாண்டு நினைவு மலரை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் தந்தார். மேலும் அடிக்கடி மடத்திற்கு செல்லும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது. ஞானியாரடிகளின் குருபூசைச் சொற் பொழிவுகளில் நானும் கலந்து கொள்வதுடன் தீபம், நா. பார்த்தசாரதியையும் கலந்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்ற ஏற்பாடு செய்தேன். நா. பா. அவர்கள் ஞானியாரடிகளின் நினைவு மலரை படித்துவிட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஆழமான கருத்துக்களை தெளிவான நடையில் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்ச்சி என் மனதில் மேலும் தேடலை உருவாக்கியது.

நா.பா. அவர்கள் சிறிய வயதிலேயே, அதாவது 18வது வயதுக்குள், மதுரை தமிழ் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்றவர். ஞானியாரடிகள் நடத்திய தமிழ் கல்லூரியில் பாலபாடம், நிகண்டு, நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்கள் முதலில் கற்பிக்கும் பணியை அவர் வெகுவாக பாராட்டி புகழ்ந்தார். நாற்றாண்டு மலரில் பாடல் பரிகப் பகுதியில் வரும் ஒரு வெண்பாவை நா. பா. ரசித்து விளக்கினார்.

ஞானியாரடிகள் சிதம்பரம் மு. சுவாமிநாத ஐயரவர்களிடம் தமிழ் நாற்களைக் கற்று வந்தார். ஆசிரியர் நாள் தோறும் குறிப்பிட்ட வேளையில் மடாலயத்திற்கு வந்து கல்வி கற்பித்தார். யாப்பிலக்கணம் கற்பித்த காலத்தில், ஆசிரியர் ஓர் வெண்பா எழுதி அதற்கு வாய்பாடு, சீர், தளை முதலியவெல்லாம் எழுதித் தயாராக வைத்திருக்கும்படி சொல்வார். அடுத்த நாள் அதை அவரிடம் காட்ட வேண்டும். அந்த வழக்கப்படி ஆசிரியர் ஒருநாள் ஓர் வெண்பாவை எழுதி வைத்து விட்டுச் சென்றார்.

“நற்பாடலிபுரத்துநாதனேநாயினேன்

பொற்பாம் நினதடியைப் போற்றினேன்- தற்போது

வேண்டுஞ் செலவிற்கு வெண்பொற்காக பத்து

ஈண்டு தருக இசைந்து”

 என்பது அவர் புனைந்து எழுதி வைத்துவிட்டுச் சென்ற வெண்பா ஆகும்.

அடுத்த நாள் ஆசிரியர் வழக்கம் போல வந்து நோட்டைப் பிரித்துப் பார்த்தார். அவர் பாட்டெழுதியிருந்த பக்கத்தின் அடையாளம் போல, பத்து ரூபாய் நோட்டு ஒன்றை அடிகள் வைத்திருந்ததைக் கண்டார். உடனே ஞானியாரடிகளைப் பார்த்து ‘நான்பாட்டுக்கு (என் மனம் போனபடி) எழுதி வைத்தேன். உண்மையில் பணம் பெற வேண்டும் என்று இப்பாடலை எழுதிவைக்க வில்லை என்று ஆசிரியர் கூறினார்.

அதற்கு அடிகள் நான் பாட்டுக்குத் தான் (பாடலுக்குத் தான்) பொருள் கொடுத்தேனேயல்லாமல் வேறொன்றிற்காகவுமல்ல என்று சிலேடையாகப் பொருள் வரும்படி சொன்னார்.

இந்த சிலேடை நயத்தை வியந்து நா.பா. பாடலின் பொருளைக் கூறி, இருவர் பேச்சிலும் அமைந்திருந்த சிலேடைப் பொருளை விளக்கிக் கூறினார். அவருடைய பேச்சு இன்றும் என் செவிகளில் ஒலித்து நா.பா.வின் பேச்சாற்றலை நினைவுபடுத்துகிறது.

தீபம் நா.பா. அவர்கள் 1987ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ம் நான் மறைந்தார். அவர் ஆற்றிய தற்கால இலக்கிய பணியை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் கடந்த 15 ஆண்டுகளாக ஞானியாரடிகள் தமிழ் மன்றத்தின் வாயிலாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஞானியாரடிகள் பற்றி ஓர் வாரப் பத்திரிகையில், ஞானியாரடிகள் பிறந்த குலத்தைப் பற்றி ஓர் தவறான செய்தி வெளிவந்தது. மடம்வெளியிட்ட நூற்றாண்டு மலரிலிருந்து (1973) ஆதாரத்துடன் மறுப்புக் கடிதம் எழுதி அப்பத்திரிகைக்கு அனுப்பினேன். இந்நிகழ்ச்சி ஞானியாரடிகள் பற்றி ஓர் ஆய்வு நரல் வெளியிடவேண்டும் என்ற எண்ணத்திற்கு மேலும் வலுசேர்த்தது.

ஞானியாரடிகள் தமிழ்மன்றத்தின் சார்பில் “தீபம் யுகம்” நூல் வெளியீட்டு விழாவில் திரு. ஜெயகாந்தன் ஞானியாரடிகள் பற்றி விரிவாகப் பேசினார். அவரது தாய்மாமா ஞானியாரடிகளிடம் பாடம் படித்தார் என்று செய்தியைக் குறிப்பிட்டார். அவரும் கடலூரில் தனது சிறிய வயதில் ஞானியாரடிகள் பார்த்ததை நினைவு கூர்ந்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட “ஞான பீடம்” பரிசு வழங்கும் குழுவின் தலைவராக பணியாற்றிய திரு. கே. ஏ. மணவாளன் அவர்களும், ஞானியாரடிகள் வாழ்க்கை பற்றியும் அவரது தமிழ்ச் சமயப் பணி பற்றியும் மிக ஆழமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார்.

ஞானியாரடிகள் பற்றி திருஜெயகாந்தன் அவர்களிடம் ஓர் கட்டுரை கேட்டதற்கு ஞானியார் சுவாமிகளை தன்னை விட நன்றாக அறிந்த கே. ஏ. மணவாளன் ஐயாவிடம் வாங்கி கட்டுரைத் தொகுதியில் சேருங்கள், சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அவரின் விருப்பத்தை ஏற்று, கட்டுரையை மணவாளன் ஐயாவிடம் பெற்று “தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்” புத்தகத்தில் இணைத்துள்ளேன்.

ஞானியாரடிகள் மடத்திற்குச் சென்று புகைப்படங்கள் எடுத்ததோடு, மடத்தின் குருமூர்த்திகளின் சமாதி தோட்டத்திற்கு சென்று ஞானியாரடிகள் நினைவிடத்தையும் நிழற்படம் எடுத்து இப்புத்தகத்தில் இணைத்துள்ளேன். கவாமிகள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணியைப் பற்றி விரிவாக பல தமிழ் அறிஞர்கள் எழுதியுள்ளனர். பல புத்தகங்களில் ஞானியாரடிகள் பற்றி வெளிவந்த கட்டுரைகளை இப்புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளேன். இந்நூலை சிறப்பாக கொண்டுவர ஏதுவான புத்தகப்பட்டியலை நன்றியுடன் தனியாக இந்நூலில் இணைத்துள்ளேன். தமிழ் சமுதாயத்திற்கு கடந்த நூற்றாண்டில் ஞானியாரடிகள் ஆற்றிய தமிழ்ப்பணியும், சைவப் பணியும் இன்று வரை ஆலமரம்போல் தழைத்து வேருன்றியுள்ளன என்பதை இப்புத்தகத்தில் உள்ளசெய்திகள் நன்கு புலப்படுத்தும். தமிழ் மொழியானது தற்காலக் கணினியையும், தன் வயப்படுத்தி வேகமாக வளர்கிறது என்பது கண்கூடு. மூன்று சங்கங்களைக் கண்ட தமிழ் மொழி இன்று கணினியிலும் நான்காவது சங்கமாக வளர்கிறது.

“தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்” எனும் இக்கட்டுரைத் தொகுதியை தயாரிக்கும் நேரத்தில் “முதல் குடி அரசு சில பிரச்சினைகள் விமர்சனங்கள்" என்ற நூல் எனது நண்பர் மூலம் கிடைத்தது.

இப்புத்தகம் முருகு இராசாங்கம் எம்.ஏ. அவர்ளால் எழுதப்பட்டுள்ளது. கும்பகோணத்திலுள்ள, செங்குயில் பதிப்பகம் அதை 1988ல் வெளியிட்டிருக்கிறது. முதல் ‘குடி அரசு’ இதழை ஞானியாரடிகள் வெளியிட்டுப் பேசிய பேச்சுப்பற்றியும், அதற்கு தந்தை பெரியார் ஆற்றிய பதில் உரையும் இதில் இடம் பெற்றுள்ளனர். இவ்வுரைகள்தான் இப்புத்தகத்தின் பின் பக்க அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. “குடி அரக” முதல் இதழுக்காக ஓர் ஆய்வு நரல் எழுதி வெளியிடப்பட்டிருக்கிறது. அது இராசாங்கம் அவர்களின் விமர்சன ஆற்றலை நன்கு வெளிப்படுத்துகிறது. தமிழில் விமர்சனக் கலை வளர்ச்சியின் ஆழத்திற்கு சான்றாகத் திகழ்கின்ற க. நா. சு., தி. க. சிவசங்கரன் போன்றவர்களுடன் முருகு இராசாங்கத்தையும் இணைத்துக்கொள்ளலாம். தமிழ் மொழி வளர்ச்சிக்கு இலக்கியம் படித்தபிறகு இலக்கணம் படிப்பதா அல்லது இலக்கணம் படித்த பிறகு இலக்கியம் படிப்பதா என்பது மொழி நூல் அறிஞர்களின் விமர்சனத்திற்கு இன்றும் ஆட்பட்டு வருகின்றது. மொழிப்புலமை வேண்டுமானால் சொல்லாட்சி திறன் வேண்டும். நடைமுறையில் சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் வாழும், வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. இது மேலும் வளர வேண்டும். இக்கட்டுரைத் தொகுப்பானது தமிழ் மொழி வளர்ச்சிக்கு வகை செய்ய மீண்டும் ஓர் ஞானியாரடிகள் போன்ற தமிழ் நாற்றங்காலுக்கு உரமாக அமைய வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகும்.

இந்நாலின் முகப்பு ஓவியத்தையும், பின்பக்க அட்டை ஓவியத்தையும் அமைத்திட இனாமாக உழைப்பை நல்கிய பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட, இனிய நண்பருக்கு என் நன்றி உரியது. கட்டுரைகளைப் பெற்றுமுறைப்படுத்தி செம்மைப் படுத்தி பதிப்பித்த மூத்த தமிழ்அறிஞர் வல்லிக்கண்ணன் ஐயாவுக்கும் சிவத்திரு ஞானியாரடிகள் வரலாற்று நூலை இக்கட்டுரைத் தொகுப்பில் இணைத்துக் கொள்வதற்கு இசைவை வழங்கிய திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் மடாலயத்தின் எட்டாம் குருநாதராக அருளாட்சி செய்யும் அடிகளுக்கும், ஒளி அச்சுக்கோப்பு செய்த சுகன் கம்ப்யூட்டர் சிஸ்ட்டத்தார்க்கும், நூலை தயாரித்து அளித்த ராஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அ. நா. பாலகிருஷ்ணன்

சென்னை-2.



ஞானியாரடிகள் நினைவிட கல்வெட்டு

குருமூர்த்திகளின் நினைவிடத் தோற்றம்

மடாலயம் - முன்தோற்றம்

ஞானியாரடிகளுக்கு பாடம் கற்பித்த

ஆசிரியர் சாமிநாதய்யனின் நினைவாக

அமைக்கப்பட்ட நூலகம்

ஞானியாரடிகள் பயன்படுத்திய ஆசனம்,

கைத்தடி விபூதிச்சம்படம், கண்டிகை

ஞானியாரடிகள் பயணம் செய்த மேனா - II

சிவத்திரு ஞானியார் அடிகள்

வல்லிக்கண்ணன்

தமிழ் நாட்டில் சைவமும் தமிழும் தழைத்து ஓங்குவதற்கு சைவ சமய ஆதீனங்களும் மடாலயங்களும் அரும்பணிகள் புரிந்துள்ளன. ஆதீனங்கள் மற்றும் மடாலயங்களின் தலைமைக் குருமூர்த்திகளாக அருளாட்சி நடத்துகிறவர்கள், யாவர்க்கும் இறை உணர்வு ஊட்டுவதோடு, சமயச் சார்பான சங்கங்கள் அமைப்பதிலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பலவகைகளிலும் தொண்டாற்றுவதிலும் ஆர்வம் உடையவர்களாக விளங்குகிறார்கள்.

அவர்கள் பலருள்ளும் தனிச்சிறப்பும் உயர்மதிப்பும் பெற்றவர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் ஆவர்.

திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தில் ஐந்தாவது குருமூர்த்திகளாகப் பொறுப்பேற்று அருள் ஆட்சி புரிந்தவர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். அவர்கள் சிவத்திரு ஞானியாரடிகள் என்ற சிறப்புப் பெயரும் பெற்றிருந்தார்கள். அவர்களது வாழ்வு தமிழின் வாழ்வு, அவர்களது வளம் சைவத்தின் வளம் எனத் திகழும் தன்மையில், ஐம்பத்து மூன்று ஆண்டுகள் செங்கோலோச்சியவர்கள் ஞானியாரடிகள்.

மக்கள் வாழ்வை செம்மைப்படுத்தவும், அவர்கள் நல் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து நல்வாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டவும் குருமார்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் மடாலயங்களில் அமர்ந்து, தாம் நல் ஒழுக்க முறைகளைக் கையாண்டு, பிறரையும் அந்நெறிகளைப் பின்பற்றச் செய்து, யாவராலும் போற்றப்படுகிறார்கள். சீலம் கைக்கொள்ளும் தூயநெறிகளில் வீரசைவநெறி மிகச் சிறப்பானது ஆகும்.

வீரசைவர் அறுபத்துநான்கு சீலங்களைக் கடைபிடிக்க வேண்டும். தக்க கட்டுப்பாடுகளைக் கைக்கொண்டு வாழ வேண்டும். குருவின் திருவடி தியானித்து, குருமொழி கடவாமல் செயலாற்ற வேண்டும். பலபல ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் சீலநெறியில் வாழ்ந்த வீரசைவர் தங்கள் பெயருக்குப் பின் அய்யர் என்று அடைமொழி இணைத்துக் கொள்வது வழக்கம். வீரசைவர், பல பெரிய சிவ ஆலயங்களில் பூசைகள் புரிந்திருக்கிறார்கள். மிகச் சில கோயில்களில் இன்றும் வீரசைவர் பூசை நடைபெறுகிறது.

ஆலய பூசை, இட்டடலிங்க பூசை புராண இதிகாசச் சொற்பொழிவுகள், சிறுவர்க்குக் கல்வி போதனை முதலிய சமுதாயப் பணிகள் பலவற்றை மேற்கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள். தம்மைச் சுற்றியிருந்தவர்களையும் ஒழுக்க நெறியில் ஈடுபடுத்தினார்கள். இவ் உயரிய வாழ்க்கை நெறிகளை மக்களிடம் பரப்புவதற்காக அமைக்கப்பட்டதுதான் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம்.

அருள்திரு சண்முக ஞானியார் என்று போற்றப் பெரும் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் இம்மடத்தின் முதல் குருநாதராக விளங்கினார். அவருக்கும், அவருக்குப் பின் மடாலயத் தலைமைப் பொறுப்பேற்ற மூவருக்கும், பின் வந்தவர்களே ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ஆவர். ஞானியாரடிகள் என்ற பெரும் சிறப்புப் பெற்ற அவர்கள் இம்மடத்தின் ஐந்தாம் குருமகா சந்நிதானம் ஆவார்கள்.

கும்பகோணத்திற்கு வடகிழக்கில் அமைந்துள்ள திருநாகேச்சுரம் என்ற ஊரில், வீரசைவ குடும்பத்தவருக்குக் குருவாக விளங்கிய அண்ணாமலை அய்யர், அவர்தம் துணைவியார் பார்வதியம்மை ஆகியோரின் பிள்ளையாகப் பிறந்தவர் ஞானியாரடிகள் பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் பழநியாண்டி என்பதாம்.

அண்ணாமலை அய்யரும் பார்வதி அம்மையும், தங்கள் முன்னோர் கொண்ட முறைப்படி, திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலய குருமூர்த்திகளைக் குருவாகக் கொண்டிருந்தார்கள். அடிக்கடி திருப்பாதிரிப்புலியூர் சென்று குருவை வழிபட்டுத் திரும்புவது வழக்கம்.

வீரசைவர், தம் மரபு முறைப்படி, பிள்ளைப் பருவச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்றி, சிவலிங்க தாரணையும் செய்து வைக்க வேண்டும். அவ்வாறே பழநியாண்டிக்கும் எல்லாம் செய்யப்பட்டன. பிறகு தம் குருவாகிய ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்துச் சுவாமிகளிடம் சிவலிங்க தாரணம் செய்து வைப்பதற்காக, ஆறாம் மாதத்தில் குழந்தையை பெற்றோர் குருவிடம் கொண்டு வந்தனர்.

அப்போது, ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் நான்காம் குருமூர்த்தியாக மடாலயப் பொறுப்பு வகித்து வந்தார்கள். உங்கள் குழந்தை பழநியாண்டி இனி எமக்குரிய பிள்ளை. அப்பிள்ளையை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என்று குருமூர்த்தி ஏற்கனவே அண்ணாமலை அய்யருக்குக் கட்டளையிட்டிருந்தார்.

குருவாக்கை வேதவாக்காகக் கொண்டு, மிகத் தீவிரமாகப் பின்பற்றி மகிழும் வீரசைவர் குலத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் செல்வக் குழந்தையை ஆறாம் மாதமே குருவின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டார்கள். அன்று முதல் திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தையே தமது இருப்பிடமாகவும், குருநாதரையே தாயும், தந்தையும், குருவும், தெய்வமுமாகவும் கொண்டு வளர்ந்து வந்தார்கள் ஞானியாரடிகள். குருநாதர் ஆணைப்படி பெற்றோர் சிலகாலம் மடாலயத்தில் தங்கியிருந்தனர்.

மடாலயத்தின் நான்காம் குருநாதர், பழநியாண்டியை சின்னஞ்சிறு பருவம் முதலே பல நல்ல பழக்கங்களில் ஈடுபடுத்தினார். எழுத்தறியும் காலம் வந்ததும், சென்னகேசவலு நாயுடு என்பாரை மடத்துக்கு வரவழைத்து, பையனுக்கு தெலுங்கு மொழியைக் கற்பிக்கச் செய்தார். அப்படி நான்கு ஆண்டுகள் பழநியாண்டி தெலுங்கு கற்றார்.

பின்னர், தாய்மொழி தமிழும், ஆங்கிலமும் பயிற்றப் பெற்ற பள்ளியில் சேர்ந்து பழநியாண்டி கல்வி பயின்றார். பள்ளி நாட்களிலும், குருநாதர் பூசை செய்வதற்காக பூக்கொய்தல், நீராடுவதற்காகப் போதிய நீர் முகந்து, வடித்தெடுத்து, தூய்மையுடன் வைத்தல், சந்தனம் அறைத்தல், தீபமிடல் போன்ற பல தொண்டுகளையும் அவர் சிறப்புறச் செய்து வந்தார். அடுத்து தனது ஆன்மார்த்த பூசையை முடித்துக் கொண்டு காலம் தவறாது பள்ளி சென்று வருவார்.

அவர் சிறுபருவத்திலேயே, வீரசைவ சமய தீட்சை பெற்று, தமக்கு இடப்பெற்ற கடமைகளை நன்கு செய்து முடித்தார். அத்துடன்,குருநாதரோ, மடாலயத்தின் தொடர்பு கொள்ளும் பிறரோ, வேண்டுவனவற்றைக் குறிப்பறிந்து காலம் கடவாமல் செய்து முடிப்பதிலும் கருத்தாகயிருந்தார்.

நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கே விழித்தெழுந்து, தம் பாடங்களைப் படித்து எழுத்து வேலைகளை முடித்து விடுவார் அவர். இறைவன் மீது பாக்கள் ஓதுவதையும் அவர் நியமமாகச் செய்து வந்தார். வெளிச்சம் வரும்வரை இவ் அலுவல்களை செய்துவிட்டு, ஒளிபரவத் தொடங்கியதும் நித்திய கருமங்களை முடித்து, பூக்குடலையோடு நந்தவனம் சேர்வார். அங்கு பூக்களையும் பத்திரங்களையும் பறிக்கும் போதே விநாயகரகவல், திருவாசகச் சிவபுராணம், திரு அகவல்கள், திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா முதலியவற்றை மனத்தூய்மையுடன் ஓதி மகிழ்வார். பிறகு நீராடி, காலைச்சிற்றுண்டி கொண்டு, பள்ளி செல்வார்.

மாலையில், பள்ளி முடிந்து திரும்பியதும், அன்று பயின்றவற்றையும், அடுத்த நாள் நடக்க வேண்டியவற்றையும் படித்துச் சிந்தனையில் பதிவு செய்து கொள்வது அவர் வழக்கமாகயிருந்தது. இயன்றவரை சிறிது விளையாடுவதும் உண்டு. இவ்வாறு சிறுபருவத்தில் ஒழுக்க நெறிகளை அவர் பயின்று தேர்ந்ததன் பயனாகவே அடிகளார் பின்னர் யாவர்க்கும் வழிகாட்டியருளும் சிறப்பினைப் பெற்றார் எனக் கொள்ளலாம். பதினாறு வயதுக்குள் அவர் தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், வடமொழிகளைக் கற்றறிந்திருந்தார். அத்துடன் அவர் குருநாதரிடம் சித்தாந்த சாத்திர நூல்களையும் பயின்று வந்ததும் குறிப்பிடத் தக்கதாகும்.

பழநியாண்டிக்கு பதினாறு வயது பூர்த்தியாகி, பதினேழாம் வயது நடந்து கொண்டிருந்தது. மடாலயத்தின் நான்காம் குருமூர்த்தியான ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் இறுதிநிலை எய்தும் கட்டம் வந்து சேர்ந்தது. அவர் நாற்பத் தொரு ஆண்டுகள் பட்டமேற்றுப் பொறுப்பு வகித்திருந்தார். அவருக்குப் பிறகு யார்பட்டமேற்பது என்ற நிலை தோன்றியது. குருநாதர், சிலரது யோசனைப்படி, வேறொருவர் பெயரைக் குறிப்பிட்டு உயில் எழுதி வைத்திருந்தார். எனினும், அவர் பின்னர் மனம் மாறி, அந்த உயிலை நீக்கிவிட்டு வேறு உயில் எழுதினார். அதில் பழநியாண்டியை நியமித்து எழுதிவைத்தார். உடனேயே பழநியாண்டிக்கு சந்நியாச தீட்சையும் செய்து முடித்தார். ஆசாரிய அபிஷேகம் செய்வித்து, முறைப்படி உபதேசம் செய்து வைத்தார்.

பட்டம் ஏற்போர் அச்சமயம் சில சத்தியவாக்குகளைக் கூறி, குரு ஆணையை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும். அந்த மடாலய வரன்முறை மரபையும், சந்நியாச நிலையையும் வழுவாது கடைப்பிடித்து, தம் முன்னோர் ஒழுகி வந்த முறைப்படி, எந்தவிதக் குறைவும் நேராவண்ணம் பூசை நியமங்களைத தவறாது காப்பதுடன், மடாலய மரியாதைக்கு உரிய சிவிகை ஊர்தல், பொதுமக்கள் அன்புடன் புரியும் உபசாரங்களையேற்று அவர்களுக்கு அருள்பாலித்தல் முதலிய நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப் பிடிப்பதாகவும் குருவின் மீது ஆணையிட்டுக் கூறல் வேண்டும். அடிகளார் அனைத்தையும் உறுதிமொழிப்படி தம் வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றி வந்தார்.

அடிகளார் தமது உறுதிமொழிப்படி நடப்பதில் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பதற்குச்சான்றாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். மடாலயத் தலைவர் சிவிகையில் செல்லும் மரபு பற்றியது அது.

சிவிகையில் செல்வதனால் காலதாமதம் ஏற்படுகிறது. விரைவாகப் பல இடங்களுக்குப் போய்வர இயல்வதுமில்லை. காலப்போக்கிற்கு ஏற்பவும், சூழ்நிலைகளுக்குத் தக்கபடியும் சில மரபு ஒழுக்கங்களை மாற்றிக் கொள்வதில் தவறில்லை. அடிகளார் சிவிகை ஊர்வதை விடுத்து, கார் ஒன்றினைப் பயன்படுத்துவது நல்லது. அதனால் விரைவாக குறித்த இடம் சேரமுடியும். எளிதாகப் பல இடங்கள் சென்று, பெருமளவில் மக்களுக்குத் தொண்டாற்ற வாய்ப்பு கிட்டும். இப்படிச் சிலர் அடிகளாரை வேண்டிக் கொண்டார்கள். புதுவைக் கலைமகள், கழக ஆண்டு விழாவிற்கு வருகைதந்த ஞானியாரடிகளிடம், அறிஞர்லதிரு. வி. கலியாணசுந்தரமுதலியார் இக்கோரிக்கையை அன்புடன் முன் வைத்தார்.

அதற்கு அடிகளார் புன்முறுவல் பூத்து, ஒரு கதை சொல்லி மறுத்துவிட்டார்கள். ‘யாமும் முன்னோர் கைக்கொண்ட முறைகளைப் பின்பற்றியே வந்துள்ளோம். அதனை மாற்றி நடந்தால், உள்ளத்தாற் பொய்யாதொழுகல் என்ற மறைமொழி கற்ற பயன் என்னாவது?' என்று தெளிவுபடுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சி 1913ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அதன் பிறகு ஞானியாரடிகள் பலப்பல நிகழ்ச்சிகளுக்கும் சிவிகையிலேயே சென்று வந்தார்கள். சென்னைக்கும் பலமுறை சென்று திரும்பியது உண்டு. அதனால், வழியில் உள்ள சிறு கிராம மக்களும் அடிகளைக் காணவும், அவர்களிடம் அன்பு கொள்ளவும் வாய்ப்புகள் கிட்டின. சிற் சில கிராமங்களில் மக்கள் அடிகளாரின் சொற்பொழிவைக் கேட்டு இன்புறும் பேற்றினைப் பெறவும் முடிந்தது.

அடிகளார் தாம் கொண்ட உறுதியிலிருந்து மாறவேயில்லை என்பதையும் திரு.வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

‘ஞானியார் மடத்தலைமையும் சிவிகையூர்தலும் இன்ன பிறவும் சுவாமிகளை வெளியூர் செல்லாதவாறுதகைந்து வந்தன. அவைகள் சுவாமிகளைச் சிறைப்படுத்தின என்றே சொல்வேன். இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் சுவாமிகளின் தமிழைப் பருக எவ்வளவு விழைந்தன என்பதை யான் அறிவேன்.

1941 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவிலிருந்து இராமசாமி நாயுடு என்ற அன்பர் சென்னை வந்திருந்தார். ஞானியாரடிகளையும் திரு.வி.க.வையும் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல அவர் பெரிதும் விரும்பினார். அடிகளின் இசைவைப் பெற நாயுடுவும் திரு.வி.க.வும் மடாலயம் சேர்ந்தனர். நாயுடு அடிகளிடம் தம் விருப்பத்தைக் கூறினார். ‘எனக்குள்ள தடைகளை முதலியாரவர்கள் சொல்வார்’ என்ற பதில் சுவாமிகளிடமிருந்து நகைப்புடன் பிறந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்விரண்டு நிகழ்ச்சிகளுககுமிடையே சுமார் முப்பதாண்டுகள் ஓடியுள்ளன. முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு கால ஓட்டத்தில் அடிகளாரின் மனம் மாறியிருக்கக்கூடும் என்று திரு.வி.க எண்ணியிருக்கலாம். ஆனால் அடிகளாரின் மனஉறுதி சிறிதளவும் தளரவில்லை என்பது நிரூபணம் ஆயிற்று.

தமது வாழ்வின் இறுதிவரை அடிகளார் தம் உறுதிப்பாட்டை பாதுகாத்து வந்தார். இதற்கும் ஒரு நிகழ்வு சான்று ஆகிறது.

திருமதி. பாச்சியம்மையார் என்பவர் இறைபக்தியில் ஆர்வம் மிகக் கொண்டவர். ஞானியாரடிகளிடமும் அவ் அம்மையார் மதிப்பு கொண்டிருந்தார். சுவாமிகளை காசி யாத்திரைக்கு வந்தருளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சிவிகையூர்ந்து செல்வது பெரும் துன்பம் தரும்; காலமும் அதிகம் பிடிக்கும்; அதனால் மோட்டார், லாரி அமைத்து, நீராடல் பூசை புரிதல் யாவற்றையும் லாரியில் ஏற்பாடு செய்துவிடுவோம்; காரில் பயணத்தை நிகழ்த்தலாம் என்று அம்மையார் விண்ணப்பித்தார். அதையும் அடிகள் நகை முகத்தோடு மறுத்துவிட்டார்.

இது பிற்காலத்தில் நிகழ்ந்தது. அடிகள் சந்நியாசமுறைக்கு உரிய உறுதிமொழிகளை 1889ல் ஏற்றுக் கொண்டார்கள். அப்போது அவருக்கு பதினாறு வயது தான் நிறைந்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் ஒருபொழுது கூடத் தமது மனஉறுதியிலிருந்து பிறழ்ந்துவிடவில்லை எனும் உண்மை வியந்து போற்றப்பட வேண்டியது ஆகும்.

அடிகள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது, மடாலயப் பொருள் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இருப்பினும் அடிகள் பொறுமையோடும், தகுந்த நிர்வாகத் திறமையோடும் நிலைமைகளை சீர்படுத்திவிட்டார்கள். மடாலயத் தலைமை ஏற்றுவிட்டபோதிலும், அடிகள் தம் கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று பெரும் விருப்பம் கொண்டார்கள். அதற்காகத்தகுந்த ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்து தமிழ் நூல்களை ஒரு மாணவனின் அக்கறையோடும் ஆர்வத்தோடும் கற்றுத் தேர்ந்தார். அவ் ஆசிரியர் மரணமடைந்த பின்னர், அடிகள் தாமே பற்பல நூல்களையும் பயின்று சிறந்த அறிஞரானார்கள்.

அறிவுப் பணியே தெய்வப்பணி என்று ஞானியாரடிகள் கருதினார்கள். ‘அறிவே சிவமாவது ஆரும் அறிகிலார்; அறிவே சிவமாவது யாரும் அறிந்தபின், அறிவே சிவமாய் அறிந்திருப்பாரே’ என்று அடிகளார் வலியுறுத்தி வந்தார். அறிவைப் பெறுவதற்கு கல்வியே துணைபுரியும். எனவே மக்களிடையே கல்வி அறிவினை அதிகம் பரப்புதல் வேண்டும் என்பதை உயர்ந்த குறிக்கோளாக அவர்கள் கொண்டிருந்தார்கள். தமக்குக் கல்வி அறிவு வாய்த்தது போல, மற்றவர்களுக்கும் வாய்க்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப் பட்டார்கள். அவ்வாய்ப்பினை உண்டாக்கிக் கொடுப்பது கற்றவர் கடமை என்றும், கற்றவர்களுக்கு செல்வர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அடிகள் கருதினார்கள்.

தமிழின் தற்கால நிலை அடிகளாருக்கு வருத்தம் தந்தது. பிறநாட்டு மொழியும், பிற நாட்டு நாகரிகமும் நம்மிடையே பரவி வருவதனால், தமிழ் மொழி தளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலை மக்களின் தெய்வீக உணர்வு, தொண்டு மனப்பான்மை முதலியவற்றை தலையெடுக்காமல் செய்துவிடுகிறது. உண்மையில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமெனில், ஆங்காங்கே சங்கங்கள் தோன்ற வேண்டும். ஜமீன்தார்களும் செல்வர்களும் தமிழை தழைப்பிக்க வேண்டும் என்று அடிகள் எடுத்துக் கூறுவது வழக்கம்.

அடிகளின் ஆலோசனையின்படி தான் பாலவநத்தம் ஜமீன்தாரர் ஆன பாண்டித்துரைத்தேவரும், அவர் சகோதரர் பாஸ்கர சேதுபதியும் மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவினார்கள். 1901ல் இது நிகழ்ந்தது. அதன் அங்கமாக சேதுபதி கலாசாலை அமைக்கப்பட்டது. அங்கு தமிழ் கற்க வந்த மாணவர்களுக்கு உண்டியும் உறைவிடமும் இலவசமாகவே வழங்கப்பெற்றன. ‘செந்தமிழ்’ எனும் மாத இதழும் சங்கத்தின் சார்பில் வெளிவரத் தொடங்கியது.

ஞானியாரடிகள் தமிழையும் சைவத்தையும் பரப்புவதற்காகத் தொடர்ந்து பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். விரும்பி வந்தோர்க்கெல்லாம் தமிழ் மொழியை போதித்தார்கள். அதற்கென வாணிவிலாச சபை என்ற சங்கத்தை அமைத்தார்கள். அடிகள் தாமேசொற்பொழிவுகள் ஆற்றுவதுடன், தம்மிடம் பயில்வோரையும் சொற்பொழிவு நிகழ்த்தச் செய்து, அவர்கள் முன்னுரை முடிவுரைகள. பேசிச் சொல் விருந்து அளித்தார்கள். அடிகளின் சொல்லமுதம் அமுதத்தினும் இனியதாய், நெஞ்சைவிட்டு நீங்காதனவாய், உள்மாக கழுவும் உயர்நீர்மையினதாய் இருந்ததை அனுபவித்தவர்கள் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

பல திறத்தினரும், பற்பல நிலையினரும் (செல்வர், வறியர், சிறியர், பெரியர், இல்லறத்தினர், துறவறத்தினர், சிறிது கற்றோர், கல்வியறிவற்றோர், தொழில் புரிவோர், அரசாங்க உத்தியோகம்புரிவோர், உழுதுண்போர், உழுவித்து உண்போர்) மடாலயத்தில் பாடம் கற்றுப்பயன் பெற்றனர். துறவற நெறிநின் றோரும், நிற்கச் சாதனை புரிவோரும் கூட அடிகளாரை அணுகிக் கல்வி பயின்றனர். உண்டி உறையுள் பெற்று, கல்வியும் ஒழுக்கமும் நிரம்பப் பெற்றனர். அவர்கள் பலப்பல இடங்களுக்கும் சென்று தமிழ்ப்பணி, தெய்வப் பணிகளில் ஈடுபட்டார்கள். வெவ்வேறு இடங்களில் சங்கம் அமையச் சிலர் காரணமாயினர். இவ்வாறாக ஞானியாரடிகள் தமிழுக்கும் சைவத்துக்கும் பணியாற்றி வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார்கள்.

கிராமக் கோயில்களில் உயிர்கள் பலியிடப் பெறுவதை அறவே விட்டுவிடவேண்டும் என்று ஞானியாரடிகள் வலி யுறுத்தி வந்தார்கள். அதுபற்றி கேட்போர் உள்ளம் உருகும் விதத்தில் அரிய சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்கள்.

அடிகளின் சொற்பொழிவால் உளம் நெகிழ்ந்த செல்வர் சிலர், முப்பத்திரண்டு சவரன் பொன்னிடப் பெற்ற உருத்திராக்கத் தாழ்வடம் ஒன்றை அவர்களுக்கு அணிவித்து நன்றி கூறினர். பின்னர் ஒரு சமயம், மாணவர் கழகச் சிறப்பு விழாக் கூட்டத்தில் சிறந்த சொற் பொழிவாற்றிய தலைமை மாணாக்கர்க்கு, அடிகளாரின் ஆசியுடன், அந்தப் பொற்கவசமிட்ட உருத்திராக்க மாலை அணிவிக்கப் பெற்றது. அடிகள் தம் மாணவரின் பேச்சுத் திறனைப் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

தமிழ் மொழிப்பற்றும், சமயப் பற்றும் கொண்டு வாழும் அன்பர்களிடம்-அவர்கள் யாராயினும், எம்மதத்தைச் சார்ந்த வராக இருந்தாலும்-அடிகள் அன்பும் பரிவும் காட்டத் தயங்கியதேயில்லை. அதற்காக எழுந்த பிறரது கண்டனக் கணைகளை மகிழ்ச்சியோடு அவர் ஏற்றுக் கொண்டார்.

அவர்களது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

புதுவையில் சின்னையா ஞானப்பிரகாச முதலியார் என்பவர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆயினும் மதவேறுபாடு இல்லாதவர். பிற மதங்களை வெறுக்காதவர். வடலூர் இராமலிங்க வள்ளலார் அருட்பாக்களில் ஈடுபாடு கொண்டவர் அவர். சைவ சமயத்திலுள்ள கொள்கைகள் பலவற்றை ஆதரிப்பவர். அவரது தன்மைகளை ஞானியாரடிகள் அறிந்திருந்தார்கள்.

அடிகள் புதுவை கலைமகள் கழகத்தினர் அழைப்பை ஏற்று அங்கு சென்ற போது, ஞானப்பிரகாச முதலியார் விரும்பி அழைத்ததனால், ‘மங்களவாசம்’ எனும் அவர் மாளிகைக்குச் சென்றார்கள். முதலியார் அன்போடும் பரிவோடும் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, சீதா கல்யாணம் என்ற சிறப்பான சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்கள்.

அக்காலத்தில், சென்னை சைவசித்தாந்த மகாசமாஜத்தின் தலைவராக அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் இருந்தார். ஞானியாரடிகள் கிருஸ்தவர் இருப்பிடம் சென்ற நிகழ்ச்சியைக் கண்டித்து, அவர் சமாஜத் தலைவர் பதவியை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.

இச்செய்தியை மாணவர்கள் மூலம் அறிந்த அடிகள் அவருக்காக அனுதாபப்பட்டார்கள். ‘என்னே அறியாமை பிற மதத்தை இகழாமலும், தம் மதத்தில் திண்மையான பறறும கொண்டிருப்பதன்றோ ஒவ்வொருவர் கடமையும் ஆகும்’ என்று கூறினார்கள். அதற்கு ஆதாரமாகசாக்கிய நாயனார் புராணத்தில் வருகிற

‘எந்நிலையில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும் மன்னிய சீர்ச்சங்கரன்தாள் மறவாமை பொருளன்றே’

என்ற பகுதியை எடுத்துக்காட்டினார்கள்.

இந்நிகழ்ச்சி அடிகளாரின் பரந்த நோக்கையும், மத நல்லிணக்கத்தையும் புலப்படுத்துவாய் அமைந்துள்ளது.

ஞானியாரடிகளிடம் பாடம் கற்று அறிவொளி பெற்றவர்கள் பல ஊர்களிலும் இருக்கிறார்கள். அடிகள் எந்த ஊருக்குச் சென்றாலும் தமிழ்ப்பணியை தொடர்ந்து செய்து வந்தார்கள். அவர்கள் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், புத்தகம் முதலியவற்றைப் பாராமலேயே பிறரது ஐயங்களைப் போக்கித் தெளிவுபடுத்தும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்த நூலிலும் ஐயம் என எவர் வந்தாலும் தயங்காது அவ்வையங்களை அகற்றியருள்தல் அடிகளிடம் மட்டுமே காணப்பெற்ற ஒரு தனிச்சிறப்பாகும் என அடிகளை அறிந்தவர்கள் வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.

அடிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், பலப்பல ஊர்களுக்கும் சென்று சைவம் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி அருட்பணிபுரிந்தார்கள். அவர்களது பேச்சின் சிறப்பு பற்றி திரு.வி.க. தமக்கே உரிய முறையில் அழகாகப் பாராட்டியுள்ளார்.

‘அறிவு மழை நீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங்கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பல திறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து, அருள் அலை கொழித்துக் கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கிலெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத்தன்தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலெழும் மின் விசையால் பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது’.

சென்ற இடங்களிலெல்லாம் சொன்மழை பொழிந்து சிவானந்த ஆறு கரை புரண்டோடச் செய்தார்கள் சுவாமிகள். செவிமடை வழியே உள்ளமாம் நிலத்தில் தேக்கிச்சிவப் பயிரை வளர்த்துக் கொண்டு முத்திப் பயனாம் பெரும் பேற்றினை அடைந்தார் பலர் என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஞானியாரடிகள் வீரசைவர். வீரசைவ மரபுகளைப் பின்பற்றும் மடாலயத்தின் தலைவர். வீரசைவர்கள் சிவனையன்றி வேறு தெய்வங்களை மனசாலும் நினைக்கக் கூடாது என்ற நெறியைக் கைக்கொண்டவர்கள். ஆயினும் ஞானியாரடிகள் சாதிசமய பேதம் கருதாது, எல்லா மதத்தினருக்கும் கல்வி பயிற்று வித்தார்கள். திருமால் குறித்தும், இராமாயணம் பற்றியும், பாரதம் பற்றியும் மிகச் சிறப்பான முறையில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். அவர்களுடைய பேச்சில் பிறமத துஷணை தலைகாட்டியதில்லை. எடுத்துக் கொண்ட பொருள் பற்றி, கேட்போர் நெஞ்சம் நெகிழும் விதத்தில், அருமையாகப் பேசுவார்கள். ‘விபீடணர் சரணாகதி குறித்து அடிகள் ஆற்றிய உரை கேட்டு, அரங்கன் அடியார்கள் மெய் சிலிர்த்து ஞானியார்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டார்கள். வைணவர்களே வியப்படையும் விதத்தில், திருப்பாவையின் ஒரு பாசுரத்தை விளக்கி, வைணவ பரிபாஷைகளால் நீண்ட நேரம் சொற் பொழிவாற்றிய பெருமை அடிகளுக்கு உண்டு.

காலத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தவர்கள் ஞானியாரடிகள். எதையும் காலம் தவறாது செய்யும் இயல்பு அவர்களிடம் இருந்தது. பிறரும் அவ்வாறே காலத்தின் அருமை உணர்ந்து செயல்படுமாறு தூண்டுவார்கள். சொற்பொழிவு இன்ன நேரத்தில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த நேரத்துக்கு முன்னதாகவே அடிகள் அந்த இடம் சேர்ந்துதயாராக இருப்பார்கள்.

ஞானியாரடிகளின் சிறப்பியல்புகள் குறித்து அவர் காலத்திய அறிஞர்கள் பலரும் பாராட்டிப் புகழாரம் சூட்டத் தவறியதில்லை. பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அடிகள் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார் -

“கடவுள் பக்தியும் சிறப்பாக முருகப் பெருமானிடம் பேரன்பும் உடையவர்கள். கல்வியறிவுடையோரை நன்கு மதித்து அளவளாவும் இனிய குணம் உடையவர்கள். தமிழ் மொழியில் பேரார்வத்தையும் சைவ சமயப் பற்றையும் தமிழ் மக்களுக்கு விளைத்து வந்த இவர்கள் அரிய சொற்பொழிவுகள் இத்தமிழ்நாட்டில் நிகழாத இடமில்லையென்றே சொல்லலாம். மடாதிபதிகள் செய்ய வேண்டிய அரிய செயல்களெல்லாம் திரு. ஞானியாரிடத்து நன்கு காணப்பட்டன. இக்காலத்துள்ள மற்றைய மடாதிபதிகள் இவர்கள் முறையைப் பின்பற்றுவார்களாயின் தமிழ் உலகத்திற்கே சிறந்த பயன்விளையும். இவர்கள் ஒழுகிய நெறி ஏனையோருக்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளதென்று கூறலாம்."

திரு.கா. இராமநாதன் செட்டியார் பி.ஏ.பி.எல். அடிகளின் பெருமைகளை மிகத் தெளிவாக விவரித்திருக்கிறார்.

“அவர்களுக்கு இவ்வளவு பெருமை ஏன்? அவர்கள் நன்கு படித்தவர்கள். ஆங்கிலம் தெரியும். வடமொழி நன்கு தெரியும். தமிழில் அவர்கள் படிப்பு பரந்தது, ஆழமானது. இத்துடன் உலகியலறிவும் உண்டு. கற்றார்க்கும், கல்லாதார்க்கும் பயன்படும்படி பேசவல்லவர்கள். இனிமையாகப் பேசுவார்கள். அவர்கள் அன்பு நிறைந்தவர்கள். எல்லாருக்கும் புன்சிரிப்பு; சில நல்ல வார்த்தை மடாதிபதிகள் என்ற நினைப்பு அவர்கள் வார்த்தைகளையோ, செயல்களையோ சுட்டவில்லை விருந்தினரை நின்று விசாரிப்பார்கள். உளறுபவர்க்கும் கோபமின்றி அறிவு புகட்டுவார்கள். எல்லாரும் அவர்களைப் பார்க்க முடியும். எப்போதும் பார்க்கலாம். அவர்கள் செய்த தொண்டுகள் பல. தங்கள் மடத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார்கள். அதற்குப் பெரும் புகழ் தந்தார்கள். பலருக்குத் தமிழறிவு புகட்டினர். கிறிஸ்தவர்களும் அவரிடம் படித்திருக்கிறார்கள். பலருக்குச்சமய அறிவு புகட்டினர். அநேகர் மனதில் அன்பெனும் விதையை நட்டார்கள். பற்பலர் வாழ்க்கையைத் திருத்தி யமைத்தனர். அவர்களிடம் உபதேசம் பெற்றோர்கணக்கற்றவர். அவர்கள் சொற்பொழிவு கேட்டோர்.பல்லாயிரவர். ஊர்தோறும் சென்று சைவ உண்மைகளைப் பரப்பியவர் சமயகுரவர் மூவர். அவர்களுக்குப் பின்னர் அத்தொண்டு செய்தோர் ஒருவரையும் எனக்குத் தெரியவில்லை. அத்தொண்டை இக்காலத்தில் செய்தவர்கள் ஞானியார் சுவாமிகள்" இவ்வாறு இராமநாதன் செட்டியார் குறிப்பிட்டுள்ளார்.

அடிகளின் தோற்றப்பொலிவாலும், பேச்சாற்றலினாலும், மற்றும் பல சிறப்பியல்களினாலும் ஈர்க்கப் பெற்ற அறிஞர்கள் அநேகர் பலவாறாக அடிகளைப் பாராட்டி வியந்து போற்றி எழுதி மகிழ்ந்திருக்கிறார்கள்.

பலரும் போற்றி மகிழத்தக்க நற்பண்புகள் பலவற்றையும் ஞானியாரடிகள் பெற்றிருந்தார்கள்.

மடாலய மரியாதைகள் பல உண்டு. பல்லக்கு, மேனா, குடை, கொடி, சாமரை, தீவர்த்தி முதலியவை மடாலயத்தின் முந்தைய குருமார்களால் கைக்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் ஞானியாரடிகள் அவை ஆடம்பரமானவை எனக்கருதி அவற்றை நிறுத்தி விட்டார்கள். திருச்சின்னம் பயன்படுத்துவதைக் கூட, தென்னாட்டு யாத்திரைக்குப் பிறகு விட்டு விட்டார்கள். எனினும், உறுதிமொழி ஏற்றிருந்தனால் சிவிகை ஊர்தலை மட்டும் அவர்கள் இறுதிவரைகடைப்பிடித்தார்கள். விஜயதசமி அன்றும், மாட்டுப் பொங்கல் நாளிலும் திருக்கோயில் இறைவன் சப்பரத்தில் எழுந்தருள்வது வழக்கம். மடாலய முகப்பில் வரும்போது அடிகள் இறைவனைத் தரிசிப்பார்கள். அடுத்து, மடாலயத்தின் முதலாவது குருமூர்த்தி அணிந்து வந்த தலைமாலை, மார்பு மாலை முதலிய கோவைகளை அணிந்து பூசை புரிந்து விட்டுக் கொலுவிருப்பார்கள். வணங்கும் பக்தர்களுக்குத் திருநீறு அளித்த பிறகு அவைகளை நீக்கிவிட்டு எப்போதும் போலவே இருப்பார்கள்.

விலை உயர்ந்த மதிப்புமிகுந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவதில் ஞானியாரடிகள் ஒருபோதும் விருப்பம் கொண்டதில்லை. தரிசிக்க வரும் அன்பர்கள் கொண்டு தரும் பழங்கள் முதலிய பொருள்களை அங்கே உள்ள அனைவருக்கும் வழங்கிவிடுவார்கள். கொண்டு வந்த அன்பர்களுக்கும் பிரசாதமாகச் சில அளிக்கப்படும்.

அனைவரும் தமிழ் மொழியைத் திருத்தமாகப் பேச வேண்டும் என்பதில் அடிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள். அவர்களும் தம் பேச்சில் கொச்சைச் சொல் எதையும் பயன் படுத்தமாட்டார்கள். மடாலயத்தில் பழகுவோர், மாணவர் முதலியோர் யாவரும் அவ்வண்ணமே திருத்தமுறப் பேசுவதில் கருத்தாக இருந்தார்கள்.

ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்வதில் கூடியவரை அதிகமான பொருள்களைப் பயன்படுத்துவது அடிகளின் இயல்பாக இருந்தது. சிறப்பு நாட்களில் அவ்விதம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

எதையும் கணக்குப் பார்த்தே செலவிடுவது அவர்கள், வழக்கம். வீண்செலவுகள், ஆடம்பரங்களை அடிகள் வெறுத்தார்கள்.

தமிழ்ப் பற்று மிகுதியாகக் கொண்டிருந்த அடிகள், திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தின் சார்பில், சில நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதிலும் கவனம் செலுத்தினார்கள். திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம், திருப்பாதிரிப்புலியூர்த் தோத்திரக் கொத்து, அற்புதத் திருவந்தாதி, ஞானதேசிக மாலை, அவிநாசிநாதர் தோத்திரக் கொத்து, கந்தர்சட்டிச் சொற்பொழிவு ஆகியவை அவ்வாறு வெளிவந்த நூல்கள் ஆகும்.

இவற்றில் கந்தர்சட்டிச் சொற்பொழிவு என்பது அடிகள் ஆற்றிய சொற்பொழிவுகள் சிலவற்றின் தொகுப்பு நூல். பேராசிரியர் முத்து. இராசாக் கண்ணனார் குறிப்பெடுத்து எழுதியது.

சிவமணமும் தமிழ் மணமும் நாடெங்கும் பரவிடத் தம் வாழ்வை அர்ப்பணித்து அரும் தொண்டாற்றிய ஞானியாரடிகள் 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் நாளன்று இறைவன் திருவடி சேர்ந்தார்கள்.

19ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியையும் சைவத்தின் பெருமையையும் பரப்பிச் சிறப்புடன் வாழ்ந்தவர்கள் ஞானியாரடிகள். அவர்களது புகழ் என்றும் நிலைத்து நிற்கும் தன்மை உடையது.

வாழ்க ஞானியாரடிகள் திருநாமம் !

(நன்றி : சிவத்திரு ஞானியார் அடிகள் நூற்றாண்டுவிழா வெளியீடான சிவத்திரு ஞானியார் அடிகள் வரலாறு இக்கட்டுரைக்கு ஆதாரமாகும்.)

சிவத்திரு. ஞானியாரடிகள் பெருந்தவயோகி !

பேராசிரியர் டாக்டர் K.A. மணவாளன் M.A., M.C., Ph.d.

(Vidwan Siromani B.O.L. Dip.in Hindu Religion)

Retd. Tamil Professor D.G. Vaishnav College Chennai-106,

உலக வாழ்க்கை இன்ப துன்பங்கள் நிறைந்தது. மேடு பள்ளங்கள் கொண்டது. இருளும் ஒளியும் சூழந்தது. கடலும் காடும், மலையும், மண்ணும், விண்ணும் கொண்ட இப்பரந்த உலகில் வாழப் பிறந்தவன் மனிதன். அவன் இன்பமாக, உண்மையாக வாழ விரும்புகிறான். ஆனால் அவனை அவ்வழிகளில் வாழவிடாமல் அவனைத்தடுப்பது அறியாமை என்னும் பேரிருள்தான். அவ்விருளின் நீங்கி அவன் ஒளிபெற்று வாழ ஒளிவிளக்கு வேண்டும். அந்த ஒளிவிளக்கை ஞான விளக்கு என்றார்கள் ஞானிகள். அத்தகு ஞானிகளில் ஒருவராய் ஒப்பற்றவராய் விளங்கியவர் திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப் புலியூர் மடாதிபதியாக விளங்கிய, ஞானியார் சுவாமிகள் என்றே பெயர் பெற்ற ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்; இவரைத் தமிழ்நாட்டினர் ஞானியார் அடிகள் என்றே கூறுவர்.

வாழ்க்கைக் காட்டில் இன்ப வெளியை நாடிப் பயணம் செல்லும் மனிதனுக்கு இடையூறுகள் பல உண்டு. சிற்றறிவு உடையவன் தானே மனிதன். இருளையும் துன்பத்தையும் தாண்டும் போது அவன் மனம் உறுதி தளர்கிறது. அப்போது அறிவிலார் பலர் சூழ்ந்து அவனை மயக்கி வேறுவழியில் செலுத்திவிடுகிறார்கள். அப்போது அம்மனிதனுக்கு உற்றதுணை ஒன்று வேண்டுமல்லவா?

குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இருள்தான் ஒளிக்கு வழி காட்டுமா? தடுமாறுகிறவன் தெளிவுக்குத் துணை செய்வானா? முடியாது. தெளிவான ஞானமுடைய ஒருவனே - தெளிந்தவனே - உறுதியுடையவனே உறுதுணையாக முடியும். அத்தகைய தெளிந்த ஞானமுடையவர்களே சமயாசாரியர்கள். அவர்களே உண்மையான வழிகாட்டிகள். ஆன்ம நேய அன்பு ஒற்றுமைக்கும், மனிதவள மேம்பாட்டிற்கும் இத்தகு சமயாசாரியர்கள் காட்டிய நெறிமுறைகளும் உபதேசங்களுமே முக்கிய காரணங்களாகும்.

குருநாதர் யார் ?

குருவின் இலக்கணம் என்ன? என்ற கேள்விக்கு நம் முன்னோர் பலபடிகளில் விளக்கம் கூறியுள்ளனர். அவற்றுள் ஒன்று; விருப்பு வெறுப்பு இல்லாதவராய் அருள் நிரம்பினவராய் ஆன்ற அறிவும் தூய சிந்தையும் உடையவராய் எளியவர்களிடம் தனி அன்பு காட்டுபவராய் தம்பரந்த கலையொளியால் எப்பாலவரையும் தம்பால் ஈர்த்து ஆட்கொள்ளும் வல்லமை படைத்தவரே குருநாதராக விளங்க முடியும்.

சிவத்திரு ஞானியாரடிகள் மேற்சொன்ன இலக்கணங்களெல்லாம் வாய்ந்தவராய் விளங்கியதோடு உடல் சாயும் வரையில் தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பாடுபட்டவர் என்பதனை இந்நூலைப் படிப்பவர் அனைவரும் உணர்வர்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்

உயிரினும் ஒம்பப் படும்”.

என்னும் குறள்நெறிக்கு இணங்க அடிகளார் வாழ்ந்தவர். ஒழுக்க நெறியைத் தான் கடைப்பிடித்ததோடு பிறரையும் அந்நெறியில் வாழும்படி அல்லும் பகலும் உபதேசித்தவர். வீரசைவமரபினர். திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியாரடிகளின் மடாலயத்தின் முதற்குருநாதர் ஸ்ரீசோமநாத ஆராத்திரியர். இவர் வேத ஆகம புராண இதிகாசங்களை முறையாகப் பயின்றவர். வீரசைவர் கடைப்பிடிக்க வேண்டிய அறுபத்து நான்கு சீலங்களையும் கடைப்பிடித்தவர் சைவ - இட்டலிங்க பூசனை செய்தவர். இவர் வழியில் நான்கு குருமார்களுக்குப் பின்னர் வந்தவர்களே இந்நூலின் நாயகரான சிவத்திரு ஞானியார் சுவாமிகள் என்றே அழைக்கப்பட்ட ஞானியாரடிகளாவார். இவர் இம்மடத்தின் ஐந்தாம் குருமகாசந்நிதானமாவார்.

அண்ணாமலை அய்யருக்கும் பார்வதி அம்மையார்க்கும் செல்வத்திருமகவாய் அவதரித்த நம் சுவாமிகள் தம்முடைய ஆறுமாத குழந்தைப் பருவத்திலேயே நான்காம் குருநாதராக விளங்கிய சுவாமிகளின் அருளுக்கு இலக்காகி அவர் தம் மடத்திலேயே வளர்ந்து வரலானார். குருமகர் சந்நிதானம் அக்குழந்தைக்குப் ‘பழநியாண்டி’ என்ற செல்லப் பெயரிட்டு சிவலிங்க தாரணமும் செய்து வைத்தார் என்ற வரலாறு மற்ற சைவ மடங்களுக்கு இல்லாத சிறப்பு வரலாறு ஆகும்.

அடிகளார் மரபும், ஒழுக்கம் பிறழாமையும், பட்டம் ஏற்றுச்செய்த பெரும்பணிகள் :

அடிகளார் ஐந்தாவது குரு மகா சந்நிதானமாகத் தமது பதினேழாவது வயதிலே பட்டம் ஏற்றார். சிவிகையூர்ந்து செல்லுதல் தான் அம்மடத்தின் மரபாகும். காலத்தின் அருமை கருதி கார் மூலம் பயணம் செய்யலாமே என்று பெரும்புலவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் கூறியபோது அடிகளார் அவர்கள், ஒரு சிறுகதையை உதாரணமாகக் கூறி ”யாமும் முன்னோர் கைக் கொண்ட முறைகளைப் பின்பற்றவே வந்தோம்; அதனை மாற்றி நடந்தால், உள்ளத்தால் பொய்யாது ஒழுகல் என்ற மறைமொழி கற்ற பயன் என்னாவது?” என்று கூறித் தெளிவு படுத்தினாராம். சுவையான அந்த கதைப்பகுதி இந்நூலின் 19,20 பக்கங்களில் நூலாசிரியர் சுவைபட எழுதியுள்ளார். இதனால் சுவாமிகள் மடத்தில் தாம் ஏற்றுக்கொண்ட சந்நியாசி முறைக்குரிய உறுதிமொழிகளிலிருந்து ஒருக்காலும் வழுவினாரல்லர் என்பது விளங்கும். வடதேசயாத்திரை - காசி கங்கை நீராடல் போன்றவைகளைக்கூட இதனால் தவிர்க்க வேண்டியதாயிற்று.

சுவாமிகள் பட்டமேற்ற காலத்தில் மடத்தின் பொருளாதார நிலை தாழ்வுற்றிருந்தது. பலவழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தன. நிலவருவாய் குறைவு. இவைகளையெல்லாம் முறையாகக் கவனித்து மடத்தின் சீடர்களான செல்வச்சீமான்களை வரவைழத்துப்பேசி, நிதிநிலைகளைஉயர்த்தினார் என்ற வரலாறும், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளைப் போதிக்கும் வகையில் கல்விச் சாலைகளை நிறுவினார் என்ற வரலாறும், பசித்த ஏழை மாணவர்களுக்குத் தம் மடத்திலேயே உணவளித்து, இடமளித்து உதவினார்.

யாப்பிலக்கணப்புலமை-அறிவுப்பணி-தமிழ்ச்சங்கம்

சுவாமிகள் பாடல்களை இயற்றுவதிலும் பாடல் புனையும் கவிஞர்களைப் போற்றுவதிலும் சிறந்து விளங்கினார். நகைச்சுவையும்-இரட்டைப்பொருள் வசனமும் அவரோடு உரையாடுவோர்க்கு இன்பம் பயக்கும். ‘அறிவுடையார் எல்லாமுடையார்’, அறிவே சிவம் என்ற முதுமொழிகளுக் கிணங்க 1900 ஆம் ஆண்டு மதுரை திரு. பாண்டித்துரைத் தேவரவர்கள் நம்சுவாமிகளைச் சந்திக்க வந்த போது ‘‘தமிழின் தற்கால நிலை‘ என்ற தலைப்பில் அரிய சொற்பொழிவை ஆற்றித் தேவரை அமுத நீராட்டினார். அதோடு மதுரையில் தமிழ் வளர்ச்சிக்குச் சங்கம் அமைக்க வேண்டும் - என்ற வேண்டுகோளை வைத்தார். சுவாமிகளின் சொல்லமுதை மாந்திய தேவரவர்கள் அப்படியே செய்கிறேன் என்று வாக்களித்தார். அதன்படி 1901-ல் மதுரையில் தமிழ்ச்சங்கமும் தமிழ்க்கல்லூரியும் அமைந்தன. என்னே சுவாமிகளின் நாநலம்!!

நிறுவனங்கள் - சபைகள் - சமுதாயப்பணிகள்

வாணிவிலாச சபை, ஞானியார் மாணவர் கழகம் என்ற நிறுவனங்களை ஏற்படுத்தி ஆண்டு விழாக்களில் தலைமை ஏற்று ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சைவ சமயத்தின் ஏற்றத்தையும், தமிழின் பெருமைகளையும், தமது சொற் பெருக்கால் உரையாற்றி சமயப் பணியையும், தமிழ்ப்பணியையும், ஒரே சமயத்தில் நிறைவேற்றுவார். மற்றும் பல தனிகர்களுடைய உதவியால் ஆங்காங்கு பக்தபால சமாஜம், பஜனை கூடம் என்று நிறுவி பக்திநெறியைப் பரப்பிய பெருந்தகையாளராகவும் அடிகளார் விளங்கியுள்ளார். மற்றும் சிறுவர்களுக்கு கல்வியறிவூட்ட ஆரம்ப பாடசாலைகள் பல நிறுவப்பட்டன. சைவ சமய நெறி தழைக்க இளைஞர்சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மற்றும் மலையமான், ஒளவையார், கபிலர் போன்ற பெருவள்ளல்கள், புலவர்களின் வழிவந்தவர்கள் என்று பார்க்கவ குல மரபினரைப் பாராட்டி அவர்களுக்காக ஒரு சங்கமும் அமைத்து சமூக சேவை புரிய வேண்டும் என்று அச்சங்கத்தினர்க்குக் கட்டளையிட்டு சமுதாய முன்னேற்றத்திலும் தம் கடமையைச் செய்துள்ளார்.

அடிகளார் வெள்ளமடை திறந்தாப்போல் ஆற்றும் சைவ சமய சொற்பொழிவுகளும், தமிழ் மணக்கும் சொற்பொழிவுகளும் அவர்கால மக்களை வெகுவாக ஈர்த்தன. சுவாமிகளின் சொற்பொழிவுகளில் சாமானியர்கள் மட்டுமல்லாமல் அவர் காலத்தில் வாழ்ந்த பெரும்புலவர்களும், பெரும்கவிஞர்களும் தங்களை இழந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தகவர்கள் பலர். சுவாமிகளின் வேண்டுகோளை ஏற்று கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் புலவர் கல்லூரி நிறுவிய வழக்கறிஞர் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை பி.ஏ., பி.எல்., அவர்கள், தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், கயப்பாக்கம் சதாசிவ செட்டியார், மோசூர் கந்தசாமி புலவர் ச. சச்சிதானந்தம் பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார், பண்டிதமணி கதிரேசம் செட்டியார், மறைமலையடிகளார், கா. சுப்பிரமணியப் பிள்ளை, ந.மு.வேங்கட சாமிநாட்டார் , உலகநாதம்பிள்ளை, கரந்தை கவியரசு வெங்கடாசலம் என்று அறிஞர் பெருமக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

1. மறந்தும் புறந்தொழாமை - 2. சிவபுரம் சுடரையே எண்ணுதல்

இந்த இரண்டு கொள்கைகளும் வீரசைவ மரபினரின் உயிர்மூச்சான கொள்கைகளாகும். இப்படிப்பட்ட கொள்கைகளை உண்மையில் மரபு மாறாமல் நம் அடிகளார் கடைப்பிடிப்பவர் தாம் என்றாலும், பிற சமயங்களையோ, தெய்வங்களையோ பழிமொழிகளால் தூற்றமாட்டார். சமயப் பொறுமையில் நின்று விளங்கினார். எடுத்துக்காட்டாக ஒன்று காண்போம். ஒரு சமயம் திருப்பாதிரிப்புலியூரை அடுத்து 2 கல் தொலைவிலுள்ள திருவந்திரபுரத்திற்கு நம் சுவாமிகள் சென்றார். திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற அத்தலத்து வைணவர்கள் வேண்டு கோளுக்கு இணங்க திருப்பாவை முதல் பாட்டின் விளக்க வுரையை, வைணவ பரிபாஷையில் நீண்ட நேரம் சொற்பொழி வாற்றினார். வியப்பால் மகிழ்ந்த வைணவர்கள் சுவாமிகளுக்கு மூவுருவே ஓர்ருவாய்க் காட்சி தரும் தேவ நாதப்பெருமான் அணிந்திருந்த நீண்ட பெருமாலையை அணிவித்துப் பாராட்டினர் என்ற செய்தி இந்நூலின் 87வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதுபோலவே திருவரங்கத்திலும் அடிகளார் வைணவ பரிபாஷையில் சொற்பொழிவாற்றிப் பாராட்டப்பட்டுள்ளார். இதுகொண்டு இவரது சமய சமரசம் அறியப்படுகிறது. அன்றியும் இவர் சில தனவந்தர்களான அறிஞர்களின் வேண்டுகோளின்படி இராமாயணம், சீதாகல்யாணம் போன்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்றிப் பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மற்றும் சுவாமிகள் தெய்வத்தொடர்பாகவே சொற்பொழிவாற்றினாலும், தமிழ் மொழியின் ஏற்றம் பற்றிக் குறிப்பிட மறக்கமாட்டார்கள். தமிழிலக்கணங்களில் ஆங்காங்கு காணப்பெறும் சொல்லினிமை, பொருளினிமைகளைச் சுவைபட எடுத்துப் பேசுவதில் அவர்கட்கு இணை யாவார்எவருமிலர். சைவமும்தமிழுமே அவருக்கு மூச்சுக்காற்று.

முருகபக்தி

அடிகளார் முருகப்பெருமானிடம் அளவிலா பக்தியுடையவர். முருகா! முருகா! என்றே அவர் நா இயம்பிக் கொண்டிருக்கும். சைவமும் தமிழும் அவருக்கு இரண்டு கண்களாக இருந்தன. ஊர்தோறும் சென்று சைவம் பரப்பியவர் தமிழை வளர்த்தவர். எப்போதும் பிறர்க்கு நல்ல போதனையே செய்வார். செல்வர் - வறியர் - உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாராமல் இனமொழி வேற்றுகளைக் கடந்த தவயோகி.

ஞானியாரடிகளுடைய திருவோலக்கப் பொலிவினை தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனாரின் எழுத்துக்களின் வடிவில் காண்பது மிகப்பொருத்தமாகும்.

முருகன் சேவடி வருடியுருகும் ஈரநெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மைபொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறுதுதையும் நெற்றியும் மாணிக்கக் குழை பிறங்கும் செவியும், பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக் கதிர்விருக்கும் திருமேனியும் சண்முகாஎன்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளாரின் திருவோலக்கப் பொலிவு என் உள்ளத்தில் ஓவியமெனப்படிந்து நிற்கின்றது. அஃது எவர் உள்ளத்தையும் கவரும். எவர்க்கும் எளிதில் இன்பமூட்டும். திரு.வி.க. பொன்மொழிகள்.

மற்றும் குடவாயில் வித்துவான் மு. இரத்தினதேசிகர் சென்னை ராவ்சாகிப் டிப்டி கலைக்டர் கே. கோதண்டபாணி பிள்ளை ஆகியவர்களின் திருவுருவு வருணைகள் மிகச்சிறப் பானவை.

இந்நூலின் 100,101 பக்கங்களில் இவைகளைக் காணலாம்.

திரு. கல்கி ஆசிரியர் நா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) 1939 நவம்பரில் ஆனந்தவிகடனில் எழுதியது.

ஞானம்- மெய்ஞ் ஞானம்-துவராடை தாங்கிய மேனிஅங்க இலிங்கம் - தாழ்வடங்களின் தனியிடம் திருநீற்றின் பொலிவு, தமிழ் மணம் கமழும் புன்முறுவல் இதோ தோன்றுகிறது. (கல்கி, ஆனந்தவிகடனில் புகழ் மாலை)

சுவாமிகளோடு அவர்காலத்தில் வாழ்ந்த பேரறிஞர் பலர் தொடர்பு கொண்டு பேறு பெற்றனர்.

அவர்கள் சர்.பி.டி.ராசன், பெரியார் ஈ.வே. இராமசாமி நாயகர் திரு.டி.எம். நாராயணசாமி பிள்ளை, யாழ்பாணம், திரு. நடேசப்பிள்ளை ஆவார்கள். மற்ற அறிஞர்களின் பெயர்கள் முன்பே காட்டப்பட்டுள்ளன.

சுவாமிகள் அச்சியற்றிய சில நூல்கள்

1. திருப்பாதிரிப்புலியூர்ப்புராணம் 1897ல் வெளியிடப்பட்டது.

2. திருப்பாதிரிபுலியூர் தோத்திரக் சொத்து

3. அற்புதத் திருவந்தாதி

4. ஞானதேசிகமாலை

5. அவிநாசி நாதர் தோத்திரக் கொத்து

6. கந்தர்சட்டிச் சொற்பொழிவு ஆகியவைகள்.

அடிகளாரின் மாணவர்கள் இன்றும் சைவத்திலும் தமிழிலும் சிறந்தது விளங்கி வருகிறார்கள்.

முடிவுரை :

ஞானியார் சுவாமிகள் 19-20 நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெருந்தவயோகி. வீரசைவர். நற்றமிழர், நற்றொண்டினர். நாவீறு படைத்த சொற்பொழிவாளர். நல்ல வண்ணம் எல்லோரும் வாழப்பாடுபட்டவர். திருவாயால் சண்முக நாமத்தையே உச்சரித்தவர். கல்விக்கண் திறந்தவர்-அறச்சாலைகள். சபைகள் நிறுவினர் எல்லாவற்றையும் விட உயர்ந்த அனுபூதிமான். நாயன்மார்களோடு ஒப்ப நோக்கும் தகுதி வாய்ந்தவர். வாழ்க அடிகளார் நாமம் - தொடர்க அவர் தம் தொண்டு.

ஞானியார்சுவாமிகளின் வரலாற்று நூலை இனிய தமிழில் எழுதிய திருப்புகழ் இரத்தினம். புலவர் க.பா.வேல்முருகன் (ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகளின் மாணவர்) அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள் உரியனவாகுக. மற்றும் ஞானியார் சுவாமிகள் திருப்பெயரால் தமிழ்மன்றம் நிறுவி தமிழுக்கு அயராது பாடுபட்டு உழைத்து வரும் புலமைத் திருவாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவத்திரு ஞானியார் சுவாமிகளின் புகழுக்கும் தொண்டுகளுக்கும் ஏற்ப தலைநகரில் அல்லது தக்க இடத்தில் மணிமண்டபம், திருவுருவம், வாசகசாலை அமைத்திடல் வேண்டும்.

சிவசிவ

ஞானியாரெனும் சமரசச்சமுதாயத் துறவி

பேராசிரியர், 'சிந்தாந்தசரபம்’

டாக்டர் வை. இரத்தினசபாபதி, ஆசிரியர் 'சித்தாந்தம்’

அருளியல் நெறிப்பாட்டுடன் இணைந்த உலகியல் வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன் மனிதன். ஆனால், உலகியல் வாழ்க்கையின் தரத்தினை, ஏற்றத்தாழ்வுகளை வரையறைப் படுத்திப் பார்ப்பது போல அவனால் அருளியல் பின்னணியை வரையறை செய்து பார்த்து மகிழ இயலவில்லை.

உலகியல் வாழ்க்கையானது அவனுக்கு ஏற்றத்தாழ்வுடன் கூடி அமைகிறது. ஆனால், அருளியற் பின்னணியோ அவனுக்கு ஏற்றத்தாழ்வுடன் அமைதல் இல்லை. ஒருபடித்தாக நின்று அவனை நெறிப்படுத்தி வரும் அருளியற் பின்னணியை உணருவதில் அவனுக்கு ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். உண்மையில் அருள் நெறிப் பின்னணியில் ஏற்றத் தாழ்வு அமைதல் இல்லை.

அருள்நெறிப் பின்னணியில் எளியேனுக்குப் பிறப்பிடம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் திருமடம். யான் புகுந்த இடம் மயிலம் சிவத்திரு சிவஞான பாலயசுவாமிகள் திருமடம். அருள்நெறி பின்னணியில் இரண்டும் என்னை இடைவிடாது இயக்கி வருவதையான் வாழ்க்கையில் அனுபவித்து வருகிறேன்.

'ஞானியார்' என்ற ஒரு பெயராலேயே உலகத்து ஞானியார்கள் எல்லாராலும் உணர்ந்தும் தெளிந்தும் ஓதியும் வழிபட்ட ஒப்பற்ற அருளாளரே புலிசைஞானியார் அடிகள்.

“ஞானி ஞானி என்று பல ஏத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

ஞானி ஒருவனும் அல்லன்

வாணியும் உண்டு ஈண்டு அறிவு சிறந்தோளே”

என்று அறிஞர்கள் பலரும் புகழ்ந்து கூறும் அளவில் சமரசச் சமுதாயத் துறவியாகத் திகழ்ந்தவர் தவத் திரு ஞானியாரடிகள்.

தமிழ் நாடெங்கணும் இறைவனளித்த முத்துச் சிவிகையிலேயே வலம் வந்து ஞானத் தமிழ்பரப்பிய பரசமய கோளரியென விளங்கிய ஞானசம்பந்தப் பெருமான் சிவசாயுச்சியப் பெரு வாழ்வைத் தம்முடன் வந்த அனைவருடனும் சென்று எய்திய வைகாசி மூலத்தில் தான் ஞானியாரடிகள் என்னும் குழந்தை இறைவனால் மீளவும் வருவிக்கப்பெற்றது. சிவிகையூர்ந்து சமயத்தையும் சமுதாயத்தையும் வளர்த்த திருஞான சம்பந்தரேயான் என உலகவர் போற்றுமாறு வாழ்நாள் முழுவதும் சிவிகையூர்ந்தே தமிழையும் சைவத்தையும் வளர்த்ததுடன் எந்த ஒரு சமயத்தையும் கண்டித்துக் கூறுதல், வாதம் செய்தல், போன்ற செயல்களை முற்றாகத் தவிர்த்து, சைவ சமயத்தை மேலும் மேலும் விளக்கமாக எடுத்துக்கூறி மாற்றாரும் மனமகிழ்ந்து ஏற்றுக் கொள்ளுமாறு சமரச உண்மைகளைப் பேசிச் சமுதாயத் தொண்டாற்றிய மாபெருஞ் சாதனையாளர் ஞானியார் சுவாமிகள்.

மனிதனை மனிதன் வணங்குவது தவறு என்றும், அதிலும் மனிதன் காலில் மனிதன் விழுவது தவறு என்றும் நாள்தோறும் மேடையில் முழங்கியும் தம் பத்திரிகையில் விரிவாக எழுதியும் இது என்னுடைய வாழ்வியற் கொள்கை என்று முழங்கியும் வந்த மாமனிதர்கள் எல்லாம் இந்த அருளாளர் திருவடிகளில் விழுந்து வணங்கவில்லையென்றால் அதுதான் ஆணவம் எனக் கூறி பெருங்கூட்டம் சான்றாக நிற்க, அடியற்ற மரம் போல் விழுந்து வணங்கும் வண்ணம் அருளாட்சிச் செங்கோல் அரசாய், திருமடத்தின் தலைவராய் வாழ்ந்த அருளாளரே ஞானியார் அடிகள்.

ஞானியார் அடிகள் வீரசைவத் திருமடத்தின் அருளாட்சித் தலைவர். சைவசமய அருளாளர்களின், தத்துவவாதிகளின் கொள்கைகளைச் சாதாரணமக்களும் புரிந்து கொள்ளுமாறு பேசினார். அடிகளுக்குக் கிறித்துவமும் முஸ்லீம் கொள்கையும் வைணவத் திருவும் மிகமிக நன்றாகத் தெரியும். எந்த ஒரு கொள்கையையும் தாக்கியோ அக்கொள்கையாளர்களின் மனம் புண்படுமாறு பேசியோ சைவத்தை அவர் வளர்க்கவில்லை. சைவ சமயத்தின் உள்ளார்ந்த அற்புதங்களையும் கொள்கை உயர்வையும் கேட்போர் உளங்கொளுமாறு பேசியே சைவத்தை வளர்த்தார்.

அனைத்து மதத் தலைவர்களும் அடிகளிடம் நட்புப்

பேணியதோடன்றி, கிடைத்த நட்பைப் போற்றிப் பேணவும் தலைப்பட்டனர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் சமயவாதிகளின் சமய அறிவையும் அவர்கள் நாள்தோறும் சமயச் சண்டை நிகழ்த்தும் முறையையும் குறிப்பிட்ட கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

“இதெல்லாம் பொதுவாக நாம் பார்த்திருக்கும் விஷயங்கள். ஆனால் விதிவிலக்காக சைவத்திலும் வைணவத்திலும் சில பெரியார்கள் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே சமய தத்துவங்களை உணர்ந்தவர்கள்; சமய வாழ்க்கை நடத்துபவர்கள். இப்படி விதிவிலக்காயுள்ள சமயப் பெரியார்களுக்குச் சிறந்த உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமானால் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீஞானியார் சுவாமிகளைத்தான் குறிப்பிட வேண்டும்”

அடிகளின் உருவத்தோற்றத்தைப் பார்த்ததுமே “இதோ ஒரு பெரியார் இருக்கிறார்” என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகும். அவருடைய வாய்மொழியைக் கேட்டு அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனாகும். “அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா? என்று எண்ணி எண்ணி வியப்போம்” என்று குறிப்பிட்டுள்ளமையை நோக்கி உணரலாம்.

ஞானியாரடிகள் பன்மொழிப் புலவர். புலமை தோன்றப் பேசுவது வேறு; மொழிவன்மை தோன்றப் பேசுவதும் வேறு. சுவாமிகள் மொழிக்காழ்ப்பு இல்லாமல் பேசும் திறன் கொண்டவர்கள். கேட்பவர் பலதிறத்தவராக இருப்பார்கள். பலமொழியினராக இருப்பார்கள். அவரவர்தம் தகுதிக்கேற்பப் பல்வேறு கட்டங்களில் சாதாரணச்செய்தி முதல் ஆய்வுச் செய்தி வரையில் அடுக்கடுக்காக வரிசைப் படுத்திக் கூறும் ஆற்றல் அடிகளுக்கு மட்டுமே உண்டு. காரணம் அவர் தம் பேச்சானது அன்பையும் கருணையையும் ஆர்வத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சமுதாய வளர்ச்சிக்காகவே தொண்டாற்றினார். எம்முடைய கடவுளை அடையவேண்டும் வாருங்கள் என அழைப்பதாக அவர் பேசுவதில்லை.

“சமய வாழ்க்கையை இந்தச் சமுதாயம் பெற வேண்டும் என்பதும் சமுதாயம் சிறப்பதற்காகவே சமய வாழ்வு அமைய வேண்டும் என்பதும் அதற்குத் தொண்டு ஒன்றே தலைமையான கருவி” என்பதும் ஆயமூவகை உண்மைகளை உணர்ந்தும் உணர்த்தியும் தொண்டாற்றிய காரணத்தால் புலிசைத் திருமடத்துக்கேயன்றிப் பொதுமை உலகச் சமுதாயத்துக்கே நலம் வளர்க்கும் ஞானியாராகத் திகழ்ந்தவர் ஞானியார் அடிகள்.

தந்தைப் பெரியார் அவர்களின் ‘குடியரசு’ப் பத்திரிகையைத் தொடங்கி வைத்த ஞானியாரடிகள் “பல்லக்குச் சாமியார்” என்று பிறசமயத்தார்களாலும் பாராட்டப் பெற்ற பெருமையுடையவர்.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள் !

சின்னகுத்துசி

1910இல் வெளிவந்த ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலில் - தமிழ்நாட்டில் சைவமும் தமிழும் வளர்க்கத் தோற்றுவிக்கப்பட்ட மடங்கள் 18 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆதீனங்களின் சொத்து விபரம் பற்றி "சைவ ஆதீனங்கள்" என்ற தலைப்பில் ஊரன் அடிகள் எழுதிய நூலின் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“முற்காலத்தில் முடியுடை மூவேந்தர்கள் தமிழையும் கலைகளையும் வளர்த்தார்கள். பிற்காலத்தில் குறுநில மன்னர்களும் ஆதீன கர்த்தர்களும் வளர்த்தார்கள். ஆதீனங்களுக்கு அரசர்கள் ஏராளமான நிலக்கொடைகளை அளித்ததே அறம் வளர்ப்பதற்காகதான். அறம் வளர்ப்பதோடு மொழி, கலை பண்பாடுகளையும் ஆதீனங்கள் வளர்த்தன ஆதீனங்கள் பெரிய சமஸ்தானங்கள் போன்றவை. இராமநாதபுரம் புதுக்கோட்டை சமஸ்தானங்கள் போன்று திருவாவடுதுறை தருமபுரம் ஆதீனங்கள் மிகப்பெரிய சமய நிறுவனங்கள். திருவாவடுதுறைக்குத் தென்மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், 20 பெரிய கோயில்கள், தருமபுரத்துக்கு 27 கோயில்கள், மடத்துச் சொத்தை 12 ஆயிரம் வேலி நிலங்கள் என்று குறிப்பிடுவதுண்டு. ஒரு வேலி ஏறத்தாழ 6 ஏக்கர். 12 ஆயிரம் வேலி 72,000 ஏக்கர் ஆகும். தருமபுர ஆதீனத்துக்குக் கோயில் சொத்து மிகுதி; திருவாடுதுறை ஆதீனத்துக்கு மடத்துச் சொத்து மிகுதி"

- என்கிறார் ஊரன் அடிகள்.

அபிதான சிந்தாமணியை அடியொற்றி - ஊரன் அடிகள் சைவத்திருமடங்கள் 18 என்று பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த 18 மடங்களில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளின் - திருக்கோவலூர் மடத்தின் பெயர் இல்லை. எனினும் என்ன?

சைவத் திருமடங்கள் 18 என்று அபிதான சிந்தாமணி பட்டியலிட்டுக் காட்டுவதற்கு ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவலூர் மடத்தின் ஆதீன கர்த்தராகப் பட்டம் சூட்டப்பட்ட ஞானியாரடிகள், ஓர் அரை நூற்றாண்டுக் காலத்துக்கு - நிலங்களும் - கோவில்களும் - சொத்துக்களும் ஏராளமாய்க் கொண்ட மடங்களின் ஆதீன கர்த்தர்கள் எல்லாம் சைவத்துக்கும் தமிழுக்கும் செய்ய முடியாத அளவுக்கு ஏராளமான பணிகளை செய்து முடித்தார் !

மற்ற மடாபதிகள் எல்லாம் மடம்-மடம் சார்ந்த கோயில்கள்-திருத்தல யாத்திரைகள் மட்டுமே திருமடங்களின் பணிகள் என்று நினைத்து மடத்துக்குள்ளேயே அமர்ந்து சைவம் வளர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் ஒருவர்தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சமயத் தொண்டாற்றியதோடு நில்லாமல் சைவம்-தமிழ் ஆகிய இரண்டின் வளர்ச்சிக்காகவும் ஏராளமான சமாசங்களையும் தமிழ்ச் சங்கங்களையும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் உருவாக்கினார்.

அக்கால கட்டத்தில் தமிழ்கூறும் நல்லுலகினர் அனைவராலும் போற்றி மதிக்கப்பட்ட தமிழறிஞர்கள், புலவர் பெருமக்கள் அனைவரும் ஞானியாரடிகளை அழைத்து சைவ சித்தாந்தப் பெருவிழாக்கள், தமிழிலக்கியம் போற்றும் மாநாடுகளை எல்லாம் நடத்தினார்கள். ஞானியாரடிகள் தலைமையில் ஆய்வுச் சொற்பொழிவு நடத்துவதைப் பெரும் பேறாகக் கருதினார்கள் அவர்கள்.

திரு.வி.க., மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி, மு. கதிரேசன் செட்டியார், கா. நமச்சிவாய முதலியார், த.வே. உமாமகசுேவரம் பிள்ளை, டி. கே. சிதம்பரநாத முதலியார், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, கரந்தைக்கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற பேரறிஞர்கள் எல்லாம் ஞானியாரடிகள் தலைமையில் மிகச்சிறந்த ஆய்வுரைகளை நிகழ்த்தி ஞானியாரடிகள் முடிவுரை மூலம் பாராட்டுப் பெற்றவர்களானார்கள்.

ஏனைய மடங்கள் போல - திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளின் மடம் ஏராளமான கோயில்களையும், சொத்துக்களையும் கொண்ட மடமல்ல; ஆனால் ஞானியாரடிகள் அவர்களே - விலைமதிக்க முடியாத சைவ சிந்தாந்தப் பொக்கிஷமாகவும்- தமிழ்க் கருவூலமாகவும் விளங்கினார்கள்.

திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக இருந்த அம்பலவாண தேசிகர் அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, டாக்டர் உ. வே. சாமினாதய்யர் போன்றவர்களுக்கெல்லாம் கூட பாடம் சொல்லித்தரும் அளவுக்கு பெரும் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார் என்பது அவரது பெருமைமிக்க வரலாறு :

ஞானியாரடிகளோ - இதிலேயும் வித்தியாசமானவர். பகல் பொழுதுகளில் - உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், புலவருக்குப் படிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மடத்தில் வைத்துப் பாடம் சொல்லித் தருவதை ஒரு அன்றாட பணியாகவே கருதி செயல்பட்டு வந்தார் அவர்

இன்றும் கூட இந்துமதத் துறவிகள் என்று சொல்லிக் கொள்ளும் பல மடாதிபதிகள் - முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் மீது துவேஷம் கொண்டவர்களாகவும், இந்து சமயத்தினரைப் பிற மதத்தினர் மீது துவேஷம் கொள்ளத்தூண்டுபவர்களாகவும் செயல்படுவதைக் காண்கிறோம்!

ஞானியாரடிகளுக்கு இத்தகைய சமயம் சார்ந்த காழ்ப்புணர்ச்சிகள் எதுவும் எள் முனையளவு கூட இருந்ததில்லை.

ஞானியாரடிகளிடம் பாடம் கேட்டுப் பயின்ற எத்தனை எத்தனையோ மாணவர்களில் ஒருவரான ஆராய்ச்சி அறிஞர், முனைவர் சுந்தர சண்முகனார். ஞானியாரடிகளின் வாழ்க்கை வரலாற்றினை மிகச் சிறந்ததோர் நூலாக எழுதியிருக்கிறார்! அதிலே ஒரு நிகழ்ச்சி; அது சைவ சமயம் தழைக்கப் பாடுபட்ட ஞானியாரடிகள், தமிழ் வளர்ப்பது என்று வந்தால், எந்தச் சமயத்தினரானாலும் அவர்கள் தமிழறிந்தவர்களாக - தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினார் என்பதை விளக்குவதாக இருக்கிறது.

“கடலூரில் இருந்த முஸ்லிம் இளைஞன் ஒருவன் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் (S.S.I.C.) தமிழ் தவிர்த்த மற்ற பாடங்களில் நிரம்ப மதிப்பெண் பெற்றும் தமிழ்ப் பாடத்தில் பதினாறு மதிப்பெண் மட்டுமே பெற்றதால் தோல்வியடைந்துவிட்டான். அவன், தனக்குத் தெரிந்த திருஞான சம்பந்தம் பிள்ளை என்பவரிடம் போய் தனக்குத் தமிழ்ப்பாடம் (Private-Tution) கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டினான். அவர் ஞானியாரடிகளின் கல்விச் சிறப்பை விளக்கி, அவரிடம் சென்றால், உனக்குத் தமிழ் கற்பிப்பார் என்று கூறி அவனை அடிகளாரிடம்அனுப்பி வைத்தார்.

அவன் ஒருநாள், புலிசை (திருப்பாதிரிப்புலியூர்) அடிகளாரின் அருளகத்துக்குச் சென்றான். அங்கே முன் கட்டில் ஒரு சாமியார், எளிய உடையுடன் எளிமையாய்க் காணப்பட்டார். இளைஞன் அவரை அணுகி, நான் ஞானியார் அடிகளாரைக் காணவேண்டும் என்றான்.

எதற்கு என்று அந்தச் சாமியார் கேட்டார். அவன் வந்த காரணத்தைத் தெரிவித்தான். உடனே அந்தச் சாமியார் “நான் சொல்லித் தருகிறேன்" என்று கூறி, அவனது பாட நூலிலுள்ள சில பாடல்களை விளக்கிக் கற்பித்துவிட்டு நாளைக்கு இதே நேரத்தில் வா என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

இளைஞனுக்கு மனநிறைவு ஏற்படவில்லை. ஞானியார் சுவாமிகளிடம் பாடம் கேட்கலாம் என்று வந்தோமே இவர் யாரோ ஒரு சாதாரண சாமியார் நம்மை மடக்கி அனுப்பிவிட்டாரே என்று ஏமாற்றத்துடன் சென்று, திருஞானசம்பந்தம் பிள்ளையிடம் நடந்ததைத் தெரிவித்தான். அவர், சாமியாரின் உருவத் தோற்றத்தைப் பற்றி அவனிடம் விசாரித்துக் கொண்டு, அவர்தான் ஞானியார் சுவாமிகள்- நீ நாளைக்கும் செல்வாயாக என்று கூறி அனுப்பினார்.

இளைஞர் மறுநாள் குறித்த நோத்தில் ஞானியாரின் அருளகத்தை அடைந்தார். அடிகளாரைக் கண்டதும், உங்களை இன்னார் என்று யான் நேற்று அறியவில்லை. மடாதிபதிகள் என்றால் ஆடம்பரத் தோற்றத்துடன் இருப்பார்கள். அவர்களை எளிதில் பார்க்க முடியாது என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் எளிமை என்னைக் கவர்ந்துவிட்டது என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதான். அடிகளார் அவனுக்கு ஆறுதல் கூறிப் பாடம் கற்பித்தார்.

திருஞான சம்பந்தர்க்கு உமாதேவியார் ஞானப்பால் ஊட்டியது போல, திருஞான சம்பந்தம் (பிள்ளை) அனுப்பிய முஸ்லிம் இளைஞனுக்கு அடிகளார் தமிழ்ப்பால் ஊட்டினார். ஞானப்பால் உண்டதும் ஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்’ எனப் பாடல் பாடியது போல, அடிகளாரின் தமிழ்ப்பால் அருந்தியதால் இளைஞன் அடுத்த தேர்வில் வெற்றி பெற்றான்”

என்று தமது ஞானாசிரியர் அடிகளாரைப் பற்றி எழுதியிருக்கிறார் சுந்தர சண்முகனார்.

இப்படி மடத்தில் தங்கியிருக்கும்போது மட்டும்தான் பாடம் சொல்லித் தருவார் இலவசமாக என்பதல்ல; சென்ற ஊர்களில் எல்லாம் பொருள் பெறாமல், தம்மை நாடி வருவோர் யாவருக்கும் அன்புடன் இலவசமாக பாடம் கற்பிப்பார் அவர்

மடத்தோடு - சைவப்பணியும் - தமிழ்ப்பணியும் முடிந்துவிட்டது என்று திருப்தியடைந்துவிடவில்லை அவர். கார் வசதிகள்-ரயில் வசதிகள்-பஸ் வசதிகள் இன்று போல இல்லாத அந்தக் காலத்தில்-பல்லக்கில் அமர்ந்தே பயணம் செய்து தமிழ் வளர்த்தார் அவர்; சைவம் தழைத்தோங்கப் பாடுபட்டார்.

இந்த விஷயத்தில் தந்தை பெரியார் அவர்களும் ஞானியாரடிகளும் ஒன்று !

தமது வாழ் நாள் முழுவதும் சுற்றுப்பயணம். சுற்றுப் பயணம் என்று - தமிழகத்தின் சின்னஞ்சிறு குக்கிராமங்களைக் கூட விட்டு வைக்காமல்-ஒரே நாளில் இரண்டு ஊர்கள். மூன்று ஊர்கள் என்று கூட ஊர்ஊராகச் சென்று பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த பெரியார் போலவே ஞானியாரடிகளும் - சிவிகை (பல்லக்கு) மூலமே தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தமிழ்ப்பணியும் - சமயப் பணியும் ஆற்றிவந்தார். பல்லக்கு மூலமே பயணித்து - தமிழுக்காகவும் - சைவ சமய வளர்ச்சிக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை- சுந்தர சண்முகனார் தமது நூலில் பட்டியலிட்டுக்காட்டி இருக்கிறார்.

1901 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் ஒன்று ஆரம்பிக்கிறது. ஞானியாரடிகளால் உருவாக்கப்பட்ட அல்லது அவரது பணியினைப் பெற்ற அமைப்புகளின் பட்டியல் வாணி விலாச சபை (திருப்பாதிரிப்புலியூர்), சைவ சித்தாந்த மகாசமாசம், ஞானியார் மாணவர் கழகம் (திருக்கோவலூர்), பக்த பால சமாசம்(மணம் பூண்டி), கம்பர் கானாமிர்த சங்கம் (திருவெண்ணெய் நல்லூர்), வாகீச பக்த சனசபை (நெல்லிக்குப்பம்), கலைமகள் கழகம் (புதுக்சேரி), புதுவைச் செந்தமிழ்ப் பிரகாச சபை, ஞானியார் சங்கம் (காஞ்சிபுரம்), சன்மார்க்க சபை (கடலூர்), சைவ சித்தாந்த சபை (உத்திரமேரூர்), சமய அபிவிருத்தி சங்கம் (செங்கல்பட்டு), சக்தி விலாச சபை (திருவண்ணாமலை) என்று அடிகளாரால் உருவாக்கப்பட்ட அல்லது அடிகளாரின் பங்கும் பணியும் பெற்ற அமைப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இன்று மடாதிபதிகள் இந்து சமயத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் சிலர் இந்து மதப்பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் தமிழ் என்று வந்தால் அது ஆலயத்துக்குகந்த மொழியல்ல; இசைமேடைகளுக்குரிய மொழி அல்ல என்றும், ஆலயத்துக்குள்ளே மட்டுமல்ல; வெளியே குடமுழுக்கு செய்யும் இடத்தில் கூட தமிழ்வரக்கூடாது என்று வடமொழி வெறியோடு செயல்படுவதைக் காண்கிறோம்!

ஞானியாரடிகள் சைவ சமயம் வளர்க்க உருவாக்கப்பட்ட மடத்தின் ஆதீனகர்த்தர்தான். ஆனால் அவர் வைணவத் திருத்தலங்கள் - திவ்வியப் பிரபந்தங்கள், இராமாயணத்திலுள்ள சிறப்புகள் என்றெல்லாம் மத பேதத்துக்கு சிறிதும் இடம் தராத வகையில் சமய வளர்ச்சி என்ற ஒரே குறிக்கோளுடன் பேசினார்; எழுதினார்; உதவிகள் செய்தார். அதே சமயம் தமிழ் மீது தனியாத காதல் கொண்டவராக தமிழ்ச்சங்கம், தமிழ்க்கல்லூரி என்று தமிழ் வளர்க்கும் அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டினார்.

1900மாவது ஆண்டு பாலவநத்தம் குறுநில (சமீந்தார்) மன்னரான பாண்டித்துரைத் தேவர் சென்னையிலிருந்து ஊர் திரும்பும் வழியில் திருப்பாதிரிப்புலியூர் சென்று ஞானியாரடிகளை தரிசித்தார். தேவர் தலைமையில் அடிகளார் தமிழின் தற்கால நிலை என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் போது "மதுரை மாநகரில் தேவரும் மற்ற செல்வர்களும் சேர்ந்து ஒரு தமிழ்ச் சங்கம் அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். தலைமை வகித்த பாண்டித்துரை தேவர் - தமது முடிவுரையில் தமது தமையன் பாஸ்கர சேதுபதி மன்னரிடம் கூறி, மதுரையில் தமிழ்ச் சங்கம் ஏற்படுத்த ஆவன புரிவதாக அங்கேயே அறிவித்தார்!

பின்னர் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு வந்த பாஸ்கரசேதுபதி மன்னர் திருப்பாதிரிப்புலியூர் வந்தார். அடிகளார் ஆற்றும் ஒரு அற்புதமான சொற்பொழிவு நிகழ்த்தி... அதனிடையே மறவாமல் மதுரைத் தமிழ்ச் சங்கம் அமைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப்பேசினார்.

பாண்டித்துரைத் தேவர் போலவே மன்னர் சேதுபதியும், தமிழ்ச் சங்கம் அமைத்துத் தருவதாக ஒப்புதல் அளித்தார். இப்படி இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் மதுரையில் தமிழ்ச் சங்கம் என்று இடைவிடாது அடிகளார் செய்த முயற்சியே மதுரைத் தமிழ்ச்சங்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. அது நான்காம் தமிழ்ச் சங்கம் என்று அனைவரும் போற்றும் வகையில் புகழ் பெற்றது!

மதுரை தமிழ்ச் சங்கம் - மாதந்தோறும் கூட்டம் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சங்கமல்ல; தமிழ் வளர்க்க சேதுபதி கலாசாலையை உருவாக்கி, பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்னும் மூன்று பாடம், பட்டப் படிப்புகள் மூலம் தமிழ்ப் புலவர்களை உருவாக்கியது அது. ‘தமிழ் படிக்க வாருங்கள்; உண்டியும், உறையுளும் (ஹாஸ்டல்) இலவசம்: கட்டணம் இல்லை” என்று அழைத்து தமிழ் அறிவு புகட்டிடும் சங்கமாகச் செயல்பட்டது அது! செந்தமிழ் எனற பெயரில் திங்கள் இதழ் தொடங்கி அதன் மூலமுமf எனறுமுள தென்றமிழின் சிறப்புகளைத் தமிழர்களுக்கு எடுத்துக்காட்டி தமிழ் வளர்ப்பதிலும் சங்கம் தீவிரம் காட்டியது!

ஞானியாரடிகள் தமிழ் வளர்த்த காலகட்டத்தில் ... தமிழ்க் கல்விக்கு எனத் தமிழ்க் கல்லூரி எதுவும் இருந்ததில்லை. தஞ்சையை அடுத்த திருவையாற்றில் வடமொழிக் கல்லூரி - சமஸ்கிருதக் கல்லூரி ஒன்று இருந்தது. அது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் அது தஞ்சை மாவட்ட ஆளுகைக் கழகத்தில் (DISTRICT BOARD) மேற்பார்வையில் நடத்தப்பட்டது. அடிகளார் திருவையாற்றுக்குச் சென்றபோது, அடிகளாரின் வடமொழிப் புலமையை அறிந்திருந்த அக்கல்லூரியினர் அடிகளாரின் வட மொழிப் புலமையைப் பாராட்டி - வடமொழியிலேயே எழுதப் பெற்ற ஒரு பாராட்டுப் பத்திரம் படித்து வரவேற்றனர். அக் கல்லூரியின் தோற்றம் வளர்ச்சி - அதன் பணிகள் பற்றி யெல்லாம் அடிகளார் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அவரது உள்ளத்தில் ... அதே கல்லூரியில் தமிழுக்கு ஏற்றம் அளிக்க வேண்டும் என்று அப்போதே தோன்றிவிட்டது. திருப்பாதிரிப்புலியூர் திரும்பியதும் வடமொழி மட்டும் கற்பிக்கப்படும் அந்தக் கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்ய வேண்டும் என்ற உறுதி மிகுந்தது அவருக்கு.

எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் திண்ணியரான அவர் அன்று முதலே - எடுத்த காரியத்தை முடிக்க முயற்சிகளை முடுக்கிவிடலானார்.

திருவையாறு கல்லூரியை இயக்கி வந்த தஞ்சை மாவட்டக் கழக (DISTRICTBOARD)த்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த உமாமகேசுவரம் பிள்ளை - அடிகளார் பால் அன்புமிகக் கொண்டவர். அவரை அடிகளார் தம் இருப்பிடத்துக்கு அழைத்து திருவையாறு கல்லூரி தொடர்பான அறக்கட்டளை பற்றி ஆராயச் சொன்னார். மாவட்டக் கழகத்தின் தலைவராக இருந்தவரோ - தமிழர் குலம் உயரப்பாடுபட்ட சர்.ஏ.டி. பன்னீர் சேல்வம்!

உமாமகேசுவரனார் தஞ்சை சென்றார். திருவையாறு கல்லூரி தொடங்கப்பட்ட காலத்து அதை உருவாக்கிய அறக்கட்டளையின் செப்புப் பட்டயத்தை எடுத்துக் கொண்டு, பன்னீர் செல்வம் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூர் வந்தார்.

அந்த அறக்கட்டளையின் பட்டயத்தில் பொதுவாக “கல்வி வளர்ச்சிக்குப் பணியாற்ற“ என்றே அதன் குறிக்கோள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே - தமிழையும் அக்கல்லூரியில் கற்பிக்கலாம் என்பதை அடிகளார் முன்னிலையில் மற்ற இருவரும் தீர்மானித்தர்கள். -

தஞ்சை திரும்பியதும் அவர்களிருவரும் அக்கல்லூரியில் தமிழ் வித்துவான் கல்வியும் கற்பிக்க ஏற்பாடு செய்தார்கள்! வடமொழிக் கல்லூரி என்னும் பெயரையும் பொதுவாக அரசர் கல்லூரி (RAJAS COLLEGE) என்ற பெயராக மாற்றியமைக்கப் பட்டது. அக்கல்லூரியில் பயின்ற தமிழ்ப் புலவர் பதினாயிரக் கணக்கானவர் - என்று பெருமை பொங்கிட - அடிகளாரின் தமிழ்ப் பணி பற்றி ஞானியார் அடிகளார் - நூலில் குறிப்பிட்டிருக்கிறார் சுந்தர சண்முகனார். அதுமட்டுமின்றி,

“அடிகளார் தாமே தமிழ்க் கல்வி நிறுவனம் தொடங்கி நடத்தியதல்லாமல், தமது முயற்சியால், நமது மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமையச் செய்தது மாபெரும் தமிழ்த் தொண்டாகும். அடிகளாரின் தமிழ்ப் பற்றுக்கு இன்னொரு இமாலயச்சான்று உண்டு. 1938ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாக்கப் பட்டபோது, அடிகளார் இந்தியை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள்; அந்த அறிக்கையை யானே - பல இடங்களில் பல சுவர்களில் ஒட்டியுள்ளேன்“ என்று கூறும் சுந்தரசண்முகனார், -

“தமிழ் கற்பதும், தமிழில் பேசுவதும் தாழ்வென்றும், தமக்குத்தமிழ் தெரியாது என்று சொல்வதைப்பெருமை என்றும் கருதிய கோடாரிக்காம்புகள் மிகுதியாக இருந்த காலத்தில், அடிகளார் இவ்வாறு தமிழ் இயக்கம் தொடங்கி நடத்தியது மிகவும் போற்றத்தக்கதாகும்” என்கிறார் தமது நூலில்!”

தமிழை நீசபாஷை என்று கருதி ஆலயங்களிலிருந்தும் கூட விரட்டத் துடிக்கின்ற அயல் இன மடாதிபதிகளின் வட மொழி வெறியையும், தமிழ்த் துவேஷத்தையும் இன்று கண் கூடாகக் காணும்போது தமிழ் வளர்த்த ஞானியாரடிகளின் பெருமை இமய உச்சியையும் தாண்டிய எல்லை காணமுடியாத பெருமையாகவே தோன்றுவதில் வியப்பென்ன?

இன்று மடாதிபதிகள் என்போர் விமானத்தில் பயணம் செய்கிறார்கள்; மடத்துக்கு அருகிலேயே விமான தளம் அமைத்துக் கொள்கிறார்கள். விஞ்ஞான யுகத்தில் அப்படிப் பட்ட பயணங்களை அவர்கள் மேற்கொள்வதை யாரும் குறை சொல்வதற்கு இல்லை.

ஆனால், ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை - தமிழில் குடமுழுக்கு என்றால் "பழமை விட்டுவிடக் கூடாது; மரபைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்" என்று அப்போது மட்டும் பழைய பழக்க வழக்கத்தை சுட்டிக்காட்டி - தமிழுக்கு இடமில்லை என்கிறார்கள்; ஆனால் பக்தர்கள் மூலம் பழைமை வாய்ந்த தங்களது மடத்தை இடித்து நாலு கோடி ருபாய் செலவில் புதிய குளுகுளு வசதி செய்யப்பட்ட மாளிகையைக் கட்டிக் கொள்கிறார்கள்! விமானப் பயணத்துக்காக தனி விமானம் விமானதளம் என்று புதுமையில் புகுந்து விளையாடுகிறார்கள். அப்போதுதான் இவர்கள் பழைமை மரபு ஆகமம் - சாஸ்திரம் என்று பேசுவதெல்லாம் எவ்வளவு பாரபட்சமானது. ஓரவஞ்சனை மிகுந்தது என்பது தெளிவாகிறது.

ஞானியாரடிகள் தலைமையில் புதுவையில் நடந்த கலைமகள் கழக ஆண்டுவிழாவில் பேசிய தமிழ் முனிவர் திரு.வி.க. "அடிகளார் மோட்டார் காரையோ புகை வண்டியையோ பயன்படுத்தாமல் சிவிகையில் (பல்லக்கில்) மட்டுமே செல்லுதல் என்ற பழைய மரபைத் தொடர்ந்து கடைபிடித்து வருவதால் எண்ணற்ற மக்கள் அடிகளாரின் சொல்லமிழ்தத்தை அருந்தும் வாய்ப்பு இல்லாதவராயுள்ளனர். என்போன்றோரும் சில ஊர் மக்களும் அடிகளாரின் உரையை விரும்பிக் கேட்டது போலவே பல ஊர்மக்களும் கேட்டு மகிழ விரும்புவார்கள் அல்லவா? அடிகளார் சிவிகையிலேயே செல்லுவதால், தொலையில் உள்ள ஊர்கட்கெல்லாம் வேண்டியபோதேல்லாம் விரைந்து செல்லமுடிவில்லையே. அடிகளாரின் சொல் உணவை மாந்தித் திளைக்க சென்னை மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

பழைய மரபை விட முடியாது பழைய மரபுப் படி சிவிகையை விடமுடியாது என்றால் யாங்கள் பெரிய மோட்டார் கார் அமைத்து அதன் மேல் சிவிகையை வைக்க ஏற்பாடு செய்வோம். அடிகளார் சிவிகையில் அமர்ந்தபடியே மோட்டார் வண்டி மூலம் இடம் விட்டு இடம் போகலாம். இந்த வேண்டுகோளை அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கோரினார்.

அதற்கு அடிகளார்,

“நான் இத்தனையாண்டு காலம் மேனா என வழங்கப் பெறும் சிவிகையிலேயே சென்று வந்தேன். இது எங்கள் ஆதீனத்தின் மரபு. இப்போது போய் மோட்டார் வண்டியைப் பயன்படுத்தினால் இவ்வளவு நாளாய்க் காத்துவந்த மரபுப் பெருமை கெட்டுவிடும். மற்றும் யான்சிவிகையில் செல்வதால், வழியில் உள்ள சிற்றூர்களையெல்லாம் பார்க்கவும், அங்கங்கே தங்கிச் சொற்பொழிவு நிகழ்த்தவும் - அவ்வூர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடிகிறதன்றோ?”

என்று பதிலளித்தார்; திரு.வி.க. அதனையேற்றார்!

மோட்டார் காரில் வர மறுத்தார்; சிவிகையிலேயே பயணம் செய்வேன் என்பது மட்டுமல்ல ஞானியாரடிகளின் சிறப்பு!

தந்தை பெரியார் போலவே இவரும் தாம் ஏற்றுக் கொண்ட சைவமும் - தமிழும் பரப்பும் கொள்கைக்காக இறுதி மூச்சடங்கும் வரையில் பயணித்துக் கொண்டே இருந்தார். 1941இல் அவர் இயற்கை எய்துவதற்கு முன்புகூட திருவண்ணாமலையில் தொடங்கி திருக்கோவலூர், பெண்ணாடகம் போன்ற பல ஊர்களில் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். திருச்சியில் மூன்று நாட்கள் நடந்த சைவ சித்தாந்த மகா சமாசத்தினரின் மாநாட்டில் தலைமையேற்று உரைநிகழ்த்தினார். அங்கிருந்து மணப்பாறை வழியாக பழநி சென்றார். அங்கேயும் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்றினார். அங்கிருந்து திருச்சி புறப்பட்டார். ஒரு திருமண விழாவுக்கு முன்னிலையேற்க! பழனியிலிருந்து திருச்சி செல்லும் வழியில் ஆய்குடி அருகே சிந்தலவாடன்பட்டி என்ற ஊரில் அவருக்கு உடல்நிலை சீர்கெட்டது. அப்போதே அவர் தமிழன்னையையும் - தமிழ் அன்பர்களையும், சமய நம்பிக்கை கொண்டவர்களையும் கண் கலங்க வைத்துவிட்டு தமது வாழ்க்கைப் பயணத்தை - வழி நடைப் பயணத்திலேயே முடித்துக் கொண்டவர்போல் இயற்கை எய்திவிட்டார். இந்த விஷயத்தில் பெரியாரும் இப்படித்தான் என்பதாலோ என்னவோ

காங்கிரசை விட்டு விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பெரியார் அவர்கள் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காக குடிஅரசு இதழ் அலுவலகத்தைத் திறந்து வைக்க திருப்பாதிரிப் புலியூர் மகாசந்நிதானம் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாரிய சுவாமிகள் என்றழைக்கப்பட்ட ஞானியாரடிகளை அழைத்தார். அங்கே - வாழ்த்துரை வழங்கிய ஞானியாரடிகள் குடிஅரசு ஏட்டையும் பெரியார் அவர்களையும் வாழ்த்தியதோடு நில்லாமல் “எங்கள் சமயத்துறையில் நிலவிவரும் குறைபாடுகளையும் கேடுகளையும் போக்கி -குடியரசு மூலம் நாயக்கர் அவர்கள் சமயத்துறையையும் சீர்திருத்திட முன்வரவேண்டும்” - என்று கேட்டுக் கொண்டார்!

இன்று- இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீது பாய்ந்து - அவர்கள் மீது புழுதி வாரி இறைக்கிற நவீன இந்துக்கள் சாதி வெறிக்குத்தீனி போட்டு கலவரத்துக்கு வழிசெய்யும் மடாதிபதிகள் பலரை பார்க்கும்போது "தமிழ்மட்டுமல்ல; தமிழர்களின் ஆதி சமயம் என்று கூறப்படும் சைவ சமயமும் குறையற்றதாக கேடு விளைவிக்காததாக இருக்க வேண்டும் என்ற பரந்த பார்வையின் பாற்பட்டு பெரியாரிடம் "சமய சீர்திருத்தப் பணியையும் நீங்களே செய்யவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்த ஞானியாரடிகளின் தமிழ்ப்பற்றையும் சமயப்பற்றையும் என்னென்பது? திரு.வி.க. நடையில் சொல்வதானால் உன்ன உன்ன உள்ளம் குழைகிறது; உவகை பெருக்கெடுக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்!

ஞானியாரடிகளின் வாழ்வும் - பணியும் !

க. திருநாவுக்கரசு

திருப்பாதிரிப்புலியூர் மடத்தின் அயந்தாம் பட்டமாகிய சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் தாம் இம்மடத்துக்கு புகழைச்சேர்த்தவராவார். இவரை அனைவரும் ஞானியார்சுவாமிகள் என்றும் ஞானியாரடிகள் என்றும் கூறுவர். இவரது குரல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகள் வரையிலும் தமிழகமெங்கும் ஒலித்தது.

ஞானியாரடிகள் 1873 ஆம் ஆண்டுப் பிறந்து, தமது 69ஆவது அகவையில் 1942இல் இயற்கை எய்தினார். இவரை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இவரது பேச்சையும் கேட்டிருக்கவும் முடியாது. ஆனால் இவரைப் பற்றி திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகளின் வழியாகத்தான் முதன்முதலில் 1959ஆம் ஆண்டுக் கேட்டேன். நான் அவரது சொற்பொழிவைக் கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை அவரைப்பற்றி கூறாமல் இருக்கமாட்டார். அடுத்து நான் ஞானியாரடிகளைப் பற்றி திரு.வி.கவின் வாழ்க்கைக் குறிப்புகளிலும் மறை. திருநாவுக்கரசு எழுதிய மறைமலையடிகள் வாழ்க்கை வரலாறு எனும் புத்தகத்திலும் படித்து அறிந்தேன்.

சாமி சிதம்பரனாரின் தமிழர் தலைவர் புத்தகத்தில் பெரியாரின் குடிஅரசு அலுவலகத்தைத் தொடங்கி வைத்தார் ஞானியாரடிகள் என்பதைப் படித்துத் தெரிந்து கொண்டேன். திருச்சி குழித்தலை கடம்பர் கோவிலில் இளமுருகு பொற் செல்வி அவர்களின் இல்லத்தில் தங்கி அவர்களின் நூலகத்தை ஒரு பார்வை பார்த்தபோது 1910க்குப் பிறகு 1940 வரையுள்ள நூல்கள் மற்றும் சமய, அரசியல் இதழ்களில் ஆங்காங்கே ஞானியாரடிகளின் பெயர்கள் கண்களில் அகப்பட்டவாறே இருந்தன.

சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடான செந்தமிழ்ச் செல்வியில் ஞானியாரடிகளின் ஒளிப்படத்தோடு அவரைப் பற்றிய செய்திகளையும் படித்தேன்.

1970ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் திரைப்பட உரையாடல் ஆசிரியராகத் திகழ்ந்த வி. என். சம்பந்தத்தைச் சந்திக்க நேர்ந்தது. புகழ் பெற்ற நடிகையாக ஒரு காலத்தில் விளங்கி வந்த பி. கே. சரசுவதியை அவர் திருமணம் செய்த கொண்டவர். அவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது ஞானியாரடிகளைப் பற்றி பேச்சு எழுந்தது. தாம் அம்மடத்தில்தான் தமிழ் படித்ததாகவும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்த வித்துவான் இராசக் கண்ணனார் ஞானியாரிடம் தமிழ் படித்தவர் என்றும், அவர் தமது பெரிய தாயாரின் மகன் என்றும் என்னிடத்தில் கூறினார்.

நான் சென்று உரையாடுகிற தமிழ் அறிஞர்களெல்லாம் அவர் பெருமையைப் பேசலாயினர். அனைத்தையும் விட சர். ஏ. டி. பன்னீர்செல்வத்தைப் பற்றி கட்டுரை எழுத தஞ்சை மாவட்டத்திலுள்ள (1987 - 88 களில்) சில இடங்களுக்கு சென்றபோது அவரது உறவினர்கள் குடியிருந்த செல்வபுரம், தீபங்குடி, காப்பனாமங்கலம் ஆகிய ஊர்களுக்கும் செல்ல வேண்டிவந்தது. - தீபங்குடியில் இருந்த பன்னீர்செல்வத்தின் உறவினர் இராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர் - முற்றிலும் ஆங்கில பாணியில் வீடு, உடை, பேசும்பாணி போன்றவற்றில் இருந்த அவர்- பன்னீர்செல்வத்தை அத்தான் என்றே கூறி அவரைப் பற்றி சொல்லி வந்தபோது ஞானியாரடிகளைப் பற்றியும் குறிப்பிட்டது எனக்கு பெரு வியப்பாக இருந்தது. அவரது மிகவும் வித்தியாசமான கிறிஸ்தவ பெயர் எனக்கு நினைவில் இல்லை. கிறிஸ்தவரான அவர் வணக்கத்திற்குரிய மகான் என்று பலமுறை அவரைப் பன்னீர்செல்வம் தமது குடும்பத்தாரிடம் பேசியுள்ளதை சந்திப்பின்போது அவர் நினைவு கூர்ந்தார்.

புலவர் பொன்னிவளவனுடன் பேசிக் கொண்டிருந்த போது த. வே. உமாமகேசுவரனார் ஞானியாரடிகளிடம் பெரு மதிப்பு வைத்திருந்ததாகவும், த. வே. உ. அவர்கள் புலவர் பொன்னிவளவனின் உறவினர் என்றும் தெரிந்து கொண்டேன்.

ஆங்கில ஆட்சியின்போது தஞ்சை மாவட்டத்தின் இரட்டையர்களாகச் செயல்பட்ட சர். ஏ. டி. பன்னீர்செல்வமும் த. வே. உமாமகேசுவரனாரும் தருணம் வாய்க்கிறபோதெல்லாம் ஞானியாரடிகளின் அறிவுரைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது கடந்தகாலப் பதிவுகளிலிருந்து கிடைக்கின்ற செய்திகளாக இருக்கின்றன.

மயிலை கபாலீசுவரர் கோவிலில் நடைபெறும் திருமுறை சொற்பொழிவுகளின் போதும்,

சென்னை மல்லீசுவரர் கோவிலில் குருகுலம் அழகரடிகள் நிகழ்த்தி வந்த திருக்குறள் சொற்பொழிவுகளின் போதும்,

திரு.வி.க. அவர்களால் நிறுவப்பட்ட ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜனசபாவில்நடைபெற்று வந்த வார சொற்பொழிவுகளின் போதும்,

சிந்தாதிரிப்பேட்டை வேதாந்த சங்கத்தில் நடைபெற்றுவந்த தமிழ் வகுப்புகளின் போதும்,

பிரபுலிங்க லீலையைப் பாடமாக நான் கேட்க வேண்டும் எனக் கருதி திரு.வி.க. மணிமண்டபத்தில் லால்குடி நடேச முதலியார் நடத்திய வகுப்புகளின்போதும், சைவ சிந்தாந்த பெருமன்ற சொற்பொழிவு ஒன்றின்போது பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் போதும் என்னுடைய தேடுதலில் குறுக்கும் நெடுக்குமாக ஞானியாரடிகள் வந்து சென்று கொண்டே இருந்தார்.

1950களின் இறுதிகளிலிருந்து என்னைத் தொடரும் அவர்க்கு என்னிடமிருந்து அவரைப் பற்றிய சித்திரம் ஒன்று வேண்டுமல்லவா? அவரைப் பற்றிய என் கருத்தமைவுக்கு ஒரு வடிகால் தேவையல்லவா? அதற்காகவே நட்பானது போலவே காஞ்சிபுரம் அ.நா. பாலகிருஷ்ணன் அவர்களது தொடர்பு எனக்கு வாய்த்தது.

மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட, பெரும்பாலும் எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்ட, ஒருவரின் பணிகளைப் பல அறிஞர்களின் கட்டுரைகளின் வழி நினைவு கூர்வதும், அவரது வரலாற்றை அக்கட்டுரைகளோடு இணைத்து நூலாக்கி வெளியிட முன்வந்ததும் பயன் எதிர்பார்த்து செய்யும் செயலாக கண்டிப்பாக இருக்க முடியாது. அவர் முன்வந்ததன் விளைவு தான் ஞானியாரடிகளைப் பற்றி இக்கட்டுரை.

தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிகள் மறைந்து சிற்றரசுகளாய், பாளையங்களாய் ஆட்சிகள் பலபட நிகழ்ந்து வந்தபோது தமிழகத்தில் கி.பி.16 முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை சைவாதீனத்தார் காலமாக விளங்கியது. இக்கால கட்டங்களில் வாழ்ந்த மக்களின் சமுதாய, சமய வாழ்வில் அவை சிறப்பான பங்காற்றின. இச்சமுதாய, சமய ஆளுமை என்பது கூட அரசியல் சார்ந்ததாகவே இருந்தது.

தமிழ்நாட்டில் தோன்றிய சமயமான சைவமும், வைனொமும் ஒரு கட்டத்தில் சமணத்தையும், பௌளத்தத்தையும் எதிர்த்துப் போராடின. ஆதி மதமான சைவத்தை எதிர்த்தும் வைணவம் போராடியது. சமணம், பெளத்தம், சைவம், வைணவம் ஆகியன மாறி, மாறி அரசு மதங்களாக விளங்கின. அரசு, ஏதாவது ஒரு மதம் சார்ந்ததாக இருந்தது.

தமிழகத்தில் பேரரசுகள் வீழ்ந்தபோது மதங்களின் சமுதாயப் பங்களிப்பும் சிதைந்தே போயிற்று. அதாவது குறுகிப் போயிற்று. அவற்றுள் பல்வேறு தத்துவ பிறழ்ச்சிகள் தோன்றின. அதனால் உட்பிரிவுகள் கணக்கற்றவை மலிந்தன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கிறிஸ்துவ சமயம் பரவும் முன்னே இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையர் (St.Thomas) சென்னை மயிலையில் கிறிஸ்துவின் கொள்கைகளை மக்களிடையே விரித்துரைத்தார்.

இசுலாத்தின் கொள்கைகள் நபிகள் மறைந்த ஒரு நூற்றாண்டு முடிவதற்குள் மலையாளக் கரையில் வேர்விடத் தொடங்கியது. பழந்தமிழ் நாட்டின் கிழக்கு, மேற்கு கடற்கரைகளில்வேர்விட்டு கிளைத்த கிறிஸ்தவமும், இசுலாமும் அரசு சார்பு மதங்களாக விளங்கின.

மொகலாயர்களின் வீழ்ச்சியும், அய்ரோப்பியர் வருகையும் இங்கே பல பாதிப்புகளை உருவாக்கி இருந்தன. விஜய நகரப் பேரரசின் எழுச்சி உருவாக்கியிருந்த தெலுங்கு மொழி ஆதிக்கம் தமிழ்நாட்டில் இன்று வரை இருப்பதைப் போலவே தொடர்ந்து அன்றும் இருந்து வந்தது.

தென்தமிழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரியார்களின் வருகையும், தரங்கம்பாடியில் வந்திறங்கிய அச்சியந்திர இயக்கத்தின் வளர்ச்சியும் ஓலைச் சுவடிகளுக்கு மெல்ல விடை கொடுக்கத் தொடங்கின.

18,19 ஆம் நூற்றாண்டுகள் உலகில் பல மாறுதல்களை உருவாக்கியது. அந்த மாறுதல்கள் தமிழ்நாட்டையும் எட்டின. ஆங்கிலேயன் ஆட்சியில் 'பழந்தமிழகம்' உருவாகி இருந்தது. அதற்குப் புதிய பெயர் - மெட்ராஸ் பிரசிடென்சி - சென்னை இராஜதானி என்று சூட்டியிருந்தார்கள். மேலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் - ஆங்கில ஆட்சியினர் கல்வி நீரோடையைப் பாய்ச்சத் தொடங்கினார்கள்.

இங்கே ஏற்கெனவே இருந்த சமயச் சண்டை, மதச் சண்டை, சாதிசண்டை புதிய கருவிகளைக் கொண்டு போராடத் தொடங்கி இருந்தன. இராமலிங்க அடிகளார் (1823-1874) சமுதாய, சமயப் போரை தமிழ்நாட்டில் மிக அமைதியாக ஆற்றத் தொடங்கி இருந்தார். அதில் அவர் வெற்றி பெற்று விட்டதாகக் கூறிவிட முடியாது. ஆனால் அவர் சமயத்துறையில் செய்த புரட்சியை வரலாறு மறைக்கவோ, மறக்கவோ முடியாது.

இராமலிங்க அடிகளார் மரிப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் தோன்றியவர்தான் ஞானியாரடிகள். இராமலிங்க அடிகள் தொண்டை நாட்டு சென்னையம்பதியில் பிறந்து நடுநாட்டில்-வடலூரில் வாழ்ந்து மறைந்தவர். வருணாசிர மத்தை எதிர்த்தவர். இவரின் சமயக் கிளர்ச்சி புதிய சமுதாயச் சிந்தனையை விதைத்தது. ஆனால் அவரால் தமது பிரச்சார எல்லையை விரிவுபடுத்த முடியவில்லை. ஆனால் சமயச் சித்தாந்தங்களைப் பாடல்களாகப் புனைந்தார். சுற்றுப்பயணச் சாதனங்கள், புதிய அரசியல் சூழ்நிலை, சங்கங்கள் ஆகியனவெல்லாம் வள்ளலார்க்கு வாய்க்கவில்லை.

ஞானியாரடிகள் 1892ஆம் ஆண்டு மடாதிபதியாக பட்ட மேற்றுக் கொண்டார். சுமார் 50 ஆண்டுகள் இவர் பணியாற்றினார். இவர் பொறுப்புக்கு வந்த காலம் உலகம் மேலும் பல மாறுதல்களை அடைந்து இருந்தது. சென்னை இராஜதானியின் எல்லையில் தமிழ் பேசும் பகுதிகளை மட்டும் தெரிந்தெடுத்துப் பல்லக்கிலேயே சென்று சமயப் பிரச்சாரம் செய்து இருக்கிறார். இவரது பிரச்சாரம் சென்னைத் தொடங்கி திருநெல்வேலி வரை நடந்து இருக்கிறது.

மதம், சமயம் எனும் இருசொற்களையும் ஒரேபொருளில் தான் அனைவரும் பார்ப்பர். இதனைப் பிரித்துக் காட்டியவர் இராமலிங்க அடிகள் ஆவார்.

‘மத, சமய வழக்கமெலாம் மாய்ந்தது;

வருணாச் சிரமமெனும் மயக்கமும் வீழ்ந்தது’

என்பார். மதம், சமயம் என்னும் இரு சொற்களும் ஒரு பொருள் உடையனவாயினும் ஒரு நுண்ணிய வேறுபாடு அவற்றிற்கு இடையே உண்டு. ஒரே தெய்வத்தை-இறைவனை மதித்து வழிபடுவது மதம்: இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம். ஆகவே தத்தினும் சமயத்துக்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டும் என்பார் பாவாணர்.

ஞானியாரடிகள் வள்ளலாரைப் போல பாடல்களை இயற்றவில்லை. நூல்களை எழுதவில்லை. மக்களைச் சந்தித்தார். மக்களிடையே பேசினார். அவர்களின் பலம், பலவீனங்களை உணர்ந்து அவர்களைத் தேற்றினார். பசித்தோர்க்கு உணவும், கல்வி கற்க வருவோர்க்குத் தகுந்த ஏற்பாடுகளும் செய்தார். ஞானியார் வீர சைவர். அவர்களுக்கு என்று முறைகளும் ம்ரபுகளும் உண்டு. சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வணங்குபவர். அவர் மட்டுமே இறைவனைப் போற்றி வணங்கி முறைகளையும், மரபுகளையும் பின்பற்றி துவராடை அணிந்து துறவியாக வாழ்ந்து மறைந்து விடுவதில் ஞானியாரடிகள் பேரின்பம் கண்டார் இல்லை. இவரது சமய வாழ்வு அனைத்து தமிழ் மக்களையும் ஒருங்கிணைப்பதாக அமைந்தது.

மேலும் தமிழகத்தில் சமய வாழ்வு என்பது முழுமுதற் கடவுள் தன்மை உடையதாக மக்களால் போற்றப்படவும் வணங்கப்படவும் இல்லை. உட்பிரிவுகளும் சிறுதெய்வ வணக்கங்களும் மலிந்துள்ள நிலையில் ஞானியார் மேற்கொண்ட பிரச்சாரம் சமூக வாழ்வில் ஒரு தேவையை உணர்த்தக் கூடியதாய் அமைந்திருந்தது. அவரிடம் சைவர், வைணவர், இதர உட்பிரிவினர் பிற மதத்தார் எனப் பேதங்காட்டும் படியான செயல்களில் அவர் இறங்கினார் இல்லை. அதற்காக அவர்தமது அடையாளத்தையும் இழக்கவில்லை. வீரசைவ மரபையும் மக்கள் மீது திணிக்கவும் இல்லை. அவரும் இறுக்கமாகவும் இல்லை.

ஞானியாரடிகளுக்குக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு தமிழர்களைச் சமயத்தின் பெயரால் அவர் கற்ற தமிழால் திரட்டினார். அதற்காக அவர்கற்ற கல்வியையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஞானியாரடிகளின் சொற்பொழிவுகளைக் கேட்ட அறிஞர் பெருமக்கள் சமயச்சார்பான அவரது விரிவுரையைக் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தும், கேட்டோர் சிந்தைச் சிலிர்ப்பு எய்தியதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஞானியாரடிகளின் பதிவான சொற்பொழிவுகளைப் படித்துப் பார்க்கிறபோது அறுசமயங்கள் தொடர்பாக நமக்கு இருக்கும் அறியாமை போக்கப்படுகிறது. ஆனால் அதேசமயம் பல அய்யங்கள் தோன்றுகின்றன. அறிதொறும் அறிதொறும் அறியாமை இயல்புதானே அவற்றைத் தொடர்புடைய நூல்களைக் கற்பதன் மூலம் தெளிவு பெறமுடியும் எனும் எண்ணத்தையும் அவை ஊட்டி நிற்கின்றன.

ஞானியாரடிகள் எனும் பெயர் என் செவிகளில் எப்படியெல்லாம் விழுந்து வந்தன என்பதைக் குறித்துக் கூறி இருக்கிறேன். 1980களின் நடுவில் பெரியாரின் முதல் குடியரசு ஏட்டைப் பற்றி ஓர் ஆய்வு நூலைத் தோழர் முருகு இராசாங்கம் என்பவர் வெளியிட்டார். என் பார்வையில் அந்நூல் கிடைக்கவும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அந்நூலின் ஆய்வு சில ஆய்வாளர்களின், அரசியல் இயக்கத்தாரின் பொறுப்பின்மையைச் சுட்டிக் காட்டியது. அவரது ஆய்வில் ஞானியாரடிகள் இடம் பெறுகிறார் என்பது தனிச்சுவையான செய்தியாகும்.

ஈ. வெ. இராமசாமிப் பெரியார் ஒரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்று எண்ணுகிறார். அவர் இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்கெடுத்து 1922-இல் கோவைச் சிறையில் இருக்கும்போதுதான் பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார். பெரியார் 1925-இல் குடியரசு எனும் ஏட்டைத் தொடங்குகிறார். பொதுவாக எல்லோருமே குடியரசு ஏட்டை-முதல் இதழை ஞானியாரடிகள் வெளியிட்டு இருக்கிறார் என்றுதான் கூறுகிறார்கள்; எழுதுகிறார்கள்.

தோழர் முருகு, இராசாங்கம் எழுதிய நூல்தான் ஞானி யாரடிகள் குடியரசு முதல் இதழினை வெளியிட்டுப் பேசவில்லை. குடியரசு அலுவலகத்தைத் திறந்து வைத்துதான் பேசினார். அவர்பேசிய பேச்சு குடியரசு முதல் இதழில் இடம் பெற்றிருப்பத்திலிருந்தே இது உறுதியாகிறது என்று அவரது ஆய்வு நூலில் கூறியிருந்தார்.

குடியரசு முதல் இதழிலிருந்து 22 இதழ்கள் கிடைக்காமையால் ஆய்வாளர்கள் சில குழப்பங்களை ஆய்வுகளில் மேற்கொண்டனர். அந்த இதழ்களில் முதல் இதழை எங்கேயோ அகன்றாழ்ந்து எடுத்த முருகு, இராசாங்கம் பல செய்திகளை வெளிக் கொணர்ந்தது போலவே ஞானியாரடிகள் அலுவலகத்தைத் திறந்து வைத்து அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதியையும் வெளியிட்டிருந்தார்.

ஞானியாரடிகள் ஆற்றிய அந்த உரையின் பகுதிதான் என்ன?

1925 ஆம் ஆண்டு ஈ.வெ. இராமசாமி பெரியார் அவர்களுடைய குடியரசு பத்திரிகை அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய ஞானியாரடிகள் பேசுவதைப் படித்து பாருங்கள்.

...???

"நமது நாட்டில் உயர்வு தாழ்வு என்ற ஆணவம் மிகுந்து இருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். குடிஅரசுவின் கருத்தும் அதுவே என நான் அறிந்துகொண்டேன். சமயத்தில் இருக்கும் கேட்டை முதலில் அழிக்க வேண்டும். இவை குடிஅரசின் முதல் கொள்கையாக விளங்க வேண்டும். இப்பத்திரிகையில் ஸ்ரீ மான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு"

அதற்கு முன்னதாகப் பெரியார் பேசுவதைப் படியுங்கள்.

"இப்பத்திரிகை... சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமி என்னும் ஞானியார் சுவாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அநேக பத்திரிகைகள் நமது நாட்டில் இருந்தாலும் அவைகள் தங்கள் மனசாட்சிக்கு உண்மையென்று பட்டதை தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகையை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகையைப் போல் இல்லாமல், மனதில் பட்டதை தைரியமாய் பொதுஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பது என் அபிப்ராயம்"

ஞானியாரடிகளின் உரையிலிருந்து நாம் அறிந்து கொள்வது நம் நாட்டில் இருக்கிற பழமையான மதமானது ஆணவம் மிகுந்து இருக்கிறது. அதில் சமத்துவம் இல்லை. அந்தச் சமயத்தில் கேடு உள்ளது. அதனை அழிக்க வேண்டும். இவைதான் குடிஅரசு ஏட்டின் முதல் கொள்கையாக இருக்க வேண்டும். இப்பத்திரிகையில் பெரியாருக்கு உள்ளதைப் போன்ற பொறுப்புத்தமக்கும் இருக்கிறது. பெரியாரது குடியரசு ஏடும் ஞானியாரடிகள் கூறுவதுபோல் சமய சீர்திருத்தத்தைக் குறிக்கோளாகக் கொண்டுதான் தொடங்கப்பட்டது. அதன் ஆழமும் வீச்சும் வேறு மாதிரியாக விளங்கிற்று. அதற்குக் காரணம் என்ன?

ஞானியாரடிகளின் வேண்டுகோளைத்தான் பெரியார் நிறைவேற்றக் கிளம்பினார். நிறைவேற்றவும் செய்தார். அறிவும் ஞானமும் ஒரே பொருளைக் குறிக்கும் சொற்களைப் போல மயக்கம் ஏற்படுத்தும். ஆனால் அவை ஒரே பொருளைக் குறிப்பன அன்று. அறிவு ஒரு பொருளைக் கண்ணால் பார்க்கும். ஞானமோ அதன் நன்மை தீமைகளை முடிவெடுக்கும். எப்போது? அறிவு, பகுத்தறிவாக விரிகிறபோது ஞானம் ஏற்படுகிறது. ஞானம் இலது உளது என இரு கூறுகளை வழங்கு கிறது. இலது என்பதை பெரியார் சிக்கெனப் பிடித்துக் கொண்டார். அதை அவர் நன்மை என்றே கருதி மக்களுக்கு எடுத்துரைத்தார். இது ஞானியாரடிகளிடத்திலேயிருந்து கிளைத்து எழுந்த மறுபக்கமாகும். இங்கே இதைவிரித்து எழுதுவது ஏற்புடையதன்று.

ஆகவே ஞானியாரடிகளின் குடியரசு பேச்சு உணர்த்துவது என்ன? வள்ளலார்க்குப் பிறகு ஆன்மீகத் துறையில் இருந்த ஒரு பெரியார் சமயத்திலுள்ள குறைபாடுகளை ஒப்புக்கொண்டு ஓர் இயக்கமாக இயங்கி செயலாற்றினார் என்றால் அவர் ஞானியாரடிகளைத் தவிரவேறு எவருமிலர் என்று துணிந்து கூறலாம். ஞானியாரடிகள் வடமொழி, ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளைக் கற்றவர். ஆனாலும் மொழியின்றி சமயமில்லை எனும் கொள்கையில் உறுதியாக நின்றவர்.

இவரிடம் நம்மால் இன்னொரு சிறப்பையும் காண முடிகிறது. சைவ, வைணவ பிரிவுகளையும் அதன் உட்பிரிவுகளையும் பற்றி எந்தவித சலனமும் கொள்ளாமல் அவரவர் விரும்பி அழைத்து இன்னபொருளில் உரையாற்ற வேண்டும் எனக் கேட்டோர்க்கு உரிய வகையில் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்தார் ஞானியாரடிகள்.

ஞானியாரடிகளின் சொற்பொழிவு பல ஆழமான செய்திகளைக் கொண்டதாகும். துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய சமய சார்ந்த மெய்யியல் பற்றிய அவரது விளக்கம் - நூல்களில் அதனைப் பாகுபடுத்தி கூறியிருக்கும் விதம் அக்கால சமய அறிஞர்களை அசத்தி இருக்கவே செய்திருக்கும். அதற்குக் காரணம் ஞானியாரடிகள் மிக நுட்பமாக நூல்களை ஆய்ந்தறிந்து செய்திகளைச் சொன்னதுதான்! மேலும் சைவ சித்தாந்தத்துக்கு அத்வைதத்தில் 'எந்த இடம்’ என்பதை இவர் நுட்பமாகக் காட்டுவதிலிருந்து சமயத்திலும் வடமொழியிலும் ஞானியாரடிகளுக்கு இருந்த புலமையின் ஆழத்தைக் கண்டு அறியமுடிகிறது. இந்த இடமே மறைமலை யடிகளை, திரு.வி.க.வை இவர்பால் ஈர்த்த இடங்களாக இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

ஞானியாரடிகள் கூறுகிறார்.

"அத்வைதம் எனும் சொல்லுக்கு வடமொழி நூல் ஆறுவித பொருள்களைக் கூறுகிறது. ஈண்டு வேண்டற்பாலன மூன்று பொருள்கள். அவை அன்மை, இன்மை, மறுதலையாகும். ஆதிசங்கரர் அதை இன்மைப் பொருளில் கொண்டார். மெய்கண்டார் அன்மைப் பொருளில் வழங்குகின்றார். கடவுளுக்கும் உயிருக்குமுள்ள அத்வைத சம்பந்தத்தை மெய்கண்டார் விளக்கும் முறையே சிறந்ததொன்றாகும் என்று கூறிவிட்டு ஞானியாரடிகள் அதனை புணர்ச்சி இலக்கணத்தால் விளக்குகிறார்.

"தான் தலை என்ற இரண்டு வேறுபட்ட சொற்கள் புணரும் போது தாடலை என்றாகிறது. இங்கு ‘ட’ கரம் ஒரு எழுத்தன்று. இரண்டு எழுத்துகள் ஒன்று சேர்ந்து ஒன்றாகாமலும் இரண்டும் அல்லாமலும் நிற்கிறது. இதைப்போல் கடவுள், உயிர் ஆகிய இரண்டு வேறுபட்ட பொருள்கள் ஒன்று கூடும் போது ஒன்றாகாததும் இரண்டல்லாமையுமாகிய நிலையை எய்துகின்றன. இதுவே மெய்கண்டார் கூறும் அத்வைதமாம்”.

ஞானியாரடிகள் புணர்ச்சி இலக்கணத்தின் மூலம் சமய மெய்யியலை விளக்கும் பாங்கு வெகு சிறப்பானது ஆகும்.

இங்கே நாம் பார்க்க வேண்டியது சமயத்தை தமிழோடு - மொழியோடு-தாய்மொழியோடு இணைத்துக் காட்டும் விதமே தமிழ்த் தேசியத்தின் சமய மெய்யியல் வழியான அடையாளமாகும். தமிழ் என்கிற மூன்று எழுத்துக்களை எடுத்துக்கொண்டு வள்ளலார் எழுதிய சமய மெய்யியலின் சாரமே ஞானியாரடிகளின் புணர்ச்சி இலக்கண எடுத்துக்காட்டைக் காட்டுவதன் மூலம் என் நினைவுக்கு வருகிறது.

இதையடுத்து ஞானியாரடிகள் சொற்களின் பயன் பாட்டைக் பற்றி மிகத் துல்லியமான கவனத்தைச் - செலுத்தியவராக இருந்திருக்கிறார். எடுத்துக்காட்டிற்காகச் சிலவற்றை கூறுகின்றேன்.

1. தோள் என்றால் தோள் பட்டையிலிருந்து விரல்கள் வரை.என்று பொருள்.

2. உட்காருங்கள்; உட்காருதல் என்றெல்லாம் நம் பேச்சில், வழங்குகிறோம். இவற்றிற்கு தமிழில் வழக்கு இல்லை. ஆதாரமும் பொருளும் இல்லை. நிற்றல், இருத்தல், இருந்தான் என்பது அமர்ந்திருத்தல், அமர்தல், வீற்றிருத்தல் என்ற சொற்களும் சரியானவை.

3. மனம் நினைத்தற்கு கருவியாயுள்ளது. சில சுவடிகள் ஸ்மிருதிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஸ்மிருதி என்ற சொல்லிற்கு நினைப்பு என்பது பொருள். நினைப் புணர்ச்சி இல்லாதவனை பைத்தியக்காரன் என்று சொல்லுகின்றோம். பைத்தியக்காரனை விஸ்மிருதி என்பது வழக்கம். (வேதங்களை மனப்பாடம் செய்த நினைப்பிலிருந்து சொல்லப்படுவதால் வேதங்களுக்கு ஸ்மிருதி என்று பெயர். ஸ்மிருதி என்றால் சொல்லப்படுவது என்றும் பொருள்)

4. மோனம் என்பது ஞானவரம்பு என்று அறிக. வாய்மூடி இருந்தால் மோனம் அன்று; மனம் அலையாமல் அடங்கி நிற்பதே மோனம்; சிந்தனை அற்று இருப்பதே மோனம். ஞானியாரடிகள் தமது சொற்பொழிவின் போது சொற்களின் பொருள் பற்றிய விளக்கங்களை இவ்வாறு கூறிச் செல்லுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

மேலும் ஒரு விளக்கத்தைப் பார்ப்போம்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்"

எனும் குறட்பாவை, நாம் அனைவரும் அறிவோம். பொறிவாயில் ஐந்தவித்தான் என்பதற்குப் பரிமேலழகர், “மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் பொறிகளை வழியாகவுடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது எனப் பொருள் கூறுவார்.இதற்கு ஞானியாரடிகள் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

“மெய்யன்பர்களே !

மக்களை மாக்களினின்றும் பிரித்து வைப்பது சிறந்த அறிவு ஒன்றே. அவ்வறிவைச்செலுத்தும் வழிகள் இரண்டு. 1) உள்ளே 2) வெளியே இவ்விரண்டே அவ்விரு வழிகளாகும். அறிவை உட்செலுத்தும் வழக்கம் மக்களுள் பெரும் பாலார்க்கில்லை எனலாம். பின்னதே, யாவராலும் கைக்கொள்ளப்படும் ஒன்று. வெளிமுகமாக அறிவைச் செலுத்துங்கால் ஐந்து வழிகள் மூலம் அதனைச் செலுத்துகின்றோம். அவ்வழிகள், கண், மூக்கு, வாய், காது, மெய் என்பன. கடவுள் இவ்வாறு இவ்வைந்தின் வழித்தன் அறிவைச் செலுத்துபவன் அல்லன். ஆகவே, அவன் பொறி வாயிலைந்தவித்தான் என்று புகழப்பட்டான்.

ஐந்தனுள் கண்ணே முதன்மை இடத்தைப் பெறுகின்றது. அது அமைந்திருக்கும் இடமே அம்முதன்மையைத் தருதற்குக் காரணமாகின்றது. மேலும், காது முதலிய மற்றப் பொறிகள் தம்பால் வந்தவற்றையே அறியும் ஆற்றலுடையன; ஆனால், கண்கள், தாமே பொருள்களினிடம் சென்று அறியும் வன்மையுடையன.

கண்கொண்டு நாம் உலகைப் பார்க்கின்றோம். பார்க்கப்படும் பொருள்கள் மூவகை. 1. அறிவு இல்லா உலகம் 2. சிறிதறிவுடைய நாம். 'நம்மைத் தாழ்த்திக் கூறுகின்றாரே’ என்று சில அன்பர்கள் கருதலாம். பிறந்த ஞான்று நாம் ஒன்றையும் அறியாதிருந்தோம். பின்னர்த் தாயினை அறிந்தோம். தாய் சுட்டி அறிவிக்கத் தந்தையை அறிந்தோம். இருவரும் தந்த அறிவால், பெரியோர், வந்தோர், வெளியோர், உபாத்தியாயர், ஞானகுரு ஆகியோரை அறிந்தோம். இவர்கள் எல்லோரும் தந்த அறிவாலும் இதுவரை நாம் நிறைந்த அறிவினராகவில்லை. இதனை அறிவுடையோரையே குறிக்கொண்டு கூறுகின்றேன். ஏனெனில் பேதையோர் தாம் பெற்றதையே பெரிதென்று தவறாக எண்ணும் எண்ணத்தினர். பல்லாற்றலும் பெற்ற அறிவு கொண்டு ஊகிக்கின், காணாப் பொருளொன்று என்று உணரவியலும்".

திருக்குறள் விளக்கவுரை ஆசிரியர்களுள் கோ. வடிவேல் செட்டியார் ஒருவர். இவர் பரிமேலழகரின் உரைக்கு விளக்கவுரை எழுதி... இல் முதன்முதலாக வெளியிட்டவர். இவர் ஞானியாரடிகளைச் சென்று வணங்கும் வழக்கமுடையவர். செட்டியாரை ஞானியார் கவர ஈர்ப்பின் திறவு எங்கே இருக்கிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

ஒரு சொற்பொழிவில் சேவலைப் பற்றி ஞானியாரடிகள் சொல்லுகிறார். அதற்குத் தொல்காப்பிய மரபியில் 48-ஆம் சூத்திரத்தை எடுத்துக்காட்டி நச்சினார்க்கினியர் கூறியபடி, சேவல் எனும் பெயர் பறப்பனவற்றுள் ஆண்பாற்கெல்லாம் உரித்து: அவற்றுள் மயிலுக்கு ஆயின் அஃதாகாது என்று சூத்திரத்தின் வழியே பொருள் கூறி முருகன் ஊர்ந்து செல்லும் மயிற்காயின் சேவல் என்று கூறலாம்" என்பதை அடிகள் கூறினார். இவையெல்லாம் அவரது சொற்பொழிவு ஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

ஞானியாரடிகள் மதுரைத் தமிழ்ச் சங்கம் (1901) தோன்றவும் கரந்தைத் தமிழ் சங்கம் (1911) தோன்றவும் காரணராக இருந்திருக்கிறார். இவ்விரண்டு சங்கங்களும் தமிழ் பண்டித மற்றும் புலவர் வகுப்புகளை நடத்தின. செந்தமிழ், தமிழ்ப்பொழில் ஆகிய திங்கள் இதழ்களை வெளியிட்டன. இவ்விரு ஏடுகளையும் புரட்டிப் பார்த்தால் வெளிவந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய சிறப்பைத் தனித்தன்மையை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

சைவாதீனங்கள் பெரியதோ சிறியதோ அவையெல்லாம் ஒரு கட்டத்தில் அதிகார மய்யங்களாகவே விளங்கின. பேரரசுகள் வீழ்ந்து, சிற்றரசுகளும் தன்னிலை இழந்து தாழ்ந்தபோது மக்களை அதிகாரம் செலுத்துகிற சமயம் சார்ந்த அமைப்புகளாக தமிழகத்தில் மடங்கள் விளங்கின. ஒரு கட்டம் வரைதான் இவ்வமைப்புகளின் ஆளுமைகள் பொலிவோடு இருந்தன.

ஆட்சிமுறைகளில் ஜனநாயகம், அறிவியல் சாதனைகள், உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகியன தோன்றியவுடன் மனிதகுலத்தில் பெரிய மாறுதல்களை உருவாக்கின. சைவாதீனங்கள் தமிழகத்தில் தோன்றி முடிவுறுகிற காலகட்டத்தில் உலகெங்கும் மொழிவழி தேசியங்கள் உருக்கொள்ளத் தொடங்கி இருந்தன. ஆனால் தமிழகத்தில் சைவாதீனங்கள் அப்பணியை மொழியை சமயத்தோடு குழைத்துத் தந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்னே உருவாக்கித் கொண்டிருந்தன.

19ஆம் நூற்றாண்டுக்கும் 20ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த ஞானியாரடிகள் தமிழ்த் தேசியத்துக்கு ஒரு முன்வரவை ஏற்படுத்தி தந்ததுறவியாவார்.

பெரும்பாலான சைவ மடங்கள் இருந்த இடத்திலேயே அதிகாரத்தை செலுத்திக் கொண்டே வரவு - செலவு பார்த்த காலகட்டத்தில் சிவிகை ஊர்ந்து சமயப் பொறையோடு தமிழ்ப் பணியாற்றிய ஒரேதுறவி ஞானியாரடிகள் ஆவர்.

சற்றொப்ப 50 ஆண்டுகள் சமயமும் தமிழுமாக தமது வாழ்வின் பணிகளாகக் கொண்ட ஞானியாரடிகள் தேர்தல் முறை முழுமையாகாத ஆனால் தேர்தல் முறையின் மூலம் ஆட்சி அமைக்கும் காலகட்டங்களில் வாழ்ந்தவர்.

இந்திய விடுதலை இயக்கமும், நீதிக்கட்சியும் சுய மரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் அவ்வவற்றின் வழியில் போராடியபோது ஞானியாரடிகள் வாழ்ந்தார் என்றாலும் இவர் யாரையும் எதற்காகவும் சென்று அணுகாதவராக, உண்மை துறவியாக வாழ்ந்து இருக்கிறார்.

ஞானியாரடிகளாரை வேண்டுமானால் அரசியல் தலைவர்கள் வந்து பார்த்து சென்றிருக்கலாமே ஒழிய இவர் யாரையும் சென்று பார்த்துப் பழகியதில்லை. தம்மைப் பார்க்க வருகிறவர்களிடம் இதைச் செய்யுங்கள்; அதைச் செய்யுங்கள் என வழிகாட்டுதலை ஞானியாரடிகள் வழங்கி இருக்கிறார்.

இன்று நம்மிடையே தமிழால் ஒன்றுபடுவோம்’ எனும் முழக்கங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. வெவ்வேறு சமூக, அரசியல் அமைப்புகள் கூட இம்முழக்கத்தை முன் வைக்கின்றன. அரசியலில் தமிழியச் சிந்னைகளே தோன்றாத காலகட்டத்தில் தமிழால் ஒன்றுபடுவோம்!“ என முழங்காமல் முழங்கி செயற்கரிய செய்தவர் ஞானியாரடிகள். சமயத்துறையில் இருந்த ஒருவர், மற்ற சைவாதீனத்தாரைக் காட்டிலும் செல்வம் குறைந்த நிலையை உடைய ஒருவர் மன உறுதி ஒன்றினால் மட்டுமே தமிழ் முழக்கம் எழுப்பி சாதனை புரிந்தார். சைவமும், தமிழும் இரு கண்களென உழைத்தார். அவ்வாறு அவர் தொண்டாற்றி செல்லும் பயணத்திலே மரிக்கவும் செய்தார்.

ஞானியாரடிகளைப் பற்றி பதிவுகளை ஆராய்ந்ததில் நமக்குக் கீழ்க்காணும் முடிவுகள் கிடைத்தன.

1. தம்மை ஒரு சைவ சமயீ எனக்கூட கருதாமல் பொதுவாகச் சமயத்தில் உள்ள கேடுபாடுகளைகளைந்து மக்களிடையே சமன்மையை உருவாக்க உழைத்தவர். அதற்கு மற்றவர்க்கு வழி காட்டியவர்.

2. மத நல்லிணக்கத்தைப் போற்றியவர்; நடைமுறைப் படுத்தியவர்.

3. அவர் அறியாமலேயே சமயத்தோடு தமிழ்த் தேசிய உணர்ச்சியை வளர்த்தெடுக்கதுண்டுகோலாக இருந்தவர்.

4. சமய ஞானமுடைய மற்றையோர்க்கு முன்மாதிரியாக இருப்பவர். எந்நிலையிலும் தாய்மொழி உணர்ச்சியை மறக்காதவர்.

6. உண்மை துறவியாய் இருந்தவர்.

ஞானியாரடிகள் மறைந்து 61 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அந்தத் தமிழ்க் குரல் இன்னும் ஒலிப்பதைக் கேட்கலாம். ஆம்; நீங்களும் அடிகளின் குரலை ஒலிப்பதைக் கேளுங்கள்.

"அறிவு துணை செய்யும் காலம் இது. தமிழர் தமிழிலேயே கொள்ள வேண்டும் என்ற பற்றுடன் விளங்குகின்றனர். பற்றுடை யோர் போன்று நடிக்கும் சிலர் போலி நடிப்பை நான் அறவே வெறுக்கின்றேன்.

தமிழ்ப் புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும். அவற்றில் பழக வேண்டும். அவ்வறிவைப் பெறுதல் வேண்டும். இல்லையேல், தமிழரென்று வெளிக்கு கூறிக்கொள்வோர்க்கு வெட்கமில்லை என்றே நான் கூறுவேன்.

ஞானியார் சுவாமிகள்

(திரு. மு. அருணாசலம், எம்.ஏ., அவர்கள்) (1959)

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், தமிழ் நாட்டின் நடுவில் வாழ்ந்து, தமிழ் மக்களின் வாழ்க்கையை மிக நீண்ட காலம் எல்லா வகையாலும் உருவாக்கியவர் என்றால், கற்றறிந்தவர்களுக்கு ஞானியார் சுவாமிகளின் கண்டிகை அணிந்த திருவுருவமும் சீல வாழ்க்கையும் குளிர்ந்த பார்வையும் மனத்தில் எழும். சுவாமிகள் திருக்கோவலூராதீனம் என்ற சிறந்த ஞான பரம்பரையிலே தலைமை ஏற்றவர். சிவ வேடப் பொலிவு நிரம்பப் பெற்றவர். முதுமையினால் திருமேனி தன்னில் அசைவு உடையவர். சைவத் திருமுறைகளை ஓதி ஓதி உருகும் நெஞ்சினர். பக்திப் பெருக்குடையவர். தமிழ் இலக்கிய இலக்கணக் கடலை நிலைகண்டுணர்ந்தவர். தம் சமயப் பிரசாரத்துக்கு ஏற்ற வகையில் வடமொழியறிவும் நிரம்பியவர். விவகாரத்திற்கான ஆங்கில அறிவு படைத்தவர்.

அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் நாட்டில் சைவ மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் சென்று, ஆடம்பரம் எதுவும் அறியாதவராய், தம் சொந்தத் தகுதியொன்றையே துணையாகக் கொண்டு, சுவாமிகள் மக்களை நல்வழிப்படுத்தி வந்தார். சைவம் என்ற உணர்ச்சி இல்லாத மக்கள், சற்றே ஆங்கிலம் படித்து உத்தியோகத்தில் அமர்ந்தவர்கள், நாஸ்திக வாதமே நாவின் நுனியில் பயில்பவர்கள் -திருநீறு என்றால் சாம்பல் பூசுவது; உருத்திராக்கம் என்றால் கொட்டை கட்டுவது - இப்படிப்பட்ட பேச்சுக்கள் மலிந்த உலகம். பலவகையான அரசியல் - சமூகப் பூசல்களும் கலந்து, வாழ்க்கையைக் குழப்பி, எவ்வகையான உறுதியும் பண்பாடும் முன்னேற்றமும், ஆழமும் அகற்சியும் நுட்பமும் உட்புக முடியாதவாறு செய்திருந்த காலம். அத்தகைய சூழ்நிலையில் சுவாமிகள் எல்லோருக்கும் ஒரு சமய தீபமாக விளங்கிய தோடன்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயத்தில் சமய தீபத்தை ஏற்றியும் வைத்தார்கள். இதை வேறு ஒருவரும் இத்துணைப் பேரளவில் செய்ததில்லை. சுவாமிகள் சொல்லாலும் பார்வையாலும், பழக்கத்தாலும், உபதேசத்தாலும் இன்று தமிழ்நாட்டில் படித்த குடும்பங்கள் நிரீசுவர வாதத்தை விட்டு, புதிதாகச் சைவ சமயத்தைக் கண்டு, திருமுறை பயின்று, திருநீறிட்டு, ஆலய வழிபாடு முறையாகப் பொருளுணர்ந்து செய்து வருபவை எத்தனையாயிரம் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது.

ஆனால் சுவாமிகளின் பேச்சிலும் செயலிலும் பிற மதத்தைப் பழித்தல் என்பது காண முடியாது. சமயம் நேர்ந்த போது, ஆண்டவன் ஒருவனே என்று கூறிப் பிறமத அடிப்படைத் தத்துவங்களையும் அவர் பயன்படுத்துவதுண்டு.

தமிழ் இலக்கியத்திலும் அவ்விதமே, நுனிப்புல் மேய்ந்து வந்த பண்டிதர்களிடையே இப்பெரியார் தம் சமயப் பேச்சுக்கள், உபதேசங்கள், இடையே கூறிய இலக்கிய நயங்கள் இலக்கண நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் உண்மையிலேயே பண்டிதராயனாரும், புலமைக்கான உண்மைப் பாதையிலே செல்லத் தொடங்கினாரும் எண்ணற்றவர். பாடம் படித்தோரைச் சொல்ல வேண்டுவதில்லை.

சுவாமிகளின் வடமொழிப் புலமையை அவர் பேச்சைக் கேட்போர் நன்கு உணர முடியும். தம் கருத்துக்கு அடிப்படையான வடமொழி வாக்கியங்களை அவர் எளிதாக எடுத்துக் கூறுவார். கூறும்போது, ஒவ்வொரு சொல்லையும் தனியே பிரித்துப்பொருள் கூறி, இலக்கணம் கூறி, பகுதி விகுதி போன்ற பாகுபாடுகளும் செய்துகாட்டி, தம் கருத்துக்கு அவ்வடமொழி வாக்கியங்கள் எவ்வாறு துணை வருகின்றன என்பதை விளக்கும்போது, அவருடைய படிப்பின் ஆழம் புலப்படும்.

சுவாமிகளின் பிரசங்கங்கள் மூன்று மணிக்கு மேலாகத் தான் எப்போதும் நடக்கும், படித்தவர் படியாதவர், இளைஞர் முதியவர், செல்வர், வறியவர், ஆடவர் பெண்டிர் குழந்தைகள் - அனைவரும் அவ்விடத்தில் இருப்பார்கள். பலதிறப்பட்ட மக்கள் கூடுகிற கூட்டத்தில் சிறிது சத்தம் இருத்தல் தவிர்க்க முடியாதது. தவிர 1934 போன்ற ஆண்டுகளில் சென்னையில் இப்போதுள்ள பஸ் வசதிகள் இல்லை. ஆகவே நெடுந்தெர்லைவிலிருந்தும் அவர்கள் பேச்சைக் கேட்கப் பல்லாயிர மக்கள் குழுமியிருப்பார்கள். இடையில் வீடு நோக்கித் திரும்பச் சித்தப்படுவோரும் இருப்பார்கள். இப்படியாகக் கூட்டத்தில் சத்தம் எழும்போது, ”நம: பார்வதி பதயே” என்று அவர்கள் ஒரு முழக்கம் செய்த மாத்திரத்தில், கடல் அலைபோல், ”அரஹர மஹா தேவா” என்ற எதிர் முழக்கம் எழும். சந்தடி பூரணமாய் ஓய்ந்து மீண்டும் அமைதியாகப் பேச்சு தொடர்ந்து நடைபெறும்.

அன்பர்களின் விருப்பத்துக்கேற்றவாறு அவர்கள் பிரசங்கங்கள் அமைவது குறிப்பிடத்தக்கது. மாம்பலத்தில் பெரியார் இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் புதிய வீடு கட்டிக் குடி போனார்கள். புது, வீட்டில் சுவாமிகள் திருக்கல்யாண காலட்சேபங்கள் நடத்தினால் குடும்பத்துக்கு மங்களமுண்டாகும் என்பது அவர்கள் கருத்தாயிருக்கலாம். இச் சந்தர்ப்பங்களில் சுவாமிகள் செய்த பிரசங்கங்கள் காமாட்சி கல்யாணம், மீனாட்சி கல்யாணம், பார்வதி கல்யாணம், வள்ளி திருக்கல்யாணம் என்பன.

சுவாமிகள் வீர சைவ சமயத்தின் ஆசாரியர். ஆனால் பிற சமயங்களையும் போற்றிப் பேசுவதே அவர் சுபாவம், அவர் பிரசங்கம் முழுமையும், சைவ சித்தாந்தப் பிரசங்கமாயிருக்கு மேயன்றி, தனியான வீரசைவம் அதில் தொனிக்காது. அப்படியே வைஷ்ணவர்கள் விருப்பத்திற்கிணங்கி, சீதா கல்யாணம், ஆண்டாள் போன்ற பிரசங்கங்கள் அவர் செய்ததுண்டு. ஒவ்வொன்றும் வைஷ்ணவ சமய மரபு வழுவாமல் பேசியது, கேட்பவர்கள் பெரிதும் அதிசயிக்கத் தக்கதாகவேயிருக்கும்.

சுவாமிகள் நடத்திய சமயப் பாட வகுப்புகள் சிறப்பானவை. அவர்கள் எழுமூரில் தங்கியிருந்தபொழுது, என்னோடொத்த சில நண்பர்களும் நானும் சேர்ந்து, சித்தாந்த சாத்திர பாடம் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். “சைவ சித்தாந்த சமயக் கருத்து உணர்வதற்கு அடிப்படையான கருவிநூல்கள் சில. சிவஞான போதம், சித்தியார், சிவப்பிரகாசம் பயில்வதற்கு முன் பல அடிப்படைக் கருத்துக்கள் உங்களுக்குப் பழக்கமாயிருக்க வேண்டும். முப்பத்தாறு தத்துவங்கள். நன்றாய் விளங்க வேண்டும். இவற்றைக் கூறும் ஒரு நூல் உண்மை விளக்கம் என்ற சாத்திரம். இதை நீங்கள் பயில்வது அவசியம் என்று சொல்லி, ஒரு நல்ல நாளில் அதைத் தொடங்கினார்கள். தினம் இரண்டு அல்லது மூன்று வெண்பா வீதம் சுமார் பதினைந்து நாள் இந்நூல் பாடம் நடந்திருக்கலாம். காலையில் 7.30 முதல் 9.30 வரை பாடம் நடக்கும். இருந்த மாணாக்கர் சுமார் 20 பேர். எல்லோரும் சென்னையில் அலுவல் பார்த்தவர்கள். பாடங்கேட்டவர்களுக்கு, அச்சிறுநூற் பயிற்சியானது விரிந்து, சித்தாந்த சாத்திரப் பயிற்சிக்கு ஒரு முன்னுரையாக அமைந்திருந்தது. சைவ சித்தாந்தரீதியாகத் தத்துவங்கள் பற்றிய திட்டமான அறிவு எங்களுக்கு ஏற்பட்டது மாத்திரமல்லாமல், சைவ சித்தாந்த சாத்திரக் கருத்துக்கள் அனைத்தையும் மேற்போக்காக ஒரளவு உணரும் அறிவும் அப்போது ஏற்பட்டது. கேட்ட நாங்கள் வாழ்க்கையில் பிறகு அச்சமய தத்துவங்களை என்றுமே மறக்க வியலாது. பண்டைக் காலத்தில் எழுந்த புலமை மிக்க உரையாசிரியர்களின் இலக்கண இலக்கிய உரைகளையும், சூத்திர பாஷ்யங்களையும் பார்த்திருக்கிறோம். அவை அனைத்தின் தொகுப்பாகவும் சுவாமிகள் பாடம் இருந்தது என்று கூறுவது மிகையன்று. பேராசிரியர் கூறும் உரை நுட்பங்களும், சிவஞான சுவாமிகள் போன்றார் கூறும் சமய நுட்பங்களும், சிரமமில்லாமல் எளிதில் எங்களுக்குச் சொந்தமாயின.

சுவாமிகள் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு பாடல், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடிய சந்நிதி முறைப் பாடல்களில் ஒன்று. :

ஏது பிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்

தீது புரியாத தெய்வமே - நீதி

தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்

பிழைக்கின்ற வாறுநீ பேசு.

மாம்பலம் தெய்வசிகாமணி முதலியாரவர்கள் வீட்டில் ஒரு சமயத்தில் பிரசங்கத்தில் இப்பாட்டைச் சொன்னார்கள். சொல்லி அப்படியே சில நிமிஷ நேரம் கண்ணிர் உகுத்தபடியே இருந்துவிட்டார்கள். பிறகு தான் சுய நினைவு வந்து, "நம : பார்வதி பதயே" என்ற முழக்கத்தோடு மீண்டும் பேச்சைத் தொடங்கினார்கள்.

மற்றொரு பாடலும் இங்கே குறிப்பிடத்தக்கது. பாடலை உச்சரிக்கின்ற முறையினாலே, இதுவே கேள்வியாகவும் இதுவே விடையாகவும் அமைந்துள்ளது.

இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவி அல்லேன்

நல்லறத்து ஞானி யல்லேன் நாயினேன்

சொல்லறத்துள்

ஒன்றேனும் இல்லேன் உயர்த்ததிருப் போரூரா

என்றேதான் ஈடேறு வேன்.

இந்தச் சிதம்பர சுவாமிகள் பாடலை அடிக்கடி தோத்திரப் பாடலாகவே பாடுவார்கள். "உயர்ந்த திருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன்?" என்று கூறும்போது, தொனியால் "திருப்போரூர் முருகப் பெருமானே! என்றைக்குத்தான் நான் கடைத்தேறப் போகிறேன்?" என்று இரங்குவதாகிய கேள்வி பிறக்கும். ஆனால் அதே பாட்டை அவர்கள் இரண்டாம் முறை, “உயர்ந்த திருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன்“ என்று பாடும்போது “திருப்போரூரா என்று சொல்லிக் கொண்டே நான் கடைத்தேறி விடுவேன்“ என்ற பொருள் பிறக்கும்.

சுவாமிகள் பிரசங்கங்கள் நீண்ட நேரம் நடக்குமென்று குறிப்பிட்டேன். கேட்டோரில் பலர் சென்னை போன்ற நகரங்களில் வேலைகளில் ஈடுபட்டிருந்து சற்று நேரங்கழித்து வருதல் கூடும். வருவோர் அனைவரையும் சுவாமிகள் நேர்முகமாய் அறிந்திருப்பார்கள், ஆதலால், வருவோர் யாராயிருப்பினும், தாம் சுவாமிகளைப் பார்த்து வணக்கம் செலுத்தினாலொழிய, அவருக்குப் பிரசங்க நேரத்தில் மனம் நிம்மதி பெறாது. பிரசங்கம் நடந்து கொண்டேயிருக்கும். சுவாமிகள் வாயிலிருந்து வரும் சொற்பிரவாகம் யாருக்காகவும் தடைப்படாது. ஆனால் வந்து வணங்குபவரை வரவேற்பதில் குறை வொன்றுமிராது. ஒருவருக்குப் புன்னகை, ஒருவருக்குத் தலையசைவு, ஒரு வருக்குத் திருநீறு, ஒருவருக்குக் கண்ணினாலேயே வரவேற்பு இவ்விதம், யாரும் எந்தக் குறையும் இன்றித் திருப்தியாகத் தம்மையும் ஞானியார் சுவாமிகள் பார்த்து வரவேற்றார் என்றே மகிழ்வார்கள்.

சுவாமிகள் இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்துங்கூட, எப்போதும் எங்கு செல்வதாயினும், பல்லக்கில் தான் செல்வார்கள். சென்னைக்கு வருவதும், போவதும், சென்னையில் பல இடங்களுக்குப் போவதும் எல்லாம் பல்லக்கில்தான்.

எழுமூரில் ஒரு சம்யம் அவர்கள் தங்கியிருந்த பொழுது மாம்பலத்தில் அவர்களுக்குச் சிறப்பாக ஓர் ஊர்வலம் செய்வித்தோம். அனேக தெருக்களில் அவர்களைப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, அவர்களுடைய அன்பர்கள் உள்ள இடங்களில் அவர்களுக்கு வணக்கமும் வழிபாடும் செய்வித்துப் பின் அவர்கள் இருக்கையில் சேர்ப்பித்தோம். அவ்வாறு செல்லும்போது மாம்பலத்தில் சாம்பசிவம் தெருவில் உள்ள எனது இருக்கைக்கும் ஊர்வலம் வந்தது. அங்கு நிறுத்தி அவர்களுக்கு வீட்டிலுள்ளார் அனைவரும் நமஸ்காரம் செய்து விபூதி பெற்றுக் கொண்டோம். அப்போது எனது குழந்தை மணிமேகலை, தூரத்தில் நின்றது ஓடிவந்தது. குழந்தைக்கு ஊர்வலம் வேடிக்கையான ஒரு காட்சியேயன்றி, ஊர்வலத்திற்குத் தலைவரான சுவாமிகளை வணங்க வேண்டுமென்ற எண்ணம் உதிப்பது இயல்பல்ல. ஆதலால் குழந்தை பார்த்துக் கொண்டே ஒரு வாயில் தூண்மீது சாய்ந்து கொண்டு நின்றது. பல்லக்கு நகர்ந்தது. சுவாமிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்ற குழந்தையைச் சுவாமிகள் பார்த்தார்கள். பல்லக்கை நிறுத்தச் சொல்லிக் குழந்தையை அழைத்துத் திருநீறு கொடுத்தார்கள். ஒரு வயதுக் குழந்தை - பல்லக்கு சரியாக எட்டக்கூட இல்லை. அவர்கள் குனிந்து குழந்தையின் நெற்றியில் திருநீறிட்ட தோற்றம் இன்னும் என் கண் முன்னே நிற்கின்றது.

குழந்தைக்கும் சமயப் பிரசங்கத்துக்கும் வெகுதூரம். ஆயினும் ஒரு சம்பவம் நான் மறக்க முடியாதது. 1936 ஆம்ஆண்டின் தொடக்கத்தில் சுவாமிகள் மாம்பலத்தில் வைத்தியராமன் தெருவில் நீண்டகாலம் தங்கியிருந்தார்கள். தினமும் இரவில் 7 மணி தொடங்கி 10 மணி வரை சமயப் பிரசங்கங்கள் நடைபெறும். தவறாது என் மனைவியும்நானும் சென்று கேட்டு வருவதுண்டு. என் மகளும் உடன் வருவது வழக்கம். அப்பொழுது அவள் ஒன்றரை வயதுக் குழந்தை. சுவாமிகள் தாமிருந்த வீட்டின் தெருத் தாழ்வாரத்திலிருந்து கொண்டு பேசுவார்கள். நீளமான தாழ்வாரம், மூன்று நீண்ட படிகள். கீழே பந்தல் போட்டு சமுக்காளம் விரித்திருக்கும். கேட்போர் அதில் இருந்து கேட்பார்கள். குழந்தையோ என்னோடு உடன் வந்து பத்து நிமிஷம் பக்கத்திலிருக்கும். பிறகு எழுந்து சுவாமிகள் இருக்குமிடம் சென்று அவர்கள். பக்கத்தில் ஒரு முழத்துரம் தள்ளி உட்காரும். முதல் நாள் உட்கார்ந்த பொழுது கூட்டத்தில் இருந்த ஓர் அன்பர் குழந்தையை அப்பால் போகும்படிச் சொன்னார். ‘இருக்கட்டும்’ என்று சுவாமிகள் சொல்லி விட்டார்கள். அது முதல் தினமும் குழந்தை தவறாமல் அங்குப் போய் உட்கார்ந்து கொள்ளும். படியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு அவர்களைப் பார்த்தபடியே மூன்று மணி நேரமும் இருக்கும். அவர்கள் தோற்றப் பொலிவில் ஈடுபட்டதோ, பேச்சின் ஒலியில் ஈடுபட்டதோ, பாட்டின் இசையில் ஈடுபட்டதோ- யாரும் சொல்ல வியலாது. பச்சைக் குழந்தை மூன்று மணி நேரம் தூங்கி விழாமல், தொந்தரவு செய்யாமல் அப்படியே இருந்தது, நினைத்துப் பார்த்தால் இன்னும் எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. கூட்டம் முடிந்து எல்லாரும் திருநீறு பெறும்போது தானும் வாங்கிக் கொண்டு என்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும்.

சுவாமிகளுடைய தோற்றமும், பேச்சும் அளித்த கவர்ச்சியே இக்குழந்தையின் நடத்தைக்குக் காரணம்.

ஞானியார் சுவாமிகள் திருக்கோவிலாராதீனத்தின் பட்டமேற்று ஐம்பது ஆண்டுகள் 1939 இல் நிறைந்தன. அப்பொழுது தமிழ்நாடு முழுமையுமே அறிந்து கலந்து இன்புறும்படியான முறையில் அந்நிறைவு விழா நடைபெற்றது. ஞானியார் சுவாமிகளுக்கு அன்பு பூணாத தமிழ்ப் பண்டிதர், புலவர், அரசியல்வாதி, பிரமுகர் - யாரும் தமிழ் நாட்டில் அன்று இல்லாமல் இல்லை. அவரினும் வயதில் முதிர்ந்தோர் பலர் இருந்தார்கள். பதவியில் பெரியோர் இருந்தார்கள். ஆனால் அவர்களுள் யாரையும் அந்த விழாவில் தலைமை தாங்க அவர்கள் அழைக்கச் சொல்லவில்லை. பண்டிதர்களோடு நெடுங்காலம் பழகிப் பழகி அவர்கள் சரக்கெல்லாம் வெறும் ஆடம்பரம், ஆழமில்லாதது என்று அவர் அறிந்திருந்தார். தம்முடைய துறவு, ஆதீனத் தலைமை காரணமாக யாரையும் குறை கூறும் பழக்கத்தை அவர் வைத்துக் கொண்டதில்லை. எனினும் தம்முடைய விழாவுக்குப் போலிகளை அழைக்க அவர் விரும்பவில்லை. டி.கே.சி அவர்கள் பேச்சை அவர் இரண்டொரு முறை, காரைக்காலம்மையார் பாடலைப் பற்றிப் பேசியபோது கேட்டிருந்து, அப்பேச்சின் ஆழத்திலும், உணர்ச்சியிலும் மனம் ஒன்றியிருந்தார். எனவே, இந்த நிறைவு விழாவுக்கு அவரையே தலைமை வகிக்கும்படிக் கேட்டுக் கொள்ளச் செய்தார். அனேகருக்கு அக்காலத்தில் இது மிக்க வியப்பளித்தது. பெரும் புலவர்கள், ஞானியாருக்கு வேண்டியவர்கள் என்று நினைத்தவர்கள் இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு, பண்டிதரல்லர் என்று பண்டிதர்களால் ஒதுக்கப்பட்டவரை அவர் அழைக்கச் செய்தது, அவர்கள் கருத்தின்படித் தவறுதானே? இச்செயல் அடிப்படையில் ஞானியார் சுவாமிகளின் உள்ளம் எப்படி உண்மையை நாடிற்று என்பதையே காட்டிற்று. அக்காலத்தில் டி.கே.சி. யவர்கள் எந்தப் பதவியிலும் இருக்கவில்லையென்பதை நினைவு கூரவேண்டும்.

ஞானியார் சுவாமிகள் சமயப் பிரசங்கத்தில் ஒரு புதிய பாணி அல்லது பத்தியைத் தோற்றுவித்தார்கள். தொடங்கும்போது விநாயகர் வணக்கம், முருகன் வணக்கம், குரு வணக்கம், தமது மடத்தின் முதல்வர் வணக்கம் என இவற்றோடு பேச்சுத் தொடங்கும்.

‘விநாயகனே வெவ்வினையே வேரறுக்க வல்லான் என்ற பதினொராந்ததிருமுறைச் செய்யுள், தந்தைதாய் ஆவானும் என்ற குருவணக்கச் செய்யுள் போன்ற அனேகம் பாடல்கள் இவ்வாறு தமிழ்ச் சைவ நன்மக்களிடையே பிரசாரத்துக்கு வந்தன. இவ்விதமே பிரசங்க முடிவில் 'உருவாய் அருவாய்’ என்ற கந்தரனுபூதிச் செய்யுளையும், ஆறிருதடந்தோள் வாழ்க என்ற முருகப் பெருமான் வாழ்த்துச் செய்யுளையும், அவர்கள் இறுதியில் கூறிமுடிக்கும்போது கேட்டார் மனத்தில் இவை மிக்க சாந்தி அளிப்பனவாயிருக்கும். சுதந்திர இந்திய நாட்டில் கூட்ட முடிவில் நாட்டு வாழ்த்துப் பாடுவது இப்போது ஏற்பட்டுள்ள புதிய சம்பிரதாயம். ஆனால் சுவாமிகள் தம் கூட்ட முடிவில் இவ்விதம் சாந்தி தரவல்ல முருகன் வாழ்த்துப் பாடி முடிப்பது மிக்க தீர்க்க திருஷ்டியைக் காட்டுகிறது.

அன்றியும், கூட்டத்தினரை விளிக்க அவர் உபயோகித்த சொல் “மெய்யன்பர்களே“ என்பது. இன்று கூட்டங்களில் இச்சொல் காதில் விழும்போது, அவர்களுடன் பழகிய அனைவருக்கும் ஒரு கணம் சுவாமிகள் நினைவு உள்ளத்தில் தோன்றி மறையாமல் இராது.

மற்றொன்று, பேச்சிலே அவர்கள் முடிவான ஒரு கருத்தை நோக்கிப் பல துணைச் செய்திகளைச் செலுத்தும் போது, ஒவ்வொன்றையும் முற்றுப் பெறாத, சிறு சிறுதொடர்களாகச் சொல்லி, இறுதியில் கருத்தைக் கொண்டு முடிப்பார்கள். அவ்வாறு அவர்கள் தொடர்களை நிறுத்தி நிறுத்திச் சொல்லும் முறை தனியான ஓர் அழகுடையதாயிருக்கும். அதுவே ஒரு கலை, நேரில் கேட்டவர்களுடைய உள்ளத்தை அது ஈர்க்க வல்லதாயிருக்கும். இன்று மேடையில் பேசும் பண்டிதர்கள் அனைவருமே அந்தப் பாணியைக் கடைப்பிடிக்கிறார்கள்.

இங்ஙனமாக, தமிழ்ப் பேச்சு, சமயப் பேச்சுகளில் அவர்கள் ஒரு புதிய பாணியைத் தோற்றுவித்தார்கள் என்பது பலரும் உணர்கின்ற உண்மை. அவர்களுடைய பாணியையே பின்பற்றி இன்றைய பேச்சாளர் அனைவரும் பேச்சில் வல்லவராகி இருக்கிறார்கள்.

சுவாமிகளின் ஐம்பதாண்டு ஆட்சி விழாவை முன் குறிப்பிட்டேன். அவ்விழாவில் பங்கு கொண்டவர்கள், அவர்களுடைய விருந்தோம்பும் பண்பை அனுபவித்திருப்பார்கள். படித்தோர், படிப்பில்லாதோர், அந்தஸ்துடையவர், இல்லாததவர் எனப் பலரும் அடங்கிய பெருங் கூட்டம், அக்கூட்டத்தில் எல்லாப் பந்திகளுக்குமிடையிலே அவர்கள் போய்ச் சாப்பாட்டில் ஒவ்வொரு சிறு அம்சத்தையும் விசாரித்தது, விருந்தோம்புவோர் காட்ட வேண்டிய பரிவுக்கு இலக்கணமாய் அமைந்திருந்தது.

இங்ஙனமாக, தமிழ்நாட்டின் சரித்திரத்தையும் தமிழ் மக்களுடைய முன்னேற்ற இயக்கங்களின் சரித்திரத்தையும் ஆராய்ந்தோமானால், எல்லாத் துறைகளிலும் ஞானியார் சுவாமிகளின் வாழ்க்கை ஊடுருவி நின்றமை தெரியவரும். எந்த நிலையிலும் அவர்கள் அரசியல் - சமூக இயல்களில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்களுடைய பேச்சாலும், வாழ்க்கையாலும், மக்கள் சமயப் பற்றும் தமிழ்ப் பற்றும் கொண்டார்கள்; மறைமுகமாக இது நாட்டுப் பற்றுக்கு வித்தாயிருந்தது என்பது மிகையன்று. தமிழ் இலக்கண அறிவு, இலக்கிய உணர்ச்சி, தமிழ்ப் பண்பாடு வளர்ந்தன. கோயில்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாயிற்று. இறைவன் திருநாம முழக்கம் எங்கும் எதிரொலித்தது. சிவ சின்னங்கள் பகிரங்கமாய் கண்ணில் புலப்பட்டன. தெய்வப் பெயர் சொல்லுவது படித்தோருக்கு இழிவு என்றிருந்த நிலைமாறி, படித்தோரிடம் தெய்வ பக்தியும், சமய உணர்ச்சியும், சாத்திர அறிவும் துலக்கம் பெறத் தொடங்கின.

இந்த இருபதாம் நூற்றாண்டில் முதல் நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட இந்தச் சமய உணர்ச்சியும் எழுச்சியும் இன்னும் ஒரு நூற்றாண்டுக் காலமேனும் நம்மிடையே உயிர் கொண்டிருந்தது நம்மை முன்னோக்கிச் செலுத்தும் என்பது உறுதி.

★★★★

சமய தீபம்

ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்

(1940)

ஒதுங்கலான ஒரு ஊரில் யூனியன் பஞ்சாயத்துப் புதிதாய் ஏற்பட்டது. முதலாக வந்த பஞ்சாயத்துத் தலைவர் பொதுநலப் பிரியர். ஊரை எல்லா விதத்திலும் திருத்தமுறச் செய்ய வேண்டும் என்று ஆத்தரங்கொண்டார். தெருக்களில் எப்படியாவது விளக்குப் போட்டுவிடவேண்டும் என்று கருதி, லாந்தல்க் கல்லுகளும், கல்லுகளின் உச்சியில் கனத்த இரும்பினால் செய்த லாந்தல்ச் சட்டமும், லாந்தல் உள்விளக்கு, சிமினி எல்லாம் தயார் செய்து விளக்குப் போட்டுவிட்டார். வெளிச்சம் ஏற்பட்ட காரணத்தினால் பெண்டுகளும் பிள்ளைகளும் இரவில் ஊருக்குள் செளகரியமாக நடமாட ஆரம்பித்தார்கள். கள்ளர் பயம் இல்லை.

இப்படியாக ஐந்து வருஷம் கழிந்தது. பஞ்சாயத்துத் தலைவர் வேறொருவர்.புதிதாக வந்தார். அவருடைய நிர்வாகம் ஒரு வருஷம் நடந்தது. அந்த நிர்வாகத்தில் விளக்குப் போடக் கணக்கில் வகையில்லை என்று ஆய்விட்டது. மேலதிகாரிகள் வந்து லாந்தல், விளக்கு, சிமினி ஆகிய உறுப்புக்களை ஜில்லாத் தலைவருக்குக் கொண்டு போய்விட்டார்கள். ஆகவே, ஊருக்கு மிச்சம், லாந்தல்க் கல்லு, லாந்தல்ச் சட்டம், இருட்டு இந்த மூன்றுந்தான் என்று ஏற்பட்டுவிட்டது. -

இப்படியாக இருபது வருஷம் கழிந்தது. லாந்தல்க் கல்லும் சட்டமும் மாத்திரம் நின்று வந்தன. அயலூர் ஒன்றுக்கும் போய் அறியாத பள்ளிப் பையன்கள் தெருக்களில் கல்லுகள் எதற்காக நிற்கின்றன என்பதைப் பற்றி ஆராய ஆரம்பித்தார்கள். மாடுகளைக் கட்ட என்று சிலர் சொன்னார்கள். ‘அப்படியானால், ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் கல் நட்டிருக்க வேண்டுமே? அப்படி இல்லாததால், கல் நட்டது மாடு கட்டுவதற்காக அல்ல. மேலும் தெருக்கோடியில்க் கொண்டுபோய் யாராவது மாட்டைக் கட்டிவைப்பார்களா?" என்றும் சொன்னார்கள். இப்படியெல்லாம் தர்க்கித்துக் கொண்டிருக்கும்போது, பெரிய பையன், அதாவது, பன்னிரண்டு வயசுப் பையன் ஒருவன் வந்தான்; அவன் சின்னப் பையன்களின் சந்தேகத்தையெல்லாம் தீர்த்து வைத்தான் எப்படி;

“ஒரு தடவை நம்முடைய ஊருக்கு விறகு வண்டி ஒன்று வந்தது. வண்டிக்காரன் மாட்டைக் கல்லில் கட்டிவிட்டு, கடை முளை, கடையாணி, கொண்டுவந்த சாப்பாடு எல்லாவற்றையும் சாக்கில் சுற்றிக் கல்லின் மேலுள்ள இரும்புச் சட்டத்தில் வைத்துவிட்டான். இந்த மாதிரி அயலூரிலிருந்து வண்டிவந்தால் மாட்டைக் கட்டவும் சாமான்களைப் பிள்ளைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்துக் கொள்ளுவதற்காகவும் நாட்டியது கல். சுமைதாங்கிக் கல் இருக்கிறதல்லவா, அதுபோல இதுவும் ஒரு தர்மம்" என்று சொல்லித் தீர்த்தான். மற்றப் பையன்களும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு உண்மையைக் கண்டு விட்டதாக எல்லோருக்கும் ரொம்ப எக்களிப்பு.

ஒரு பையனுக்காவது கல்லுக்கும் விளக்குக்கும் சம்பந்தம் உண்டென்று எண்ணத் தோன்றவில்லை.

லாந்தல்க் கல்லு பட்ட பாடுதான் நமது முன்னோர்கள் கண்டு வைத்துப் போன பெரிய உண்மைகள் பாடும்.

"ஒன்றாகக் காண்பதே காட்சி"

என்றார் ஒரு பெரியார்;

"ஒழிவற நிறைந்த

ஒருவ போற்றி"

என்றார் மற்றொரு பெரியார். உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம். ஏதோ ஒரு விதத்தில் ஆராய்ந்து, பொருள்கள் தோற்றத்தில் எவ்வளவு வேறுபட்டனவாய் இருந்தாலும், உண்மையில் ஒரு பொருள்தான். பேதமில்லா பொருள் தான் என்று கண்டு விட்டார்கள். மேலும், அந்தப் பொருள் எங்கும் வியாபித்துள்ளது; வானவெளியில் எவ்வளவு தூரம் எட்டிப் போனாலும் வெற்றிடம் என்பது இல்லாதபடி நிறைந்துள்ளது; நுணுகி நுணுகிப் போனாலும்,அணுவென்றும், அணுவுக்குள் அணுவென்றும், இறுதியில்லாதபடி செறிந்து கொண்டே போகும் தன்மையது அந்தப் பொருள் என்றும் கண்டார்கள். ஒழிவு-அதாவது வெற்றிடம், அற-இல்லாதபடி, எங்கும் நிறைந்துள்ள வஸ்து கடவுள் தத்துவம் என்றார்கள்:

"ஒழிவற நிறைந்த

ஒருவ போற்றி"

எவ்வளவு எளிமையோடும் தெளிவோடும் விஷயத்தை விளக்குகிறது வாக்கியம்!

மேல் நாட்டுக் கலைவல்லாரும் பல கருவிகள் கொண்டு ஆராய்ந்து இதே முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார்கள். நம்மவர்களோ அந்தக்கருவிகளின் துணையில்லாமலே ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னமேயே இந்த உண்மையைக் கண்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல்க் கல்லில் எழுதிவைத்த மாதிரி சொல்லி விட்டார்கள்.

உண்மைகளைக் கண்டதும் எழுதி வைத்ததும் வியக்கத்தக்க காரியந்தான். அதைவிட வியக்கத்தக்கது, அந்த உண்மைகளைப் பல நூற்றாண்டுகளாகப் போற்றி வந்ததுதான்.

உண்மைகள் கண்ணால்க் காணக் கூடியவையல்ல; கையால்ப் பற்றி எடுக்கக் கூடியவையல்ல; உள்ளத்தில் நிற்பன. ஆகவே, அவைகள் மறைந்து போய்விடுவதற்கும் காரணம் உண்டு; மறைந்தும் போய்விட்டன. பெரியார்கள் சொல்லி வைத்த விஷயங்களைப் புறக்கணித்து விட்டு, வெறும் வார்த்தைகளையே சொல்லி வந்தார்கள் பிற்காலத்தவர். பெரியார்கள் பாடிய பாடல்களை அப்படியே பாடிக் கொண்டிருந்தால் போதும் என்று ஏற்பட்டு விட்டது. திருவாசகத்துக்கு உரை சொல்லக் கூடாது என்று சொல்லுவார்கள். பாராயணம் போதும், பொருள் தெரிய வேண்டியதில்லை என்று ஏற்பட்டு விட்டது. தெய்வப் பாடல் என்று சொல்லும் பாடல்களுக்குப் பின்னால், உண்மையனுபவமும் உணர்ச்சியும் இருக்கின்றன என்ற கொள்கை போய்விட்டது. உள்ளேயிருந்து என்றும் மங்காத பேரொளி வீசிக் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் கதையாய் முடிந்தது. விளக்கில்லை, வெளிச்சம் இல்லை, லாந்தல்க் கல்லும் சட்டமும் நிற்கிறது என்று ஆய்விட்டது.

இந்த நாஸ்திகத்தைப் பூர்த்தி பண்ண ஆங்கிலக் கல்வியும் தமிழ்நாட்டுக்குள் புகுந்துவிட்டது. சமய நூல்களில் ஒன்றுமேயில்லை. வார்த்தைகளை இப்படியும் அப்படியுமாக அளக்கிற காரியந்தான் வைதிகர்கள் பேசுகிற காரியமெல்லாம், என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் ஆங்கிலம் கற்றவர்கள். அவர்கள் பண்டிதர்களைக் கேள்வி கேட்டால் பதில் வருவது காரணகாரிய விளக்கம் அல்ல; வசை நாமாவளிதான்.

ஆங்கிலம் கற்றவர்களைக் குற்றம் சொல்ல இடமில்லை. அவர்களுக்கு உண்மைகளை எடுத்து விளக்குபவர்கள் பள்ளிக்கூடங்களிலும் இல்லை. வைதிகக் குழாங்களிலும் இல்லை. எல்லோருமாக, அயலூர் வண்டிமாடு கட்டவும் கடையாணியைச் சாக்கில்ச் சுற்றி வைக்கவுந்தான் ஏற்படுத்தியது கல்லும் சட்டமும், என்று தானம் வைத்துவிட்டார்கள். நம்பிக்கை பிறக்கமாட்டேன் என்று விட்டது கேட்டவர்களுக்கு.

தமிழுலகம் பொதுவாக இந்த நிலையில் இருந்தது. இருபது வருஷத்துக்குமுன். அப்படித்தான் இருந்தது திருநெல்வேலியும்.

சில நண்பர்கள் திருச்செந்தூருக்குப் போய் விட்டுத் திருநெல்வேலிக்குத் திரும்பி வந்தார்கள். வந்தவர்கள் வடக்கே இருந்துவந்த ஒரு சுவாமிகள் சமய சம்பந்தமாக ரொம்ப அருமையாயும் தெளிவாயும் பிரசங்கங்கள் செய்ததாகவும், தாங்கள் ரொம்ப அனுபவித்ததாகவும் சொன்னார்கள். சுவாமிகளுக்கு ஊர் திருப்பாதிரிப்புலியூர் என்றும் அவர்கள் ஒரு மடாலயத்துக்கு அதிபர் என்றும் சொன்னார்கள்.

சிலநாள் கழித்து, திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு அடுத்துள்ள தருமபுரம் மடத்தில் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகள் பரிவாரத்தோடு பல்லக்கில் வந்து இறங்கியிருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. மறுநாள் சாயங்காலம் நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் பிரசங்கம் என்று துண்டுப் பத்திரிகையின் மூலம் விளம்பரமாயிற்று. சுவாமிகளின் பிரசங்கத்தைக் கேட்க நானூறு ஐந்நூறு பேர் கூடியிருந்தார்கள்.

சுவாமிகள் ஆசனத்தில் அமர்ந்திருந்தது தனியான காட்சியாய் இருந்தது. ருத்திராக்ஷ மாலையும், ஸ்வர்ணலிங்கம் தாங்கிய வடமும், திருநீற்றுப்பொலிவும், கண்ணுக்கும், மனசுக்கும் விருந்தளித்தன.

பிரசங்கம் ஆரம்பித்தது. வார்த்தையும் அக்ஷரமுமே ஒவ்வொன்றாய் நின்று நின்று வெளிவந்து ஒலித்தன. வார்த்தைகள், வார்த்தைகளின் கதி, ஆழ்ந்த குரல் எல்லாம் சேர்ந்து, இதயமே பேசுகிறது என்பதைத் தெரிவித்தன. கேட்டவர்கள் செவிகொடுத்து இதயத்தையே கேட்டார்கள். ஆகவே பொருளும் உணர்ச்சியும் கேட்டவர்கள் இதயத்துக்குள்ளே சென்று பதிந்து விட்டன.

நேரம் ஆக ஆக, உணர்ச்சியோடு கலந்து வேகம் கொண்டது விஷயம். ஆசிரியருக்கும் கேட்பவர்களுக்கும் தெரியாதபடி வார்த்தைகளும் அதிவேகமாகவே ஓடின. ஆனால், அழுத்தமாவது தெளிவாவது எவ்விதத்திலும் குறையவில்லை.

தமிழோ சாதாரணமான பேச்சில் வழங்குகிற பசுந்தமிழ். அந்தத் தமிழுக்குச் சக்தி இன்னது என்று தெரிய வந்தது; இதயத்தில் எழும் உணர்ச்சிகளை அப்படி அப்படியே பளிங்கில் வைத்துக் காட்டிய மாதிரி விளக்கிக் காட்டியது. சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும் தம்மோடுதான் நேர் நேராக சுவாமிகள் பேசினதாகத் தோன்றியது; பாஷை எல்லோரோடும் அவ்வளவு ஒட்டிய பாஷை.

விஷயம் கடவுள் தத்துவம். ஆனாலும், எத்தனையோ விஷயங்கள் வந்து வட்டமிட்டுச் சுழித்துப்போயின. நம்மவர் வாழ்க்கையில் உள்ள எத்தனையோ அம்சங்கள் வந்து தெளிவுபட்டு ஓடின. ஒவ்வொன்றும் உணர்ச்சி ததும்பியதாய் இருந்தது; வாழ்க்கையோடு ஒட்டிய உண்மையாகவே இருந்தது. நம்முடைய மனசு அங்கங்கே திளைத்து நிற்கும்; அந்த விஷயம் முடிந்ததும், பெருக்கெடுத்துப்போகும் பெரிய விஷயத்தோடு இலகுவாகக் கலந்துகொள்ளும்.

கடவுளுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை எடுத்துச் சொல்லும்போது, சுவாமிகள்,

"விறகில் தீயினன்;

⁠பாலிற்படு நெய்போல்

மறைந்து நின்றுளன்

⁠மாமணிச் சோதியன்;

உறவு கோல்நட்(டு)

⁠உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக்

⁠கடையமுன் நிற்குமே!“

என்ற தனிக்குறுந்தொகைச் செய்யுளை எடுத்தாள நேர்ந்தது. பலர் இந்தச் செய்யுளை உணர்ச்சி யாதொன்றும் இல்லாமல் கையாண்ட காரணத்தால், சாமானியமாகவும் இளைத்ததாகவும் தோன்றியது செய்யுள். ஆனால், சுவாமிகள் அதன் உண்மையில் திளைத்து ஆர்வத்தோடு விளக்கிக் காட்டின மாத்திரத்தில், முன் காணாத உண்மைகளும் உணர்ச்சியும் பாடலில்ப் பொதிந்து கிடப்பதாகப் புலப்பட்டது. நமக்கும் கடவுளுக்கும் உறவாவது, கடவுளுடனேயே ஒன்றியிருக்கிறோம். நாம், வேறாகத் தனித்து நிற்கவில்லை என்ற உண்மை தான். இந்த உண்மையைச் சதா மனசில் வைத்து ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் சிந்திப் போமானால், மறைந்து நின்றுள்ள மாமணிச் சோதியான் முன்னின்றுவிடும்“ என்று விஷயத்தைக் கூட்டி முடித்தபோது, சபையோருக்கு அந்த அற்புத தரிசனமே கிடைத்த மாதிரியான ஒரு உணர்ச்சி உண்டாயிற்று. எல்லோரும் ஒரே ஆனந்த பரவசத்தில் மூழ்கினார்கள். ஆகா, இதையெல்லாம் கேட்டு அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லையே’ என்று சபைக்கு வராதவர்களை எண்ணிப் பரிதவிக்க வேண்டியதாய் இருந்தது.

அதோடு, தமிழை ஆர்வத்தோடு கற்று வந்தவர்களுக்கு ஒரு வகையில் அவமானமும் வருத்தமும் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டும். ஏதோ தமிழறிஞர்களை யெல்லாம் தமிழுலகம் அறிந்திருக்கிறது, மதித்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தோமே, சுவாமிகளை இதுவரை அறிந்திராதது போகட்டும்; அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டது கூடக் கிடையாதே என்று அவமானந்தான், வருந்தந்தான்.

ஆம், தமிழனுடைய ஜாதகமே அப்படி. நம்மிடம் உயர்ந்த பொருள்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் மதிக்கத் தெரியாமல், ஒன்று மில்லாத படோடோபத்தை, முக்கியமாக, தனக்கு விளங்காத காரியத்தைக் கண்டு மோகித்த வண்ணமாயிருக்கிறானே என்றெல்லாம் நொந்து கொள்ள நேர்ந்தது.

ஆனாலும், கருவூலத்தைக் கண்டு விட்டோம் என்ற ஆனந்தத்துக்குக் குறைவில்லை. திருநெல்வேலிப் பிரசங்கம் நல்ல முகூர்த்தத்தில் நடந்தது என்று சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பத்து நாளுக்கு மேலாகவே திருநெல்வேலியில் பிரசங்கம் நடந்தது. கேட்க வந்தவர்களின் தொகை அதிகரித்ததால், வசந்த மண்டபத்தை விட்டு மேலப் பிராகாரத்தில் பிரசங்கத்தை நடத்த நேர்ந்தது.

பிறகு நாகர்கோயில், அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோயில் முதலான இடங்களுக்குப் போய், பிரசங்கங்கள் செய்தார்கள். அதன்பின், தமிழ்நாடெங்குமே பிரயாணம் செய்து, தமிழ் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு இன்னதென்று விளக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சமய நூலைக் கற்று வந்தவர்களுக்கு, அதன் உள்ளான தத்துவம் இன்னதென்று தெரியவும் அதில் ஆர்வம் கொள்ளவும் ஏற்பட்டது.

லாந்தல்க் கல்லுகளை வெறும் மாடு கட்டுங்கல் என்று எண்ணும் மனப்பாங்கு போய், உண்மை ஒளியைத் தரக் கூடிய மிகவும் உபயோகமான தீப ஸ்தம்பம் என்று மதிக்கிற காலம் வந்து விட்டது.

இதெல்லாம் நேர் நேரான உண்மையென்று தெரியவரும். திருப்பாதிரிப்புலியூர் மடத்துக்குப் போய்ப் பார்த்தால்; காலையிலிருந்து இரவு பத்து மணி நேரம்வரை வந்து பாடங் கேட்கும் மாணவர்களைப் பார்த்தால் தெரியவரும். உத்தியோகஸ்தர்கள், பென்ஷன் பெற்ற உத்தியோகஸ்தர்கள், சஷ்டியப்த பூர்த்தியாகிச் சதாபிஷேகத்துக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கும் கிழவர்கள் ஆகிய பலர் வந்து சமய சம்பந்தமாகவும் தமிழ் இலக்கிய சம்பந்தமாகவும் பாடங்கேட்டுக் கொண்டிருப்பார்கள். உண்மையான உணர்ச்சியோடு, சுவாமிகள் விஷயங்களையும் நூல்களையும் விளக்கிக் காட்டுவதால்தான் மேலே சொன்ன மாணாக்கர்கள் இல்லாவிட்டால் பரீஷைக்குப் போகும் மாணாக்கர்கள் வருவார்கள்; (தமிழ் அனுபவிக்கக்கூடியது, அனுபவிப்பதற்காகவே ஏற்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது) மடத்துக்கு வரும் மாணாக்கர்களோ, ஆனந்த அனுபவம் தூண்டியே வருபவர்கள்.

எல்லாம் ரூபாய் அணா பைசாக் காரியமாய்ப் போய், கூடுகிற கூட்டமெல்லாம் பொறாமைப்பேயும் பகைமைப் பேயும் ஆட்டிவைக்கும் கூட்டமாயிருக்க, தமிழ்ப் பண்பாட்டில் உண்மையான ஆர்வங் கொண்டு, தமிழர்கள் கூடித் தமிழை ஆராய்கிறார்கள், அனுபவிக்கிறார்கள் என்றால், எவ்வளவு பெரிய விஷயம்! தமிழ் வளர்ச்சிக்கு, ஞானியார் சுவாமிகள் மடாலயம் பண்பட்ட நாற்றங்கால்.

தமிழ்நாடு புத்துயிர்பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ் மகள், சுவாமிகளுக்கு அரிய உருவத்தையும் உடல் நலத்தையும், கணீர் என்று ஒலிக்கும் வெண்கல நாதத்தோடு கூடிய குரலையும் அளித்தாள். எவ்வளவு விரிவாகவும் சிக்கலாகவும் இருந்த போதிலும், விஷயங்களின் ஒவ்வொரு உறுப்பையும் அதற்கு இயைந்த இடம் அமைத்து முறைப்படுத்தி நிர்மாணம் செய்யக்கூடிய அபூர்வமான அறிவுவிளக்கத்தையும் கொடுத்தாள். எல்லாவற்றிற்கு சிறப்பாக, பொறுமை, அடக்கம், அன்பு, பக்தி ஆகிய உயர்ந்த இதயதத்துவங்களையும் அளித்தாள்.

"சித்திரமும் கைப்பழக்கம்

⁠செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி

⁠மனப்பழக்கம்-நித்தம்

நடையும் நடைப்பழக்கம்;

⁠நட்பும் தயையும்

கொடையும் பிறவிக்

⁠குணம்.”

ஆம், பிறவிக் குணந்தான் என்று சுவாமிகளுடன் பழகிய பின் தெரியவரும்.

இத்தனை அரிய பேறு தமிழகத்துக்குக் கிடைத்திருக்கிறது. சுவாமிகளுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அவர்களுடைய இதய கமலத்திலே சதா குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் அருள்வாராக!

இதய ஒலி(நூல்)

ஞானியார் அடிகள்

உவமைக் கவிஞர் சுரதா

கண்ணிரண்டும் கல்விக்கண் ஒன்றும் பெற்றுக்

⁠காலமெல்லாம் தமிழுக்கும் சைவத்திற்கும்

தொண்டுசெய்தோர் பலராவர்; அவருள் காமச்

⁠சுவைவிலக்கிச் செயற்கைச்சுகம் விலக்கிவாழ்ந்த

பண்டையநாள் சமணரைப்போல் செந்தமிழ்க்கும்,

⁠பரஞ்சோதி முனிவரைப்போல் சைவத்திற்கும்,

எண்ணிறந்த பெருந்தொண்டு புரிந்து, கீர்த்தி

⁠ஏந்தியவர் ஞானியார் அடிக ளாவர்!

ஓரைந்து மொழியறிந்த புலியூர் ஞானி

⁠ஓய்வின்றிப் பெருஞ்சைவம் பேசி வந்தார்!

ஈரஞ்செய் கின்றதமிழ் மொழிநுட் பத்தை

⁠எழுத்தெழுத்தாய்ச் சொல்சொல்லாய் விளக்கி வந்தார்.

வீரஞ்செய் புறப்பொருளின் விளக்கம்; ஆதி

⁠வேதாந்தம், சித்தாந்தம் இவற்றை யெல்லாம்

காரஞ்செய் யாத்குரல் இனிமை யாலும்,

⁠கனிந்தெழுந்த பேச்சாலும் பாய்ச்சி வந்தார்!

கைச்சங்கம் எடுத்துதும் கூட்டத் தார்க்கும்

⁠கால்நடைகள் மேய்ப்பார்க்கும், மற்ற வர்க்கும்

மெய்ச்சங்கம் எதற்காக? எங்கட் கன்றோ

⁠வித்தைவரும்? என்றுசிலர் பேச்சைக் கேட்டுத்

தச்சன் கை உளிபதிந்த விரல்போ லானார்;

⁠தமிழ்ச்சங்கம் தோன்றுதற்குத் துணையாய் நின்றார்!

பொய்ச்சிந்தை மனுநீதி மயக்கம் தீர்த்துப்

⁠பொய்யாத குறள்நீதி கூறி வந்தார்!

வெல்லுஞ்சொல் இதுவேயன் றறிந்து பேசி

⁠வியப்பினிலே ஆழ்த்தியவர்; பிறையைப் போன்ற

பல்லக்கின் மீதேறி இந்த நாட்டிற்

⁠பவனிவந்த திருநீற்றுச் சைவர்! பாராங்

கல்லொக்கும் நெஞ்சத்தார் தம்மைத் தேமாங்

⁠கனியொக்கும் அறிவுரையால் கனியச் செய்தார்!

முல்லைப்பூ மாலைக்கோ பாராட் டுக்கோ

⁠மூதறிஞர் மயங்கியதே இல்லை கண்டீர்!

இளந்திரையன் என்பானோ பெரும்போர் வீரன்;

⁠இருண்டகடல் நீந்தியவன் வீரங்காட்டி

வளர்ந்தபுகழ் பெற்றுயர்ந்த வேந்தன் அந்த

⁠மாவீரன் நம்மவர்நெப் போல்யன் ஆவான்!

தளர்ந்தசெயல் செய்தறியாப் புலியூர் ஞானி

⁠தமிழகத்தின் சாலமனே யாவார் நுட்பம்

அளந்தமனம் கொண்டவராம்! அவர்போற் பேசும்

⁠ஆற்றல் பெற்றார் இன்றிங்கே யாருமில்லை

நன்றி :⁠

சுரதாவின் தேன்மழை

ஞானியாரடிகள்

மறை. திருநாவுக்கரசு (1959)

திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயம் ஐந்தாம் பட்டம் ஸ்ரீல ஸ்ரீசிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய தேசிக சுவாமிகள் என்னும் ஞானியார் சுவாமிகள் தென் தமிழும் வடமொழியும் ஆய கடல்களைக் கடந்தவர்; பண்புகளால் ஆன்ற சான்றோர். நாவலருக்கு நாவலர்; அகத்துறவும் புறத்துறவும் பூண்ட புனிதர், காட்சிக்கினியர்; சிவவேடத்திற்கோர் இலக்கிய மாயமைந்த தோற்றத்தார், அருட்பொலிவினர். தீயோரும் போற்றும் செந்தன்மை கொண்டவர், தேளையும் விரும்பும் அன்பினர், முருகன் சேவடியில் உருகி நிற்கும் உயர்ந்தோர், புகழ் மொழிகளுக்கு அடங்குவதன்று; அவர் பெருமை.

நாள் முழுவதும் மாணவர்கட்குச் செந்தமிழ் கற்பிப்பதில் தணியாத வேட்கை கொண்டு அரும்பணியாற்றிக் கைம்மாறு பெருமாரியனையர், “பேசாத நாளெல்லாம். பிறவா நாளே” என்று கோட்பாடு கொண்ட இப்பிரான் தம் திருமடத்தும் செல்லு மிடங்களிலும் தவறாது மணிக்கணக்காக அருவிஎனப் பேருரை நிகழ்த்துவதே தம் வாழ்வின்பமெனக் கொண்டு தொண்டாற்றிய தூயோர் ஆவர்.

இப்பெருமானின் சிறப்பியல்களில் ஈடுபட்ட அடிகளார் சமாசம் தொடங்குவதற்கு முன் சில திங்களாக அவர்களோடு தொடர்ந்த கேண்மையுடையவராக இருந்தார். இடையிடையே திருப்பாதிரிப்புலியூர் சென்று தலைமையிலும், முன்னிலையிலும் பேசிப்பேசி அவர் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்று முள்ளார். ஞானியார் அடிகளைப் பற்றி அடிகளின் 18.5.1905 நாட் குறிப்பு "திருப்பாதிரிப் புலியூர் மடம் அடைந்தேன். ஞானியாரைப் பார்த்தேன். அவர் என்பால் மிகவும் அன்பு கூர்ந்தார். அவர் நிறைந்த கல்வியாளர், குற்றமில்லா ஒழுக்கத்தினர்; நிறைந்த அன்பினர்" என்று கூறுகின்றது. இத்தகு நல்லோர் முன்னிலையில் அவர் வாழ்த்துடன் இசைவுடன் சமாசத்தைத் தொடங்குவது என்று முடிவு கொண்ட அடிகள் அக்கருத்தினை முன்கூட்டியே ஞானியார் அடிகட்கும் தம்மரிய நண்பர்கட்கும் கடிதம் வாயிலாக அறிவித்து 1907 ஜூலை 3ல் திருப்பாதிரிப் புலியூர்யடைந்து ஞானியாரடிகளைக் கண்டளவாளாவினர். மறுநாள் ஞானியார் மடத்தில் அடிகள் "முத்தி சாதனம்" என்று பேசினார்.

7.7.1907ல் மீண்டும் மடத்திலேயே அடிகள் “திருச்சிற்றம் பல விளக்கம்" என்று பேசினர். பேச்சினிறுதியில் சைவ சித்தாந்த மகா சமாஜம் அமைக்க உதவுமாறு அடிகள் வேண்டுகோள் விடுத்தார் கூட்டம் முடிவுற்றது. பின்னர் ஞானியாரடிகள் முன்னிலையில் அடிகளால் சைவசித்தாந்த மகாசமாஜம் நிறுவப்பட்டது. அப்போது அடிகளுடன் இருந்தவர்கள், ஞானியாரடிகள், தாசில்தார், பொன்னுசாமி பிள்ளை, ஓவர்சியர் சிங்காரவேல் முதலியார், வண்டிப்பாளையம் தமிழாசிரியர் கந்தசாமிமுதலியார் ஆகிய நால்வருமேயாவர். சமாசம் அமைக்க வேண்டும் என்னும் எண்ணத் தோற்றமும் அதற்கேற்ற முயற்சியும், முடிவும் திருவருளால் அடிகளின் ஆர்வ உள்ளத்தே எழுந்து உருப் பெற்றவை. சமாசத்தைத் தோற்றுவித்த தோடமையாது அதனை ஐந்தாண்டளவும் செயலாளராக அமர்ந்து சீரும் சிறப்பும் பெற வளர்த்து விட்டவரும் அடிகளாரேயாவர்.

சைவ சித்தாந்த மகா சமாஜம் நிறுவுதல்

சிவநெறியின் பெருமையை யாண்டும் பரப்பல் வேண்டுமென்ற அடிகள் உள்ளத்தே நாளும் வளர்ந்துவரும் உணர்ச்சியின் முடிவே “சைவ சித்தாந்த மகாசமாஜம்" என்னும் அமைப்பாக உருவெடுத்தது. சங்கம், கழகம், மன்றம் முதலிய சொற்களை விடுத்து அடிகள் “சமாஜம்" என்ற சொல்லை அமைக்கக் காரணம், வடநாட்டினர் இவ்வமைப்பினையறிய வேண்டும் என்பதற்கேயாம். நாளடைவில் இச்சமாசம் வட நாட்டிலும் ஆங்காங்குத் தோன்றிப் பணியாற்றவேண்டு மென்பதே அடிகளின் ஆர்வமாகும். இச்சமாசத்தினை எவர் தலைமையில் நிறுவது என்று அடிகள் கருதிவருகையில், பெருமலையை எண்ணின் இமயம் முன்னிற்பது போல் தவத்திரு ஞானியாரடிகளே நம் மடிகளின் மனத்திற்கு உகந்தவராயானார். அவரினுந் தக்கார் யாருளர்?

மறைமலையடிகள் வரலாறு

{header

| title = தமிழ் வளர்த்த ஞானியாரடிகள் | author = | translator = | section = சிவத்திரு. ஞானியாரடிகள் வரலாறு | previous = ஞானியாரடிகள் | next = | notes = தொகுப்பாசிரியர் வல்லிக்கண்ணன்

}}



சிவமயம்

சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க

சிவத்திரு ஞானியார் அடிகள் வரலாறு

எழுதியவர் :

திருப்புகழ் இரத்தினம்

புலவர் - க. பா. வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகளின் மாணவர்

சிவமயம்

சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க

திருக்கயிலாய பரம்பரைத் திருக்கோவலூரா தீனம்

திருப்பாதிரிப்புலியூர்

ஸ்ரீமத் ஞானியார் மடாலய ஐந்தாங் குருநாதர்

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்

வரலாறு

தோற்றுவாய் உலகில் மக்கள் மக்களாக வாழ வேண்டும். ஆனால் அப்படி வாழ்வது எல்லோர்க்கும் இயலாததாகி விடுகிறது. மாக்களாக வாழ்வாரே பலராகின்றனர். இத்தகைய இரு வேறுபட்ட உலகத்தியற்கை, இன்று நேற்றுத் தோன்றியதன்று. உலகம் என்று தோன்றிற்றோ, அன்றே தோன்றியதாதல் வேண்டும். மிகப் பழைய நூல்களிலும் மாக்களாக வாழ்ந்தோர் சிலரின் குறிப்புகள் காணப் பெறுகின்றன. செவியறிவுறுஉ என்னும் புறத்திலக்கணத் துறை எழுந்தது மாக்களை மக்களாக்குதற்கே. ஏமரா மன்னன் வாழ்ந்திருந்த துண்டென வள்ளுவத்தாலறிகிறோம். ஆராயாது முறை புரிதல் முதலாகிய தவறு காரணமாகக் கேடுற்ற மன்னர் வரலாறுகள் பல, சங்க இலக்கியங்களிலும், பழம் பெரும் காப்பியங்களிலும் வழங்கக் காண்கிறோம். ஆகவே, மக்கள் மாக்களாக வாழாமல் மக்களாக வாழச் செய்வதற்குக் கற்றறிந்தோர் பற்பல துறைகளிலும் முயன்று வந்திருக்கின்றனரென்பது வெளிப்படை.

அவல வாழ்வும் அமர வாழ்வும் அறியாமையிருளில் மூழ்கிக் கண்ட பொருளையெல்லாம் இச்சித்து அவற்றைத் துய்ப்பதற்கே இந்தப் பிறவி தமக்கு வாய்த்திருக்கிற் தென் றெண்ணுவோர் பலர். இதனால்தான், புலனடக்கம் பற்றி எல்லா நீதி நூல்களிலும் வற்புறத்தப்பெறுகிறது சான்றோர் பலரும், மக்களாக வாழ வழி வகுத்தனர். அவர், முதற்கண் தாம் தூயவாழ்வு நெறி நின்றனர். தாம் கண்டறிந்த உண்மைகளைச் சொல்லளவில் விட்டுவிடாமல், இயற்றமிழ்ப் பாக்களாகவே புனைந்து அளித்திருக்கின்றனர். அவை காலம் மாறுபடினும் தாம் மாறா இயல்பின. நீதி நூல்களை இயற்றி யோர் மட்டுமின்றி, இறைநெறி நின்றோரும் அவ்வகையே நம்மை அழைத்துச் செல்ல முற்படுகின்றனர். அவ்வகையில் திருமுறையாசிரியர்கள் முன்னிற்பவர். அவர்தம் பாக்கள் உள்ளத்தை உருக்குந்தகையன. ஓர் எடுத்துக் காட்டால் ஈண்டு விளக்குதல் மிகையன்றெனத் துணிந்து ஒன்று காண்போம்.

சால இனிய கனி : நாம் பல பல சுவைப் பொருள்களை நுகர்கிறோம். வாய்க்கினியவற்றின் சுவையொன்றினை மட்டும் குறிப்பிடலாம். இனிய கனி ஒன்றின் சுவையினை - முன் நுகர்ந்த பயிற்சியால் மீண்டும் - சுவைக்க முற்படுகிறோம். பற்று மிகுதி காரணமாக அஃது அண்மையிற் கிடைக்கக் கூடாதேனும், விலை மிக உடையதேனும், தொலைவோ, பொருட்செலவோ கருதாமல் எப்படியேனும் அதைப் பெற்றுண்ண முற்படுகிறோம்; பெறுகிறோம்; உண்கிறோம். அப்போதைய ஆசையை ஒருவாறு நிறைவேற்றிக் கொள்கிறோம். அவா மேலீட்டினாற் பெற்ற தாயிற்றே; அரிதின் முயன்று பெற்றதாயிற்றே; பெரும் பொருட் செலவிற் பெற்ற தாயிற்றே என அக்கனியை நீண்டநேரம் சுவைக்க எண்ணிய ஒருவர், நீண்ட நேரம் வாயிலேயே அடக்கி வைத்திருந்தாலும் அச்சுவை நீடிக்கிறதோ ? அல்லது அடிநாவைத் தாண்டிய பிறகும் அதன் சுவை நமக்கு தெரிகிறதோ? இல்லை யென்பதை எவரும் அறிவோம். எனவே ஐம்புல நுகர்ச்சியால் பெறப்படுவன யாவும் சிறுகால அளவு இன்பம் பயப்பன வேயாம். இது கொண்டே பேரின்பம் உண்டென உணர்தல் நம் கடனன்றோ? அதனைச் சுவைக்கனியாக்கியே தருகிறார் திருநாவுக்கரசர். 'புனிதன் பொற்கழல் ஈசன் எனுங்கனி, இனிது சாலவும்’ எனக் கூவியழைத்துக் கூறுகின்றார். மனம் படைத்தவர் - பகுத்துணரும் தன்மை படைத்தவர் - யாரோ அவரை, ‘மனிதர்காள் இங்கே வம், ஒன்று சொல்லுகேன் என்றழைத்துக் கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே என, முன் வந்தவர் தம் அவாவினைத் தூண்டி, அக்கனி சிறிதுநேர இன்பந்தரும் எல்லாக் கனியையும் போன்றதன்று; சால இனிய கனி என அறிவித்து, அதனை நுகர்வோரைப் பக்குவி களாக்கும் குருவாகிய அவர்தம் பாசுரத்திற் பொதிந்துள்ள நுணுக்கங்களை நுனித்தறிதல் நம் கடனன்றோ ? மணிவாசகப் பெருந்தகையும் ‘நினைத்தொறும், காண்டொறும், பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக, ஆநந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையானை எண்ணி, அவ்வின்பத்தை நுகருமாறு தும்பியரசனுக்கே கூறுகிறாரே ஏன்? அந்தப் பக்குவம், அவர்கண்ட மனிதருக்கு இல்லை யென்பதாலோ சிந்தனைக்குரிய பாட்டே அது. 'கனியினும், கட்டிபட்ட கரும்பினும், பனிமலர்க் குழற் பார்வை நல்லாரினும் இனியன் என்ற நாவுக்கரசர் தன்னடைந்தார்க்கு என அருளி அவனையடைய வழிதேடக் கொள்ளவன்றோ நம்மைத் தூண்டுகிறார்? இத்தகைய பாசுரங்களைப் பயிலும் போதெல்லாம் நம்மை மனிதராக்கிக் கொள்ள நாம் முயல வேண்டும் என்பதற்காகவே ஈங்கு இவற்றை எடுத்துக் காட்ட முனைந்தோம்.

அமர வாழ்வுக்கு ஆசான் : இயல்பாகவும், சூழ்நிலை காரணமாகவும் நமக்கு அமைந்துள்ள அறிவுத் திறனைச் சோதித்தறிந்து, ஏற்ற வகையிற் பக்குவம் சொல்லி, நம்மை அமர வாழ்வினுக்கு அழைத்துச் செல்வார் நமக்குத் தேவை. அவர் நாம் பயிலும் நிலைக்கும் மேற்பட்ட தகைமையாளராயிருத்தல் வேண்டும். விருப்பு, வெறுப்புகட்கு ஆளாகாத நிலையினராய், அருள் நிரம்பி, ஆன்ற அறிவும், தெளிந்த தூய சிந்தையும் உடையவராயிருத்தல் வேண்டும். அவரே குரு, தம் பரந்த கலை யொளியால் எப்பாலவரையும் தம்பால் ஈர்த்து ஆட்கொள்ளும் குருநாதர். இவ்வுலகில் மனிதரோடு மனிதராய் இருப்பார் எனினும் அவர், இறைவனே யாவர். குருவே சிவன் எனக் கூறினான் நந்தி என்ற திருமூல நாயனார் வாக்கும், அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி யருளிய பெருமையைச் சிறுமை யென்றிகழாதே என்ற மாணிக்க வாசகர் வாக்கும் நாம் கருதற் பாலன. அத்தகைய பெருமை வாய்ந்த குருநாதரை நாம் தேடியடைதல் வேண்டும். அடைந்து அவர் காட்டும் தூய நெறி நிற்றல் வேண்டும். ஒரு சிறுகால எல்லையில் நம்மை அவர் சிறந்த பயன்பெறச் செய்யவுங் கூடும்; பல காலங்கடத்தலும் கூடும். நமக்கு உளத்தூய்மை உண்டாகுமளவும் குருநாதர், தம் ஏவலாலும் சுற்றுச் சார்பிற் பயிற்றலாலும் ஆட்கொள்வார். நாம் நம் முன்வினைப் பயனும் அறிவாற்றலும் பயன்தருங் காலம் வருமளவும் கொடிறும் பேதையும் கொண்டது விடா, தெனும் படியே ஆகி நல் இடையறாத் தொழும்பு பூண்டு நற்பேறெப்துதலைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

மக்கள் வாழ்வினைச் செம்மைப் படுத்த அவ்வப்போது ஆங்காங்கே குருமார் தோன்றுவர். இம்முறையில் இம் மடாலய முதற் குருநாதர் பற்றி மட்டும் இங்குக் குறிப்பிடுதல் கடமையாகும்.

வீர சைவம் : ஒழுக்கம் விழுப்பந் தருவது. ஆதலால் அதனை உயிரினும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றார் வள்ளுவப் பெருந்தகையார். தாம் நல்லொழுக்க நெறி கடைப்பிடித்துப் பிறரையும் அந் நெறியினைக் கடைப்பிடிக்கு மாறு ஒழுகுபவர், யாவராலும் போற்றப்படுவது மட்டுமன்றிக் குருவாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க பெருஞ் சிறப்பும் பெறுவர். வீர சைவநெறி சீலம் கைக்கொள்ளும் தூயநெறி சீலத்தாலன்றி எவ்வகையாலும் மனம் ஒரு நெறிப்படாதென்பதை யறிந்த சான்றோர், வீரசைவ சமயத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். வீரசைவர் அறுபத்து நான்கு சீலங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பது விதி. தக்க கட்டுப்பாடுகளைக் கைக்கொள்பவர் வீரசைவர். குருவின் பாதோதகம் (திருவடிநீர்) போற்றி வைத்து நாடோறும், அவர் திருவடி தியானத்துடன் பருகவேண்டு மென்பதும், குருமொழி கடவாமல் வாழ வேண்டு மென்பதும் அவற்றுட் சில. (அப்பூதியடிகள் வரலாற்றிலே பாதோதகத்தின் சிறப்பினை நாம் பயில்கிறோம். துணிய நம் ஆணவம் மறுக்கிற தென்பதை உணர்கிறோம்.) பல பல ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் வாழும் வீரசைவர், பல பெரிய சிவாலயங்களிற் பூசனை புரிந்திருந்ததும் உண்டு. மிகச் சிலகோயில்களில் இன்றும் வீரசைவர் பூசனை நடை பெறுகிறது. வீரசைவர், ஆலய பூசனை, இட்டலிங்க பூசனை, புராண- இதிகாச விரிவுரைகள், சிறுவர்க்குக் கல்வி போதனை ஆகிய பல சமுதாய நலப் பணிகளை மேற்கொண்டு, தம்மைச் சூழ்ந்தாரையும் ஒழுக்க நெறியில் ஈடுபடுத்தி வந்ததுண்டு. பற்பல அரசியல் மாறுபாடுகள் நிகழ்ந்த காலங்களிலும் தம் நியதியின் வழுவாமல் மேற்கண்ட அறிவுப் பணிகளை நிகழ்த்தி வந்தன ரென்பதற்கு வரலாற்று ஆதாரங்களும் உள.

முதற் குருநாதர்

சோமநாத ஆராத்திரியர் : கர் நூல் மாவட்டத்திலே ஆத்மகூர் என்ற ஊர் இன்றும் உள்ளது. அங்கு வீர சைவர் பலர் வாழ்ந்தனர். அவர்கள், முற் கூறிய வீரசைவ நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தனர். அறுபத்து நான்கு சீலங்களையும் வழுவாது கடைப் பிடித்த பெரியாருள் ஒருவர், சோமநாத ஆராத்திரியர் ஆவர். அவர் வேத, ஆகம, புராண, இதிகாசங்களில் வல்லுநர். வீர சைவ - இட்டலிங்க பூசனை, பயன் முதலியவற்றைத் தம் கல்வி வன்மையால் ஆதாரங்கள் பலவற்றுடன் தொகுத்து எழுதி வைத்துள்ளார். அந்நூல் சோமநாத 'ஆராத்திரியர் பத்ததி’ என்று அவர் பெயர் கொண்டே வழங்கிப் போற்றப்பெற்று வருகிறது. அந்நூல், வீரசைவ மரபினர்க்கு ஓர் அருநிதியமாவது, அவர் வழித் தோன்றலாய் விளங்கிய மல்லைய தேவரும், அவர் மனைவி பிரமர குந்தளாம்பாவும், அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றி வந்தனர். எனினும் புத்திரப் பேறின்றி வருந்தினர்.

பழநியாண்டவன் திருவருள் : மல்லைய தேவர்க்குப் பற்பல இடங்களிற் சீடர்கள் இருந்தனர். காங்கேயத்தில் அக்காலை வதிந்திருந்த சீடராம் மூன்று கவுண்டர்கள் அழைப்பிற் கிணங்க மனைவியோடு போந்தார். அவர்கள் விரும்பியவாறே பூசை எழுந்தருள்வித்தும், புராண விரிவுரைகள் ஆற்றியும் யாவரையும் மகிழ்வித்து இறையடிப் பற்றுக் கொள்ளத் துணை நின்றார். ஆயினும் அவரைப் பிள்ளையில்லாக் குறை வாட்டவே, பழநிப் பதியினையுடைந்தார். கணவன் மனைவியர் இருவரும் பழநியாண்டவன் திருவடி பரவித் துதித்துச் சில நாள் அங்குத் தங்கினர். ஆத்மகூருக்கு மீண்டனர். ஆண்டவனருளால் பின்னர் அவருக்கு இரு பிள்ளைகள் தோன்றினர். மூத்தவர் சுப்பிரமணியம், இளையவர் மல்லையர். தங்கள் தந்தையைப் போன்றே இருவரும் கல்வி கேள்விகளில் வல்லவராயிருந்தனர். இளையவர், சிறுபருவத்திலேயே துறவற வொழுக்கமே சிறந்ததெனத் துணிந்து ஸ்ரீசைலம் சென்று துறவியாகி மனமடங்குந் திறத்தினிலே இருந்துவிட்டார். மூத்தவர், தம் அம்மான் மகளாம் சுப்பம்மாவை மணந்து இல்லற நெறியில் ஈடுபட்டனர். பல காலம் கடந்தும் பிள்ளைப் பேறற்ற குறை அவர்களயுைம் வாட்டியது. தாம் பிறந்தது பழநியாண்டவன் திருவருளால் என்பதை உணர்ந்திருந்த சுப்பிரமணிய அய்யர், மனைவியோடு பழநியடைந்தார். பரமனடி பணிந்து குறையிருந்தார். சில நாள் அங்குத் தங்கினார். தைமாதம் வந்துற்றது. பூச நாளின் முன்னாளாகிய புனர்ப் பூசத்திரவில் பழநியாண்டவன் இருவர் கனவிலும் தோன்றி பரமென விளங்கும் நற் புதல்வன் தோன்றுவான் என அருளி மறைந்தான். அதிகாலையிற் கண்ட கனவால் இருவரும் மகிழ்ந்து பரமனைத் துதித்தனர். சண்முக நதியில் நீராடிச் சரவணபவனைத் தொழுதனர். கணாரதனை புரிந்து அடியர் பூசனையையும் முடித்தனர். சில நாள் அங்குத் தங்கியபின், குன்று தோறாடும் குமரன், அலைவாயதனில் நிலை இய பண்பினைக் கண்டு தொழும் விருப்பினராய்த் திருச்செந்தூர் சேர்ந்தனர்.

மகப்பேறும் - திருப்பெயரும் : அலைவாயண்ணல், மாசிப் பெருவிழாக் கொண்டருளும் மாண்பினைக் கண்டு தொழுது, அங்ஙனே சின்னாள் உறைந்திருந்த தம் பதியர் கனவில் ஆறுமுகப் பண்ணவன் ஒரு நாள் தோன்றினான். சுப்பம்மா கருவிலிருப்பவர், ஆறுமுககுரு என்றருளிச் செய்து இருவர்க்கும் திருநீறளித்து மறைந்தான் விடியற் காலைக் கனவினை ஒருவரோடொருவர் கூறிக் குமரக் கடவுள் திருவருளை வியந்து போற்றினர். சில நாள் அங்கிருந்த பின் அவனடி நீங்காச் சிந்தையினராய்த் தென்திசை விட்டு வடக்கு நோக்கி வழிக்கொண்டனர்.

பற்பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு நடு நாட்டையடைந்தனர். சேதிநாட்டுத் தலைநகரம் திருக்கோவலூரை நண்ணினர். அப்போது அம்மையார் நிறைகருவெய்தி யிருந்தனராதலால் மேலும் வழி நடை கொள்ளல் இயலா தாயிற்று. திருக்கோவல் வீரட்ட நாதன் ஆலயத்தை யடுத்திருந்த வீரசைவ மடத்தில் தங்கினர். கலி 4774, ஆநந்த ஆண்டு கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நன்னாள், திருவருணை மலையுச்சியில் சோதிவளர் தோற்றங்காணும் நல் வேளையில் சுப்பம்மா ஆறுமுக குருவாம் ஆண் மகவினைப் பெற்றெடுத்தார். செந்திலாண்டவன் சூட்டிய பெயரே அம்மகவினுக்கு வழங்கப் பெற்றது.

குகை நமசிவாயர் பரம்பரைக்கு உபதேசம் : இந்தத் தெய்வத் திருக்குழந்தையின் தோற்றம், திருவண்ணாமலை ஆறாங்குகை நமசிவாயராகிய மடத்தின் தலைவருக்குப் பல கால முன்னரே, அம்மடத்தின் முதற் குருநாதரால் கனவில் அறிவிக்கப் பெற்றிருந்தது. ஆறாங் குரு நமசிவாயர் சீவியவந்தராயிருந்தபோதே ஏழாந் தலைவர் திருவருளிற் கலந்துவிட்டார். ஒருவருக்கு உபதேசித்தலே முறையாதலால், மற்றொருவர்க்கு உபதேசிக்க அதிகாரமின்மை கருதி மடத்தின் தலைவராகும் பரம்பரை யற்றுவிடுமே என்னுங் கவலையோடிருந்த அவருக்கு இன்ன இடத்தில், இன்னநாளில் இன்ன வேளையில் தோன்றும் புதல்வர் இந்தப் பரம்பரை தழைக்க உபதேசிப்பாரென்று கூறக் கனாக் கண்டிருந்தார். இவ்வரும் புதல்வரின் தோற்றத்தினைத் தம் ஏவலர் வழி அறிந்த அக்குரு நமசிவாயர் மகிழ்ந்திருந்தார். குழந்தை பிறந்த மூன்றா நாள் தாய் சுப்பம்மா சிவத்தை மேவினர். வருத்த மேலீட்டினால் தந்தையாம் சுப்பிரமணிய அய்யர் திருக்கோவலூர் மடத்து வீரசைவரிடமே இக் குழந்தையை வளர்த்துக் கொள்ளும்படி விட்டு விட்டு ஸ்ரீசைலம் சென்று விட்டார்.

ஆறுமுக குரு, கல்வி, கேள்வி, இட்டலிங்க பூசனை, சிவாலய தரிசனம், மனமடங்குந் திறத்தில் இருந்து அட்டாங்க யோக முதலியவற்றால் பெருஞானம் பெற்றார். அவர்களுக்குத் தூல பஞ்சாட்சரத்தினைத் திருவருணைக் குரு நமசிவாயர் உபதேசம் செய்து சிவலிங்கதாரணமும் செய்து வைத்தார். சூக்கும பஞ்சாட்சரம், கோவல்- பெரிய நாயகித் தாயாராலும் காரண பஞ்சாட்சரம், ஆராத்ரிய உருவம் தாங்கிவந்த கடவுளாலும், ஞானோபாய சாதனைகள் வீரட்ட நாதராலும் உபதேசிக்கப் பெற்றன. இளந்துறவியின் முன், ஆறுமுகக் கடவுள் தோன்றி, இதனினும் மேலாம் மந்திரம் இல்லை யென்றருளிப் பிரணவ உபதேசம் செய்வித்தான். ஒரு மொழி மகாவாக்கியமும் உணர்த்தியருளி மறைந்தான்.

இவ்வருந் துறவிக்குத் திருநீற்றுப் பையும், அக்கமணி மாலையும் இறைவனாலே அளிக்கப் பெற்றன. அவை இன்றும் இம் மடாலயத்தில் பூசனை பெறுகின்றன.

ஞானியார் : திருவருணைக் குகை நமசிவாயர் பரம்பரையின் எட்டாவது குரு நமசிவாயருக்கு உபதேசித்துத் தலைமை யேற்குமாறு செய்த இவ்வருட்குரவருக்கு, ஆறாங்குரு நமசிவாயர் ஞானியார் என்ற சிறப்புப் பெயர் அணிவித்தார். அன்று முதல், அப்பெயரே வழங்குவதாயிற்று.

திருமடங் காணல் : பற்பல அருஞ் செயல்களை ஆற்றிவந்த நம் தபோதனர்கள், தமக்குப் பின்னரும் ஞான பரம்பரை ஒளிரவேண்டு மென்னும் அருள் நோக்கத்தால், ‘சண்முக ஞானியார்' என்று போற்றப் பெறும் ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளை மடாலயத் தலைமை யேற்று எழுந்தருளச் செய்து கலி, 4870, மாசி 27 அநுடங் கூடிய குருவாரத்தன்று பரசிவபர ஆகாச வெளியில் கலந்தருளினார்கள்.

அவர்கள் எழுந்தருளிய காலத்தே பல அற்புதங்கள் நிகழ்ந்தன. மன்பதைகள் உய்யும் வண்ணம், இறைவனால் தனக்கு அளிக்கப் பெற்ற நிட்டானுபூதி நூலைத் தொண்ணுாற்றொரு செய்யுள்களாக அருளியுள்ளார்கள். அந் நூலுக்கு முத்துக்கிருட்டின பிரமம் என்பார் அரியதோர் உரை எழுதியிருக்கிறார். அவ்வுரை, வடலூர் இராமலிங்க வள்ளலாரை யுள்ளிட்ட இருபதின்மார் தந்துள்ள சாற்றுக் கவிகளுடன் பெருமை பெற்றது. இப்போது அச்சாகி வெளிவந்துள்ளது. நிட்டானுபூதி சாரமேயன்றி மேலும் முப்பது நூல்கள் அவர்களால் அருளப் பெற்றன. சில அச்சாகி வெளிவந்துலவு கின்றன. சுவாமிகள் அருளிய நூல்கள், இயல், இசை, நாடகத் தமிழ் நூல்களாகக் காணப் பெறுவதால் அடிகள் முத்தமிழும் வல்ல முனிவர்களாவர்.

இவர்களது வரலாறு, கிடைத்த ஆதாரங் கொண்டு ஒருவாறு விரித்தெழுதப் பெற்றுள்ளது. கோவல் ஆதீனக் குருமணி என்னும் பெயரினதாய், 1972ல் இம் மடாலயத்தின் 17ஆம் வெளியீடாக அந்நூல் வெளியிடப் பெற்றுள்ளது.

வரன்முறை : இரண்டாம் குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகட்குப் பின், ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சங்கண வசவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளும், அவர்களையடுத்து, ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளும் தலைமையேற்றருளிச் சிவஞானம் பாலித்தருளினார்கள்.

இந் நால்வருக்குப் பின்வந்தவர்களே ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளாவார்கள்.

இனி அவர்களது வரலாறு விரித்துரைக்கப் பெறும்.

ஐந்தாம் குருமகா சந்நிதானம்

நாடு : 'நாடென்ப நாடா வளத்தன' என்றார் வள்ளுவர். தமிழ் நாட்டுத் நெற் களஞ்சியம் சோழ நாடு என்பதை உலகமறியும். பார்க்கு மிடமெல்லாம் பசிய வயல்களையும், தழைத்துச் செழித்த சோலைகளையும் பெற்று விளங்குவது. காவிரித்தாய், தான் தோன்றும் மலை நாட்டினின்றும், பாய்ந்து ஓடிவரும் பரந்த இடத்தினின்றும், திரட்டிக் கொண்டு வந்த செழிப்புள்ள வண்டல் முதலான உரங்களை யெல்லாம், பற்பல கால்கள் மூலமாக வழங்கிச் செழிக்க வைக்கும் நாடன்றோ சோணாடு? ஒளவைப் பிராட்டியும், 'அதனை வள நாடு' எனப் போற்றிய தோடமையாது, மேதக்க என மேன்மையுங் கொடுத்துக் குறிப்பிடுகின்றார். வளமிக்க நாடு இதுவே யாதலால் வளவர் எனவே சோழ மன்னவர் குறிக்கப் பெற்றனர்.

சோறு உடையதாதல் மட்டுமின்றி,ஆங்காங்கே தெய்வத் திருக் கோயில்களையும் நிறையப் பெற்றிருப்பது சோழ வளநாடே. தேவாரம் பெற்ற சிவத்தலங்கள் மட்டும் 190, பெறாதன பல. வைணவத் தலங்களும் பல. பிற்காலக் சோழ வேந்தரதுதலைநகர் தஞ்சாவூர் முற்காலச் சோழர்கள், திருச்சத்தி முற்றம், பழையாறை என்ற இடங்களைத் தலை நகராகக் கொண்டிருந்தனர். அவை குடந்தை, கும்பகோண்ம் என்ற திருக்குடமூக்கினை அடுத்து உள்ளவை. திருக்குட மூக்கில், சைவ - வைணவ ஆலயங்கள் மிக மிக அதிகம். அத்தனையும் சமயகுரவராலும், ஆழ்வார்களாலும் பாடப் பெற்ற சிறப்பினையுடையன.

ஊர் : திருக் குடமூக்கினுக்கு வடகிழக்கின் கண்ணே, சற்றேறக்குறைய 5கி.மீ. (3மைல்) தொலைவிலமைந்திருப்பது, திருநாகேச்சுரம் எனும் சிறப்பமை நகர். பரந்த சிவாலயத்திலே, நாகேச்சுரன் எழுந்தருளி அருள் வழங்குகிறான். அப்பரமனை, நாவரசர் பெருமான், இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை நச்சுவார்க்கு இனியர்’, ‘நாடறி புகழர் , நற்றுணையாவர்’, ‘நம்புவார்க் கன்பர்’, ‘தேனர்' , 'தீர்த்தர்’ என்றெல்லாம் புகழ்ந்தமையே யன்றித் 'திருநாகேச்சரத்துளானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே' எனவும் சிறப்புறப் போற்றிப் புகழ்கின்றார். திருஞானசம்பந்தப் பெருமானும், சுந்தரமூர்த்தி நாயனாரும்பாடிய பதிகங்களை யும் பெற்றுள்ள தொல்பதி அஃது.

பெற்றோர் : அந்தப்பதியில் வீரசைவர் பலர் இன்றும் வாழ்கின்றனர். வீரசைவ குடும்பத்தவருக்கெல்லாம் குருவாய் விளங்கிய பெரியார், அண்ணாமலை அய்யர். அவர் தம் இல்வாழ்க்கைத் துணைவியார் பார்வதியம்மை. இவ்விருவரும் இறையன்பு தோய்ந்த செம்மன முடைய வர்கள். அருளுள்ளங் கொண்டு அண்ணலடியவரை அருத்தியுண் பவர்கள் தம் முந்தையோர் கொண்ட முறைப் படியே, திருப்பாதிரிப்புலியூர் பூர்மத்ஞானியார் மடாலய குருமூர்த்திகளைக் குருவாகக் கொண்டவர்கள். அடிக்கடி திருப்பாதிரிப்புலியூர் வந்து குருவின் திருவடிகண்டு மனத்தெளிவு முதலிய பெற்றுச் செல்வர். வீரசைவ தெறிபற்றிக் கனாராதனை முதலிய சிவ சீலங்களில் ஈடுபட்டு, விளங்கியவர்களாவர்.

தோற்றம் : பார்வதி யம்மையார் வயிறு வாய்ந்திருந்தனர். நாம் செய்த முன்னைத் தவப்பேற்றின் பயனாக, கலி 4973, ஸ்ரீமுக ஆண்டு, வைகாசி மாதம் 4ஆம் நாள் (17-05-1873) வியாழக்கிழமை இரவு 10-30 மணியளவில் மூல விண்மீனும், பிரதமை திதியும் தனுசு லக்கினமுங் கூடிய நல் வேளையில் ஆண் மகவொன்றினைப் பெற்றெடுத்தார்கள்.

சாதகப்பலன் சில :

குருவாரம், வைகாசி மூலம் இவை நற்பலன் தந்தன.

இலக்கினத்தில் சந்திரனும் இரண்டில் சனியும், ஐந்தில் புதனும் சுக்கிரனும், ஆறில் சூரியனும் இராகுவும், ஒன்பதில் குருவும், பதினொன்றில் செவ்வாயும், பனிரண்டில் கேதுவும் அமைந்த ஜாதம்.

ஜனன காலத்தில் கேதுதிசை ஆரம்பம்.

ஜாதகச் சிறப்பு : பத்தா மிடத்ததிபதியான புதனும் பதினோராமிடத்து அதிபதியான சுக்கிரனும் புத்தி ஸ்தானமாகிய ஐந்தாமிடத்தில் திரிகோணமேறி நிற்றலானும் ஜன்மாதிபதி குரு, ஒன்பதாமிடமாகிய மற்றொரு திரிகோணத்தில் நிற்றலானும் சுவாமி, ஞான குருவாய்ப் புகழ் பெற்று ஒளிர்ந்தார்கள்,

(மேற்கண்ட சாதகம், இந்த சாதகர் திருக்கரத்தால் எழுதப் பெற்று வைத்திருந்த குறிப்பின் படியாகும்.)

உபதேச அளவில் நில்லாமல், தாமும் மோட்ச சாதனத்தில் ஈடுபட்டு, அங்கலிங்க சம்பந்த முடையவர்களாகச் சிவ பூசை முதலாய சிறந்த ஒழுக்க சீலர்களாய்த் திகழ்ந்து மோட்ச மெய்தினார்கள். இது, மோட்ச காரகனாகிய கேது, மோட்ச ஸ்தானமாகிய பன்னிரண்டாமிடத்தில் நிற்றலால் உணரப் பெறுகிறது. .

பதினேழாம் வயதில், சுக்கிரதசை, குரு புக்தியில் (20-1-89) விரோதியாண்டு கார்த்திகை 7௳ வியாழன் சித்திரை நட்சத்திரத்தில் அவர்கள் மடாலயத் தலைமை யேற்றருளினார்கள்.

பிள்ளைப்பருவம் : அண்ணாமலை ஐயரும், பார்வதியம்மையும் தம் குழந்தையின் ஜாதகம் கணித்துப் பார்த்து மகிழ்ந்தனர். குழந்தைக்குப் ‘பழநியாண்டி' எனப் பெயர் சூட்டினர். பழநியுறை பரமகுரு அவர்களுக்கு வழிபடு கடவுள். எனவே அப்பெயரைத் தம் அருமைத் திருக்குமாரருக் கிட்டமை வியப்பன்று.

அண்ணாமலைக்கும் - பார்வதிக்கும் பிள்ளை பழநியாண்டி, என்ன பெயரொற்றுமை !

வீரசைவர், தம் மரபுக்குரிய முறைப்படியே, பிள்ளைப் பருவச் சடங்குகளை யெல்லாம் நிறைவேற்றிச் சிவலிங்க தாரணையும் செய்து வைத்துவிடல் வேண்டும். அவ்வாறே தம் குழந்தைக்குச் செய்ய வேண்டிய முறைப்படியாவும் செய்து, தம் குருவாகிய திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்துச் சுவாமிகளிடம் சிவலிங்க தாரணம் செய்து வைக்க ஆறாம் மாதத்தில் குருவினிடம் குழந்தையைக் கொண்டு வந்தனர்.

அப்போது, திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் நான்காங் குருமூர்த்திகளான ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் எழுந்தருளியி ருந்தார்கள். சிவத்திரு அண்ணாமலை ஐயர், குருநாதரிடம் அன்பு பூண்டு அவ்வப்போது திருப்பாதிரிப்புலியூர் வந்து குருநாதர் திருவருள் பெற்றுச் செல்வதுண்டு. அவ்வாறு ஒருமுறை வந்த போது, ‘உங்கள் குழந்தை பழநியாண்டி, இனி எமக்குரிய பிள்ளை. அப்பிள்ளையை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிடுக’ என்ற ஆணையும் பிறந்திருந்தது குருவாக்கினை வேத வாக்காகக் கொண்டு யாவரும் போற்றிவந்த காலம் அது. அதிலும், வீரசைவ மரபில், குருவே சிவனெக் கூறினன் நந்தி என்ற திருமந்திர வாக்கு மிகமிகத் தீவிரமாகப் பின்பற்றப் பெறுகிறது. ஆகவே, அண்ணாமலை ஐயர்- பார்வதியம்மை இருவரும், தம் செல்வத் திருக்குமரனைக் குருபாதத்தில் சேர்ப்பித்தார்கள். பழநியாண்டிக்கு இவ்வுலகில் தோன்றிய ஆறாம் மாதமே குருநாதன் திருவடி தொழும் பேறு கிடைத்துவிட்டது.

"பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம், காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்" என்பது அம்மையார் திருவாக்கு. அங்ஙனமே, நம் குருநாதர் பிறந்து, தம் முன் எதிர்ப்பட்டோரை அடையாளங் கண்டுகொள்ளும் வயதெல்லை யிலேயே குரு சீர்பாத சேவை கிடைத்துவிட்டது. அன்று முதல், திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தையே தமக்கிருப்பிட மாகவும், தாயும் தந்தையும் குருவும் தெய்வமும் குரு நாதராகவும் கண்டு வளர்ந்தருளினார்கள். பெற்றோர் சிலகாலம் குருநாதர் ஆணைப்படியே திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தில் தங்கி யிருந்தனர்.

திருப்பாதிரிப்புலியூர் மடாலய நான்காங் குருநாதர், பழநியாண்டியாம் இளங்குழவியைச் சிறு பருவத்திலேயே பல நல்ல பழக்கங்களில் ஈடுபடுத்தினார்கள். 'தளர் நடையிட்டுத் தத்தடி யிட்டுத் தடுமாறி விழுவதெல்லாம் குருவாம் தாய் தந்தையின் மீதே, இளங்குழவிப் பதங் கடந்து எழுத்தறியுங் காலம் வந்துற்றபோது, நான்காம் குருநாதர், சென்ன கேசவலு நாயுடு என்பாரைத் தம் இருப்பிடத்திற்கு வருவித்துத் தெலுங்கு மொழியைக் கற்பிக்கச் செய்தார். சில ஆண்டுகட்குள், தெய்வத் திருக்குழந்தை தெலுங்கு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருந்தது. தெலுங்கு கற்ற காலம், நான்கு ஆண்டுகளாகும் என அடிகளார் கூறியுள்ளார்கள்.

தாய் மொழியும் ஆங்கிலமும் பயிற்றப் பெற்ற பள்ளியிற் பின்னர்சேர்ந்து, கருத்துடன் பயின்றார்கள். பள்ளியிற் பயிலுங் காலத்தில் தம் குருநாதர்க்குப் பூசனை புரியப் பூக்கொய்தல், நீராடிப் பூசனைக்கு வேண்டும் நீர் முகந்து, வடித்தெடுத்துத் தூய்மையுடன் வைத்தல், சந்தனம் அறைத்தல், தீபமிடல் போன்ற பற்பல தொண்டுகளிலும் ஈடுபட்டு, யாவற்றையும் ஏவுவாரின்றியே சிறப்புடன் அமைத்து வைத்து விடுவார்கள். பின் தம் ஆன்மார்த்த பூசனையை முடித்துக் கொண்டு காலந் தவிராமல் பள்ளி சென்று வருவார்கள்.

சிறு பருவத்திலேயே வீரசைவ சமய தீட்சை பெற்று நியமம் தவிராமல் கடமைகளைச் செய்தல் வேண்டும் என்ற முறைப்படி சுவாமிகள், தமக்கிடப் பெற்ற கடமைகளைச் சிறக்கச் செய்து முடிப்பதோடு, தம் குருநாதரோ, மடாலயத்தின் குறிப்பறிந்து காலங் கடவாமல்செய்து முடிப்பதிற் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கே துயிலுணர்ந்து, தம் பாடங்களைப் படித்தலும், எழுத்து வேலைகளை முடித்தலும், இறைவன் மீது திருமறைப் பாக்களை ஓதுதலும் அவர்களது நியமங்களாம் இங்ஙனம் வெளிச்சம் நன்கு வரும் வரை செய்திருந்துவிட்டு, வெளிச்சங் கண்டவுடன் நித்திய கருமங்களை முடித்துப் பூக்குடலை கொண்டு திரு நந்தனவனம் சேர்வார்கள். ஆங்கு பூக்களையும் பத்திரங்களையும் பறிக்கும் போதெல்லாம் இறைவன் மீதல்லாது வேறெதிலும் சிந்தை செலுத்தாமல், விநாயகரகவல். திருவாசகத்துச் சிவபுராணம், திரு அகவல்கள், திருமுருகாற்றுப்படை, கந்தர்கலி வெண்பா முதலியவற்றினை மனத்துள் தூய்மையுடன் ஓதுதல் வழக்கம். பிறகே முன் குறிப்பிட்டவாறு நீராடல் முதலிய செய்து காலைச் சிற்றுண்டி கொண்டு, பள்ளி சென்று விடுவார்கள்.

மாலை, பள்ளி முடிந்து திரும்பியபின், பள்ளியிற் பயின்றன வற்றையும், அடுத்தநாள் நடக்க வேண்டியவற்றையும்படித்துச் சிந்தனையில் இருத்திக் கொள்வதும், இயன்ற வரை சிறிது விளையாடுதலும், விளையாடுங் காலத்தில் படித்தவைகளையும், ஆசிரியர் போதனை காலத்திற் குறிப்பிடும் பற்பல இன்றியமையாச் செய்திகளையும் நினைவிற் கொள்ளலுமே யன்றிப் பிறவற்றிற் சிந்தை செல்லா வண்ணம் கருத்துடன் பயில்வார்கள்.

அவர்களது திருவுடலைப் பிடித்துவிடல், ஆங்கு இருப்போர் சிலர்க்கே கிடைக்கக் கூடிய நல் வாய்ப்பு. அக்காலை அவர்கள் பற்பல அருளுரைகளை, அறிவுரைகளைக் கூறுவார்கள். தாம் பயின்ற காலங்களில் மேற் கொண்ட நியதிகளையும், ஐயங்களை அகற்றிக் கொண்டமையும் முதலிய தம் அநுபவங்களை யெல்லாம் கூறியருள்வார்கள். அவர்கள் கூறுவன வற்றில் பாடத் தொடர்பான செய்திகளும், அறிவுரைகளும், நிரம்பியிருக்கும். அவர்கள் அங்ஙனம் கூறியவற்றைப் பின்பற்றியோர் பெரு நலமடைந்த துண்டு. எடுத்துக்காட்டாக ஓர்நிகழ்ச்சியைக் குறிப்பிட முனைதல் இழுக்காகாது.

ஒரு நிகழ்ச்சி: திருவையாற்றுத் தமிழ்க் கல்லூரியில் 1934 - 38 நான்காண்டுகள் பயின்றவர் ஒருவர். அவர் சுவாமிகளால் அமைக்கப் பெற்ற ஸ்ரீமத் - ஞானியார் கலா சாலையில் வித்துவான் - புகுமுகத் தேர்விற்குப் பயின்றவர். திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்தவர். தேர்வில் முதன்மை பெறும் நோக்குடன் முனைந்து படிப்பதில் ஈடுபட்டார். ஆனால் படித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, 'கூகூ' என இறைவதும், ஆடைகளைக் குலைத்துக் கொண்டு ஓடுதலுமாக மூளைக்கோளாறு கொண்ட நிலையில் திருப்பியனுப்பப் பெற்றார். அவர் திருப்பாதிரிப்புலியூரடைந்து மருத்துவம் பெற்றார். தனக்கு வழிகாட்டியருளிய குருநாதரை நாடோறும் வந்து பணிவார். அவர்க்குக் கூறிய அறிவுரையாவன : “கூடியவரை அதிகாலை 4 மணியளவில் எழுந்து ஒரு மைல் அளவாவது நடந்து சென்றோ, உடற்பயிற்சி செய்தோ, முடித்தவுடன் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும் உடல் வரை மட்டுமல்லாமல் தலை மூழ்கல் வேண்டும். அதற்கு ஓடும் நீராயின் மிக நன்று ; அருகில் இல்லையேல் குளம் முதலாம் நீர்நிலையில் நன்கு திளைத்தாடுதல் நலம். அதுவும் இல்லையேல் நன்றாகக் கை வலி எடுக்குமளவும் கிணற்றில் நீர்முகந்து தலைக்கு விட்டுக் கொள்ளல் நலம்.“ என்பனவாம். அங்ஙனமே அவர் செய்துவந்து சில நாள்களுக்குள் முற்றும் நலமுற்றுத் தேர்வு எழுதினார். தேர்வில் மாநிலத்தில் முதல்வராகத் தேர்ச்சியுற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் 'ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப் பரி'சாகிய ஆயிர ரூபாயும் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறாக ஒழுக்க நெறிகளைத் தாம் கடைப்பிடித்துக் கண்ட பயன் காரணமாகவே யாவர்க்கும் வழி காட்டியருளியமை தெளிவு.

பழநியாண்டியாம் இவ்வரும் பெரும் பிள்ளை நாடோறும் நியமந் தவிராது ஒழுகிப் பள்ளியிற் பயின்ற தோடன்றி, முன் கற்ற தெலுங்கு மொழி நூல்களையும் தம் குருநாதர் கற்பித்த வடமொழியிலும் பயில்வார்கள். பதினாறு வயதளவில், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், வடமொழிகளை யறிந்திருந்ததேயன்றித் தம் குருநாதரிடம் சித்தாந்த சாத்திர நூல்களையும் பயின்று வந்தார்கள்.

அறப்பள்ளித் தலைமை

பதினாறு வயது நிரம்பிப் பதினேழாம் வயது நடந்து கொண்டிருந்த காலத்திலே, மடாலயத்து நான்காம் குரு மூர்த்திகள் - ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் நாற்பத் தோராண்டு பட்டமேற்றிருந்த பின்னர், திருவருள் நிலையெய்தும் நிலை வந்துற்றது. அடுத்துப் பட்டமேற்க வேறொருவரைச் சுட்டி உயில் எழுதி வைத்தாரெனினும், பின்னர் உணர்ந்து, அதை நீக்கி வேறொரு உயிலினை நம் அடிகளாரை (பழநியாண்டியை) நியமித்து எழுதிவைத்தார். தம் திருக் கரத்தாலேயே சந்நியாச தீட்சை செய்து வைத்தார். ஆசாரியாபிஷேகமும் செய்வித்து முறைப்படி உபதேசம் செய்து வைத்தார். பட்டமேற்போர் அக்காலை சில சத்திய வாக்குகளைக் கூறிக் குரு ஆணையை நிறைவேற்றுவதாகக் கூறுதல் மரபு. அந்த மடாலய வரன்முறை மரபையும், சந்நியாச நிலையையும் உறுதியுடன் கடைப்பிடித்துத் தம் முன்னோர் ஒழுகி வந்த முறைப்படி எந்தவிதக் குறைவும் நேராவண்ணம் ஆன்மார்த்த பூசை பரார்த்த பூசை முதலிய நியமங்களையும் வழுவாமற் காப்பதோடு மடாலய மரியாதைக்குரிய சிவிகையிவர்தல், பொது மக்கள் அன்புடன் புரியும் உபசாரங்களையேற்று அவர்கட்குத் திருவருள் பாலித்தல் முதலிய நெறிமுறை கடவாதொழுகுவதாகவும் குருவின்மீது ஆணை கூறிக் கூறல் வேண்டும் அங்ஙனம் யாவும் கூறி வந்த அடிகளார், தம் குருநாதரை வேண்டி ஒரே ஒன்றினை மட்டும் விலக்கியருள வேண்டிக் கொண்டனர். அதாவது : அவ்வப் போது சிகை மழிப்பித்துக் கொள்ளல் மாத்திரமே. எதனையும், தன் உறுதி மொழிப்படியே நிறைவேற்றி வந்தனர்.

மரபு ஒழுக்கம் பிறழாமை.

காலப்போக்கிற் கேற்பவும், சுற்றுச் சார்பிற்கேற்பவும் சில மரபு ஒழுக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டினார் சிலர். சிவிகையூர்ந்து செல்லலை விடுத்துக் கார் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அதனால், விரைவாகவும் எளிதாகவும் மக்களிடையே தொண்டாற்ற வாய்ப்புக் கிடைக்குமெனவும், ஒருக்கால், புதுவைக் கலைமகள் கழக ஆண்டு விழாவிற்குப் போந்திருந்த அடிகாளாரைத் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் வேண்டிக் கொண்டார்கள். அப்போது, அடிகளார் புன்முறுவல் கொண்டு ஒர் கதை கூறினார்கள்; அஃதாவது:

சிறுகதை : ஓர் கால், வயோதிக மன்னன் ஒருவன் திறம்பட ஆட்சி நடத்தி வந்தான். அவன் மைந்தன், இந்தக் கிழவன் ஒழிந்தாலன்றோ நமக்கு ஆட்சி கிடைக்குமெனத் தன் உள்ளத்தில் எண்ணித் தந்தையை ஒழிக்கத் திட்ட மிட்டுக் கொண்டிருந்தான்.

அவ்வூரில் வனப்பு மிகுந்தவளாய், ஆடல் பாடல்களில் தேர்ந்த பொதுமகள் ஒருத்தி இருந்தாள். நெடுநாள் தவமியற்றி, உலகப் பற்றின் நீங்கிய சந்நியாசி ஒருவர் அப்பொதுமகளைக் கண்டார். மனம் மாறினார். தன் வேட்கையினை அப் பொதுமகளிடமும் துணிந்து கூறிவிட்டார். அவளும் அதற்கிணங்கி, அத் துறவிக்கு நாளொன்றைக் குறிப்பிட்டனள்.

அந்தக் குறிப்பிட்ட நாள் வருமுன்னர், கிழமன்னன் ஓர் இரவில்துக்கமின்றிப் புரண்டுபடுத்தும் பொழுது போகாமையால், ஆடல் பாடல்களில் மனம் செலுத்த விரும்பி அப்பொது மகளையும், அவளது ஆடல் பாடல் குழுவினரையும் இசைக் கருவி முதலியவற்றுடன்வருமாறு ஆள் போக்கினான், அவர்களும் வந்தனர். ஆடல், பாடல் தொடங்கின. மன்னவனும் அவற்றால் மகிழ்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். அந் நிகழ்ச்சிக்குப் பலர் வந்திருந்தனர். இரவின் நெடும் பொழுது கழிந்து விட்டது ஆடல், பாடல்களாற் பொது மகளும் சோர்வு மிக அடைந்தாள் மன்னவனோ, ஆட்டத்தை நிறுத்த உத்தரவுதரவில்லை. அவளிடம் அதிகச் சோர்வு கண்ட நட்டுவன் அவளிடம் கூறுவான் :- “நீ இது காறும் நல்ல பெயர் வாங்கி விட்டாய். பொழுது புலரும் வேளையும் நெருங்கி விட்டது. இனி சிறிது நேரம் பொறுமையுடன், உன் உடற்சோர்வினையும் பொருட்படுத்தாமல் ஆடு. வாங்கிய பெயரை இழக்காமல் கடமையைச் செய்தாய் என்ற சிறப்பைப் பெறு. அதனால் உனக்கு நிலைத்த புகழே கிடைக்கும்” என்று ஆறுதல் கூறி ஆட்டத்தில் ஈடு படுத்தினான் அதனால் அவள் ஊக்கத்துடன் ஆட்டத்தில் ஈடுபட்டாள்.

கிழ அரசன், இந்தச் சொற்களைக் கேட்டான்; இது வரை நல்லவன் என்று பெயரெடுத்துள்ளோம்; இவளைத் துன்புறுத்தியவன் என்ற அவப் பெயர் வருமாறு ஏன் நடந்துக் கொள்ள வேண்டும்? என்றெண்ணி ஆட்டத்தை நிறுத்துமாறு ஆணைதந்தான்.

நட்டுவன் கூறியவைகளைக் கேட்ட அரசகுமாரனோ “தந்தை இன்னும் நீண்டகாலம் உயிர் வாழ மாட்டார் ; இதுவரை நல்ல மகன் என்று பெயரெடுத்துள்ள நாம், இன்னும் சில காலம் பொறுத்திருந்து அவருக்குப் பிறகு அரசுரிமையை ஏற்பதே ஏற்புடைச் செயலாகும்; அவசரப்பட்டுத் தந்தைக்கு ஊறு விளைவித்து வீண் பழி பாவங்களுக்கு ஆளாகாமல், பொறுத்திருப்போம்” என்றெண்ணித் தன் தகாத எண்ணத்தை அறவே விட்டொழித்தான்.

அந்த அவையிலிருந்த முற்கூறப் பெற்ற சந்நியாசியும் நட்டுவன் வார்த்தைகளைக் கேட்டு, ‘என்னே என் மடமை! இதுகாறும் பல ஆண்டுகளாக நாம் கைக்கொண்ட புலனடக்கம் முதலியவற்றாற் பெற்ற பெரும் பேறு என்னாவது கைக்கொண்ட பிரமசரிய விரத முதலியவை அவமாகிப் போவதோ? என்றெண்ணித் தான் செய்யத் துணிந்திருந்த தகாத செயலை, அக்கணத்திலிருந்து நினைக்கவும் கூடாதென்று உறுதி பூண்டார்.

”இந்தக் கதையைப் போல் யாமும் முன்னோர் கைக் கொண்ட முறைகளைப் பின்பற்றியே வந்துள்ளோம். அதனை மாற்றி நடந்தால், உள்ளத்தாற் பொய்யா தொழுகல் என்ற மறைமொழி கற்ற பயன் என்னாவது?” என்று கூறித் தம் உள்ளக் கருத்தினைத் தெளிவு படுத்தினார்கள்.

“இந்நிகழ்ச்சி 1913 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அதன் பின் கவாமிகள் பல பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிவிகை பூர்ந்தே, எங்கெங்கும் செல்வார்கள். சென்னைக்கும் பலமுறை சென்று மீண்டதும் உண்டு. அதனால், சிறு கிராம மக்களும் சுவாமிகளைக் காணவும், அவர்கள் பால் ஈடுபாடு கொள்ளவும், சில சில கிராமங்களில் மக்கள் அவர்களது சொற்பெருக்கைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தன. திரு.வி.க. முதலாயினோர் தம் வேண்டுகோளின் படி சுவாமிகள் கார் மூலம் செல்வதை மேற் கொண்டிருந்தால் சிற்றூர் மக்கள் பலர் அவர்களைக் காண்டலும், அவர் அருள் மொழிகளைக் கேட்டலுமாகிய வாய்ப்புக்களை இழந்திருப்பார்களே என அமைதியுற்றனர்.

தாம் கொண்ட உறுதியினின்றும் மாறாதொழுகினார்கள் நம் அடிகளார் என்பதனைத் திரு.வி.க. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பில் அவர்களே எழுதியிருப்பதையும் இங்குக் குறிப்படுவாம்.

‘ஞானியார் மடத்தலைமையும், சிவிகையூர்தலும் இன்ன பிறவும் சுவாமிகளே வெளியூர் செல்லாதவாறு தகைந்துவந்தன. அவைகள், சுவாமிகளைச் சிறைப் படுத்தின என்றே சொல்வேன். இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் சுவாமிகளின் தமிழைப் பருக எவ்வளவு விழைந்தன என்பதை யான் அறிவேன்.

1941 ஆம் ஆண்டு அன்பர் இராமசாமி நாயுடு என்பவர் தென்னாப்பிரிக்காவினின்றுஞ் சென்னை போந்தனர். அவர், சுவாமிகளையும் என்னையும் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். சுவாமிகளைக் கண்டோம். நாயுடு சுவாமிகளிடம் தமது கருத்தைத் தெரிவித்தனர். ‘எனக்குள்ள தடைகளை முதலியாரவர்கள் சொல்வர் என்ற பதில் சுவாமிகளிடத்திருந்து நகைப்புடன் பிறந்தது. காஞ்சியில் கண்ட அந்நகை முகக் காட்சியே இறுதியாயிற்று

இவ்விரண்டு நிகழ்ச்சிகளுக்கு மிடையே சற்றேறக் குறைய முப்பதாண்டுகள் இரண்டிலும் திரு.வி.க. அவர்கள் தொடர்பு கொண்டிருந்தவர்கள். பல காலங்கடந்த பின்னராவது தம் கருத்தினை அடிகளார் மாற்றிக் கொள்ளக் கூடுமென அவர் கருதியுமிருக்கலாம். சுவாமிகளின் உறுதி சிறிதும் தளரவில்லை யென்பதை அவர்களது இறுதிக்கால நிகழ்ச்சியான பின்னி கழச்சியால் அறியலாம்.

வடாற்காடு மாவட்ட ஆரணியிற் பிறந்து, சென்னையில் வாழ்ந்து வந்தவர்கள், கிருஷ்ணசாமி முதலியாரின் உடன்றோன்றல் மனைவியார் பாச்சியம்மையார் என்பவர். சுவாமிகள் 1934லும் அதற்குப் பின்னரும் சென்னை எழுந்தருளியிருந்த காலங்களில் அவ்வம்மையார் தன் மக்கள் மருகியரோடு சுவாமிகளைத் தரிசித்து, அவர்களது சொல்லமுதங்களை மாந்தியவர்களு மாவார்கள். சில ஆண்டுகள் கந்தர் சஷ்டி விழாக் காலங்களில் திருப்பாதிரிப்புலியூர் வந்து விரதமிருந்தும், சொற்பொழிவுகளைக் கேட்டும் முருகன் எழுந்தருளள் முதலியவற்றைத் தரிசித்தும் கந்த சஷ்டி மஹாபிஷேக முதலியவற்றைக் கண்டபின், தன் பொருட் செலவில் ஓராண்டு முருகக் கடவுளுக்குத் திருமண விழாவினை நிறைவேற்றி வைத்தும் பொருள் பெற்ற பயனை யடைந்தவர்களாய்ச் சுவாமிகளிடம் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அந்த அம்மையார், சுவாமிகளைக் காசி யாத்திரை எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டார்கள். சிவிகை யூர்ந்து செல்லல் பெருந் துன்பந்தருவதோடு, காலக் கடப்பும் விளையுமென அறிவித்து, மோட்டார், லாரியில் ஏற்பாடு செய்து விடுவோம்; காரில் பயணத்தை மேற்கொள்ளத் திருவுளம் பற்ற வேண்டுமென அவர்கள் விண்ணப்பித்துக் கொண்டனர். அதனையும் நகை முகத்தோடு சுவாமிகள் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தனர்.

இதுவரை குறிப்பிட்ட வற்றால் சுவாமிகள் 1889-ல் ஏற்றுக் கொண்ட சந்நியாச முறைக்குரிய உறுதி மொழிகளிலிருந்து ஒருக்காலும் வழுவினாரல்லர் என்பது விளங்கும்.

இங்ஙனம் உறுதிமொழி யருளிச் சந்நியாச நிலையையும், அறப் பள்ளித் தலைமையையும் ஏற்றருளிய காலத்தில் அவர்களுக்குப் பதினாறாண்டுகளே நிறைவெய்தியிருந்தன என்பதை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும்.

சுவாமிகள் தலைமைப் பொறுப்பை யேற்றுக் கொண்டருளிய காலத்திலே, மடாலயப் பொருள் நிலைமை பெரிதும் வருந்தத் தக்கதாயிருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த மதிப்பிற்கு ஓராயிர ரூபாய் கடன் இருந்தது. நில முதலியன பயிரிடுவோரும், ஒப்பந்தப்படி தானிய முதலிய வழங்குவதின்று. இந்த நிலை வரக்காரணம், முன்னிருந்த நான்காவது குருநாதர், பூசை நியம முதலியவற்றில் ஈடுபட்டும், தியானம், செபம், பாட போதனைகளைச் செய்து கொண்டும் இருந்தார்களேயன்றி, இவைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமலிருந்து விட்டதேயாகும். அவர்கள் ஆன்மார்த்த பூசை முடித்த பின்னர்தான் மடைப்பள்ளியிற் புகுந்து தாம் திருவமுது தயாரிக்கத் தொடங்குவ தென்றும், அவர்கள், தியானம், பாராயணம் முதலியவை முடித்து மூலவராம் முருகப் பெருமானை வலம் வந்து தொழுது அமுதருந்த வருங்கால் பிற்பகல் 2 மணிக்கு மேலாகிவிடும் என்றும் நம் சுவாமிகளின் பூர்வாசிரம அம்மான் மனைவியார் அமிர்தம் அம்மையாராவர்கள் கூறுவார்கள். மாமா அவர்கள் மடாலயச் செயலுரிமைப் பொறுப்பேற்ற பின்னரே நிலவருவாய் முதலியவை செம்மைப் பட்டதாகவுங் கூறியிருக்கிறார்கள்.

முன் சுவாமிகளைச் சிலர் மனம் மாற்றி, அவர்கள் கொண்டிருந்த கருத்திற்குப் புறம்பாக வேறொருவரைத் தலைமையேற்கக் குறிப்பிட்டு உயில் எழுதச் செய்து விட்டார்கள். அவ்வாறெழுதிய பின் சிலநாள் கடந்து, நான்காவது சுவாமிகள் உறுதியுடன் இவ்விளம் பிள்ளையையே நியமித்து மாற்றி எழுதிவிட்டார்கள். எழுதியதோடமையாது அன்றே, பள்ளியினின்று பகலுணவுக்கு வந்த அவர்களை முறைப்படி தீட்சை செய்வித்துச் சந்நியாச நிலையேற்கச் செய்து உபதேசமும் செய்துவிட்டார்கள். பின் 4 நாள் கழித்தே முன் சுவாமிகள் பரிபூரண மடைந்தார்கள். இதனால் முதலில் உயிலிற் குறிப்பிடப் பெற்றவரும், அவரைச் சேர்ந்தார் சிலரும் வழக்கிட்டதும் உண்டு.

திருவருள் வலத்தால் வழக்கிட்டோர் தோற்றுச் செயலற்று விட்டனர். அவர்கள் வேறு செய்தற்கிடனின்றி மடாலயம் வந்தபோதும் அவர்களை முகங்கோணாது வரவேற்று வேண்டுவன செய்த பெருந்தன்மை யாளர்கள் நம் குருநாதர்.

அன்றைய நிலையில், வேறொருவர் தலைமைப் பீடத்தமர்ந் தவராயிருந்தால் எவ்வெப்படி யெல்லாம் ஆகியிருக்குமோ ? கடன் தொல்லை ஒருபால், கடன் கொடுத்தவர்கள் சொத்துக்களைத் தம் வயப்படுத்திக் கொள்ள முற்பட்டு நெருக்கினார்கள். இளம் பருவத்திலே இத்தனை தொல்லைகட்கும் உட்பட்ட சுவாமிகள் தம் குருநாதரையும் வழிபடு கடவுளையுமே நம்பிச் செயலில் முனைந்தார்கள். தம் கல்வியறிவைப் பெருக்கிக் கொள்ளவும் பேரவாக் கொண்டு ஒரு சிறு பொழுதையும் வீணாக்கினார்களல்லர்.

புருகேஸ்பேட்டை என வழங்கப் பெறும் முருகேச நகரில் அந்நாள் பெருஞ் செல்வராய்த் திகழ்ந்த திரு.பழநியாண்டி முதலியராவர்கள் இம்மடாலய சீடர். தெய்வப் பற்று மிக்கவர். குரு பீடத்தில் அடங்காத பக்தி பூண்டவர். அவர்க்குக் கடல் கடந்த நாடுகளில் வாணிகத் தொடர்பு உண்டு. அங்கே சில கடைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவர் முன்வந்து தானே பணம் தந்து கடன் தொல்லையினின்று மடத்தை மீட்டனர். பின்னர், அவருக்கு அப்பணம்கொடுக்கப் பெற்று விட்டதெனினும், காலத்தினாற் செய்த அந்நன்றியைச் சுவாமிகள் யாவரிடமும் பாராட்டிக் கூறுவார்கள். பின்னாளில், அப் பழநியாண்டி முதலியார் பின் வந்தோர் நொடிந்துவிட்ட நிலையில், அவரை உணவு முதலியவற்றால் இம் மடாலயம் உபசரித்ததும் உண்டு. ஆறாம் குருநாதர் எழுந்தருளி யிருந்த போதும் அவர் ஆதரிப்புப் பெற்றதுமுண்டு.

கல்வி : இனி. அடிகளாரது கல்வி வளர்ச்சி பற்றிக் காண்போம். முன்னரே குறிப்பிட்டவாறு, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், வடமொழிகளை எழுதவும் படிக்கவும் கற்றிருந்த நம் சுவாமிகள் தம் கல்வியைப் பெருக்கிக் கொள்ளப் பேரவாக் கொண்டிருந்தனர். தென் மொழியைக் கற்கும் அவா மேலீட்டினால் சிதம்பரம் மு. சுவாமிநாத ஐயரவர்களைத் தம் மடாலயத்திற்கு வருவித்து நாள்தோறும் குறிப்பிட்ட வேளையில் அமர்ந்து தமிழ் நூல்களைக் கற்கத் தொடங்கினார்கள். மாணவர் இலக்கணம் யாவையோ, அவைகளினின்றும் சிறிதும் மாறாமல் தம் ஆசிரியருடன் பழகிக் கல்விச் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். 'உடையார் முன் இல்லாற் போல் ஏக்கற்று'க் கற்றார்கள். திருவள்ளுவர் அவாய் நிலையான் விட்ட (தலையாயர் என்ற) சொல்லுக்கு இலக்காயினார்கள், -

பாடற் பரிசு : ஆசிரியர் யாப்பிலக்கணம் கற்பித்து வருங்கால், ஓர் வெண்பா எழுதி, அதற்கு வாய்பாடு, சீர், தளை முதலிய வெல்லாம் எழுதித் தயாராக வைத்திருந்து அடுத்த நாள் காட்டச் சொல்லிச் செல்வது வழக்கம். அவ்வழக்கப் படியே ஒரு நாள், "நற்பா டலிபுரத்து நாதனே நாயினேன்

பொற்பாம் நினதடிையப் போற்றினேன் - தற்போது

வேண்டுஞ் செலவிற்கு வெண்பொற்கா சு பத்து

ஈண்டு தருக இசைந்து"

என்ற தான் புனைந்ததோர் வெண்பாவை எழுதி வைத்து விட்டுச் சென்றார். அடுத்த நாள் வழக்கம் போல வந்து நோட்டைப் பிரித்துப் பார்க்க, அந்தப் பாட்டெழுதியிருந்த பக்க அடையாளம் போல, பத்து ரூபாய் நோட்டு ஒன்றையும் உடன் வைத்திருந்ததைக் கண்டார். உடனே சுவாமிகளின் முகத்தைப் பார்த்து நான் பாட்டுக்கு (என் மனம் போனவாறே) எழுதி வைத் திருந்தேனே யல்லாது உண்மையிற் பணம் பெறவேண்டுமென்று இப்பாட்டினை எழுதி வைக்கவில்லை’ என்றார். அதற்குச் சுவாமிகள், நான் பாட்டுக் குத்தான் (பாடலுக்காகத்தான்) பொருள் கொடுத்தேனே யல்லாமல் வேறொன்றற்காகவுமில்ல’ என்று சிலேடையாகப் பொருள் கொள்ளுமாறு சொன்னார்கள். அந்தப் பொருள் பொதிந்த விடையினால் ஆசிரியர் பெரு மகிழ்ச்சி கொண்டு அப்பொருளை யேற்றுக் கொண்டார்.

ஆசியருக்கு நன்றி : சி.மு. சுவாமிநாத அய்யர் தம் உத்தம சீடராகிய சுவாமிகளுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு போதித்தார். சுவாமிகள், தாம் பட்டமேற்றுக் கொண்ட எட்டாண்டுகளுக்குள் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தைத் தேடி அச்சிடு வித்தார்கள். கிடைத்தது ஒரே ஒலைச் சுவடிப்பிரதி, அது கிடைத்த விவர முதலியவற்றை, அவர்கள் அந்நூலின் முகவுரையில் அறிவித் திருக்கிறார்கள். அஃதாவது , “... பற்பல விடங்களில் விசாரித்தும் புத்தகங் கிடைக்காமற் போன நாள் பல, பின்பு திருவாவடு துறை யாதீனத்திலிருந்து கூடலூர் டவுன் காலேஜ் தமிழ்ப் பண்டிதரவர்களாகிய சிதம்பரம் மகாராஜ ராஜஸ்ரீ மு. சாமிநாதை யரவர்களாற் கிடைத்த பிரதியு மொன்றே. அதுவும் பழைமையுஞ் சிதைவையும் மேவியது...

இப் புத்தகத்திலுள்ள சிவ சரித்திர முழுமையும் பலரும் எளிதில் படித்துணரும் பொருட்டுப் பொழிப்புரை போன்ற ஒரு வசனம் எனது தமிழாசிரியரும், யான் திருத்திய காலத்து நிரம்ப உதவி செய்தவர்களும், கூடலூர் டவுன் காலேஜ் தமிழ்ப் பண்டிதவர்களுமாகிய சிதம்பரம் மகா ராஜ ராஜஸ்ரீ மு. சாமிநாதையரவர்களால் இயற்றுவித்து இத்துடன் சேர்த்தச்சிட்டிருக்கிறேன். இம்முயற்சிக் கிடையூன்றிக் கூட்டி முடித்த ஆண்டலைக் கொடியுர்த்த எம் மருமைக் கடவுளின் திருவரு ளைச் சிந்தித்துள்ளேன்.

இங்ஙனம்,⁠⁠

சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய

சுவாமிகள்"⁠⁠

என்பதாகும். இதில் தம் ஆசிரியரை இரண்டிடங்களிற் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டிடங்களிலும் மகாராஜ ராஜஸ்ரீ, அவர்கள் என்ற மரியாதை யளித்துள்ளமை காணலாம்.

சில காலங் கடந்த பின் தம் தமிழாசிரியர் அரனடி யடைந்தார். அப்போது அடிகளார் அடைந்த மனத்துயருக் கோரளவில்லை. தம் மடாலயத்து நூல் நிலையத்திற்குச் "சுவாமிநாத புத்தகசாலை" எனப் பெயரிட்டார்கள். அவருடைய குமாரரான, முத்துகிருஷ்ண ஐயரை B.A வகுப்பு வரை படிக்கச் செய்தார்கள். ஆண்டு தோறும் அவர்களது குடும்பத்திற்கு வேண்டுமளவிற்கு நெல்லும் பிற பொருள்களும் கொடுத்து உதவினார்கள்.

இவை, சுவாமிகளது குருபக்திக்கு ஓர் எடுத்துக் காட்டாவன வாம். தன் குருவின்மீது வைத்த பற்றுதலோடு, சுவாமிகள் பின்னர் பற்பல நூல்களிலும் தாமே பயின்று சிறந்த அறிஞராயினார்கள்.

அடிகளார், தெலுங்கு மொழியை நான்கு ஆண்டுகள் பயின்றும், ஆங்கிலத்தை ஏழாண்டுகள் பயின்றும், வடமொழி, தென்மொழிகளைப் பதினைந்து ஆண்டுகள் பயின்றும் பேரறிவு படைத்தவர்களாயினார்கள்.

வடமொழியாசிரியராக வாய்த்தவர்கள், முதலில் ஸ்ரீமத் உபய வேதாந்த கோவிந்தா சாரியாரவர்கள். அடுத்து, டவுன் காலேஜ் சமஸ்கிருத பண்டிதர் - இராமநாத சாஸ்திரிகள் என்பவராவர்.

தமிழ் மொழியாசிரியராக முதலிற் சில காலம், பிரான் மலை தெய்வசிகாமணி ஐயா அவர்கள் இருந்தது முண்டு.

தவக் கோலம், மடாலயத் தலைமை பூண்ட பின்னர், ஆசிரியர்களைத் தம் இருப்பிடத்திற்கே வருவித்துப் பணிவுடனும், ஆசிரியர் சொல் கடவாமலும் பயின்று சிறந்தொளிர்வது எல்லார்க்கும் வாய்ப்பதோர் வாய்ப்பாகாது. கல்வியின் மீது அடங்கா ஆவல் கொண்ட நம் அடிகளா ரைப்போன்ற சிலரே அங்ஙனம் சிறந் தொளிர இயலுமென்பது ஈண்டுக் குறிப்பிட வேண்டியுள்ளது.

தமிழ் வளர்க்கும் தண்ணளி.

'அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவுப் பணியே தெய்வப்பணி. அறிவும், சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அறிவே சிவமாவது ஆரும் அறிகிலார், அறிவே சிவமாவது யாரும்அறிந்த பின், அறிவே சிவமாய் அமர்ந்திருப்பாரே, எனத் திருமந்திரப்பாவினைச் சிறிது மாற்றிய பாட்டு, இவைகளைக் கூறி அடிகளார், சமயம் வாய்த்த போதெல்லாம் வற்புறுத்துவது உண்டு. இந்த அறிவைப் பெறக் கல்வியே துணை. எனவே மக்களிடையிலே கல்வியறிவினை மிகுதியாகப் பரப்புதல். வேண்டுமென்பதைச் சிறந்த குறிக்கோள்களுள் ஒன்றாகக் கொண்டவர் நம் அடிகளார். தமக்குக் கல்வியறிவு வாய்த்த தெங்ஙனமோ, அங்ஙனமே பிறர்க்கும் வாய்க்க வேண்டு மென்ற பேரவா அடிகளாரிடம் காணப்பட்டது வாய்ப்பினை உண்டாக்கிக் கொடுப்பது, கற்றவர் கடமை; கற்றவர்க்குக் கல்வியறிவாற்றல்களிற் சிறந்தவராகிய செல்வர்களின் ஆதரவும் வேண்டும். இவை, சுவாமிகளின் உள்ளத்திலே கிளர்ந்தெழுந்த எண்ணங்கள்.

இத்தகைய எண்ணங்களில் மூழ்கிக் காலங் கருதியிருந்த நம் சுவாமிகளுக்கு 1900 ஆம் ஆண்டு தக்க வாய்ப்பு ஒன்று கிடைத்தது. பாலவநத்தம் ஜமீன் தாரரான. பாண்டித்துரைத் தேவரவர்கள் சென்னை சென்று மீளுங்கால், திருப்பாதிரிப்புலியூரைத் தரிசிக்க வந்தார். ஆலய தரிசனத்தோடு, அறிவாற்றல்கள் நிறைந்த சுவாமிகளையும் தரிசிக்க விரும்பி மடாலயமும் வந்தார். சுவாமிகளிடம் அளவளாவினார். அன்று மாலை, சுவாமிகள் தேவரவர்களைத் தலைமை தாங்கச் செய்து, தமிழின் தற்கால நிலை என்ற பொருள் பற்றி அரியதோர் சொற் பொழிவு நிகழ்த்தினார்கள். சுவாமிகளின் சொல்லமுதைச் செவிமாந்திய தேவரவர்கள் மிக மகிழ்ந்தார்கள். சுவாமிகள் தம் உரையில், ஜமீன்தாரவர்களும், மற்றைய செல்வர்களும் தமிழைத் தழைப்பிக்க வேண்டும்; முச்சங்கம் இருந்து தமிழ் வளர்த்த மதுரையம் பதியிலே தமிழின் வளர்ச்சிக்கு ஒரு சங்கமுமில்லாத நிலை வந்தது ஏன்? பிற நாட்டு மொழியும், பிற நாட்டு நாகரிகமும் நம்மிடையே பரவி வருவதாலன்றோ?: அவை, மக்களுடைய தெய்வீக உணர்ச்சி, தொண்டு மனப்பான்மை முதலியவற்றைத் தலையெடுக்காமற் செய்து விடுவனவன்றோ? உண்மையில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமேல், ஆங்காங்கே சங்கங்கள் தோன்ற வேண்டும்; மதுரையம்பதியில் ஓர் சங்கத்தினை நிறுவி வளர்க்கும் பொறுப்பினைத் தேவரவர்கள் முன்னின்று ஏற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள்.

சுவாமிகளுடைய பேச்சுத்திறனில் ஈடுபட்டு மனத்தைப் பறிக்கொடுத்திருந்த தேவரவர்கள், தன் முடிவுரையில் சுவாமிகளுடைய கருத்துக்கு மக்கள் ஆதரவு இன்றியமையாத தென்று கூறித் தாம், தம் சகோதரராகிய பாஸ்கர சேதுபதியவர்களிடம் அறிவித்து மதுரையிற் சங்கம் நிறுவ முனைவதாக வாக்களித்தனர்.

அந்த ஆண்டிலேயே, பாஸ்கர சேதுபதியர்கள், திருவண்ணா மலைத் தீப தரிசனத்திற்காக வந்தார். வழியில் திருப்பாதிரிப்புலியூர் மடத்திற்கு வந்தார். பரிவாரங்களுடன் வந்தார். பரிவாரங்களுடன் வந்த அவருக்குத் திருமடாலயத்தில் வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப் பெற்றன. அன்று மாலையும் சுவாமிகள் அரிய சொற்பொழிவு ஒன்று மடாலயத்தில் ஆற்றினார்கள். அடிகளாருடைய சொற் பொழிவாற் பெரிதும் மகிழ்ச்சியுற்ற சேதுபதியவர்கள், தமிழ் வளர்க்க ஒர் கலாசாலை மதுரையில் ஏற்பட வேண்டியதன் அவசியத்தையறிவித்து, அதற் காம் பொருட் செலவிற்குத் தாமே பொறுப் பேற்பதாக வாக்களித்தார்.

24.5.1901 ல் மதுரையம் பதியில் மதுரைத் தமிழ்ச் சங்கம் என்ற பெயர் சூட்டித் தமக்குரிய மாளிகை யொன்றிலே சங்கம் நிறுவினார்கள். அதன் அங்கமாக எழுந்தது சேதுபதி கலாசாலை. மாணவர் பிரவேச பண்டிதம், பாலபண்டிதம், பண்டிதம் என்ற தேர்வுகளுக்குப் பயிற்றப் பெற்றனர். உண்டியும் உறையுளும் அவர்கட்கு இலவசமாகவே வழங்கப் பெற்றன. செந்தமிழ் என்ற மாத இதழும் அச்சங்கத்தின் சார்பில் வெளி வரலாயிற்று. இவை யாவும் அறிந்த நம் சுவாமிகள் சேதுபதியவர்களுடைய ஆதரவையும் ஊக்கத்ததையும் பாராட்டித் திருமுகம் விடுத்தார்கள். சேதுபதியவர்களின் ஊக்கத்தையும், அறச்செயலையும், தமிழ்த் தொண்டையும் யாவரிடமும் பாராட்டிக் கூறுவார்கள்.

வாணிவிலாச சபை : திருப்பாதிரிப்புலியூரைத் தலைமையி டமாகக் கொண்டுள்ள இம் மடாலயத்திற்குத் திருகோவலூரிலும், ஆரணி - திருமலை சமுத்திரத்திலும், விருத்தாசலமாம் திருமுது குன்றத்திலும் இன்றும் மடங்கள் உள. அடிகளார், பொறுப் பேற்றிருந்த தொடக்க நாளிலே அவற்றின் கட்டிட நிலை - நில வருவாய் நிலையும் மோசமடைந் திருந்தன. அவைகளை நேரிற் சென்று கவனித்துச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் சுவாமிகள் திருக் கோவலூருக்கும் ஆரணிக்கும் சென்று மீள்வார்கள். அங் கெழுந்தருளி யிருக்குங்கால் தமிழும் சைவமும் பரப்புவான் வேண்டிப் பல சொற்பொழிவுகளையும், விரும்பி வந்தோர்க்குத் தமிழ் போதித்தலையும் மேற் கொள்வார்கள் அங்ஙனமே, திருப்பாதிரிப்புலியூரிலும் தங்கியிருக்கும் காலங்களி லெல்லாம் நடைபெறும். அதற்கென ஓர் சங்கம் நிறுவ வேண்டு மென்பது சுவாமிகளின் உள்ளக் கிடக்கையாக இருந்தது.

(1903) சோபகிருது ஆண்டில், பாண்டித் துரைத்தேவரவர்கள் புலிசை மடாலயம் போந்தனர். அவர்களை வரவேற்றுப் பாராட்டிய தோடு, அவர்களைத் தலைமையேற்கச் செய்து ‘வாணிவிலாச சபை’ என்ற ஓர் சபையைத் தமது மடாலயத்தில் தொடங்கினார்கள். அதன் அங்கமாக வாரந்தோறும் சொற்பொழிவுகள் நடைபெறும். கார்த்திகை முதலான சிறப்பு நாட்களிலும் சொற்பொழிவு நடைபெறும். அந்தச் சபைக்கு அடிகளாரே தலைவர்கள். குப்புசாமி செட்டியார் என்ற ஓர் வழக்கறிஞர் செயலர். அங்கத்தினர் பலர் உண்டு. சுவாமிகள், தாமே சொற்பொழிவுகளை நிகழ்த்துவதோடல் லாமல், தம்மிடம் பயில்வோரையும் சொற்பொழி வாற்றச் செய்து, முன்னுரை முடிவுரைகளால் சிறப்பித் தருள்வார்கள்.

அடிகளாரிடம் பயின்றோர், பல திறத்தினர், செல்வர், வறியர், சிறியர், பெரியர், இல்லறத்தினர், துறவறத்தினர் சிறிது கற்றோர், கல்வியறிவற்றோர், தொழில் புரிவோர், அரசாங்க உத்தியோகம் புரிவோர், உழுதுண்போர், உழுவித் துண்போர் யாவருக்குமே மடாலயத்திற் பாடம்போதிக்கப்பெறும். பற்பலர் தமக்கு உண்டி உறையுள் பெற்றுத் தங்கியும் பயில்வதுண்டு. துறவற நெறி நின்றோரும், நிற்கச்சாதனை புரிவோருங்கூட அடிகளாரையடுத்துக் கல்வியும், உண்டி உறையுள் முதலிய பெற்றுக் கல்வியும் ஒழுக்கமும் நிரம்பப் பெற்றவராய்ப் பற்பல இடங்களுக்குஞ் சென்று தமிழ்ப் பணி, தெய்வப் பணிகளில்ஈடுபட்டவரும் உண்டு. அவருள் அறிந்தார் சிலரைப் பற்றிப் பின் காணலாம்.

ஞானியார் மாணவர் கழகம் : சுவாமிகள் திருக்கோவலூரில் தங்கியிருந்த காலங்களில் அங்கு அவர்களையடுத்துப் பயன் பெற்றோர் பலர். அவர்களுட் குறிப்பிடத்தக்கவர், ம. ரா. குமாரசாமிப் பிள்ளை யவர்களாவார்கள். திருக்கோவலூரை யடுத்துள்ள மணம் பூண்டி என்ற ஊரினார். அவர் சுவாமிகளிடம் தொழும்பு பூண்டொழுகிக் கல்வி கற்றுச் சிறந்தவர். தம் சொல்லாற்றலால் பற் பல இடங்களிற் சுவாமிகளின் பெருமையை அறிவித்தவர், திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்திற்கும் வருவார். சில காலம் அங்கேயே இருப்பதும் உண்டு. அவர் 'ஞானியார் மாணவர் கழகம்’ என்ற பெயருடன் ஓர் கழகம் நிறுவினார். சுவாமிகளிடம் கல்வி பயில்வோர் யாவருமே அக்கழகத்தில் அங்கத்தினராவர்.

திருப்பாதிரிப் புலியூரையும், அதன் சுற்றுப்புற கிராம முதலியவற்றையும் வாழ்விடமாகக் கொண்டிருந்தவர் பலரும், ம.ரா. குமாரசாமிப் பிள்ளையைப் போல் வெளியூரிலிருந்து வந்து தங்கிப் படிப்பவரும், நாள்தோறும் மாலை 6 மணிக்கு மடாலயத்தில் ஒன்று கூடுவர். 9 மணிவரை பாடம் நடைபெறும். கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் பிரபுலிங்கலீலை, மெய்கண்ட சாத்திர நூல்கள், இராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலாம் பல பல நூல்களை ஒவ்வொன்றாக முறையே சுவாமிகள் பாடம் நடத்துவார்கள்.

பாடம் நடக்குங்கால் எவரேனும் எது குறித்தேனும் சுவாமிகளையோ மாணவர்களுள் எவரையோ காண வந்தாலும் அவர்களையும் இருக்கச் செய்துவிடுவார்கள். அவர் பாடத்தில் ஈடுபட்டுச் சொல்லமுது மாந்தி நன்மை பெறுவதும் உண்டு. பாடங்களிற் சிறப்பு நிகழ்ச்சிகள் வருமெனில், அப்போது மாணவர் கழகப்பொருட் செலவில் மடாலயத்தில் எழுந்தருளும் பெருமானுக்குச் சிறப்புப் பூசனைகளும் நிகழும். சுவாமிகள் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி யிருக்குங் காலமெல்லாம் பாடம் நடைபெறுவது தடைபடாது. பாடங் கேட்போர் பலரும் சிறந்த அறிவுடையராய்த் திகழ்ந்தனர். சிலர் ஆசிரியப் பணியேற்று வாழ்க்கை நடத்தியதும் உண்டு. இன்னின்னாரென அறிந்த அளவுக்கு ஓர் பட்டியல் பிற்சேர்க்கையில் இணைக்கப் பெற்றுள்ளது.

ஆண்டு விழாக்களும் ஆன்றோர் பலர் திரளலும் :

வாணி விலாச சபை, ஞானியார் மாணவர் கழகம் இவற்றின் ஆண்டு விழாக்கள் அவ்வப்போது நிகழ்வது உண்டு. பாண்டித் துரைத் தேவரவர்கள், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள், ஜஸ்டிஸ் டி. சதாசிவ ஐயரவர்கள், என்ஜினியர் மாணிக்க நாயகரவர்கள், சதாசிவம் பிள்ளையவர்கள், சோ. வடிவேலு செட்டியாரவர்கள், பொ. முத்தையா பிள்ளை யவர்கள், ரா. பி. சேதுப் பிள்ளையவர்கள், சிவகுருநாதம் பிள்ளையவர்கள் முதலாயினர் விழாவினுக்கு வந்து சொற்பொழி வாற்றியும், விரிவுரையாற்றியும் சிறப்பித்த துண்டு. வாழ்த்துரை கூறு முகத்தான் அடிகளார் அரிய பல செய்திகளைக் கேட்டார்ப் பிணிப்புறும் வண்ணம் கூறுவார்கள். வந்தவர் உள்ளத்திற் பற்றுமாறு ஆங்காங்கு பலபல சங்கங்களையும் கழகங்கங்களையும் நிறுவித் தமிழ்ப் பணியும் தெய்வப் பணியும் செய்து சமுதாயத் தொண்டு புரியுமாறு வற்புறுத்துவார்கள்.

சுவாமிகள் தொடர்புபெற்ற அமைப்புகள் : கோவல் - மணம் பூண்டி, ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்கள் தம் கிராமத்தில், வள்ளற் பாக்கம் (காரணப்பட்டு) சமரச பஜனை, ச. மு. கந்தசாமிப் பிள்ளையைத் தலைவராயிருக்க வைத்து, அருட்சோதிநாத பக்த பால சமாஜம் என்ற பெயருடன் 20-09-1908ல் ஓர் சமாஜத்தை நிறுவினர். அதன் தொடர்பாக ஞாயிறு தோறும் சொற்பொழிவுகளும், வியாழக்கிழமை தோறும் பஜனையும் நடைபெற்றன. திருக்கோவலூர், மணம் பூண்டி அறையணி நல்லூர், கோட்ட மருதூர், நெற்குணம், கோவல் வீராட்டானம் அமையும் கீழையூர் ஆகிய பல ஊர்மக்கள் அக்கழகத்தால் தமிழ்ப் பற்றும் சைவ உணர்ச்சியும் மிக்கவராய்த் தம் பின்னோரும் நல்வழி நடக்க வழி வகுத்தது அந்தச் சமாஜம்.

1911ஆம் ஆண்டில் திருக்கோவலூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் புதிய கட்டிட வேலைகள் தொடங்கின. சுவாமிகள், தாமே நேரில் அங்கு சென்று அவைகளைச் செப்பமுறச் செய்து முடிக்கத் திருவுளங் கொண்டார்கள். அதனால் அங்கே சில காலம் தங்கினார்கள். அப்போது, ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்கள், தம் குல முன்னேற்றங் கருதி ஓர் சங்கம் அமைக்க முற்பட்டார். மலைய மன்னர், நத்தமன்னர், சுருதி மன்னர் என்னும் முப்பிரிவினை யுடையாராய் வாழ்ந்துவந்த தெய்வீக மன்னர் வமிசத்தைச் சேர்ந்தவருள் நத்த மன்னர் என்னும் பிரிவைச் சேர்ந்தவர் அவர் முப்பிரிவினரும் உடையார் என்ற பட்டப் பெயருடன் பற்பல இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். யாவர்க்கும் பொதுவாக அமையும் வகையில் பார்க்கவ குல சங்கம் என்ற பெயருடன் ஒர் சங்கத்தை 06-08-1911ல் தொடங்கினார். சுவாமிகள் தம் திருக்கடைக்கண்ணோக்கால் அவர்கள் தொடங்கி வைப்பதால் அச் சங்கம் தம் சிறுவர்க்குக் கல்வியறிவை வளர்க்கவும் நல்லொழுக்கமும் கொண்டு யாவரும் வாழ வழி காட்டவும் துணைபுரிய வேண்டுமென்றெண்ணி சுவாமிகளை மணம்பூண்டிக்கு அழைத்துச் சென்றார். ஆங்கு பற்பல வெளியிடங்களிலிமிருந்து வந்திருந்தோர்க் கெல்லாம் தக்க வசதிகள் செய்து கொடுத்திருந்ததோடன்றிப் பெரிய பந்தர் ஒன்றையும் அமைத்திருந்தார்கள், அப் பந்தலில் விழாத் தொடங்கிற்று. திருக்கோவலூர்ப் புராணத்தில் அவர்களுடைய வரலாறு கூறப்பட்டிருக்கிறது. மலைய மன்னன், ஒளவையார், கபிலர் முதலாம் சங்ககாலச் சார்புடைய ஆன்றோர் வழித் தோன்றல்களாம் அப் பார்க்கவ குல சங்கத்தினர்க்கு ஆசி பல கூறியும் பழைமை போற்றிச் சமய வளர்ப்பு முதலாயவைகளில் நாட்டம் கொண்டு சமூக சேவை புரிந்து சமுதாயத்தை மேம்படுத்த இச்சங்கம் துணைபுரிக’ என்ற பொருள் பொதிந்த நல்லுரையுடன் தொடங்கி வைத்தார்கள். -

பின்னர், அச்சங்க ஆண்டு விழாக்களுக்கு நம் சுவாமிகளையே அவர்கள் விரும்பியழைப்பாராயினர். பல பல வெளியூர்களில் நடந்த அச்சங்க ஆண்டு விழாக்களில் சுவாமிகள் தலைமை தாங்கி, அம் மரபினரே யன்றி ஆங்காங்குக் குழுமிய மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். முடியனூர் ராவ் சாகேப் குழந்தைவேல் உடையார் கும்பகோணம் வக்கீல் – சிவஞான உடையார் முதலாயவர் சுவாமிகளை ஆங்காங்கு அழைத்துச்சென்று சிறப்பித்த பார்க்கவ குல சங்கச் செல்வராவர்.

பார்க்கவ குல சங்கத்தின் பத்தாம் ஆண்டுவிழா, கொங்கு நாட்டுச் சேந்தமங்கலத்தில் நடைபெற்றது. 1925-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த அவ்வாண்டு விழா மிக்க சிறப்புப் பெற்ற விழாவாகும். தனித்ததோர் பெரிய பந்தரில் ஸ்ரீலஸ்ரீ – சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், இராமசடகோப அய்யங்கார், மே. வே. துரைசாமி உடையார், ம. ரா. குமார சாமிப் பிள்ளை, பேரூர் ஞானப் பூங்கோதையம்மையார், பெருந்துறை - கணேச முதலியார் ஆகிய பலர் சொற்பொழி வாற்றினார்.

இராம - சடகோப அய்யங்கார், சத்தியாக்கிரகி: என்னும் பொருள்பற்றிப் பேசினார் . பிரஹலாதன் முதலாயினாரைப் பற்றிப் பேசினார். திருநாவுக்கரசர், எதிரியை வ்ணங்க வைத்தமையால் அவரே உண்மைச் சத்தியாக்கிரஹி என்று குறிப்பிட்டார். அக்கருத்துக்குக் கூட்டத்திலிருந்த ஒருவர் மறுப்புத் தெரிவித்தார். “மெய்ப்பொருள் நாயனார் சத்தியாகிரகி யல்லவா?“ என்று வினவினார். அய்யங்கார், அதனை ஏற்க மறுத்தபோது கூட்டத்தில் குழப்பம் உண்டாயிற்று. அடிகளாரோ, தம் தனித்த நாவன்மையால், மெய்ப் பொருள் நாயனார் தொண்டு முதலியவற்றை விரிவாகப் பேசி, அனைவரையும் மகிழவைத்தனர். பேரூர் ஞானப் பூங்கோதை யம்மையார், அவிநாசிப் புராணம் பற்றிப் பேசினர். அப்பேச் சின் முடிவில், “நரியைக் குதிரை“ என்று தொடங்கும் திருவாசகப் பாடலை உளமுருக்கும் வண்ணம் பாடினார். குழுமி யிருந்தாரனை வரும் ஆனந்தக் கண்ணிர் துளிர்க்க நெஞ்சம் உருகி இறைவயமாயினர்.

அந்தப் பேரவையில் கோவல், ம. ரா. குமாரசாமிப் பிள்ளை உயிர்ப்பலி, தகாத செயலாக இருக்கும்போது, தம் மரபினர் சில இடங்களில் இதற்கு ஆதரவு தருவதாகக் கூறி அதனை அறவே விட்டுவிட வேண்டுமென்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். பலர் அதனை ஆதரித்துப் பேசினர். பின்னர் அவையினரின் முழு ஒத்துழைப்புடன் அத்தீர்மானம் நிறைவேறியது. சுவாமிகள் தம் முடிவுரையில் எழுத்தளவில் நில்லாமல், யாவரும் செயலளவில் கைக்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்கள். சேந்தமங்கலம் செல்லாண்டியம்மன் என்னும் பிடாரி திருவிழாவில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப் பெறுதல் வழக்கமாக இருந்தது. மேற்கண்ட தீர்மானத்தையொட்டி நம் சுவாமிகள் ஆற்றிய அறிவுரையைச் செவிமடுத்த, மிட்டாதார், எஸ். ஆர் அயிராவத உடையார் அவர்கள், அவ்வாண்டு முதல் அக்கோயிலில் உயிர்ப்பலி நடவாதவாறு வகை செய்தார். அதனையறிந்த சுவாமிகள், அகமகிழ்வு கொண்டார்கள்.

முன் குறிப்பிட்ட, சேந்த மங்கலம் மாநாட்டுக்குக் கும்பகோணம் வில்வராய நல்லூரைச் சார்ந்த சா. முத்துக் குமரப்ப உடையார், சாத்தனூர் - சுப்பராய முதலியார், (இவ்விருவரும் சிறந்த நில உரிமையாளர்கள்) மாரண்டஹள்ளி மிட்டாதாரர்களான இரத்தின உடையார், ஆறுமுக உடையார் ஆகியோரும், ‘பார்க்கவ பந்து என்ற மாத இதழ் நடத்திய எம். ஆர். வேங்க டாசல உடையார் முதலிய பெருஞ் செல்வர்களும் வந்திருந்தார்கள்.

சுவாமிகளின் சொல்லமுதம், அமுதத்தினும் இனியதாய் நெஞ்சை விட்டு நீங்காதவனாய் உள்மாசு கழுவும் உயர் நீர்மையினதாய் உள்ளமையைச் சொல்லிச் சொல்லிச் சுவாமிகளைப் பிரிய மனமின்றிக் கலங்கினர். தம் நினைவுகுறியாக முழுதும் பொற்கசவமிட்ட உருத்திராக்கத் தாழ்வடம் ஒன்றினைச் சுவாமிகளுக்கு அணிவித்து நன்றி கூறி வழி விடுத்தனர்.

1929 பிப்ரவரியில், திருப் பாதிரிப் புலியூரில், ஸ்ரீமத் ஞானியார் மாணவர் கழகம் ஓர் சிறப்புவிழாக் கொண்டாடியது. அவ்விழாவினுக்கு அமைச்சர் டி. என். சிவஞானம் பிள்ளையவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். அந்த விழாவில், ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்களும் ஓர் சிறந்த சொற்சொழிவாற்றினார். அதனால் மிக மகிழ்ந்த மந்திரியார், அங்கு வந்திருந்த தீ. நா. முத்தையா செட்டியாரவர்களுடன் கலந்து, பிள்ளையவர்களுக்குச் சிறந்ததோர் பரிசு அளிக்கப் பெறல் வேண்டுமென முடிவு செய்தார். அவசரவேளைக்கு உதவுமெனச் சுவாமிகளுக்கு முன் சேந்தமங்கலத்தில் உடையார்களால் செய்வித்து அணிவிக்கப் பெற்ற முழுதும் பொன் கவசமிடப் பெற்ற தாழ்வடத்தைக் கேட்டுப் பெற்றார் முத்தையா செட்டியார். அவர் சுவாமிகள் திருக்கரத்தில் அளிக்க, அவர்களால், விழாத் தலைவர் சிவஞானம் பிள்ளையவர்களிடம் கொடுக்கப்பெற்று, ம. ரா. குமாரசாமிப் பிள்ளைக்கு அணிவிக்கப் பெற்றது. விழாத் தலைவர் பாராட்டுதலுக்குப் பின், சுவாமிகளும் தம் மாணவர் பேச்சுத் திறம் பற்றிப் பாராட்டிப் பேசி வாழ்த்துக் கூறியருளினார்கள். முதன்மை மாணவர் பெற்ற சிறப்பு அனைவரும் பெற்றாலன்ன அகமகிழ்வினை ஏனைய மாணவரும் அடைந்தனர்.

அதைவிட மதிப்பு மிக்க தாழ் வடம் ஒன்றினைச் செய்தோ, அதன் மதிப்பையோ கொடுத்து விடுகிறேன் என்றவாறு செட்டியாரவர்கள் தர இயலாத நிலை வந்ததுற்றது. சற்றேறக் குறைய முப்பத்திரண்டு சவரன் பொன்னிடப் பெற்ற அத்தாழ்வடம், ம. ரா. கு. அவர்களுக்கும் அவர் பின் வந்தோருக்குமே உரியதாயிற்று. பின்னாளில், அவரது சந்ததியார், மணலூர்ப்பேட்டை ஆலயத்திற்கு விற்று விட்டதாக அறியப்பட்டது.

திருக் கோவலூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் புதியதொரு சிறந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பெற்றது. 1912 ஆம் ஆண்டு அதற்குக் கிரகப் பிரவேசம் செய்து வைக்கப் பெற்றது. முதற் குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளுக்குத் திருவருள் பாலித்தருளிய கோவல் வீரட்டான ஸ்ரீ பிரஹந்நாயகி ஸ்மேத ஸ்ரீ வீரட்டேசுவரப் பெருமானுக்கு நகரத்தாரால் அமைக்கப்பெற்ற திருக்கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடந்த அந்நாளிலேயே மடாலய கிருஹப் பிரவேசமும் நிகழ்வுற்றது. அவ்விழாவின் அங்கமாகச் சைவ மாநாடொன்றும் கூட்டப் பெற்றது. அப்போது "கோவல் சைவ சித்தாந்த சமாஜம்" எனப் பெயரியதோர் கழகமும் அமைக்கப் பெற்றது. கோயிலூர் ஸ்ரீமத்-சுப்பையா சுவாமிகள், வெங்கந்தூர் திரு.கணபதி சாஸ்திரிகள், தூத்துக்குடி திரு. முத்தையா பிள்ளையவர்கள், ம.ரா. குமாரசாமி பிள்ளையவர்கள் ஆகியோர் சொற்பொழி வாற்ற ஸ்ரீலஸ்ரீ.சுவாமிகள் முன்னுரை முடிவுரைகளுடன் சிறப்பாக அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. .

இரண்டாம் நாள், ஸ்ரீமத் ஞானியார் கழகத்தின் ஆண்டு விழாவும், மூன்றாம் நாள் பார்க்கவ குல சங்கத்தின் ஆண்டு விழாவும் சிறப்புற நடந்தன.

திருப் பாதிரிப் புலியூர் மடாலயச் சீர்த்திருத்தம் : திருப்பாதிரிப் புலியூர் மடாலயத்தின் முன்புறத்தி லிருக்கும் பெரிய கூடம் சுவாமிகளால் அமைக்கப் பெற்றதேயாகும்.

அதற்குமுன், அவ்விடம் பெரிய கீற்றுக் கொட்டகையிடப் பெற்றதாய், முருகப் பெருமானது வாகனங்கள், சுவாமிகள் எழுந்தருளிப் பட்டினப் பிரவேச முதலிய கொண்டருளும் பல்லக்கு முதலியவை வைக்கப் பெற்றிருக்கும் அந்த இடம், சொற்பொழிவு, முருகனை வழிபட வருவோர் நின்றும் இருந்தும் தரிசிக்கவும், பாராயண முதலியன புரியவும் ஏற்றதாய் அமைக்கத் திருவுளம் பற்றி யருளினார்கள். அவ்வாறே அதுவும் புதுப்பிக்கப் பெற்றது. திருப் பாதிரிப் புலியூர் ஸ்ரீபிரஹந்நாயகி ஸ்மேத ஸ்ரீபாடலேச்சுரப் பெருமான் கும்பாபிஷேக நாளாகிய 28-06-1917ல் கிரகப் பிரவேசம் செய்வித்தும், கும்பாபிஷேகத்திற்கென வந்த பல அன்பர்களைக் கொண்டு சொற்பொழிவு முதலாம் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவித்தும், சமூகநலப் பணிகள் புரிந்தார்கள்.

திருவெண்ணெய் நல்லூர்த் தொடர்பும் சங்கமும் : திருவெண்ணெய் நல்லூரில் தோன்றியவர் திரு. வடிவேல் முதலியார் அவர்கள். கல்வி பெறுவான் வேண்டிச் சுவாமிகளை அடுத்தவர். சுவாமிகள் திருப்பாதிரிப் புலியூர் வாணி விலாச சபை நடத்திக் கொண்டிருந்த காலத்திலும் சுவாமிகளிடமே தங்கியிருந்து உணவு முதலிய பெற்றுப் புலமை சான்றவர். பின்னாளில் திருக்கோவிலூர் ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர். திருவருட்டுறைப் புராணம் (திருவெண்ணெய் நல்லூர் பற்றியது). வாமன புராணம், (திருக் கோவலூர் திரு விக்கிரம சுவாமி பற்றியது) முதலிய நூல்களை இயற்றியவர்; சுவாமிகளால் வேலை கிடைக்கப் பெற்று ஒரே இடத்திற் பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுற்றபின், உ.வே. சா. நூல் நிலையத்திலும் சில ஆண்டுகள் பணி புரிந்தவர். அவரது நன் முயற்சியால், திருவெண்ணெய் நல்லூர்த் தமிழ்ப் புலவர் - சுப்பிரமணிய முதலியார் தலைமையில் 'கம்பர் கலாமிர்த சங்கம்’ எனப் பெயரியதொரு சங்கத்தை நிறுவினர். அச்சங்கம், அவ்வூரை யடுத்துள்ள தடுத்தாட் கொண்டுர், சிறுமதுரை, கிராமம் என வழங்கும் திருமுண்டிச்சரம் முதலாய ஊர் மக்களுக்கு சமயப் பணிகள் ஆற்றியது. அதன் சிறப்பு விழாக்கள் சுவாமிகளின் தலைமையிலும், ஆதரவிலும் அவ்வப்போது நிகழும் . அச்சங்கம் 24-10-1909ல் தொடங்கப் பெற்றது.

இந்தச் சங்கமே யன்றி நல்லார் தொழும் வெண்ணெய் நல்லூர் என மெய்கண்ட நாதன் கூறக் காரணமாகி, அவர் உபதேசம் பெற்ற திருத்தல மாதலால் அவ்வப்போது சைவ மாநாடுகளும் சுவாமிகளின் தூண்டுதலின் பேரில் நடை பெறுவதுண்டு. 1929 ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் இருபத்து நான்காமாண்டு விழாவும் அத்தலத்தில் நடைபெற்றது. அவ்விழாவினுக்குத் திருவாவடுதுறையாதீனம் தம் பிரதிநிதியை யனுப்பிச் சில மரியாதைகளும் செய்வித்தது. அந்த விழாவின் பொறுப்பேற்று நன்கு நிறைவேற்றிய அன்பர் திரு. சின்னசாமி ரெட்டியாரவர்கள்.

சுவாமிகள் திருக்கோவலூர் எழுந்தருளும் போதெல்லாம் திருவெண்ணெய் நல்லூர் வழியே எழுந்தருள்வதும், மீண்டருள்வதுமான சமயங்களில் வாய்க்கும் போதெல்லாம் திரு வெண்ணெய் நல்லூர் மக்கள் சுவாமிகளின் சொல்ல முதங்களைப் பெறத் தவறியதில்லை.

நெல்லிக்குப்பம் - சோழவல்லி வாகீச பக்தஜன சபை : சுவாமிகளின் மாணவராய்த் தமிழறிந்தவர் பலருள், சோழவல்லி - ப. பாலசுந்தர நாயனாரும் ஒருவர். அவர், சுவாமிகளிடம் பல நூல்களைக் கற்றவர். சுவாமிகளின் அருள் மொழி கடைப்பிடித்துத் தம் ஊரில் 25-4-1910ல் வாகீசபக்தஜன சபையைத் தோற்றுவித்தார். தொடக்க விழா, ஸ்ரீலஸ்ரீ-சுவாமிகளின் தலைமையிலேயே நிகழ்வதாயிற்று. வாரந் தோறும் வழிபாடு, சொற்பொழிவுகளும், கார்த்திகை முதலான நாட்களில் சிறப்பு வழிபாடு - சொற்பொழிவுகளும், ஆண்டு தோறும் சித்திரைச் சதயமாம் அப்பர் சுவாமிகள் குருபூசை விழாவின் தொடர்பாக ஆண்டு விழாவும் சிறப்பு விழாவும் கொண்டாடும் ஆண்டு விழாக்களிலும், இயலும் பிற சமயங்களிலும் சுவாமிகள் ஆங்குச்சென்று தலைமை யேற்றும் சொற்பொழிவுகளாற்றியும் சிறப்பிப்பது உண்டு. இதனால், நெல்லிக்குப்பம், கீழ்ப்பட்டாம் பாக்கம், மேல் பட்டாம் பாக்கம், காரமணிக்குப்பம் முதலாய பல ஊரினர் நலம் பல பெற்றனர்.

புதுவையும் சுவாமிகளும் : புதுவை, பங்காரு பத்தரென்பா ரொருவர். அடிகளாரிடம் சிறந்த அன்பு பூண்டு ஒழுகியவர். அவர் சுவாமிகளை அழைத்துச் சென்று, அவர்கள் தலைமையில் விரோதிகிருது (1911 ஆம் , ஆண்டில் புதுவையில் சித்திரைத் திங்கள் முதல் நாளிலே, கலைமகள் கழகம் எனப் பெயரியதோர் கழகத்தைத் தொடங்கினர். அந்தக் கழகம் பெரியதொரு அமைப்பாகத் திகழ்வதாயிற்று. அக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார், வ.வே. சுப்பிரமணிய அய்யர் முதலியோருங்கூட அங்கத்தவராயிருந்தனர். அந்தக் கலைமகள் கழகத்தின் அங்கத்தவர்கள் சிறந்த நாட்டுப் பற்றும் கொண்டு- தொண்டுகள் பல புரிந்தமைக்குச் சுவாமிகளின் தூண்டுகோல் பெரிதும் காரணமாயிற்று. அக் கழகத்தின் சார்பில், 1913ல் கலைமகள் என்ற மாத இதழ் தொடங்கினர். அதன் முகல் இதழுக்குச் சுவாமிகள் ஆசியருளி எழுதியிருந்த திருமுகம் மிக்க சிறப்புப் பொந்திய தொன்றதாகும். அந்தக் கலைமகள் இதழே இன்றும் சென்னை யிலிருந்து வெளிவருவது.

தமிழ் மொழிப் பற்றும், சமயப் பற்றும் கொண்டு ஒழுகும் அன்பர் யாவரேயாயினும், அவர் பால் சுவாமிகள் காட்டும் பரிவு தனிச் சிறப்புடையதேயாகும். புதுவை நிகழ்ச்சி மட்டுமே இங்குக் குறிப்பிடப் பெறுகிறது.

புதுவையில், ரோமன் கத்தோலிக்க - கிருஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சின்னையா - ஞானப்பிரகாச முதலியார். அவர் மத வேறுபாடற்றவர். பிற மதங்களை வெறுக்காதவர். வடலூர் இராமலிங்கர் அருட் பாக்களில் ஈடுபாடும் கொண்டவர். சைவ சமயத்திலேயுள்ள கொள்கைகள் பலவற்றை ஆதரிப்பவர். அவர் இத்தகையாரென்பதை அறிந்த நம் சுவாமிகள், கலைமகள் கழகத்திற்குச் சென்றிருந்த காலையிலும், அவர், விரும்பியழைத்த தன்பேரில் ‘மங்களவாசம்' என்னும் அவர் மாளிகைக்கு எழுந்தருளினார்கள். அங்கு முதலியார் மிகவும் விரும்பியதால், சீதா கல்யாணம் என்ற தலைப்பில் அரியதோர் சொற்பொழிவாற்றினார்.

அந்நாளில், சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் தலைவராக அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் இருந்தார். அவர், சுவாமிகள் கிருஸ்தவர் இருப்பிடம் சென்ற நிகழ்ச்சியைக் கண்டித்துச் சமாஜத் தலைவராய பதவி வேண்டாமென எழுதிக் கொடுத்து விட்டார்.

மாணவர்கள், இச்செய்தியை அடிகளார்க்கு அறிவித்தனர். அவர்களோ, "என்னே அறியாமை பிற மதத்தை இகழாமலும், தம்மதத்தில் திண்மையான பற்றுங்கொண்டிருப்பதன்றோ ஒவ்வொருவர் கடமையுமாகும்." என்று குறிப்பிட்டருளினார்கள். அதற்கு ஆதாரமாகச் சாக்கிய நாயனார் புராணத்தில்

‘எந்நிலையில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும்

மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருளன்றே"

என்னும் பகுதியை எடுத்துக் காட்டினார்கள்.

அதன் பின்னரே நல்லசாமிப் பிள்ளை தலைவராயினார்.

புதுவையிற் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் இருபத்திரண்டாம் ஆண்டு விழா சிறப்புற நடைபெற்ற காலத்திலும் சுவாமிகள் எழுந்தருளித் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்கள். அக்காலை, கிரந்தே. சிவசங்கர செட்டியார், பூரணாங்குப்பம் முனிசாமிப் பிள்ளை முதலிய அன்பர்கள் தக்க உதவிகள் செய்து சமாஜக் கூட்டம் சிறப்புற நடத்தி வைத்தார்கள். அது 1927 டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்ததாகும்.

புதுச்சேரி அம்பலத்தாடும் சுவாமிகள் மடாலயத்திற்கு 1927 டிசம்பர் மாதத்தில் எழுந்தருளி, ஸ்ரீ அம்பலவரையும் அவரால் எழுதப்பெற்ற திருவாசக ஏடுகளையும் தரிசித்து அக்காலை மடத்தின் அதிபராக எழுந்தருளியிருந்த சுவாமிகளோடு அளவளாவி மகிழ்ந்தருளியதும் உண்டு. அம்மடத்தில் செய்யத்தக்க சில சீர்திருத்தங்களையும் அருளினார்கள்.

புதுவைக் கலைமகள் கழக ஆண்டு விழாக்கள் பலமுறை நடைபெற்றதுண்டு. அவ்வப்போது, சுவாமிகள் எழுந்தருளித் தலைமை யேற்று விழாவினைச் சிறப்பிப்பதும், விரும்பியழைக்கும் பல இடங்களுக்கும், சபைகளுக்கும் எழுந்தருளிச் சிறப்பிப்பதும் உண்டு.

புதுவையில் செந்தமிழ்ப் பிரகாச சபை என்ற ஓர் சபையும் நடைபெற்றது. அது பழநிசாமி முதலியார், முருகசாமிப்பிள்ளை முதலாம் அன்பர்களின் ஆதரவு பெற்றது. அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அச்சபை விழாக்களுக்கும் சுவாமிகள் எழுந்தருள்வது உண்டு.

புதுவைச் செங்குந்த அன்பர்கள், சுவாமிகளின் சொல்லமுதை மாந்திப் பெரு மகிழ்வெய்தினர். அவர்களது தொண்டு சிறக்கத் தாமும் பற்பல சங்கங்களில் ஈடுபட்டனர். யாவரையும் சிறந்த மொழிப் பற்று - சமயப் பற்றுகளில் ஈடுபடுத்தவும் செய்தனர். தமது நன்றியறிதலைச் சுவாமிகள் பால் எங்ஙனம் செலுத்துவதென ஆராய்ந்தனர். சுவாமிகளின் உபாசனா மூர்த்தியாக உடன் எழுந்தருளும் ஸ்ரீ வல்லி தேவசேனா சமேத சுப்பிரமணிய மூர்த்திக்கு ஒரு வெள்ளித் திருவாசிகை செய்து அளித்தனர். அஃது இன்றும் திருமடாலயத்தில் பயன்படுத்தப் பெற்று வருகிறது. -

காஞ்சீபுரத்துடன் தொடர்பு : காஞ்சீபுரத்தில் இன்றும் வசித்து வரும் திரு. சிவஸ்வாமி தேசிகரவர்கள், சுவாமிகளின் சீடர்களுள் ஒருவர். தமிழ் - வட மொழிகளைச் சுவாமிகளிடம் பயின்றவர். பற்பல சீடர்கள் அவருக்கு உளர். அவருடைய வேண்டுகோளுக் கிணங்கிச் சுவாமிகள் அவ்வப்போது காஞ்சிபுரத்துக் கெழுந்தருள்வதும் உண்டு. சிவஸ்வாமி தேசிகரது நன்முயற்சி காரணமாக ஞானியார் சங்கம் என்ற பெயருடன் ஒர் சங்கம் தோற்றுவிக்கப் பெற்றது. அச்சங்கத்தின் விழாக்கள் பலவற்றிலும் சுவாமிகள் பங்குபற்றியதுண்டு. ஸ்ரீ ஏகாம்பரேசுவரர் விழாக்காலங்களிலும், கந்தகோட்டப் பெருமான் விழாக் காலங்களிலும், பிற ஆலய விழாக்களிலும் சமயச் சொற்பொழிவுகளுக்காகச் சுவாமிகள் பலமுறை எழுந்தருள்வது உண்டு.

காஞ்சிபுரத்து அன்பர்பலர் சுவாமிகளிடம்சிறந்த ஈடுபாடு கொண்டவர்கள். கடலூர் துறைமுக நகரில் ‘சன்மார்க்க சபை’ ஒன்று உளது. அஃது வடலூர் இராமலிங்க சுவாமிகளால் அமைக்கப்பெற்றது. அச்சபை விழாக்களிலும் நம் அடிகளார் தலைமை யேற்றருளிச் சிறப்பித்த துண்டு.

கரையேறவிட்ட குப்பம் என்ற வண்டிப்பாளையத்தில் அந்நாளில் ‘பால பக்த ஜன சபை’ என்ற ஒரு சபை நடைபெற்று வந்தது. அன்பராயினார் பலருடைய வேண்டு கோளுக்கிணங்கி நம் சுவாமிகள் பலமுறை அங்கு சென்று அருளுரைகள் நிகழ்த்தியது உண்டு.

திருப்பாதிரிப்புலியூரில் 'சரஸ்வதி விலாச சபை' என்னும் ஒரு சபையும் நடந்தது. அச்சபையும் சுவாமிகளது அரிய தலைமை, சொற்பெருக்குகளைப் பயன்படுத்திச் சிறந்ததுண்டு.

உத்தரமேரூர்ச் சைவ சித்தாந்த சபை, செங்கற் பட்டு ‘சமயாபிவிருத்தி சங்கம்,' காவித்தண்டலம் ‘சைவ சித்தாந்த சபை,' தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபை, கோவல் தமிழ்ச்சங்கம், கண்டாச்சிபுரம் தமிழ்ச்சங்கம் முதலியனவும் பிறவும் சுவாமிகளது தலைமையில் விழாக்களைக் கொண்டாடியதுண்டு. திரிசிரபுரச் ‘சைவ சித்தாந்த சபை’ சுவாமிகள் ஆங்கெழுந்தருளுங் காலங்களி லெல்லாம் அவர்களருளுரை வழங்க வழி வகுத்துக் கொண்டது. -

ஆரணியில் சுவாமிகளின் அரும் பணிகள் : வடாற்காடு மாவட்டத்திலுள்ள ஆரணியில், இம் மடாலயத்திற்குச் சொந்தமானதோர் கோயில் உள்ளது. அது, ஸ்ரீ வல்லி தேவசேனா சமேதராக, மயில்மீதிவர் முருகன், ஆறு திருமுருக மண்டலங்களும் பன்னிரு திருக் கரங்களும் கொண்டு காட்சி நல்கி அடியவர்க்கருள் பாலிக்கும் திருத்தலமாகும். அந்தக் கோயில் நம் மடாலய முதற் குரு நாதரின் நேர்ச் சீடராகிய அருணாசல சுவாமிகள் என்பரால் இரண்டாங் குருநாதருக்காக வாங்கப் பெற்றதும், தானமாகப் பெற்றதுமான இடத்தில் இம் மடாலய இரண்டாங் குருநாதரால் பிரதிட்டை செய்யப்பெற்ற திருவுருவ வழிபாட்டுக்குரிய இடமாகும். கலி 4900 ஆம் ஆண்டாகிய சித்தார்த்தி, ஆடி 20-ஆம் நாளில், சென்னைப் பெரிய பணம் 1610-க்குக் காவல் நல்ல தம்பி நாயக்கர், தென்னவராய நாயக்கர் ஆம் இருவரிடமும் பாதி இடம் வாங்கியும், அவர்கள் தானமாக அளித்த ஏனைப்பாதியையும் இடமாகக் கொண்டும் அமைந்துள்ள திருக்கோயில் அந்தச் சுற்று வட்டாரத்திலுள்ளோர், அந்தத் திருக்கோயிலிடம் நீங்காப் பற்றுடையவர். முருகப்பெருமான் கண்கண்ட தெய்வமாவர். ஆரணி, சுற்றுப்புற மக்கள் ஆண்டுதோறும் பற்பல விழாக்களைத் தாமே மனமுவந்து ஏற்றுச் செய்கிறார்கள். வாரந்தோறும் வார வழிபாடு, ஞாயிறுதோறும் பொதுப்படையாகவும், மங்கையர்கரசியார் வார வழிபாடு வெள்ளிக்கிழமைதோறும் பெண்களாலும் சிறப்புற நடை பெறுவதும் அவ்வூரவரது தெய்வ பக்திக்கும், சிறப்பாக அக்கோயிலிடங் கொண்டுள்ள முருகனிடம் கொண்டுள்ள பற்றுக்கும் சான்றுகளாம். கடந்த எட்டாண்டுகளுக்கு முன் சில திருப்பணிகளை நிறைவேற்றி 31.5.1964-ல் சிறப்பான முறையில் அக்கோயிலுக்குக் குடமுழுக்கு விழாவினை நிறைவேற்றிய பெருமைஅன்பர்களையே சாரும். -

அத்தகைய ஆரணியில் திருக்கோயிலையடுத்து, ஓர் திருமடத்தைத் தனியே நிறுவ நம் சுவாமிகள் திருவுளம் பற்றினார்கள். 1927-28-ல் சில மாதங்கள் அங்கேயே எழுந்தருளியிருந்து, தம் நேர்ப் பார்வையிலேயே வேலைகளை முடித்து 1929-ல் அறநிலையம் புகுவிழாவும் செய்து மகிழ்ந்தார்கள்.

அந்த நாட்களில்தான், அவ்வூரில் வாழ்ந்திருந்தவரான திரு. முத்து சு.மாணிக்கவாசக முதலியாரவர்கள் (இந்நாளில் காஞ்சித் தொண்டைமண்டல ஆதீனத் தலைவர்களான - ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்), திரு. க. வச்சிரவேல் முதலியார் ஆகியோர் சுவாமிகளிடம் சித்தாந்த பாடம் பயின்று திகழ்பவர்கள். பலர் பாடம் கேட்டார்களெனினும், தெளிந்த சித்தாந்த அறிவு பெற்று யாவராலும் புகழத்தக்க நிலையில் இன்றும் உள்ள பெரியார்களாம் அவ்விருவரையும் பற்றி மட்டும் குறிப்பிடலாயிற்று.

நம் ஐந்தாம் குருநாதர் பட்ட மேற்பதற்கு முன், இரு குருமார்கள், தக்க கவனம் செலுத்தாக் குறையால் ஆரணி கோயில், சத்திரம், இவற்றின் தொடர்புகள் இம் மடாலயத்திற்கு இல்லையாகும் என்ற நிலை வந்துற்றது. நம் குருநாதர், அறச்சார்பிற் குரியதாய் ஆன்றோர்களால் அமைக்கப் பெற்ற நிலையங்களும், அவற்றிற்கென நியமிக்கப் பெற்ற சொத்துகளும் பிறர் வயப்பட ஒரு போதும் சகியாதவர்கள். எனவே, ஆரணி தொடர்பான சொத்துக்களின் பேரில் வழக்கிடவும் பின் வாங்கினார்களல்லர். வேலூர் நீதி மன்றத்தில் வழக்கெழுந்தது. வக்கீலாக வேலூர் தென்னை மரத்துத் தெருவில் பெயர்பெற்று விளங்கிய திரு. இராசவேல் முதலியாரவர்களை யமர்த்தினார்கள்.

முன் ஆரணி முருகன் கோயிலில் பூசனை புரிந்து கொண்டிருந்த சிவாசாரியர், அந்தக் கோயில் தனக்கே உரியதென்றார். பற்பல தலைமுறைகளாகத்தம்முன்னோர்களும் உரிமை கொண்டேயிருந்தார்கள். ஆதலால் முறைப்படி தனக்கே அஃது உரியதாகும் என்பது வழக்கு. யாவும் விசாரித்து முடியும் நிலையில் நம் சுவாமிகளது தெய்வத் திருவுள்ளத்தில் எழுந்தது ஒர் எண்ணம்; ஆங்கு எழுந்தருளும் திருவுருவம் முருகப்பெருமானே என்றாலும், அவருடைய முடியில் சிவலிங்கக் குறியும் இருக்கிறது. இத்தகைய திருவுருவங்களே இம் மடாலயத்தைச் சேர்ந்த இடங்களில் விளங்குபவை. ஆகவே, இது வீரசைவராம் எமக்கே உரியது; பூசனை புரியும் ஆதி சைவர் அவருடைய முன்னோர் வழக்கப்படி பூசிப்பவரே; அவருடைய முன்னோர் எம் முன்னோராகிய மடாலய குருமூர்த்திகளால் நியமிக்கப் பெற்றவரே எனத் தெள்ளத் தெளியச் செய்திகளை முறைப்படுத்தி வக்கீலுக்கு அறிவித்தார்கள். அவரும் அம்முறையினைப் பின்பற்றி வாதாடி இறைவன் திருவுருவங்களில் சிவலிங்கக் குறியும் அமைந்திருக்கும் சிறப்பினைக் காட்டி வெற்றிக்கு வழி தேடினார்கள். பிறகு வழக்குவென்றது. கோயிலும், பிற சொத்துகளும் மடாலயத்திற்கே உரிமையுடையவாயின.

ஆரணி மடாலயத்தைச்சேர்ந்த இடம் ஒன்றில் சிலர் வாரந்தோறும் சிறப்பாகப் பஜனை புரியவெனச் சிறு இடம் கேட்டபோது, சுவாமிகள் மறுக்காது ஒப்புக் கொண்டனர். பின்னர் அதனை விரிவுபடுத்திக் கட்டிக் கொண்டு தமக்கே உரிய இடம் அது என வாதிட்டனர். அது தொடர்பாகவும் வழக்கு எழுந்தது. அதற்குரிய ஆதாரங்கள் காட்டி, அவ் வழக்கிலும் வெற்றி கொண்டவர்கள் சுவாமிகளேயாவார்கள்.

திருமுது குன்ற மடாலயம் : திருமுது குன்றமாம் விருத்தாசலத்தில், ஐயனார் கோயில் தெருவில், மடாலயத்திற்குச் சொந்தமான பழைய கட்டிடம் ஒன்று உண்டு. அது, கல் மடம் என வழங்கப் பெறுகிறது. (கல்வி கற்பித்து வந்த இடமாக அமைந்திருந்து வந்ததால் கல்வி மடம் எனப் பெயர் வழங்கிப் பின் அது திரிந்து கல்மடம் என்று வழங்கி வருதல் இயல்பாகலாம்) அங்கு உள்ளே, தண்டபாணிக் கடவுளின் திருவுருவம் இருந்தது. நம் சுவாமிகள், பழுதாகியிருந்த சத்திரத்தைப் பின் கவனிக்கலாமெனக் கருதி வெளியிடத்திலே கருங்கல் கொண்டு கோயிலமைத்து எழுந்தருள்விக்கத் திருவுளங் கொண்டருளி, வேலை தொடங்கியிருந்தார்கள். சுவாமிகள் தொடங்கியிருந்த அவ்வாறே ஆறாவது சுவாமிகள் காலத்தில் அக்கோயில் முற்றுவிக்கப் பெற்றுத் திருவுருவமும் எழுந்தருள் விக்கப் பெற்றது. இப்போது, கோயில் பூசனை, இம் மடாலயத்தின் சம்பளம் பெறுபவராலேயே செய்யப் பெறுகிறது.

சிவகுன்றம் : செஞ்சி தாலுக்கா அனந்த புரத்தையடுத்துள்ள ஒரு தனி மலை சிவகுன்றம். அங்கு இம் மடாலய முதற் குருநாதர் பல ஆண்டுகள் கடுந் தவமிருந்தார்கள். மலையடி வாரத்தில் ஒன்றும், மலைமீதொன்றுமாக இரு சுனைகள் என்றும் வற்றாத நீருடன் இலங்கும் அங்கே ஒரு கற்பிளவாம் குகையில் முதற் குருநாதரால் தாபிக்கப் பெற்ற விநாயகர், முருகன், சிவலிங்கத் திருவுருவங்கள் உள. அன்பர் பலர் வாரக் கட்டளையாக ஞாயிறு, வியாழக்கிழமைகளிலும், கார்த்திகை நாட்களிலும் மலைவலம் வந்து திருவுருவங்களை வழிபடுவர். அவ்வவரும் எண்ணிய எண்ணியாங்கு எய்தப் பெறுதலால் மக்கள் மிகுதியாக வருதல் உண்டு. கார்த்திகை தோறும் விழாவும் நடைபெறும்.

அத்தகைய சிறப்புப் பொருந்திய இடத்தில் இறைவனை வழிபட வருவோர் தங்கி உணவு சமைத்து உண்ணவும், தாம் எழுந்தருளுங் காலங்களில் உபாசனாமூர்த்தியை எழுந்தருளப் பண்ணிப் பூசை முதலியவற்றிற்காகவும் இடவசதிகளுக்காகவும், நம் சுவாமிகள் 1928 ஆம் ஆண்டில் சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து இரும்பு வாயில்கள், குகையைச் சூழ மதிலமைத்து வாயிலும் வகுத்தல் முதலாகிய இன்றியமையாத திருப்பணிகளைச் செய்து மீண்டார்கள். பின் செஞ்சி எழுந்தருளிய காலத்தும் அங்கு எழுந்தருளித் தம் முதற் குருநாதர் பூசித்த திருவுருவங்களைப் பூசித்து மீண்டார்கள்.

1937 ஆம் ஆண்டில் திருக் கோவலூரில் தங்கி, ஸ்ரீமஹா குருமூர்த்திகள் ஆலயத்திற் சில திருப்பணி செய்தும், முதல் குருமூர்த்திகள் ஆலயத்தைக் கட்டி முடித்துப் பூசனை மேற்கொண் டொழுகியருந்த ஸ்ரீ அருணாசல சுவாமிகள் சமாதிகோயிலிலும், வீரட்டநாதர் ஸ்ரீ மஹா குருமூர்த்திகளுக்கு ‘திட்டானுபூதி' நூலைத்தந்து, ஒரு மொழி மகாவாக்கியம் அருளிய ஆவணிமூல நாளிலும் ஆண்டு தோறும் எழுந்தருளி விழாக் கொள்ளற் கிடமான ஆவணி மூல மண்டபத்தினைப் பழைய செங்கல் கட்டித்தை இடித்துப் புதுவதாகக் கருங்கல்லால் அமைத்துக் கட்டியும், அறையணி நல்லூரிலுள்ள மடாலயத்திற்குச்சொந்தமான பல கட்டிடங்களைச் செப்பனிட்டும் மடாலயத் திருப்பணிகளை மேற்கொண்டதும் உண்டு. அக்காலங்களில், வந்து கேட்போர் இருந்தால் பாடம் நடைபெறும். எந்த நேரம் எந்த நூலில், எவர் ஐயம் என வந்தாலும், அப்போது சுவாமிகள் எந்த வேலையிலும் ஈடுபட்டிருந்தாலும், புத்தகம் முதலியவற்றைப் பாராமலே அவ்வையங்களை யகற்றியருள்தல் அடிகளாரிடம் மட்டுமே காணப்பெற்றஒரு தனிச் சிறப்பாகும். அங்ஙனம் நிகழ்வது, திருக்கோவலூரில் மட்டுமன்றி எங்கெங்குச் சென்றாலும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

திருப்பாதிரிப்புலியூரில், இரண்டாங் குருமூர்த்திகள் முதலாகப் பரிபூரணமடைந்த குருமூர்த்திகளின் ஆலயம் உண்டு. அதனைத் திருப்பணி செய்ய வேண்டிய நிலை வந்தது பல திருப்பணி வேலைகளையும் செய்து தூபி, கோபுரங்களைப் புதுக்குவித்து 1937ல் (தாது௵ தை௴ 19௳) குடமுழுக்கு நிறைவேற்றி யருளினார்கள். அக்காலை ஞானதேசிக மாலை என்ற தோத்திரப் பாமாலை யொன்றினை இயற்றி அச்சிடுவித்து அனைவர்க்கும் வழங்கச் செய்தார்கள். (அந்நூல் பிற் சேர்க்கையாக இணைக்கப் பெற்றுள்ளது.)

தம் மடாலயத்திற்குரிய நிலங்களிலிருந்து ஒப்பந்தப் படியும், பாக்கியில்லாமலும் உணவுப் பொருள் முதலியவை தடையின்றி வருதற்காம் வகை செய்தருளினார்கள்.

இனி அவர்கள் சைவமுந் தமிழும் தழைப்பிப்பான் மேற்கொண்ட பணிகளைக் காண்போம்.

சைவம் தழைக்கச் சமரசம் காணல்

சமய எண்ணம் :

நம் அடிகளுக்குச் சமய சாத்திரம் கற்பித்தவர் அவர் தம் குருநாதராம் நான்காம் பட்டத்து அடிகள். சமய சாத்திரத்தை தமிழ் வடமொழிகள் மூலம் நன்கு அறிந்தனர். நாட்டில் தமிழகத்தில் சமய எண்ணம் குன்றி வந்ததை மனதில் நினைத்து வருந்தினர். எப்படியும் மக்கள் சமய உணர்வு பெற்று நன்னெறி சேர்தற்கு மேற் கொள்ள வேண்டிய பணி எது என நினைத்தனர். தாம் ஆங்காங்கு சென்று சமயக் சொற்பொழிவாற்றுதல்தான் தக்கது என எண்ணினர். அவ்வாறே செயல் மேற்கொண்டபோதும் மன நிறைவு இல்லை. அதனால் தாம் மட்டுமின்றிச் சமய அறிஞர் பலரும் இத்தொழிலை மேற்கொள்ளின் நல்லது எனத் திருவுளம் கொண்டு அதற்கு ஆங்காங்குக் கழகம் அமைப்பதே சிறந்தது எனக் கருதினர். அதற்குத்தக்க காலமும் பார்த்திருந்தனர்.

சமாசம் தோற்றுவித்தல் :

கி.பி.1900-ல் மடாலயத்திற்கு வந்த பாண்டித்துரைத் தேவர்கள் முன்னிலையிலே நடந்த அரியதோர் சொற்பொழிவில் தமிழின் பெருமையும், சமயச் சீர்குலைவும் பற்றி விரிவாக எடுத்துரைத் தார்கள். இப்படிப் பல பேரறிஞர்களிடம் தம் திருவுளக் கருத்தை வெளியிட்டு வந்தார்கள்.

சென்னையில் சில அறிஞர்களே சித்தாந்த நூல்களில் தேர்ச்சி பெற்றவராயிருந்தனர். தெற்கே அவற்றைப் பரப்பத் திருமடங்கள் பல இருந்தன - இருக்கின்றனவாதலால் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஓர் அமைப்பினைக் காண்டலே சிறந்த நலம் பயக்கும் எனத் துணிந்தார்கள். கடலூரில் அப்போது தென்னாற்காடு மாவட்ட முனிசிபாக இருந்தவர் திரு. J.M. நல்லசாமிப் பிள்ளையவர்கள். அவர் சுவாமிகளின் சிறந்த அறிவு நலங்கண்டு அடிக்கடி வந்து சித்தாந்தத் தொடர்பான உரையாடலில் ஈடுபடுபவர். அடிகளாரிடம் அளவளாவிய அறிவின் மேம்பாட்டால்தான் பின்னாளில் அவர் சிவஞான போதத்தை ஆங்கிலத்தில் - மொழிபெயர்த்தார், அவரிடம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட அமைப்பு ஒன்றின் வாயிலாகச் சித்தாந்த நூல்களைப் பரப்புதல் இன்றியமையாத சமயப் பணியாகுமென வற்புறுத்திக் கூறினார்கள். அவர், சென்று அன்பர் பலரிடம் கூறி, அவர்களுடைய ஆதரவையும் பெற்றார். (7-7-1905) விசுவாவசு ஆண்டு ஆனித்திங்களில், சென்னை அன்பர்களும் பிற வெளியூர் உள்ளுர் அன்பர்களும் கூடியிருந்த அவையில் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் ‘சைவ சித்தாந்த மகாசமாசம்’ என்ற பெயருடன் நிகழ்ச்சிகளுக்குத் தாமே தலைவராக இருந்து தொடங்கி வைத்தார்கள். அதற்குச் சிதம்பரம் நாவலர் பாடசாலை - சதாசிவம் பிள்ளையவர்கள் தலைவராகவும், பண்டிதர் நாகை வேதாசலம் பிள்ளை (மறைமலையடிகள்) செயலாளராகவும் அமர்த்தப் பெற்றனர். சுவாமிகள், முருகப்பெருமான் திருவருளும் மடாலய முதற் குருநாதரவர்களின் அருளும் சமாச வளர்ச்சிக்குத் துணைபுரிக’ என வாழ்த்தி மகிழ்ந்தார்கள். .

சமாசம் ஆற்றவேண்டிய பணிகள், அதில் ஈடுபட்டோருடைய உழைப்பு முதலாயவற்றை அடிகளார் விரிவாக எடுத்துக்கூறிக் கூடியிருந்தோர் யாவருக்கும் சமாசத்தினிடத்தில் பற்றும், தொண்டு உள்ளமும் எழுமாறு முடிவுரை கூறியருளினார்கள். பின்னர், சென்னையில் சில கூட்டங்களைச் சமாசம் நிகழ்த்தியது. அவை சிறப்புடன் நிகழ்ந்தமை கேட்டும், கடித முதலியவற்றின் வாயிலாக அறிந்தும், இதில் ஈடுபட்டோர் யாவரையும் வாழ்த்திக் கடிதம் எழுதி ஊக்கி வந்தார்கள்.

சமாச மாநாடுகள் :

சுவாமிகளின் ஊக்கத்தாலும் ஆசிகளாலும் சென்னையில் பற்பல இடங்களில் சைவ சித்தாந்த மகா சமாசக் கூட்டங்கள் நடைபெற்றன. மாநாடுகளுக்கென்று தனியே அஞ்சலகம் முதலியனவும் அமைக்கப்பெற்றதும் உண்டு. சார்பாளர்கள் பலர் வெளியிடங்களிலிருந்தும் வருவர். பார்வையாளர்களும் அங்ஙனம் வருவதுண்டு. சார்பாளர், பார்வையாளர், மங்கையர்களுக்குத் தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பெறும். இவையனைத்தையும் தம் திருமடத்திருந்து கேட்டறிந்த சுவாமிகள், இவ்வழியே சமய வளர்ச்சி சிறந்தோங்கும் என்று மகிழ்ந்திருநதாாகள்.

சுவாமிகளின் ஆற்றலும், செயல் திறமை, ஊக்கம் முதலியனவும் நந்தமிழ்நாட்டெல்லை மட்டுமின்றி, மாநாட்டுக்கு வந்து மீண்ட தமிழர் வாழும் இலங்கை முதலாம் கடல் கடந்த நாடுகளிலும் நன்கு பரவின.

1911-ஆம் ஆண்டுவரை, சென்னை நகரிலேயே நடைபெற்றுக்கொண்டிருந்த சமாசக் கூட்டங்கள் 1912 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்ததாக அறியப்படுகிறது. அதற்குச் சுவாமிகள் எழுந்தருளியதாக அறியக்கூடவில்லை. காஞ்சி மணிமொழியார் (பி. செ. மாணிக்கவாசக முதலியார்) 71-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில், அவரது வாழ்க்கை வரலாற்றின் தொடக்கத்தில் காணப்படுவது இச்செய்தி.

அடுத்த 1913-ஆம் ஆண்டில் சமாசத்தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா வேலூரில் நடைபெற்றது. தலைவராக நம் ஞானியார் சுவாமிகளே எழுந்தருளி 'சைவம்’, ‘சித்தாந்தம்' என இரு பிரிவாக்கிக்கொண்டு, தமக்கேயுரிய சிறந்த தலைமையுரை நிகழ்த்தியருளினார்கள். இவ்வுரை கேட்டோர் இவரே சமுதாயத் தொண்டர்; "இவரே சிவம் பெருக்கும் ஞானி" என்றெல்லாம் போற்றினார்.

அச்சமாசக் கூட்டத்தில் சுவாமிகளின் உரைகளைக் கேட்ட, சித்தூர் போர்டு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் C.M.பார்த்தசாரதி முதலியார் அவர்கள் ஹிந்து பத்திரிக்கைக்குச் செய்தி அனுப்பியிருந்தார். அது 13-1-1914 இதழில் வெளிவந்தது.

அடுத்த 1914 டிசம்பரில் சைவசித்த மகா சமாஜத்தின் ஒன்பதாமாண்டு விழா கூடலூர் துறைமுக நகரில் (கடலூர் ஒ.டி.) சிறப்புற நடைபெற்றது. அங்கு தலைமையேற்று விழா நிகழ்த்தியவர்கள் நம் அடிகளாரே யென்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. A.T. முத்துக்குமாரசாமி செட்டியார் சமாச விழா நடக்க ஆதரவளித்தவராவர்.

சமாசத்தின் தளர்ச்சி :

அதன் பின்னர், சமாசம் பெயரளவில் நிலைத்திருந்ததே யன்றி முன்போல் சிறப்பாக நடைபெறவில்லை. இங்ஙனம் 10 ஆண்டுகள் கழிந்தன எனத் துணியலாம். அப்போது நல்லசிவன் பிள்ளையவர்கள் தலைவராகவும், கி. குப்புசாமி முதலியாரவர்கள் செயலாளராகவும் அமர்ந்திருந்தனர். சித்தாந்தம் இதழ் வெளிவரவில்லை. ஆண்டு தோறும், சென்னை நகரிலேயே உள்ள சொற்பொழிவாளர்களைக் கொண்டு பொருட் செலவின்றிப் பெயரளவில் மாநாடு கூடி நடந்தது.

‘பொன்னைவிட மேன்மை பொருந்திய காலம் அவமே கழிகின்றதே! மக்களிடையே சமய வளர்ச்சித் தொண்டு சிறக்க நடைபெறவில்லையே!' என்று அடிகளார் வருந்திக் கூறியமை கேட்ட அடிகளாரின் மாணவர் சிலர், நாமாவது ஒரு புதிய சங்கங்காண முயலலாமெனத் தனியேயமர்ந்து கூடிப்பேசி முடிவு செய்தனர். சுவாமிகளிடம் இச் செய்தியையறிவிக்காமலே சிலர் ஒன்று கூடித் திருவெண்ணெய் நல்லூர் சென்றனர். அப்போது அங்கு, மெய்கண்டார் மடத்தின் தலைவராக இருந்த நமசிவாயத் தம்பிரானின் ஆதரவோடு, அவர் தலைமையில் அகில இந்திய சைவ சிந்தாந்த மகா சமாசம்’ என்னும் பெயர் சூட்டி ஓர் சமாசத்தை நிறுவினர். அதில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப் பெற்றன. அவைகளை அடிகளார் செவிப்படின் மகிழ்ச்சி மிகக் கொள்வார்களென எண்ணினர் அம்மாணவர்.

திருவெண்ணெய் நல்லூர்ச் செய்திகள், செய்தித் தாள்களில் வெளிவந்தன. அடிகளார்க்கும் அறிவிக்கப் பெற்றன. அவர்கள் இச் செயலுக்கு ஆதரவளிக்கவில்லை, மாணவர்களை யழைத்து, முன்பே ஒரு சமாசம் இருக்கும் போது வேறொன்றுக்கு அவசியமில்லை. நாமே தோற்றுவித்த சங்கத்தைக் கைவிட்டு வேறொன்றைத் தோற்றுவித்து அதற்கு ஆதரவு தேடுதல் சிறப்பன்று; முன்னைய சமாசத்தின் நிலையை இச்சங்கம் அடைவதற்கு நீண்ட காலமாகாது; எனவே, புதிய சங்கத்தை வளர்க்கும் முயற்சியைக் கைவிட்டுப் பழைய சமாசத்தை வளர்ப்பதில் ஈடுபடுங்கள் என அறிவுரை கூறினார்.

மேலும், சென்னை சென்று, அங்கு அதன் வளர்ச்சிக்கு ஆக்கம் தேடுங்கள். அதற்குள், நம் நகரிலேயே வேண்டுமாயினும் ஒர் கூட்டம் நடத்திப் பிறருக்கு வழி காட்டுவோம் என்றும் அருளுரை கூறினர்.

மாணவர்களின் முயற்சியின் பயனாகச் சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாசத்தின் பத்தொன்பதாவது கூட்டத்தைத் திருப் பாதிரிப் புலியூரில் நடத்துவதெனச் சமாசம் முடிவு செய்தது. அப்போது செயலராக இருந்தவர் வழக்கறிஞர் ம. பாலசுப்பிரமணிய முதலியாரவர்கள். அவர் இளம் பருவத்தினர்; கடமைகளைச் சுறுசுறுப்போடு செய்யும் ஆர்வமும் ஆற்றலும் மிக்கவர் என்று அடிகளார் கேள்வியுற்று மகிழ்ந்தார்கள்.

1924ஆம் ஆண்டு டிசம்பரில் சமாசக் கூட்டம் திருப்பாதிரிப் புலியூரில் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு அடிகளாரே தலைவர்.

மூன்று நாள் நடைபெற்ற அவ் விழாவிற்கு வந்தோர் யாவர்க்கும், தீ, நா. முத்தைய செட்டியார்வர்கள் உணவளிக்கும் பொறுப்பினை ஏற்றார். சொ.தீ. நாகப்ப செட்டியாரவர்கள் சமாசக்கூட்டம் நடத்தப் பாடசாலை இடத்தைக் கொடுத்தது மன்றி 200 ரூபாயும் அளித்தார்.

விதிகளில் வளைவுகள், தோரணங்கள், பந்தல்கள் முதலிய பொறுப்புகளையெல்லாம், சேர்மன் வேணுகோபால் நாயுடு, மானேசர் ஐயாசாமி பிள்ளை ஆகியோர் அமைத்துத் தந்தனர். பல அன்பர்கள் பொருளுதவி, உடலுதவிகளைச் செய்தனர்.

‘சித்தாந்தம்' இதழை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டுமென வற்புறுத்தியபோது, பலர் அதன் உறுப்பினர் காப்பாளர்களாகக் கையொப்ப மிட்டனர். விழாவின் வரவேற்புக் கழகத்தவர்களும் முந்நூறு வெண் பொற்காசுகள் அளிப்பதாக உறுதி கூறினர்.

சுவாமிகளின் அயரா உழைப்பையும், சமாச வளர்ச்சிக்காக அவர்கள் மேற்கொண்ட செயல்களையும் பாராட்டிய வரவேற்புக் கழகத்தினர் முழுதும் பொற் கவசமிடப் பெற்ற பெளண்டன் பேனா ஒன்றினை அவர்கட்கு நினைவுக் குறியாக அளித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

வரவேற்புக் குழுவினருக்குச் சுவாமிகள் நன்றி கூறி யருளினார்கள்.

பொறுமைக்கோர் எடுத்துக்காட்டு :

இது முன்னாள் செயலர் கி. குப்புச்சாமி முதலியாருக்குப் பிடிக்கவில்லை. தன்னையன்றி நன்றியறிவிக்கச் சுவாமிகளுக்கு என்ன உரிமையிருக்கிறது? சமாசச் செயலரைக் கேட்காமல் செய்த இச்செயல் கண்டிக்கத்தக்கதாகும் என்றெல்லாம் பலரிடமும் கூறி, அன்றிரவு உணவு கொள்ள மறுத்துவிட்டார்.

மறுநாட் காலை, குப்புச்சாமி முதலியார் செய்கையை டாக்டர் - பாலவேலாயுதம் பிள்ளையவர்கள் சுவாமிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டார். அப்போது புகைப்படமெடுக்கும் பொருட்டு யாவரும் திரண்டிருந்தனர். குப்புச்சாமி முதலியாரும் அங்கிருந்தார். சுவாமிகள் போதிய காலமில்லாமையால் இச்செய்தி அறிவிக்கப்பெறாமல் போயிற்றென்றும், சமாசத்தின் முன்னேற்றங் கருதியே இவ்வாறு செய்யப்பெற்றதென்றும் எடுத்துக் கூறியும் முதலியார் தம் சீற்றத்தையே காட்டிக் கொண்டு பேசினார். அடிகளார் உடனே உள்ளே சென்று, ஓர் கடிதத்தை எடுத்துக் கொண்டுவந்து அனைவருக்கும் காட்டினர். அது பதினோரு ஆண்டுகட்கு முன் அடிகளாரின் திருமுகத்திற்கு விடையாகக் குப்புச்சாமி முதலியாரால் எழுதப் பெற்றதாகும். அதில் அவர், தன்னை உயர்த்தியும், அடிகளாரைத் தாழ்த்தியும் சில எழுதியிருந்தார். "கைதவமறியாச் செய்தவமுடையயோய் ! நினாது கடிதங்கண்டாம்." எனத்தொடங்கியிருந்தார். இச்செயல் அங்கிருந்தோ ரனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மீண்டும் சித்தாந்தம் :

1927-ஆம் ஆண்டில் சுவாமிகள் முதல் முறையாகச் சென்னைக்கு எழுந்தருளினார்கள். இப்போது பிராட்வே டாக்கீசு என்னும் இடம் அப்போது பாலசு தியேட்டர் என்ற பெயருடன் வழங்கிவந்தது. அங்கு சமாசத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்று 1927 சூலையில் அடிகளார் தலைமையில் நடந்தது. அது ஒரு மாநாடு போலவே நடந்தது. அக்காலை நீதிபதி சர். வே. பா. இராமேசம், பா. வே. மாணிக்க நாயக்கர், திரு. வி. கலியாண சுந்தர முதலியார் முதலாய பேரறிஞர் சொற்பொழிவாற்றினர்.

அக்கூட்டத்தில் சித்தாந்தம் இதழை மீண்டும் நடத்துவதென முடிவு செய்யப்பெற்றது. அடிகளாரே அவ்வாறு முடிவு செய்யக் காரணர்களாயிருந்தார்கள். தொடங்கும் முதல் இதழுக்காம் பொருட் செலவினைத் தாமே அளிப்பதாக உறுதிகூறி, அவ்வாறே பொருளும் அளித்தனர். அடுத்த 1928-ஆம் ஆண்டு சனவரியில் சித்தாந்தம் தொடங்கப் பெற்றது. அடிகளாரின் அருளாசியும், பொருளாசியும், கைவண்ணமும் இன்றளவும் அவ்விதழ் தொடர்ந்து நடைபெறக் காரணமாயின. வாழ்க அவர்களது கைவண்ணம் !

அக்கூட்டத்தினிறுதியில் நீதிபதி இராமேசம் அவர்கள் அடிகளாரைப் பெரிதும் பாராட்டிப் போற்றினார்கள். அதன் பின் பற்பலர் அழைப்பிற்கிணங்கிப் பல இடங்களில் அருளுரையாற்றி அன்பர் மனங்களில் நீங்கா இடம் பெற்றுப் பிரியா விடை கொண்டு புலிசை மீளத் தொடங்கினார்கள். சென்னை அன்பர்கள் தம் நன்றியறிதலை அறிவிக்குமுகத்தான். கோகலே மண்டபத்தில் ஒர் பொதுக்கூட்டம் கூட்டினர். நகர மக்கள் சார்பில் சர். A. இராமசாமி முதலியார் சுவாமிகளின் அரிய தொண்டுகளைப் பாராட்டி ஆங்கிலத்தில் xஓர் சொற் பொழிவாற்றினர். பிரிவு உபசாரப் பத்திரம் ஒன்றும் வாசித் தளிக்கப்பெற்றது.

புலிசையடைந்தவுடன் அடுத்து வரும் டிசம்பரில் தம் முயற்சியாலேயே சமாச ஆண்டுவிழாவை நடத்துவதெனத் திருவுளம்பற்றினர். புதுச்சேரியில் விழாவை நடத்துவதற்குப் பூரணாங் குப்பம் முனிசாமி முதலியாரும், கிரந்தே-சிவசங்கர செட்டியாரும் முன்வந்தனர். அங்ஙனமே அவ்விழா அடிகளாரின் தலைமையில் மூன்று நாள் நடைபெற்றது. 'சித்தாந்தம்’ இதழுக்குப் பல அன்பர்கள் ஆதரவளித்தார்கள். 1927 டிசம்பரில் நடைபெற்ற சமாசத்தின் இருபத்திரண்டாம் ஆண்டு விழா இதுவாகும்.

சைவப் பெரியார் மாநாடு :

1929-ஆம் ஆண்டு, சைவ சித்தாந்த மகா சமாசத்திற்குப் புத்துயிரளித்த ஆண்டாகும். மே மாதத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் சைவப் பெரியார் மாநாடு’ கூட்டப்பெற்றது. உயர்திரு மறைமலையடிகள் அக்கூட்டத்திற்குத் தலைமைதாங்கினார். செந்தமிழ் நாட்டிலுள்ள சைவ சபைகள் அத்தனையும் அந்த மாநாட்டிற்குத் தத்தம் பிரதிநிதிகளை அனுப்பிவைத்தன. பேரறிஞர் பலரும் திருப்பாதிரிப்புலியூரில் ஒருங்கு கூடினர். சைவ சமயத்தின் அடிப்படையான கொள்கைகள், செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள், அதன் வளர்ச்சிக்கேற்ற வழி வகைகள் ஆகிய எல்லாம் தனித்தனியே ஆராய்ந்து முடிவு செய்யப் பெற்றன. தமிழ்நாட்டில் இன்று, சைவம் வீறு கொண்டு தம் கடமைகளைச் செய்கிறதென்றால் அதற்கெல்லாம் வழி வகுத்துக் கொடுத்தது அம் மாநாடேயாகும்.

மாநாட்டின் முடிவைச் சமாசம் செயற்படுத்தியது :

சமாச வெளியீடாகப் பன்னிரு திருமுறைகள், சாத்திர நூல்கள், அருணகிரியார் திருப்புகழ் முதலிய நூல்கள் திருமுறுகாற்றுப்படை பெரியபுராணம் தோன்றக் காரணமாக இருந்த சீவக சிந்தாமணி முதலிய நூல்கள் வெளி வந்தன. யாவும் அடக்கவிலைப் பதிப்புகளே.

அம்மாநாட்டில் ‘சைவப் பஞ்சாங்கம்' வெளியிட்ட டாக்டர் இ. மு. சுப்பிரமணிய பிள்ளையவர்களுக்கு ரூபாய் நூறு பரிசளிக்கப் பெற்றது.

திருவெண்ணெய் நல்லூரில் :

1929 டிசம்பரில், சைவ சித்தாந்த மகா சமாஜம் திருவெண்ணெய் நல்லூரில், நல்லார் தொழும் வெண்ணெய் நல்லூர்ச் சிவாலயமாம் திருவருட்டுறையில் நடைபெற்றது. நம் சுவாமிகளே தலைவர்களாக இருந்து மூன்று நாள் விழாவினைச் சிறப்பாக நடத்தினார்கள். ஆங்கு, சமாச விழா நடை பெறுவதையறிந்த திருவாடுதுறை ஆதீனத் தலைவர்கள் தம் பிரதிநிதியை யனுப்பியதோடன்றித் தலைவர்களுக்குச் சில மரியாதைகளையும் அனுப்பி வைத்தார்கள். அச் சமாக விழாவின் பொறுப்புகளை யேற்றவர், திருவெண்ணெய் நல்லூர்ச் சின்னசாமி ரெட்டியாரவர்கள். அஃது, சமாச இருபத்து நான்காம் ஆண்டுவிழா வாகும்.

திருப்பாதிரிப் புலியூரில் 'சைவப் பெரியார் மாநாடு' நடந்து முடிந்தபின், சுவாமிகளுக்குப் புற முதுகில் பிளவை அரும்பிச் சில மாதம் படுத்த படுக்கையிலிருந்து, இருமுறை அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் ஒருவாறு நலம் பெற்றனர். அங்ஙனம் நலமுற்ற சில நாட்களுக்குள்ளேயே தம் தொண்டுகளில் முனையத் தொடங்கி விட்டார்கள். ஆம்பூர், வாழைப் பந்தல் ஆம் வடாற்காடு மாவட்டத்தில் சில நாள் அன்பர்களுக்குச் சொல்லமுதம் வழங்கி மகிழ்வித்தார்கள். ஆம்பூரில் இருபத்திரண்டு நாட்கள் எழுந்தருளி யிருந்தார்கள். அதன் பின், திருவெண்ணெய் நல்லூர்ச் சமாச விழாத் தலைமை யேற்றருளினார்கள். சைவ அன்பர் பலர் அப்போது சுவாமிகளின் உடல் நலமுங் கருதாத தொண்டினைப் போற்றினார்கள்.

பிறவிடங்களில் சமாசம் :

1934 ஆம் ஆண்டில், சமாசத்தின் இருபத்தொன்பதாம் ஆண்டு நிறைவு விழா மூன்று நாள் திருவதிகையில் நடைபெற்றது. அப்பேரவையின் சிறப்புச் சொற்பொழிவினை மட்டுமே சுவாமிகள் ஏற்றுக் கொண்டார்கள் தலைவர் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள்.

தாமே தலைவராக இருக்க வேண்டுமென்ற கொள்கை கொள்ளாமல், பிறருக்கும், அவ்வாய்ப்பினை யுண்டாக்கித் தருவதோடு, தாமும் விழா முழுதுக்கும் அங்கெழுந்தருளிச் சிறப்பித்தும், ஆசி வழங்கியருள்வதும் யாவருமே எளிதில் மேற்கொள்ளாத சிறப்பியல்புகளாம் என்பதை ஈண்டுக் குறிப்பிட வேண்டியுள்ளது.

1934 ஆகஸ்டு மாதத்தில் மயிலாப்பூர் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் விசேட மாநாடு ஒன்று நடைபெற்றது. அதற்கு அடிகளாரே தலைமை தாங்கியருளினார்கள்.

1937 ஆம் ஆண்டு டிசம்பரில், சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் ஆண்டு விழா வேலூரில் நடைபெற்றது. அது முப்பத்திரண்டாம் ஆண்டு விழாவாகும். அவ்விழாவினைச் சுவாமிகளே தலைமை யேற்று நடத்தியருள வேண்டுமென்று அங்கத்தினர்கள் முடிவு செய்தார்கள். அவ்வண்ணமே நிகழ்ந்தது. ஆயின், அக்காலை சுவாமிகளின் உடல் நலம் கெட்டிருந்தது. எனினும், அவர்கள் இறைவன் பணியாகக் கருதி ஏற்றக்கொண்ட பணியை அவ் விறைவன் திருவருளே முன்னின்று முற்றுவிக்கு மெனக் கருதி எவரிடமும் வெளிப்படுத்தாமல் இருந்து, சொன்மாரியால் சைவப் பயிரைத் தழைப்பித்துக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்களுக்கு உடம்பு பிடித்துவிடும் பணியில் ஈடுபட்ட அன்பர்கள், உடல் கொதிப்படைந்திருப்பதறிந்து பதறிச் சுவாமிகளைக் கேட்ட போது, அவர்கள் 'எல்லாம் முருகன் திருவருள், நம் கையில் ஏதுமில்லை; பணியை ஏற்றுக் கொண்டபோது அவனே நம் உள்ளத்திலிருந்து அதனை ஏற்றுக் கொள்ளச் செய்தான்; இனி முடித்து வைப்பதும் வைக்காததும் அவன் திருவருள் வயத்தால் மட்டுமே இயலும் : நாம் எடுத்துக் கொண்ட பணியை முடிக்கவே வந்தோம். அதனை இயற்றுங்கால், உயிர் நீங்கினும் மகிழ்ச்சியே. கவலை கொள்ள வேண்டாம் என விடையிறுத்தனர். இரவில் சுரம் 1030 அளவிற்குக் கூடுவதும், பகலில் குறைவதுமாக இருந்தது. மூன்று நாளளவும் சுவாமிகள் தலைமை தாங்கி மாநாட்டைச் சிறப்பித்தருளினார்கள்.

சுவாமிகளால் எழுதப்பெற்ற சைவ ஒழுக்கம் என்னும் சிறு நூல் ஒன்று அச்சிடப் பெற்றுக் கூட்டத்தினர்க்கு வழங்கப் பெற்றது. அது யாவர்க்கும் பெரும் பயன் விளைவிக்கும் சிறு நூலாகும்.

சைவ சித்தாந்த மகா சமாசததின் முப்பத்தைந்தாம் ஆண்டுவிழா 1940 ஆண்டில் மயிலத்தில் நடத்துவதென முடிவாயிற்று. மயிலம், பொம்மபுர ஆதீனத்தின் பதினெட்டாம் பட்டமேற்று எழுந்தருளியிருந்த ஸ்ரீலஸ்ரீ - சிவஞான பாலய சுவாமிகள் தம் மடாலயத்தின் சொந்தப் பொறுப்பில் அதனை நடத்தித்தர முன் வந்தார்கள். ஞானியார் சுவாமிகள் தலைமை யேற்றருள்வார்களென்றே யாவரும் நம்பியிருந்தனர். ஆயின், அவர்கள் உடல் நலம் இடந்தரவில்லையாதலால் திருக்கோவலூரிலேயே தங்கியிருந்தார்கள்.

சமாஜத்தின் முப்பத்தாறாம் ஆண்டு விழாவினைத் திரிசிரபுரத்தில் நடத்துவதென அன்பர்கள் முடிவு செய்தனர். திருக்கோவலூரில் தங்கியிருந்த சுவாமிகளைத் தலைமை யேற்குமாறு வற்புறுத்தி வேண்டினர். ‘அன்பர் பணியே இறைவன் பணி' அதுவே இன்பப் பணி எனவே தம்வாழ்வில் ஏற்றிருந்த சுவாமிகளும் திருவுள்ளக் கருத்து இசைவினைத் தெரிவித்தார்கள். சிலநாள் முன்னதாகவே செல்லும் இயல்பு கொண்டவர்களாதலால் அங்ஙனமே வழிக்கொண்டார்கள். பெண்ணாகடத்தில் அன்பர்கள் வேண்டிக் கொள்ளச் சொன்மாரி பொழிந்தார்கள். திரிசிரபுரம் சென்றடைந்தபோது அன்பர் பலர் எதிர்கொண்டழைத்தனர். அவருள் குறிப்பிடத் தக்கவர்கள். திருச்சி நாஷனல் கல்லூரியில் தமிழ்ப் பணி புரிந்து கொண்டிருந்த திரு. ப. கந்தசாமி அய்யர் (பின் ஆறாம் பட்டத்தில் எழுந்தருளியிருந்தவர்கள்), டி. எம். நாராயண சாமிப் பிள்ளையவர்கள், க. அரங்கசாமி முதலியாரவர்கள், அ. நடேச முதலியாரவர்கள் முதலியோார்.

1941 டிசம்பர் 25-ஆம் நாள் தொடங்கி, மூன்று நாட்கள் திரிசிரபுர ஆண்டு விழா செவ்வனே நடைபெற்றது.

அதுவே சுவாமிகள் சமாசத்திற்குச் செய்த பணிகளுள் இறுதிப் பணியாம்.

பற்பல இடங்களில் கிளைக் கழகங்களை நிறுவச் செய்து அவை தாய்ச் சங்கத்தோடு தொடர்புகொண்டு பற்பல பணிகளையும் மேற்கொள்ளுமாறு தூண்டினார்கள்.

செயலாளராக அமர்ந்து பற்பலவிதங்களிலும் சமாசம் அரும் பணிகளையாற்ற வழி வகுத்தவர்களான திரு. ம. பால சுப்பிரமணிய முதலியார் B.A., B.L., அவர்களைச் சமாசம் ஒரு நாளும் மறக்க இயலாது. அவர்களுக்குப் பல விதங்களிலும் ஆலோசனைகளைச் சுவாமிகள் அருளிச் செய்ய, அவர்களும் சிறந்த பணிகளை மேற்கொண்டு சமாச வளர்ச்சிக்கும் அதன் வாயிலாகத் தமிழ்நாட்டில் சைவ நன்னெறிக்கும் அருந்தொண்டு புரிந்தார்கள்.

சமாசச் செயலாளராகச் சிலகாலம் தொண்டுபுரிந்தவரே யெனினும் குறிப்பிடத்தக்க பல வழிகளை வகுத்து உதவியவர், திரு. கா. இராமநாதன் செட்டியாரவர்கள், அவர் ராஜாசர். அண்ணாமலைச் செட்டியாரவர்களுடன் அயல் நாடுகளும் சென்று மீண்டவர், அவரும் சமாசத்தின் ஒரு தூணாக விளங்கியவர்.

சைவ சித்தாந்த மகா சமாசம் பின்னர் ஞானியாரடிகள் நினைவு நிதி திரட்டி, ஞானியாரடிகள் நினைவு மலர் (சொற்பொழிவுத் தொகுப்பு ஒன்றினைச் சமாச வெளியீடாக 1958-ஆம் ஆண்டில் மயிலத்தில் நடந்த சமாச ஆண்டு விழாவில் வெளியிட்டது)

இதுவரை சுவாமிகள் சைவ சமயம் கடைத்தேறும் வண்ணம் ஆற்றிய பல தொண்டுகளுள் ஒன்றாய சமாசத் தொண்டு பற்றி மட்டுமே கூறப்பெற்றது. பிற நிறுவனங்களோடு கொண்ட தொடர்பு பின்னர் கூறப்பெறும்.

கல்விப் பணிகள் :

கால வேறுபாட்டால்; அரசியல் வேறுபாட்டால் கலக்கம்கொள்ளாமல் உள்ளது போதுமென்ற மன நிறைவுடன் இறைவனுக்குப் பூசனை புரியப் பிறந்த பேறே பெரிதென மதித்து, ஆன்மார்த்த பூசையாம் இட்டலிங்க பூசையும், பரார்த்த பூசையாம் சிவன்கோயிற் பூசையும் ஏற்றுச்சைவத் தோடு ஒன்றிய வீரசைவப் பயிரைத்தழைப்பித்துக் கொண்டு வாழ்ந்திருந்தோர் தமிழக வீரசைவர்கள். தம்மையடைந்த சிறுவர்க்குக் கல்வியறிவு ஒழுக்கங்களையும் போதித்தவர்கள். அவர்களுள் சிற்நதவராகிய நம் சுவாமிகள் சிறந்த சோமநாத ஆராத்திரியர் வழிவந்த ஞானியார் சுவாமிகள் மடாலயத் தலைமை யேற்றருளியதால் சிறியோரும் பெரியோரும் கல்வியறி வொழுக்கங்களின் மேம்பட்டு விளங்கத் தொண்டு புரியவே, தமக்கு இப்பெரும் பொறுப்பு வாய்த்ததென்ற கருத்தினைப் பெற்றவர்கள். அவர்களது கல்வித் தொண்டால் தான் இன்று நாம், தமிழர் என்ற தலைநிமிர்ந்து நிற்கிறோம் எனில் அது புனைந்துரை யன்று.

அக்கால தமிழின் நிலை :

படிப்பு என்றால், உத்தியோகத்துக்குப் படிப்பதே யென்பதும், ஏதோ சில வகுப்புகள் வரை படித்து உத்தியோகம் பெற்றவர், மேலும் படிக்கத் தேவையில்லை யென்பதும் அயல் மொழியாளர் ஆட்சியால் நாம் அடைந்த தவறான கொள்கை. இந்த நிலையில் தாய் தமிழைப் புறக்கணிப்பாரே மல்கியிருந்தனர். அதூஉம் தமிழராய்ப் பிறந்தாரே, எனக்குத் தமிழில் பேச வராது; ஆங்கிலத்தில் வேண்டுமானால் சொற்பெருக் காற்றுகிறேன் என்று கூறும் நிலை இருந்தது. சிலர், அப்படிப் பேசுவதே தம் பெருமைக்கு ஓர் அளவு கோலெனக் கருதும் நிலை இருந்தது.

தமிழைக் கற்றால் பயன் ஒன்றும் கிடையாதாதலால், எப்பாடு பட்டேனும் அயலார் கல்வி படிப்பதற்கே தம் பிள்ளைகளை யனுப்பினர் பெற்றோர். அப்பள்ளியிலோ பொருட் செலவு மிகுதியும் உண்டு. திண்ணைப் பள்ளிகள் சில ஒருவாறு கல்வியளித்தன எனினும் அவை போற்றுவாரின்மையாலும் போதனை முறை பயின்று போதிப்பவர் ஆங்கில்லையாதலால் அரசினர் ஆதரவு பொறாமையாலும் அருகிவிட்டன. இந்த நிலைதான் இந்த நூற்றாண்டின் தொடக்க நிலை. அந்தோ தமிழின் நிலை இதுவா? எத்தனை அருமையான நூல்கள் உள்ளன. அவையன்றோ உள்ளத்தை வளர்ப்பன அவற்றைக் கற்றவரல்லரோ, தமக்கென வாழாப் பிறர்க்கென முயலுநர் என்றெல்லாம் சுவாமிகள் உளமுருக எண்ணுவார்கள். தம் அரிய சொற் பெருக்குகளில் சொல்லவும் சொல்வார்கள். சொல்லுங்கால், கேட்போர் தமிழினிடம் பற்றற்றவராய் இருப்பாரே யெனினும் அவர்க்கும் சிறிதளவும் மனதில் தாக்கா வண்ணம் கூறுவார்கள். அவர்களது உள்ளமே தமிழ் மூச்சே தமிழ் தண்ணளியே தமிழ் ஆம்! பிறமொழிகள் சிலவற்றைச் சுவைத்தறிந்த பின் கொண்ட திடமான உள்ளத்தில் ஊறிய தமிழ்! 'இருந்தமிழே உன்னால் இருந்தேன்’ என்ற ஆன்றோர் வாக்கு அவர்களுக்கே பொருந்துவதாகும்.

அப்போதெல்லாம், தமிழ்க் கல்லூரி கிடையாது. திருவையாற்றிலே வடமொழிக் கல்லூரி இருந்தது. பல்கலைக் கழகத்தாரின் கீழ்க்கலைப் பட்டத் தேர்வுக்கு வடமொழி பயில்வோர் அங்குப் பயிற்றப் பெற்றனர். சுவாமிகள் தென்னாட்டுத் தல யாத்திரை செய்தபோது அவர்களது வட மொழியாற்றல் குறித்து வியந்து மகிழ்ந்த அக் கல்லூரித் தலைவரும், ஆசிரியர்களும் சுவாமிகளுக்கு வடமொழியிலேயே ஓர் பாராட்டிதழ் கொடுத்துச் சிறப்புறச் செய்தது முண்டு.

வடமொழிக் கல்லூரி தமிழுக்கும் ஆயிற்று :

தமிழ் நாட்டு மன்னவன் செய்த அறக்கட்டளை தமிழுக்கென அமைக்கப் பெற்றிருக்கக் கூடாதோ? ஆம், அதனை ஆராய வேண்டுமென்ற கருத்து அவர்கள் உள்ளத்தில் முகிழ்ந்தது. யாத்திரையின் போது, சுவாமிகளுக்கு அன்பராயினர் பலர். அவ்வவரும் சுவாமிகளின் நாவன்மை, தவத்திருக் கோலம், வசீகரிக்கும் திறன் முதலிய வற்றில் மனத்தைப் பறிக்கொடுத்தவர்கள். அவர்களுள் தஞ்சைக் கருந்தட்டாங்குடியில் வாழ்ந்த வழக்கறிஞர் த. வே. உமா மகேசுவரம் பிள்ளை, B.A., B.L.அவர்களும் ஒருவர். அவர் பின்னர்தஞ்சை மாவட்டக் கழக (Thanjavur Dt. Board)த் துணைத் தலைவராகி யிருந்தார். அவ்வடமொழிக் கல்லூரி, அக்கழக ஆட்சிக்குட்பட்டதாயிருந்தது த.வே. உமாமகேசுவரம் பிள்ளையைத் தம் மடாலயத்திற் கழைத்து, அக் கல்லூரி நடைபெறுவதற்கு அளிக்கப் பெற்ற மானிய முதலியவற்றிற்கென எழுந்த அறக் கட்டளையைப் பரிசோதிக்குமாறு ஆலோசனை கூறினார்கள். அவர், தலைவராக இருந்த சர் AT. பன்னீர் செல்வம், Bar-at-law வுடன் கலந்து பழைய செப்புப் பட்டயத்தைப் பரிசோதித்துப் படியெடுத்துக் கொண்டு தலைவருடன் மடாலயத்திற்கு வந்தார். சுவாமிகள் அவ்விருவருக்கும் தக்க உபசாரம் புரிந்து அளவளாவினார்கள். தமிழுக்கு அந்த அறக் கட்டளை உதவி செய்யத் தடை ஏதுமில்லாதவாறு, பொதுவாகக் கல்விக்கே என எழுதப் பெற்றிருந்தது. எனவே, அக் கல்லூரியில் தமிழும் பயிற்றுவிக்க வழிசெய்வது தமிழராம் நமது கடன் என அவர்களுக்கு அறிவுறுத்தி விடையளித்தார்கள். அவர்கள் தஞ்சை சென்று அடுத்த ஆண்டிலேயே அக் கல்லூரியில் தமிழ் பயில்வதற்கெனப் பத்து மாணவர்க்கு இடம் ஒதுக்கினார்கள். படிப்படியே பாதி தமிழ்க்கல்வி பயிலும் மாணவரும் பாதி வடமொழிக் கல்வி பயில் வோருமாக மாற்றப்பெற்றது. வடமொழிக் கல்லூரி என இருந்த அது அரசுக் கல்லூரி எனப் பெயரும் மாற்றப் பெற்றது. திரு. த. வே. உமா மகேசுவரம் பிள்ளையர்கள் தமிழ் மொழிக் கல்விக்கு ஆக்கந்தேடித் தந்ததும், அவரது நன் முயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நல்ல பணிகளைப்புரிவதும் சுவாமிகளுக்கு மிக்க மகிழ்ச் சியளித்தன. அதனால் தமக்கு அறுபானாண்டு நிறைவு விழா நடைபெற்ற பேரவையில் 1933ல் அவருக்குச் செந்தமிழ் புரவலர் என்ற சீரிய பட்டத்தினை அளித்துச் சிறப்பித்தார்கள்.

கரந்தைப் புலவர் கல்லூரி :

முன் கூறப்பெற்ற த.வே. உமா மகேசுவரம் பிள்ளையவர்கள், தமிழ்ப் பற்று மிக்கவர். அவர் தன் முயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கம் 1911ல் சாதாரண வைகாசி மாதத்தில் தோற்றுவித்தவர். அதனைப் பல முயற்சிகளுடன் திறம்பட நடத்தியவர். அத்தமிழ்ச் சங்கத்தின் ஏழாம், எட்டாம் ஆண்டு விழாக்களுக்குச் சுவாமிகளே தலைமை தாங்கியுள்ளார்கள். அவ் விழா சித்தார்த்தி ஆண்டு வைகாசித் திங்கள் 11௳ நடைபெற்றது. அத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் கல்லூரி ஒன்றினையும் தொடங்க வேண்டுமென நம் சுவாமிகள் அவர்களை ஊக்கினார்கள். அங்ஙனமே அச்சங்கத்தின் ஆதரவில், அச்சங்கம் வெள்ளிவிழாக் கொண்டாடிய 1938, ஏப்ரலில் புலவர் கல்லூரி ஒன்று அடிகளாரின் திருக் கரங்களாலேயே தொடங்கி வைக்கப் பெற்றது. அது காலை சங்கத்தின் தலைவராம் அவருக்குத் தமிழவேள் என்ற பட்டத்தினையும், அச்சங்கப் புலவராம் திரு. வேங்கடாசலம் பிள்ளையாவர்கட்குக் கவியரசு என்ற பட்டத்தையும் அருளிச் சிறப்பித்தார்கள்.

முன், த.வே.உ. பிள்ளையவர்களுக்குச் செந்தமிழ்ப்புரவலர் என்ற பட்டமளிக்கப் பெற்றதன்றோ? இப்போது, தமிழவேள் என்ற பட்டமும் சேர்ந்தது. அவரது இறுதி நாள் வரை இப்பட்டங்களை இணைத்தே அவரைக் குறிப்பிட்டது தமிழுலகம்,

கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவிற் கெழுந்தருளித் தலைமை தாங்கி நடத்தி அரிய பெரிய கருத்துக்களைத் தெள்ளத் தெளிய விரித்துரைத்து யாவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்குமாறு செய்தருளிய நம் சுவாமிகளுக்கு அத் தமிழ்ச் சங்கம், கனமற்றதும், உறுதியுடையதும், வசதி மிக்கதுமான ஓர் மேனாவினைச் செய்தளித்தது. அம்மேனா (சிவிகை) இன்றும் மடாலயத்தில் உள்ளது.

தமிழ்க் கல்லூரிகளுக்கு வழி காட்டல் :

தாம் தொடர்புகொண்டு தம் நேர்ப்பார்வையில் 1917 முதல் தொடங்கி நடத்தப் பெற்ற ஸ்ரீ பாடலேச்சுரர் தரும பாடசாலையிற் பயின்ற பிள்ளைகள், அந்நாளைய மெட்ரிக்குலேஷன் பயின்ற பின்னர் கல்லூரியாக்கி அதனில் தமிழ்க் கல்வி கற்பிக்கத்தக்க வகை காணல் சுவாமிகளது குறிக்கோளாக இருந்தது. சில காரணங்களால் அப்பள்ளி மூடப் பெற்றது. அதனால் வருத்தமிக்க கொண்ட சுவாமிகள், 1933ல் தமக்கு அறுபானாண்டு நிறைவு விழா நடந்த போது ஓர் கல்லூரி அமைக்கவெனத் தம் சொந்தப் பொறுப்பில் பதினாயிர ரூபாய் ஒதுக்கினார்கள். கல்லூரிப் புகுமுகத் தேர்வுக்குப் படிக்க விழைந்தார் சிலரை மாணவராக அமர்த்திப் புகுமுக வகுப்பும் தொடங்கி விட்டார்கள். முன்னதாக (Advance)ச் சில வகுப்புகளில் தனித்தமிழை வளம்பெறக் கற்றவர்தான் சிறந்த தமிழறிவு நிரம்பியவராய் மலரக் கூடுமாதலால் முதல் வகுப்பு முதல் 5 வகுப்புகள் தொடங்கப் பெற்றன. தம் மாணவருள் வீரசைவராய், அடுத்திருந்த வண்டிப்பாளையத்தை உறை விடமாகக் கொண்டவராய்ச் சிறந்த கல்வியறிவாற்றல்களும் ஒழுக்கமும் நிரம்பியவராய்ப் பயிற்சித் திறம் படைத்தவராய் விளங்கிய ம. உருத்திரசாமி ஐயரவர்களையே தலைமையாசிரியராக அமர்த் தினார்கள். திரு. முத்து இராசாக் கண்ணனார், திரு. பெரியத் தம்பிப் பிள்ளை, திரு. திருநாவுக்கரசு, திரு. மு. பழநி வேல், திரு. க. பா. வேல்முருகன் ஆகியவர் துணையாசிரியர்களாகப் பணி புரிந்தார்கள்.

மயிலம் - பொம்மபுர ஆதீனம் 18ஆம் பட்டத்துச் சிவஞான பாலயசுவாமிகள் தாம் பட்டமேற்ற காலத்திலிருந்து எண்ணி வந்த எண்ணத்தை - தமிழ்க் கல்லூரி நிறுவ வேண்டும் என்ற திருவுளத்தை ஞானியார் கலாசாலை தூண்டியது. அதன் விளைவாக அவர்கள் ஸ்ரீமத் சிவஞான பால்ய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியை 14-7-1938 ல் தோற்றுவித்தார்கள்.

அவர்களைப் பின்பற்றிப் பிற திருமடங்களும் தமிழ்க் கல்லூரிகளைத் தோற்றுவித்தன.

தாமே பாடம் படிப்பித்தல் :

அந்நாள் தொடங்கியே சுவாமிகள் தனியே தமிழ் கற்க விரும்புவோரனைவர்க்கும் தாமே நேரிற் பயிற்சியளித்துக் கல்லூரிகளுக்கனுப்புவதை மேற்கொண்டிருந்தனர். அவர்களது அறுபானாண்டு நிறைவு விழாவிற்குப்பின் அமைக்கப் பெற்ற ஞானியார் கலாசாலையிற் பயின்றவர் மிகப் பலர். அவர்களெல்லாம். இன்று ஆசிரியப் பணி பூண்டு சிறக்க வாழ்கின்றனர்.

தம் மாணவர் கற்றறிந்து புலவர் பட்டத்தேர்வில் தேர்ச்சி பெற்றாரென்றவுடன், தம்மிடம் பேரன்பு பூண்ட தகைமையாளர் எவரேனும் மடாலயத்திற்கு வருவரேல் அவர்களது ஆளுகைக்குக் கீழ்ப்பட்ட பள்ளிகளில் அவர்களையமர்த்துமாறு கூறி அவர்களைச் சிறக்க வாழவைத்தவர்கள் நம் அடிகளார். உடல் நலம் குன்றிய காரணத்தால் படுத்த படுக்கையாக இருந்த காலங்களிலும் தம்மன்பர் வர, அவர்கள்பால் தம் மாணவரைச் சுட்டிப் பயன் தருமாறு கூறிக் கருணை பாலித்த நிகழ்ச்சிகளும் உள. வேலை கிடைக்குமளவும் அத்தகையார்பால் இருந்து அவர்களது சில தகைமையான வேலைகளில் இருக்கச் செய்யவும், பின்னர் வேலையில் அமர்த்துமாறும் சில மாணவரையனுப்பிய நிகழ்ச்சிகளும் உள. ஆகவே, சுவாமிகள் செய்த அருஞ்செயல் களால் எத்துணையோ மாணவர் நலம் பெற்றார்களென்பதை இங்குக் குறிப்பிடாமலிருக்க இயலவில்லை.

ஞானியார் மாணவர் கழகத்தின் வாயிலாகப் பற்பல தமிழ் நூல்கள் பாடமாக நடத்தப்பெற்றன. அக்காலங்களில் குரு தரிசனம் குறித்தோ வேறு காரணம் பற்றியோ வரும் அன்பர்களும் தமிழ் நூல்களிற் பற்றுக்கொண்டு நூல்களைப் பயிலக் கருத்துக் கொள்ளவைத்த நிகழ்ச்சிகளும் உள. இன்னுமொரு நிகழ்ச்சியும் காண்போம்.

சமயம் வாய்த்தபோது தம் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்த ஸ்ரீபாடலேச்சுரர் தரும பாடசாலையில் ஒருவரை ஆசிரியராக நியமித்து, அவர் தொல்லையின்றி உணவு முதலிய பெற வாய்ப்பளித்தார்கள். அவரைப் போன்ற திருப்பாதிரிப் புலியூரினரான ஒரு அந்தணப் பிள்ளையும் பயில வந்தார். அவர்க்கும் அப்பள்ளியிலேயே நியமனமும் கிடைத்தது. இருவரும் குறிப்பிட்ட நேரங்களில் சுவாமிகளிடம் தனியே பயின்றனர். பின்னாளில் முன்னவர் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னவர் கடலூர் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியர்களாக நியமனம் பெற்றுச் சிறந்தார்கள்.

முன்னவர் திரு. க. ர. துரைசாமி அய்யர், பின்னவர் திரு. சங்கர அய்யர்.

ஏசடியார் என்பார் ஒருவர். அவர் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர். சுவாமிகளின் எளிவந்த தன்மை முதலியவற்றால் அவர்களையடைந்தார். நன்கு படித்தார். பின்னாளில் நெல்லிக் குப்பம் டேனிஷ் மிஷன் உயர் தொடக்கப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அவர் சைவர் போலவே தோற்றமளிப்பவராவர்.

திருப்பாதிரிப்புலியூரில் தீ. சொ. கிருஷ்ணப்ப செட்டியாரது பொருளுதவியினால் தேவார பாடசாலை நடந்து கொண்டிருந்தது. தேவார ஆசிரியராகத் திரு. மு. நடராஜ தேசிகரவர்கள் அமர்த்தப் பெற்றார்கள். அவர் சுவாமிகளிடம் நிரம்பிய அன்புகொண்டு, நாள்தோறும் மாலை நடைபெறும் பாடங்கட்கும் சுவாமிகள் ஆற்றும் சொற்பொழிவுகளுக்கும் வருவார். அவ்ர் தமிழ் பயில அவாமிக்குடையராய்ச் சுவாமிகளிடம் விண்ணப்பித்தபோது, அவருக்கும் தனியே பாடங் கற்பித்தார்கள். அவர் வித்துவான் தேர்வில் தேர்ந்து சிறந்தார். பின்னாளில் தேவார பாடசாலை நிறுத்தப்பட்டுவிட்டதால், அவர் திருவிடைமருதூரில் தேவார ஆசிரியராக இறுதிவரை பணியாற்றினார்.

நம் அடிகளாரிடம் பாடம் பயின்றோர் எண்ணிலடங்கார். சாத்தாத ஸ்ரீவைணவ குலத்து அம்மையார் ஒருவரும், கடலூர் கிறித்தவக் கன்னிமார் சிலரும் பாடம் பயின்றுள்ளார்கள்.

இராவ் பகதூர் திரு. இராசாபாதர் முதலியார் அவர்களின் அருமை மகளார் திருமதி. க. ர. ஆதிலட்சுமி அம்மையார் அவர்களும், அவர் தம் கணவனார் திரு. கே. அரங்கசாமி முதலியார் (Deputy Inspector of Local Boards) அவர்களும்பிறரும் பயின்றுள்ளார்கள்.

குடும்பமே அடிகளாருடன் தொடர்புகொண்டு பயின்றோரும் உண்டு. திருப்பாதிரிப்புலியூர் டாக்டர் பாப்பையா என்ற இராமலிங்கம் செட்டியார் அவர்கள் அவருள் ஒருவர். அவர் தம் மக்கள் திரு. சக்கரபாணி, திரு. வேல் முருகன் ஆகியோர் குழந்தைப் பருவத்திலிருந்தே அடிகளிடம் தொண்டு செய்து கல்வி பயின்றவர்கள். காஞ்சிபுரம் சிவசாமி தேசிகர் போன்றோரும் பலர்.

அடிகள் வீர சைவராயினும் சாதி சமய பேதம் இன்றியாவர்க்கும் கல்வி பயிற்றியதோடு யாவரையும் தொண்டராகவும் கொண்டிருந்த பெருமை அக்காலத்தில் அவரையே சாரும்.

பாடலேசுவரர் தரும பாடசாலை :

கி.பி. 1917-ல் உயர்திரு. தீ. சொ. நாகப்ப செட்டியார் என்பவரைக் கொண்டு பாடலேசுவரர் தரும பாடசாலை என்னும் பெயரால் ஒரு பள்ளியை நிறுவினார்கள்.

அப்பாடசாலை வளர்ந்தது. முதலில் அதன் ஆசிரியர் வண்டிப்பாளையம் திரு. ம. உருத்திரசாமி அய்யரவர்கள். பின் மாணவர் பலர் சேர்ந்தனர். படிப்பு இலவசம். சட்டை முதலியன அணிந்து கொண்டுதான் பள்ளிக்கு வர வேண்டு மென்ற கட்டுப்பாடு கிடையாது. ஒரே துண்டு மட்டுமே, அதுவும் குசேல ஆடையாக அணிந்து கொண்ட வந்து படித்த மாணவரும் இருந்தனர். காரணம் என்ன ? அப்பள்ளி வறியர்க்காகவே எழுந்ததாகும். மிக மிக வறியவர்களும் தம் பிள்ளைகளை ஆங்கனுப்பிப் படிக்கவைத்தனர். சுவாமிகள் முதன் முதலில் மாணவர்களுக்குப் பாட புத்தகங்களை இலவசமாகவேவழங்கினார்கள். பின்னர் மாணவர் பல்கினர். வகுப்புகளும் பலவாயின. ஆசிரியர் சிலரும் துணைக்கென அமர்த்தப் பெற்றனர்.

சுவாமிகள் அப்பள்ளியின் முன்னேற்றத்திற் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். தம் மடாலயத்தின் முன் கூடம், பின் கட்டு, பிள்ளையார் முன்வெளியிடம் ஆம் இடங்களிலும் வகுப்புகள் நடைபெற்றதுண்டு. இயிைடையே சில வாடகை யிடங்களிலும் இடங்களிலும் நடந்ததுண்டு. அதை நடத்தத் தகுந்த இடம் பெறுமளவும் அங்ஙனம் நடந்தது. பெருமுயற்சியுடன் மடாலயத்திற்கெதிரிலேயே இடம் அமைக்கப் பெற்றபின், ஆங்குக் கொட்டகையமைத்துப் பள்ளியை நடத்தினார்கள். மடாலயத்திற்குச் சொந்தமான இடத்தையும் பள்ளிக்கென விட்டார்கள், சுவாமிகள் தம் மடாலயத்தருகிலேயே அப்பள்ளி நடைபெற்றதாதலால், சுவாமிகள் அவ்வப்போது நேரிற்சென்று மாணவர்களைப் பரிசோதித்தலும், ஆசிரியர்கள் தக்கவாறு பயிற்சி தருகிறார்களா என்பதையும் கவனிப்பார்கள். நாள்தோறும் ஆறு மணி நேரம் பள்ளி நடைபெறும். காலை 9 மணி முதல் 12 மணி வரை பிற்பகல் 2 முதல் 5 மணிவரை பள்ளி நடைபெறும்.

பாடசாலையை அரசியலார் அங்கீகாரத்திற் குள்ளாக்க வேண்டுமெனச் சுவாமிகள் ஏற்பாடு செய்தார்கள். அதனையறிந்த வேறொரு கிருத்துவப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒப்புதல் அளிக்கக் கூடாதென முன்னின்றார். அப்பள்ளியிற் பயில்வோர் பெரும்பாலோர் செல்வர் வீட்டுப் பிள்ளைகள். இங்கு பயில்வார் யாவரும் ஏழைகளே. ஒரு சில வசதியுள்ள வீட்டுப் பிள்ளைகளும் படித்தார்கள். ஏழைகள் முன்னேற வொட்டாமற் செய்வதுதானே செல்வர் இயல்பு ஏழைகளுக் கெனவே அமைக்கப்பெற்ற பள்ளி அங்கீகாரம் பெறுமாயின் செல்வர்க்கு ஏவல் செய்யும் ஏழைகள் கிடைக்க மாட்டார்களே! ‘மனிதர் உணவை, மனிதர் பறிக்கும் வழக்கம்; மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை' என்றெல்லாம் பாரதி இவை போன்ற இழிந்த உள்ளங்களைக் கண்டு கொள்ளாமலா பாடிவிட்டார்? உண்மை உண்மை! முக்காலும் உண்மை எனினும் தளர்ச்சி கொள்ளாமல் பாடசாலையை நடத்துமாறு கவனித்துக் கொண்டார்கள் நம் அடிகளார்.

நீதிபதி டி. சதாசிவ ஐயர் குமாரரான திரு. கிருஷ்ண மூர்த்தி அய்யர், மாவட்டக் கல்வியலுவலராக மாற்றம் பெற்று இங்கு வந்தார். அவர் முதன் முதலாகச் செய்த வேலை ‘ஸ்ரீ பாடலேச்சுரர் தரும பாடசாலையை அங்கீகரித்ததேயாகும். அவரைப் பாராட்டிச் சுவாமிகள் வாழ்த்துக் கூறியருளினார்கள். எதிர்பாராமல் செய்த இந்தப் பணியினைக் குறித்துச் சுவாமிகள் பல சமயங்களில் பாராட்டுவதுண்டு.

பள்ளி எட்டாம் வகுப்பினை ஏற்று நடத்தும் வாய்ப்பு படிப்படியாய் வந்துற்றது. அப்போது, பல்கலைக் கழகப் பட்டப் படிப்பும், ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் (B.A., LT.) பெற்ற தலைமை யாசிரியரே அமர்த்தப் பெற வேண்டும். அங்ஙனம்! அமர்த்தப் பெற்ற ஒருவர் நன்றாக வேலை செய்துகொண்டிருந்தார். தன் சொந்த ஊர்ப் பக்கம் அவருக்கு வேலை கிடைக்கவே அவர் இதனை விட்டு விட்டார். 1926ஆம் ஆண்டு வேறொரு B.A., LT., ஆசிரியர் தலைமை யாசிரியராக வந்தார். அவர் சுவாமிகள் தொடர்பு இல்லாமல் வெளியூரிலிருக்கும் புரவலரிடம் நேரே தொடர்பு கொள்ளத் தொடங்கினார். 'கரைப்பார் கரைத்தால் கல்லுங்கரையு’ மன்றோ? அதுவரை மாதச் சம்பள முதலிய செலவுகள் மாதாமாதம் சுவாமிகளுக்கே வந்து சேரும். யாவரும் அவர்களிடம் பெற்றுக் கொள்ளல் வழக்கமாக இருந்தது. ஆனால் அந்தப் பட்டதாரித் தலைமை ஆசிரியருக்கு அது பிடிக்காததொரு பக்கம், தனக்கு வேறுவித வருவாய் கிடையாதே என்ற குறையும் ஒரு பக்கம். இதனால் செட்டியாரிடம், நீங்கள் செலவு செய்து பிள்ளைகளைப் படிப்பிக்கிறீர்கள். அதனைச் செட்டியார் பள்ளி என்றே கூறுகின்றனரே! இனி என்னிடம் எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படையுங்கள்; நான் பள்ளியைத் தங்கள் பெயரமைய நடத்துவதைக் காணுங்கள் என்றெல்லாம் கூறினார். பலரும் புகழ வாழ வேண்டுமெனக் கருதாதார் யார்? அவரும் அதற்கிசைந்தார். பணம் நேரடியாக அவருக்கே வந்தது. சம்பளம் கொடுக்கும் போது சிறிதளவு குறைத்துக் கொடுத்தார்; சிலருக்குப் பின் தருகிறேனென்றார்; முன் சரியாகப் பெற்றுக் கொண்டவரிடமும் இடையில் கடன் கேட்டுப் பெற்றார். கடைசியாகச் சம்பளப் பணம் வரவில்லை யென்று பொய்கூறி நம்பவைத்தார். பெரும் பொருள் கையாண்டபின் அவரே மறைவிடம் நோக்கிச் சென்று மறைந்தார்.

சுவாமிகள் அப்போதெல்லாம் வெளியிடங்களில் தொண்டு மேற்கொண்டு சென்றிருந்தார்கள். மேலும், தாமே கொண்ட அகந்தை காரணமாக அத் தொடர்புடையோர் நெருங்காதிருந்ததால், அப்பள்ளித் தொடர்பை அறவே விட்டு விட்டார்கள். பள்ளி மூடப்பெற்று விட்டது.

இதனை நினைந்து நினைந்து சுவாமிகள் வருந்துவதுண்டு. சிலர் வாயிலாகச் செட்டியார், முன்போலச் சுவாமிகளே பார்வையிடுவதாயின், மீண்டும் அப்பாடசாலையை நடத்தக்கூடு மென்றறிவித்தார். ஆனால் சுவாமிகள் அவர்களையே நடத்தச் சொல்லிவிட்டார்கள். பள்ளி சிறப்புற நடைபெற வேண்டியே, தம் மடாலயத்திற்கெதிரே, மடாலயத்திற்குரியதாயிருந்த பரந்த இடத்தை அளித்தார்கள். அது இப்போதும் ஒரு பாடசாலை நடத்தும் இடமாக உள்ளது. ஆனால் நம் மடாலயற்திற் குரியதாயில்லை.

ஸ்ரீ பாடலேச்சுரர் தருமப் பாடசாலைக்கு, வண்டிப்பாளையம், முருகேச நகரில் வாழும் பலர் தம் பிள்ளைகளை யனுப்பினர். குறைந்த வருவாயுடையோர், வருவாயில்லா தோர்க்கெல்லாம் அப்பள்ளி ஒர்சிறந்த காமதேனுவாக இருந்தது, வாரத்தில், சனிக்கிழமை மட்டும் காலை 7 மணி முதல் 10 மணிவரை பள்ளி நடைபெற்ற பின் அரை நாள் விடுமுறை. ஞாயிறு விடுமுறை கிடையாது. ஆனால் அமாவாசை, பெளர்ணமி, பிரதமை திதிகள் வழக்கமான விடுமுறை நாள்களாம். எல்லாப் பண்டிகைகளுக்கும் விடு முறை உண்டு. தைப் பொங்கல்தொடர்பாகச் சில நாள்களும், கோடையில் ஸ்ரீ பாடலேசப் பெருந்தகையின் பெரு விழா நாள்கள் தொடங்கி ஒரு மாதமளவும் விடுமுறைகளாகும். மாணவர் யாவரும் பாழ் நெற்றியோடு பள்ளி வரமாட்டார்கள். சைவர் திருநீறும், வைணவர் திருமண்ணும் அணிந்தே வருவர். அணியாதவரை அணிவிப்பது உண்டு. காலை, பள்ளி தொடங்குமுன், வணக்கப் பாடல்கள் பாடப்பெறும். எல்லோரும் சேர்ந்து சில பாக்களைப் பாடவேண்டும். பின்னர், பண்ணமைந்த சில தேவாரப் பாடல்களும், திருவாசக முதலாயினவும், திருப்புகழ் சந்தத் தோடும் சிலரே பாடவேண்டும். பின்னர் அரகர முழக்கம், சிவ சுப்பிரமண்ய ஓம் முழக்கங்களுடன் வகுப்பறைகட்கு மாணவர் செல்வர். பிற்பகல் தொடக்கத்தில் வடமொழித் தோத்திரங்கள் மூன்றும், குரு வணக்கமும் பாடப்பெறும். இருவேளை முடிவுகளிலும், 'வாழ்க அந்தணர்' என்ற ஏடேறிய திருப்பதிகத்து முதற் பாசுரமும், 'துய்யதோர்', ஆறிருதடந்தோள் என்ற கந்த புராண வாழ்த்துப்பாடல்களும் பாடிமுடித்து முழக்கங்களுடன் மாணவர் கலைந்து செல்வர்.

வார வழிபாடு :

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மாணவரனைவரும், முகம், கை, கால் அலம்பிக் கொண்டு, சமயக் குறிகளையணிந்து இவ்விருவர் அல்லது மும் மூவராகத் திருக் கோயிலுக்குச் சென்று வழிபாடாற்ற வேண்டும். வலம் வரும் முறை, அட்டாங்க பஞ்சாங்க நமஸ்கார முறைகள், அந்தந்தத் திருவுரு வத்தெதிரே அவ்வத் திருவுருவத்திற்குரிய பாடல் பாடுதல் முதலான நல்ல பயிற்சிகளை மாணவர் சிறு வயதிலேயே அடைந்தனர். சுவாமி, பிராட்டி திருவுருவங்களுக்கு அருச்சனை செய்வித்துப் பிரசாதம் அளிக்கப் பெறும். கோயிலுக்குப் போகும் போதும், வரும்போதும் ஒரு மாணவனும் அடுத்தவனுடன் பேசக்கூடாது. இறைவன் திருவடியை மனங்கொண்டே சென்று மீள வேண்டும். பாடல்கள் கூறி வழிபடும் போதும் அப்படியே. இவையெல்லாம் முன்னதாகவே ஆசிரியர்களால் தெளிவுறுத்தப் பெறும். இதனால் தெய்வப் பற்றும் இறைவன் திருவடி நீங்காச் சிந்தனையும், கீழ்ப்படிதலும், பணிவுடைமையும், பாடல் பாடும் வல்லமையும் மாணவர்களுக்கு அமைந்தன. இந்நாள் இத்தகைய பேறுகள் வாய்க்குமோ?

மேலும், பெருவிழா, அப்பர் சுவாமிகள் கரையேறவிட்ட விழா, கட்டமுது விழா, தண்ணீர்ப்பந்தர் (அப்பூதியடிகள்) விழாக் காலங்களில் இறைவன் வெளிப்பாடு திருவீதி உலா கொண்டருளுங் காலங்களில் மாணவர் பலர் ஒருங்கே பாராயணம் செய்து கொண்டு பின்னே செல்வதும் உண்டு. விநாயகரகவல். திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, சிவபுராண முதலாம் திரு அகவல்கள் பாராயணம் செய்யப் பெறுவன. இறுதியில் திருப்புகழ்கள் சில பாடி, வாழ்த்துக் கூறி முடிப்பார்கள்.

வாரந்தோறும் பிள்ளைகள் ஒழுங்காகத் திருக்கோயில் வழிபாடு செய்வது கண்டார், திருவாளர் ச. சச்சிதானந்தம் பிள்ளை, அவர்கள். அதனாற் பெரும் பயன் விளைவது கருதியே தான் செல்லுமிடங்களி லெல்லாம் வார வழிபாட்டி னை வற்புறுத்துவாராயினார்.

சுவாமிகள் தொடர்பு கண்ட சங்கங்கள்

அறிந்த அளவுக்குச் சில தனியாருடன் பழகியமை

1. வாணி விலாச சபை- ஸ்ரீமத் ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்.

2. ஸ்ரீலஸ்ரீ- ஞானியார் மாணவர் கழகம், ஸ்ரீமத் ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்.

3. கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சை

4. கோவல் தமிழ்ச் சங்கம், திருக்கோவலூர்

5. கண்டாச்சிபுரம் செந்தமிழ்க் கழகம்

6. சக்தி விலாச சபை - திருவண்ணாமலை

திருவண்ணாமலைக் கோயிலில், புரவி மண்டபத்தின் கீழ்ப்புறத்துள்ளது. இக்கட்டிடம் ஜவுளி ந. சி. முனிசாமி முதலியாரவர்களால் கட்டப்பெற்றது. நவராத்திரி ஆறாம் நாளில் அவர் தன் பொருட்செலவில் அவ்விடத்தில் அடியார்கட்கு அன்னம் பாலித்து வந்தார். ஞானியார் சுவாமிகளின் தலை மாணவராம் ம. ரா. குமாரசாமிப் பிள்ளை ஒருமுறை அவ்விழாவுக்குச்சென்றபோது, ‘வசதியான இந்த இடத்தில் ஓர்சபை நிறுவி அதனைச் சிறப்பாக நடத்தலாமே என ஆலோசனை கூறினார். அங்ஙனமே சக்தி விலாச சபையும், அதன் அங்கமாக ஒரு நூல் நிலையமும் எழுந்தன. 19-5-1916ல் அதன் முதலாண்டு விழாத் தொடங்கி மூன்று தினங்கள் நடைபெற்றது.

கயப்பாக்கம் - சதாசிவ செட்டியார், மோசூர் - கந்தசாமி முதலியார், பொன்மார் - நடேச முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், ச. சச்சிதானந்தம் பிள்ளை B.A., LT, மணிமங்கலம் திருநாவுக்கரசு முதலியார், ம. ரா. குமாரசாமிப் பிள்ளை, ஆண்டாளம்மையார், திரிசிரபுரம் இ. எஸ். இராமசாமி சாஸ்திரிகள், ஜி. வேங்கடராம அய்யர், கபாலி சாஸ்திரிகள், வேலூர் பெ. ச. இரத்தினவேல் முதலியார், எஸ். வி. விஜயராகவாசாரியார் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். சுவாமிகள் தலைமை தாங்கியருளினார்கள். முன்னுரை, முடிவுரைகள் அரிய நுண்பொருள் களமைந் தனவாய் யாவருள்ளத்தையும் கவர்ந்தன.

ஆங்கு அடிகளார் புரிந்த சொற்பெருக்கின் திறம் கண்ட செந்தமிழ்க் கவி கே.வி. இராமச்சந்திர ஐயர்,

‘முத்தியெங்கே ஞான முறையெங்கே முன்னோர்பால் பத்தியெங்கே யோதும் பனுவலெங்கே - இத்தரையில்

சான்றோர் பரவுகின்ற சண்முக மெய்ஞ் ஞானிநீ

தோன்றா திருப்பாயேற் சொல்‘

என்ற வெண்பாவினைப் புனைந்து கூறிச் சுவாமிகளின் கல்வியறிவின் திறம் வியந்து பேசினார்.

பின்னும் பன்முறை சுவாமிகள் அச்சபையின் விழாக்களுக்கென எழுந்தருளியது உண்டு. திருவண்ணாமலை தீபதரிசன காலங்களிலும்(பெருவிழாக் காலங்களில்) அங்கு நடைபெறும் சொற்பொழிவுகளுக்குத் தலைமை தாங்கியருள் வதுண்டு. முன் குறிப்பிட்ட ஜவுளி ந. சி.முனிசாமி முதலியாரவர்கள் ஆதரவு தந்து அன்புடன் உபசரிப்பார்கள்.

7. வேத மடம், ஸ்ரீவாகீச பக்த பதசேகர சபை :

வடமட்டம், ஜமீன்தாரர் திரு. திருவேங்கடம் பிள்ளையின் ஆதரவால் நடைபெற்ற இச்சபையின் முதல் ஆண்டு நிறைவு விழா 3-1-1919முதல் மூன்று நாட்கள் சுவாமிகளின் தலைமையில் சிறப்புடன் கொண்டாடப் பெற்றது. அவ்விழாவிற்குப் பெருமக்கள் பலர் வந்திருந்தனர். அவ்விழாவின் இறுதிநாளில் சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதாவது ;

‘பிற மதம் புகுந்தோர், விரும்பினால் மீண்டும் அவரைச் சைவ சமயத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். அந்த நாளின் நிலையறிந்து மீண்டும் அவர்கள் பிற மதம் புகுந்தால் என் செய்வது? என்ற வினாவினைக் கும்பகோணம் -தமிழ்பண்டிதர் திரு. வேங்கடராம ஐயர் கொணர்ந்தார். பலர் அந்த வினாவினை ஆதரித்து, அங்ஙனம் சேர்க்க மறுப்புத் தெரிவித்துப் பேசினார். ஆனால் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்; ‘மீண்டும் புகுவரேல் அவர்களை ஒருபோதும் சேர்க்கக் கூடாது’ என்ற திருத்தத்துடன் ஆதரிக்குமாறு ஆலோசனை கூறினார். அத் தீர்மானம் அத்திருத்தத்துடன் யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்று முடிவு செய்யப்பட்டது.

அந்தச் செய்தியைக் குறிப்பிட்டுத் தமது முடிப்புரையில் சுவாமிகள், திலகவதியார் புறசமயஞ்சார்ந்தும் நோய்க்கு ஆதரவு தேடித் தமக்கையிடம் வந்த தன் தம்பிக்குத் திருநீறளித்துச் சைவராக்கினார். அவர் எதையும் ஆராயாமல் ஐந்தெழுத்து ஓதித் திருநீறளித்தார். அவருடைய நம்பிக்கை வீண்போக வில்லை. இன்று நாம் சிறிதளவும் நம்பிக்கை கொள்ளாமல், ஆராய முற்பட்டு அவமே காலங் கடத்துகிறோம். ஒரு பெண் பாலவர்க்கு இருந்த நம்பிக்கை ஆண்பாலவராகிய நமக்கு இல்லாது போனதற்குக் காரணம் யாதாயிருக்கலாம்? என்று குறிப்பிட்டபோது பேரவை முழுதும் கையொலி ஆரவாரம் செய்தது யாவர் கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தது.

8. திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபை :

சித்தார்த்தி ஆண்டு ஆனி மாதம் 21-ஆம் தேதி திருச்சி சித்தாந்த சபையின் ஆண்டு விழா நடைபெற்றது. சுவாமிகள் தலைமை தாங்கிச் சிறப்புற நடத்தித்தந்தார்கள். சுவாமிகள் திருச்சி சென்றருளியபோ தெல்லாம், அவர்கள் சுவாமிகளின் சொல்லமுத மாந்திப் பயன் பெற்றனர்.

9. கரந்தைத் தமிழ்ச் சங்கம் :

முன் கூறப்பெற்றவாறு, 1911ல் நிறுவப் பெற்ற அச் சங்கத்தின் 7, 8 ஆண்டு விழாக்களிலும் 1938-ல் அதன் வெள்ளி விழாவிலும் நம் சுவாமிகள் பங்கேற்றுத்தலைமை தாங்கினார்கள். தலைவர் திரு. த. வே. உமாமகேசுவரம் பிள்ளைக்குத் தமிழ வேள் என்றும், செந்தமிழ்ப் புரவலர் என்றும் சிறப்புப் பெயர்களைச் சூட்டிச் சிறப்புச் செய்தார்கள். புலவர் இரா. வேங்கடாசலம் பிள்ளைக்குக் கவியரசு என்ற சிறப்புப் பெயர் சூட்டிப் பாராட்டினார்கள். அவர்கள் அன்பால் அளித்த சிவிகையை மகிழ்ந்தேற்றார்கள்.

10. பலவான்குடி மணிவாசக மன்றம் :

சித்தார்த்தி, ஆவணி 20உ நடைபெற்ற பலவான்குடி மணிவாசக மன்றத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்று யாவரும் மகிழச் சொன்மாரி பொழிந்தார்கள்.

11. புதுவை வாணிவிலாச சபை.

12. வண்டிப்பாளையம் சந்திரசேகர பக்த ஜன சபை

13. துத்துக்குடி சைவ சிந்தாந்த சபை.

14. பழநிச் சைவ சிந்தாந்த சபை.

15. கோவல் மணம்பூண்டி அருட்சோதிநாத பக்த பால சபை.

16. நெல்லிக்குப்பம் - சோழவல்லி வாகீச பக்த ஜன சபை.

17. ஸ்ரீ வைகுண்டம் குமரகுருபரன் சங்கம்.

18. செங்கற்பட்டு - சமயாபி விருத்தி சங்கம்.

19. காவித்தண்டலம் - சைவ சித்தாந்த சபை.

20. கூடலூர் சைவ - சிந்தாந்த சபை.

21. திருவோத்துர் - பானுகவி மாணவர் கழகம்.

எண்ணிறந்த சங்கங்கள் சுவாமிகளின் சொல்லமுதை மாந்திய செய்திகள் இருக்கக்கூடும். அவை இன்னவையென அறியக்கூட வில்லை.

சுவாமிகளிடம் அன்புகாட்டி அவர்களது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் பெற்ற அறிஞரும் செல்வரும்

ஸ்ரீ சுவாமிகள், அறிஞர் - அறியாதார் சிறியோர் முதியோர், செல்வர் - வறியர், இல்லற வாழ்வினர் - துறவற மேற்கொண்டோர், வணிகர், தொழிலாளர், உத்தியோகத்தி லிருந்தோர் ஆகிய எப்பாலவரிடத்தும், சாதி, மத, இன, சமய வேறுபாடுகள் கருதாமல் ஒரு படித்ததாகவே பழகுவார்கள். முன். பல இடங்களிற் குறிப்பிட்டாங்கு அந்நாளைய அறிஞர் யாவரும் சுவாமிகளைப் பற்றி அறிவர். அவர்களைத் தரிசித்து அவர்களிடம் உரையாடுதலையே தாம் பெற்ற பேறாகக் கருதுவார்கள். எந்த வேளையில் எவர்வரினும், அவர்களைக் காத்திருக்கச் செய்யும் வழக்கமே அவர்களிடம் காண இயலாது. நீராடித் தூய்மையுற்றுப் பூசனைக் கெழுந்தருளுங் காலமேயெனினும், வெளிவந்து சற்றே இருங்கள்; பூஜை முடித்து வந்து விடுகிறோம் என்ற அளவுக்காவது திருவாய் மலர்ந்தருளிச் செல்வார்கள். பூசை முடிந்ததும் நேரே வந்து, அவர் வந்த செய்தியைப்பற்றிக் கேட்டறிந்து உடனே ஆவன புரிவார்கள். ஒரே எடுத்துக்காட்டினை ஈண்டுக் குறிப்பிடுவோம்.

1981 அல்லது 32 ஆம் ஆண்டாக இருக்கலாம். ஒரு மகம்மதியச் சிறுவர் வந்தார். மாலை வேளை, சுவாமிகள் வெளிக் கூடத்தில் தனியே உலவிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல் இடையில் ஒரு 4 முழக் கல்லாடை, அதன் மேல் கட்டி முடிக்கப்பெற்ற ஒரு 4 முழத் துண்டுடன் இருந்த அவர்களிடமே அவர் சென்றார். சுவாமி எங்கே? என்று கேட்டார். என்ன தகவல் ? என அவரை வினவ அவர், தான் S.S.I.C. எழுதியதாகவும், தமிழில் 16 மதிப்பெண்களே பெற்றதாகவும், பிற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதாகவும், சுவாமிகளையடுத்தால் நல்ல பயிற்சி கிடைக்கு மென இன்ன அன்பர் அனுப்ப வந்ததாகவும் கூறினார். தம் இயல்பின் வண்ணம், எளியராய் வாயிற்படிமீது அமர்ந்து, அவரை அருகிருத்தி முதலிற் சில பாடல்களைப் படிக்கச்செய்து, தமக்கேயுரிய சிறப்பான முறையில் ஒவ்வொரு பாடலையும் விளக்கிப் போதித்தார்கள். சில பாட்டுகள் விளக்கி முடிந்தவுடன் நாளை இன்ன நேரத்திற்கு வருக எனத் திருவாய் மலர்ந்தருளி அனுப்பினார்கள். அவர் மீண்டு சென்று விட்டார். சென்றவர் தன்னை மடாலயத்திற்கு ஆற்றுப்படுத்திய சுவாமிகளின் அன்பராம் திருஞானசம்பந்தம் பிள்ளையிடம் சென்று, தனக்குப் பெரிய சுவாமிகளின் தரிசனம் கிடைக்க வில்லை யென்றும், ஒரு சாமியார் போலக்காணப் பெற்றவர் சில பாட்டுகளை விளக்கிப் பொருள்கூறி, நாளை வரச்சொன்னதாகவுங் கூறினார். அவருக்கு, மடாலயத்தோடு நீண்ட நாட்களாகத் தொடர்பு உண்டு. எனவே, அவர் அடையாளங்களைக் கேட்டறிந்து, பாடம் நடத்திய அவர்களேதான் அம்மடாலயத் தலைவர் களாவர்களெனவும், எளிய காட்சியும் எளிமையாகப் பழகுதலும், கால முதலியன பாராமல் பாடம் போதிப்பார்களெனவுங் கூறி, அடுத்த நாளும் குறிப்பிட்ட வேளையிற் சென்று பாடங் கேட்டுப் பயன் பெறுமாறு ஆலோசனையுங் கூறினார். அடுத்த நாள் வந்த அந்த வாலிபர், அடிகளாரைக் கண்டவுடன் கண்ணிர் சோர அழுது நீங்கள்தானா இம்மடால யத்தின் தலைவர்? பலவாறு தம்மை அலங்கரித்துக்கொண்டும், பல ஆபரணங்களைப் புனைந்து கொண்டுமல்லவோ இருப்பார்கள் மடாதிபதிகள் நீங்கள் இவ்வளவு எளியராக இருக்கிறீர்கள் எனக்கூறி விம்மி விம்மி ஆனந்த வெள்ளத்தில் நீந்தினார். சுவாமிகள் அவருக்கு ஆறுதல் கூறி இருக்கச்செய்து, மேலும் பாடம் நடத்தியருளினார்கள். அவர் குறிப்பிட்ட வேளைகளில் வந்து கற்றுப்பின் தேர்வெழுதி நூற்றுக்கு எண்பது மதிப்பெண் பெற்றுத் தேறினார். கடலூர்(மஞ்சக் குப்பம்) ஸெயின்ட் ஜோஸப்ஸ் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்த திரு. திருஞானசம்பந்தம் பிள்ளையவர்கள். இந் நிகழ்ச்சி யினைக் கூறியவர்.

இங்ஙனம், தம் பேரருளினை எத்தகையார் மாட்டும் வேறுபாடில்லாது செலுத்தும் சுவாமிகளிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டோருள், திரு வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள். ச. சச்சிதாநந்தம் பிள்ளை, B.A. LT., அவர்கள். மணிமங்கலம் திரு திருநாவுக்கரசு முதலியாரவர்கள், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரவர்கள், மறைமலையடிகளார், தாகூர் சட்ட விரிவுரையாளர் திரு கா. சுப்பிரமணிய பிள்ளை, M.A., M.L., அவர்கள், ரசிகமணி T.K. சிதம்பரநாத முதலியாரவர்கள். திரு. ந. மு. வெங்கடசாமி நாட்டாரவர்கள், திரு உலகநாதம் பிள்ளையவர்கள், கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளையவர்கள் முதலாயினரைக் குறிப்பிடலாம்.

நீதிபதி இராமேசம் அவர்கள், டிஸ் டிரிக்ட் முன்லீப் J.M. நல்லசாமிப் பிள்ளையவர்கள், Sir A இராமசாமி முதலியாரவர்கள், டிப்டி கலெக்டர் போதண்டபாணிப் பிள்ளையவர்கள், வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளைய வர்கள்; அவர் குமாரர்கள், வ. சு. சண்முகம் பிள்ளையவர்கள், தணிகைமணி வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள்; டிப்டி கலெக்டர் ராஜாபாதர் முதலியாரவர்கள் முதலாயினோர் உத்தியோகத்திலிருந்து கொண்டு அன்பராக இருந்தாருட் சிலர்.

திரு.PT.இராசன், Bar at law. அவர்கள் திரு த. வே. உமாம கேசுவரம் பிள்ளையவர்கள், திரு T.M. நாராயணசாமிப் பிள்ளையவர்கள், திரு கோவைகிழார் என்னும் C.M. இராமச்சந் திர செட்டியாரவர்கள், திரு C.K. சுப்பிரமணிய முதலியாரவர்கள், மிட்டாதார் S.R. ஐராவத உடையாரவர்கள், வடமட்டம் ஜமீன் திருவேங்கடம் பிள்ளையவர்களையுள்ளிட்டார் பலர் கல்வியும் செல்வமும், செல்வாக்கும் பதவியும் பெற்றோருட் குறிப்பிடத் தக்கராவர்.

தஞ்சை கருணாநந்தர் வைத்தியசாலை, மு.ஆப்ரஹாம் பண்டிதர், புதுவை, லூய். சின்னையா ஞானப் பிரகாச முதலியார், ரெவரெண்டு. கிங் ஸ்பரி முதலாயினாருடன் சுவாமிகள் சிறந்த அன்பு பாராட்டி ஆண்டுதோறும் வாழ்த்துப்பா ஒன்றேனும் இயற்றி அச்சிட்டு அனுப்புவதுண்டு. மரபு, சமய வேறுபாடுகளைக் கடந்தவர் எம் சுவாமிகள் என்பதற்கு இத்தகையாரிடம் பாராட்டிய அன்பே ஆதாரம் ஆகும்.

சுவாமிகள், தென்னாட்டுத் திருத்தலங்களைத் தரிசிக்குமாறு திருவுளம் பற்றியருளிக் காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதத்தில், சிவிகை யூர்ந்து எழுந்தருளினார்கள். மேனாவின் இருபுறமும் ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்களும், P.S. வடிவேல் செட்டியாவர்களும் நடந்தே மேனாவைப் பற்றிக் கொண்டு தொடர்ந்தார்கள். மடாலய முறையினையொட்டித் திருச் சின்னம் ஒன்று மட்டுமே முன் சென்றது. (ஆரவாரங் கூடாதெனக் கருதி ஏனையவற்றை அடிகளார் நிறுத்தி விட்டனர்)

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), சிதம்பரம், திருநாரையூர், காட்டுமன்னார்கோயில், ஓமாம்புலியூர், கானாட்டு முள்ளுர், சீர்காழி, புள்ளிருக்கு வேளுர் (வைத்தீச்சுரன் கோயில்), மாயூரம், திருவாவடுதுறை, வடமட்டம், வேத மடம், திருநல்லம், திருவிழிமிழலை, திருமருகல், காரைக் கால், திருமலைராயன் பட்டினம், திருநள்ளாறு, நாகைப் பட்டினம், மஞ்சக் கொல்லை, (வேதாரணியம்) திருமறைக் காடு, குடவாசல், ஸ்ரீவாஞ்சியம், குற்றாலம், திருவிடை மருதூர், திருநாகேச்சுரம், கும்பகோணம், கொட்டையூர், தாதம்பேட்டை, பழுர், இன்னம்பர், தஞ்சை, கருந்தட்டாங்குடி ஆம் தலங்களைத் தரிசித்தார்கள்.

சுவாமிகள், எழுந்தருள்வதறிந்த பலபல அன்பர்கள், தத்தம் ஊர்களிற் சொற்பொழி வாற்றுமாறு கேட்டுக் கொள்வதுண்டு. விரும்பினோர் விருப்பங்களை வேண்டியவாறே முற்றுவிக்குந் திருவருள் நிரம்பப் பெற்ற அடிகளார், அவ்வாறே அருளுரை வழங்கி, அன்பராயினார்க் கெல்லாம் ஆசி வழங்கியருளி வழிக்கொண்டார்கள். வடமட்டம் வேத மட நிகழ்ச்சியும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 7-8 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியும் அவர்களது வழி நடைக் காலங்களில் மேற்கொண்டனவேயாம்.

கரந்தை (தஞ்சை)யினின்றும் எழுந்தருளிய அடிகளார், திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருப்பூந்துருத்தி, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, அடைஞ்சூர், இளங்காடு முதலாம் தலங்களைத் தரிசித்துக் கொண்டு திரிசிரபுரம் அடைந்தார்கள். முற்கூறியவாறே, சித்தார்த்தி ஆனி, 21உ திருச்சிச் சைவசிந் தாந்த சபை விழாவினைத் தலைமை தாங்கி நடத்தினார்கள். அந் நாளெல்லாம் தாயுமான தயாபரனையும், மட்டுவார் குழலாளையும் தரிசனம் செய்து கொண்டார்கள்.

பின்னர், அங்கிருந்து வழிக் கொண்டு, திருக்கற்குடி, பூவாளுர், திருத்தவத்துறை (லால்குடி), உறையூர், திருப்பாச் சிலாச்சிராமம், திருவானைக்கா, திருவரங்கம், அரசங்குடி, தென்னுர், புதுக் கோட்டை ஆம் தலங்களை யடைந்து சிவ தரிசனமும் திருமால் சேவையும் கொண்டருளிப் பலவான் குடியையடைந்தார்கள்.

பலவான்குடி மணிவாசக மன்றத்தின் ஆண்டு விழா, சித்தார்த்தி ஆவணி 20உயன்று, சுவாமிகளின் தலைமையில் மிகச் சிறப்புற நிகழ்ந்தது. சுவாமிகளருளிய தொடக்கவுரை முடிவுரைகள் மிக்க மேன்மை தருவனவாயமைந்தமை பற்றி மிகவும் போற்றப் பெற்றார்கள்.

வைரவன் கோவில், மேலைச் சிவபுரி, கீழைச் சிவபுரி, கோனாப்பட்டு, சொக்கலிங்கபுரம், இராமச்சந்திரபுரம், அரிமழம், அறந்தாங்கி, திருப்பெருந்துறை ஆம் தலங்களைத் தரிசித்துக் கொண்டு சித்தார்த்தி, கார்த்திகை 10உ காரைக் குடியை அடைந்தார்கள். காரைக்குடி நகரச் செட்டிமார் உபசரித்துச் சுவாமிகளின் சொல்லமுதமாந்திக் களித்துப் போற்றினர். காரைக்குடியில் செட்டிமார் ஆதரவில், பராசக்தி அம்பலவாண நாவலர் என்பார் ஒருவர் இருந்தார். அவர், சுவாமிகளது கல்வியறிவாற்றல்களிற் காழ்ப்புக் கொண்டு, செட்டிமாரது அளவுகடந்த உபசாரத்துக்கு மறைமுகமாகத் தடை சூழ்ந்தார். அடிகளாரது பெருந்தன்மை காரணமாக அது பயனற்றுப் போய்விட்டது.

காரைக்குடி மக்கள் தொழுது போற்ற மேலும் வழிக்கொண்டருளி, தேவகோட்டை, திருக்கானப்பேர், தொண்டி, இராமநாதபுரம் ஆம் தலங்களைத் தரிசித்துக்கொண்டு இராமேச்சுரம் எழுந்தருளுங்கால், பாம்பன் இரயில்வே பாலம் வழியாகச் சுவாமிகளுக்காக, மேனாவுடன் செல்லவும் மீண்டு வரவும் அனுமதி வழங்கப்பெற்று, இராமநாதனைப் பாடிப் பரவித் தொழுது சில நாள் தங்கி, தனுக்கோடி முதலாம் துறைகளிலும் நீராடி மீளவும் வழிக்கொண்டார்கள்.

உத்தரகோசமங்கை, சாயர்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப் பட்டினம், உடன்குடி, ஆற்றூர், ஆறுமுக மங்கலம், திருவெள்ளூர், திருநெல்வேலி, திருப்புடைமருதூர், அம்பாச முத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரம சிங்கபுரம், கோட்டாறு ஆம் தலங்களை வழிபட்டனர். கோட்டாற்றில் சில நாள் தங்கிச் செஞ்சொல்மாரி பொழிந்தனர். வேலாயுத முதலியார் என்னும் அன்பர் ஒருவர், அடிகளார் திருவுருவத்தைப் பல படியாக எழுதுவித்து, அவற்றைத் தன் காணிக்கையாகச் சுவாமிகளிடம் ஏற்பித்தார். அவைகளுட் சில, இன்றும் உள. பின்னும் அடிகளார், பெருவளம், வடசேரி, வடுவீச்சரம், களக்காடு, கடையம், தென்காசி, திருக்குற்றாலம், தென் இலஞ்சி, புளியங்குடி, சங்கர நாராயணர் கோயில், கழுகு மலை, சாத்தூர், விருதுப்பட்டி ஆம் தலங்களைத் தரிசித்துக் கொண்டு, மதுரையடைந்து ஆங்குச் சில பகல் தங்கித் திருபரங்குன்ற நாதனையும், தேவயானை மணாளனையும் கண்டு வணங்கினார்கள். அங்கிருந்து வழிக்கொண்டு பழநியடைந்து, பவரோக வயித்தியநாதனை வழிபாடு செய்து கொண்டு சில நாள் அங்கேயே தங்கியிருந்தார்கள்.

பழநியாண்டவனுக்கு அபிஷேகம் செய்வித்துக் கண்குளிரத் தரிசித்தும், அவன் புகழ் பாடிப் பரவியும், அன்பர் பாடக் கேட்டுக் கசிந்து கண்ணீர் மல்கியும், அவன் புகழ் பேசித் தம் உளத்தடைத்தும், கேட்டோர் உள்ளத்தில் அடைப்பித்தும் அருள் செய்தார்கள்.

மீளுங்கால், விராலிமலை முதலாம் தலங்களை வழிபட்டுக் கொண்டு, ரெளத்திரியாண்டு, ஐப்பசித் திங்களிறு தியில் புலிசை மடாலயத்திற் கெழுந்தருளினார்கள். திருப்பாதிரிப் புலியூரன்பர்களும், வெளியூரிலிருந்து திரண்டு வந்திருந்த மாணவர்களும் சுவாமிகளைப் புதிய மேனாவில் எழுந்தருளச் செய்தும், அவர்களது உபாசனா மூர்த்தியாம் வல்லி தேவசேனா சமேத சுப்பிரமணிய மூர்த்தியை மயில் மீது எழுந்தருளச் செய்தும் நகர்வலஞ் செய்வித்து மடாலயத்தில் எழுந்தருள் வித்தார்கள். அந்நாள் நடைபெற்ற காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

சென்ற இடங்களிலெல்லாம் இங்ஙனமே நகர்வல முதலிய நிகழ்ந்தன. ஆங்காங்கு சொன்மழையும் பொழிந்து சிவானந்த ஆறு கரைபுரண்டோடச் செய்தார்கள் சுவாமிகள். செவிமடை வழியே, உள்ளமாம் நிலத்தில் தேக்கிச் சிவப் பயிரை வளர்த்துக் கொண்டு முத்திப் பயனாம் பெரும் பேற்றினை யடைந்தார்கள் பலர்.

பின்னர், காலம் வாய்த்தபோது, திருத்தணிகை, திருக்காளத்தி, திருவாலங்காடு, திருப்பதி ஆம் திருத்தலங்களை வழிபட்டு விரும்பிய இடங்களிலெல்லாம் செஞ்சொல்லமுது வழங்கியதும் உண்டு.

சுவாமிகள், மேனாவிலமர்ந்து எழுந்தருளுங் காலங்களில், அதனைக் காவுவோருள், ஒருவர் 'முருகா முருகா' என ஒலியெழுப்ப, ஏனையோர், 'வேல் முருகா' என்று ஒரு சேரப் பேரொலி எழுப்புவர். 'வேல் வேல்’, ‘வேல்மயில்’, ‘ஐயாறா கிய பஞ்சநதம்’, ‘ஆறாறாகிய சிதம்பரம்' என்ற ஒலிகளும் எழுவதுண்டு. தொழும்பு பூண்ட அன்பருட் சிலர், சுவாமிகளை நெருங்கி மேனாவைப் பிடித்துக் கொண்டே இருபாலும் செல்வதும் உண்டு. அப்போதுங்கூட இறைவன் குணாதிசயங்களும், புராண வரலாறுகளும், புராண இதிகாசங்களில் நுட்பமான பகுதிகளும் அருகு செல்வோர்க்கு விளக்கப் பெறுவது இயல்பான நிகழ்ச்சியாம்.

கொங்கு நாட்டுக்கும் சுவாமிகள் இருமுறை எழுந்தருளியது உண்டு. 1925ல் சேந்த மங்கலத்தில் நடைபெற்ற பார்க்கவ குல சங்கப் பத்தாம் ஆண்டு விழாவில் தலைமை பூண்டதும், பேரூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் மடத்திற் கெழுந்தருளியதும் முன்னரே கூறப்பெற்றன.

மீண்டும் ஒருமுறை 1936ல் கொங்குநாடு நோக்கி வழிக்கொண்டார்கள். திருநணா (பவானிகூடல்) திருமுருகன் பூண்டி, அவிநாசி முதலாம் தலங்களைத் தரிசனம் செய்து கொண்டதோடு, பாலக்காட்டுக் கணவாய் வழியே உடுப்பி சுப்பிரமணியம், திருவஞ்சைக்களம் ஆம் திருத்தலங்களைத் தரிசித்து மீண்டார்கள், முதல் முறை உடன் சென்று தொண்டு புரிந்தவர்கள் வண்டிப்பாளையம் புலவர்கள் அ. நடேச முதலியார், ந. ஆறுமுக முதலியார் இருவரும் ஆவர்.

புதுவை அன்பர்கள் வேண்டுகோளுக் கிணங்கிப் பன்முறை புதுவை சென்றிருக்கிறார்கள். அங்கு, பங்காருப் பத்தர் சுவாமிகளிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர்கள். அவரோடு வடலூர் இராமலிங்க சுவாமிகளின் திருவருட் பாவின் இனிமைகளை ஆராய்வது உண்டு. அப்போது அவர் புத்தகங்களில் அடையாளம் வைக்கும் விதத்தில் வெள்ளயினாலான வேல் ஒன்றினை அமைத்துச்சுவாமிகளிடம் ஏற்பித்தார். அதனைப் பலமுறை சொற்பொழிவுகளிலும் கூறியிருக்கிறார்கள்.

சிறப்பியல்கள்

மடாதிபதிகள் கைக்கொள்ள வேண்டிய சில விதிகள் உள. அதிலும் வீர சைவ மடாதிபதிகள் கைக்கொள்ள வேண்டுவன பல. மறந்தும் புறந்தொழாராய், மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது, சிவபரஞ்சுடரையே அவன் திருநாமங்களையே எண்ணுதலும், பேசுதலும் நியமமாகக் கொள்ள வேண்டிய வீர சைவ மரபினர் நம் சுவாமிகள் அவர்கள். திருமாலைப்பற்றியோ, இராமாயணம்பற்றியோ, பாரதம்பற்றியோ ஆற்றும் சொற் பொழிவுகளைக் கேட்டோர், இவர் என்ன துவைதியா அத்துவைதியா? விசிஷ்டாத் வைதியா? என்றெல்லாம் எண்ணுமாறு சிறிதேனும் புற மத தூஷணையோ, எடுத்துக் கொண்ட பொருளினுக்குப் புறம்பாகச் செல்வதோ இல்லாமல் பேசுவார்கள். திருவரங்கத்திலே, விபிடணர் சரணாகதி பேசி அரங்கநாதனடியார்கள் தம்பால் நிறைந்த ஈடுபாடுகொள்ளச் செய்தார்கள்.

ஒருக்கால் திருப்பாதிரிப்புலியூரையடுத்து 2 கல்தொலைவில் உள்ள திருவகீந்திரபுரத்தில் எழுந்தருளும் தேவநாதப் பெருமானைத் தரிசிக்கச் சென்றார்கள். அங்கே, வைணவர் பலரும் சுவாமிகளிடம் ஏதேனும் ஓர் சொற்பொழிவு செய்யவேண்டு மென்று வற்புறுத்தினர். சுவாமிகள் திருப்பாவையின் முதற் பாசுரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, வைணவ பரிபாஷைகளால் நீண்ட நேரம் ஒரு பெருஞ் சொற்பொழிவு ஆற்றினர். வைணவர் யாவரும் வியப்பெய்தினர். ஏனையோர் பெரு மகிழ்வெய்தினர். மூவுருவே ஒருருவாய் நின்ற திருக்கோலத்துடன் எழுந்தருளிக் காட்சி நல்கும் தேவநாதப் பெருமா னுக்கு அணிவித்திருந்த நீண்ட பெரிய மாலையொன்றினை அடிகளாருக்கு அணிவித்துப் பாராட்டினர். அவர்களை நோக்கி, சுவாமிகள் 'இன்று நான் நெடுமாலையடைந்தேன்’ எனச் சிலேடையாகக் கூறி அனைவரையும் மேலும் மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்தினார்கள்.

சுவாமிகள் திருப்பதிக்குப் பலமுறை எழுந்தருளியதுண்டு. 1934, 35-ஆம் ஆண்டுகளில் அங்கு ஆலயப் பொறுப்புத் தலைமையை வகித்தவர் திரு. சீத்தாராம ரெட்டியார். அவர் சிறு பருவத்தில் சுவாமிகளுடன் பயின்றவர். அவர் சுவாமிகளைச் சில நாள் எழுந்தருளவைத்துப் பல சேவைகளையும் செய்வித்து வைத்தார். அவர் வேண்டுகோளின் வண்ணம், ‘திருமலைச் சிறப்பு' என்ற சொற்பொழிவினைச் சுவாமிகள் ஆற்றினார்கள். அப்போது 'திரு' என்ற அடைமொழியையும், 'மலை' என்ற சொல்லையும் தனித்தனியாக விளக்கிவிட்டு ‘மலை நிலத் தெய்வமாம் முருகன்' பெருமைகளையும் விளக்கினார்கள். முருகன் செந்தி முதல்வன் என்று கூறியவுடன் அவனை இன்னார் மகனெனக் கூறாமல் 'மாயோன் மருகன்’ என்றுதான் நக்கீரர் பாடினார்; ஆதலால் அவனுக்கும் மாமனுக்கும் தொடர்பு மிகுதியாதல் பற்றி அவனை அவன் மாமனாகத் தொழும் இடம் ஈது என விளக்கினார்கள். அருணகிரிநாதர் திருமலையின்மீது அதிகப் பற்றுக் கொண்டவர். இங்கு பலநாள் இருந்திருப்பார் போலும். அதனால்தான் இன்றும் 14 பாட்டுகள் உள எனக் குறிப்பிட்டருளினார்கள். திருமாலின் பெருமைகள் பலவும் பேசி முடித்தார்கள்.

சுவாமிகள், தெய்வத் தொடர்பாகவே சொற்பெருக்காற்றுவதாயினும் தமிழ் மொழியின் ஏற்றம் பற்றிக் குறிப்பிட மறக்கவேமாட்டார்கள். தமிழிலக்கியங்களில் ஆங்காங்குக் காணப்பெறும் சொல்லினிமை பொருளினிமைகளைச் சுவை பட எடுத்துப் பேசுவதில் அவர்கட்கு இணையாவார் எவருமிலர். இங்ஙனம் பேசுவனவற்றிற் சில குறிப்பிடுவாம். தோத்திரங்களில்,

‘இல்லறத்தா னல்லேன் இயற்கைத் துறவியல்லேன் நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் - சொல்லறத்துள்

ஒன்றேனு மல்லேன் உயர்த்திருப் போரூரா !

என்றேநான் ஈடேறு வேன்’

என்பது, சிதம்பர சுவாமிகளின் பாட்டு. இதனைச் சொற்பொழிவின் இறுதியில் வழிபடு தெய்வமீது பாடலாகப் பாடுவர் 'என்றே நான் ஈடேறுவேன்' - என்னும் வினா, என்னை ஈடேறவைக்குங்காலம் எது? என வினாவியதாகப் பிரித்துக் காட்டுவர். பின்னும் ஒருமுறை அதனைப் பாடி 'உயர்ந்த திருப் போரூரா என்றே நான் கூறியே ஈடேறுவேன் என்ற பொருளில் கூறுவார்கள்.

‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே'

என்பது, அருணகிரிநாதர் கந்தரனுபூபதியின் இறுதியான 51ஆம் பாடல், முதல் முறையாக, இங்ஙனமே பாடுவார்கள். அடுத்து, உருவாய் - அருவாய்; உளதாய் - இலதாய்; மருவாய் மலராய்; மணியாய் - ஒளியாய்; கருவாய் - உயிராய்; கதியாய் - விதியாய் - என்றிவ்வாறு எதிர்மறைத் தொடர்களையும், இணைந்த தொடர்களையும் கூட்டிப் பொருளுணரும் வகையிற் பாடுவார்கள்.

இறுதியில், உருவாய் - அருவாய் - வருவாய். உளதாய் - இலதாய் வருவாய், மருவாய் - மலராய் வருவாய், மணியாய் - ஒளியாய் வருவாய், கருவாய் உயிராய் வருவாய், கதியாய் - விதியாய் வருவாய் என்றின்ன இரட்டைத் தொடர்களைக் கூறிச் சிறப்பாக, இறுதியில் குருவாய் வருவாய்! என முடிக்குங்கால் அன்பர்களின் கண்களில் நீர் பெருகுவதைக் காணக்கூடும். குருவோடிணைத்துக் கூற எப்பொருளும் இல்லையன்றோ?

‘ஏழைக் கிரங்குதெய்வம் என்றுன்பால் வந்தடைந்தேன், ஏழைக் கிரங்க இது தருணம் ஊழைவென்ற

சீலமுனி வோர்போற்றும் தென்பழநி வெற்பில்உறை

நீல மயில்முருகா நீ.'

என்ற பாடலைக் கூறுவார்கள். பின்னும் ஒருமுறை, நீல மயில் முருகா! நீ ஏழைக் கிரங்கு தெய்வம் எனத் தொடங்கிப்பாடி விற்பூட்டுப் பொருள் கோளாவதனை நன்கு தெளியப் பாடி அன்பரிடையே பழநியாண்டவனின் எளிவரும் கருணைத் திறத்தைச் சுட்டாமற் சுட்டிப் பாடிக் கண்ணீர்வாரத் தொழுது முடிப்பார்கள்.

ஏதேனும் ஓர் இலக்கியத்தைப் பாடம் நடத்துங்கால், ஒரு பாடலை முதன்முறை படிப்பார்கள். பின் பதம் பிரித்துப் படிப்பார்கள். அதன் பின் அன்வயப்படுத்திப் படிப்பார்கள். பிறகு அதன் பயனிலையை முதலிற் கூறி, செயப்படு பொருள்கூறி, பின் அடைமொழிகளை இணைத்துக் கூறி அம்முறையே எழுவாயைக் கூறிய பின்னரும் யாவற்றையும் ஒருமுறை கூறியபின்னரே, பதப் பொருள், மொழிப்புரை கூறுவார்கள். ஒருகுறி கேட்போன், இருகால் கேட்கவேண்டு மென்ற எண்ணமே எழாதவராகிவிடுவார். பின்னும் கேட்போரை அப்பாடலைப் படிக்கச் செய்வர். அவரும் பதம் பிரித்தும் கூடியவரை கொண்டு கூட்டியும் படிக்க வேண்டும். அங்ஙனம் படிக்காதவரை அங்ஙனம் படிக்கச் செய்வார்கள். அதன் பின்னரே அடுத்த பாட்டிற்குச் செல்வர், இங்ஙனம், சிறிதும் சோர்வின்றிப் பாடம் நடத்துவார் யாரேனும் உளரோ?

'அறிவு மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங் கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்புவெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து,அருள் அலை கொழித்துக் கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கி லெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத் தன்தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலெழும் மின்விசையால் பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது.' திரு.வி.க.

தமிழ்ப் பற்று : இந் நிலவுலகில் நம் அடிகளார் எழுந்தருளி யிருந்தகாலம் அந்நிய ஆட்சி நடைபெற்ற காலம், அன்று, தமிழர் மட்டுமே யன்றித் தெலுங்கர், மலையாளிகள் ஆகிய மொழியினரும் அலுவலங்களில் பணியாற்றியவர்கள், தெலுங்கோ, மலையாளமோ பேசும் இருவர் ஒருவரோடொருவர் (இன்னின்னாரென அறிந்தபின்) பேசிக் கொள்ளுங்கால் அம்மொழியிலேயே பேசுவதும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இருவர் அங்ஙனம் பேச நேருங்கால் அயல் மொழியாம் ஆங்கிலத்திலே பேசிக்கொள்வதும் எதனால்? தம் தாய் மொழி யினிடத்தும் பற்றின்மையாலா? புறக்கணிப்பாலா என்று வினவி அத்தகையோர் திருந்தும் வண்ணம் சொற்பெருக்கினிடையே குறிப்பிடுவார்கள்.

காலந் தவிராமை : சுவாமிகள், காலத்தின் அருமையினை நன்கு உணர்ந்தவர்கள். தம் நித்திய நியமங்கள் எல்லாம் காலம் தவிராமற் செய்வார்கள். பிறரும் அவ்வாறே நடந்து கொள்ளுமாறு தூண்டுவார்கள். சொற்பொழிவு, இன்ன நேரத்தில் துவக்கப்பெறு மென நிகழ்ச்சியில் அச்சிடப் பெற்றுவிட்டால், அந்த நேரத்திற்கு முன்னதாகவே சுவாமிகள் அங்கெழுந்தருளி விடுவார்கள்.

1934- ஆம் ஆண்டில் திருவண்ணாமலை சக்தி விலாச சபையில், அண்ணாமலையானின் பெருவிழா நாட்களிற் சொற்பொழிவுகள் சுவாமிகள் தலைமையில் நடந்தன. அச்சிடப் பெற்ற நிகழ்ச்சி நிரலில், பகல் 1.30மணிக்கு எனக் காணப்பெற்றது. சுவாமிகள், 1.25க் கெல்லாம் அங்கிருக்குமாறு புறப்பட்டு எழுந்தருளி விட்டார்கள். மக்கள் கூட்டம் இல்லா திருந்தமை கண்டு, திருமுறைகளை ஓதக் கட்டளையிட்டருளினார்கள். அங்ஙனமே ஒருமணி நேர அளவு திருமுறை ஓதப்பெற்றது. அன்று ஒலிபெருக்கி நம் நாட்டிற் பரவவில்லை. பின்னர் சுவாமிகள் எழுந்தருளியமை கண்டும் கேட்டும் கூட்டம் சேர்ந்தது. தலைமையுரை முதலாம் நிகழ்ச்சிகள் தொடங்கப் பெற்றன. சொற்பொழிவாளர்களும் பின்னரே வந்தனர். சுவாமிகளின் அன்றாட நடைமுறை, காலத்தில் நிகழ்வது. சித்தாந்தம் இதழில் ஞானியாரடிகளுடன் மூன்று மாதங்கள் என்ற கட்டுரையில் ஆ. சிவலிங்கனார் தெளிவாக எழுதியுள்ளார்.

ஞாயிறுகளிலும், கிருத்திகை, கந்தர்சஷ்டி முதலாகிய நாட்களிலும் மடாலயத்தில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். சிறப்பானவர்கள் எவரேனும் மடாலயத்திற்கு வந்து, சுவாமிகளிடம் அளவளாவிக் கொண்டிருந்தார்களேயாயினும், குறிப்பிட்ட நேரத்தில் திருமுறைப் பாராயணம் தொடங்கி விடுமாறு ஆணையிட்டுவிட்டு, சில நிமிடங்களுக்குள், சுவாமிகள் ஆங்கெழுந்தருளித் தம் பணியில் ஈடுபட்டு விட்டார்கள்.

மார்கழி மாதத்தில் காலை 6.00 மணிக்கு விரிவுரை தொடங்க வேண்டும். அவர்கள் 4 மணிக்கு நீராடி ஆன்மார்த்த பூசை முடித்துக்கொண்டு, பின்னர், மடாலயத்தில் எழுந்தருளும் முருகப் பெருமானுக்கும் பூசை செய்துவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் விரிவுரை தொடங்கி விடுவார்கள்.

திருவருணையில் ஈடுபாடு : சுவாமிகளுக்குத் திருவண்ணா மலையிற் பெரிதும் ஈடுபாடு உண்டு. தம் முதற் குருநாத தோற்றத்தினை அண்ணாமலையார் அருளிச் செய்தார் என்பதனாலோ, 'நினைத்த மாத்திரத்தில் முத்தியளிக்கும் தலம்' என்பதாலோ, தம் மடாலய முதற் குருநாதர் கார்த்திகை மாதக் கார்த்திகை நாள், சோதி, தோன்றும் வேளையில் தோன்றினார் என்பதாலோ, அனைத்தும் சேர்ந்தோ காரணமாகலாம். திருக்கார்த்திகைப் பெருவிழாக்களை அடிக்கடி தரிசனம் செய்யச் செல்வார்கள். அவர்களது சொல்லமுதம் பருக ஆண்டுறைந்தார் பெரிதும் விரும்புவார்கள். முற் குறிப்பிட்டவாறு, மாலையிலோ பிற்பகலிலோ தொடங்கும் சொற் பொழிவு முடிய இரவு 9.00 அல்லது 10.00 மணியாகிவிடும். பின்னரே நித்திய நியமங்களை முடித்துச் சிறிதளவு உணவு கொள்வார்கள். இரவு வீதிவலம் வருகையில் இறைவனை வழிபடுவார்கள், வாத்தியங்கள் தொடங்கி, வேத, தேவார, திருப்புகழ் பாராயண முதலிய சுவாமிகளின் முன்னிலையில், சற்று நீண்ட நேரமே தங்கிப் பணியாற்றும். சற்றேறக் குறைய 2 மணியும் ஆகிவிடும். பின்னரே உறக்கம். ஆயினும் வழக்கம் போல் 4 மணிக்கே விழித்துக் கொண்டு அன்றாடச் செயல்களில் ஈடுபட்டு விடுவார்கள். பகலில் பற்பலருக்குத் தரிசன மருளியும், அளவளாவியும் மகிழ்ச்சி யூட்டுவார்கள். குறிப்பிட்ட நேரம் கடவாமல் சொற்பொழிவுக் கூட்டத்திற் கெழுந்தருளி விடுவார்கள். இங்ஙனம் ஓய்வு சற்றுங் கொள்ளாமல் மன்பதை உய்தி வேண்டியே பணிகளை மேற்கொண்டார்கள்.

1932 ஆம் ஆண்டில் ஆரணி, ஆற்காடு, குடியேற்றம் முதலிய ஊர்களில் தொண்டு ஆற்றிவிட்டுக் கார்க்கூர் என்ற ஊருக்குச் சென்றிருந்தார்கள். அவ்வூரினராய ஓரன்பர், தம் ஊருக்கெழுந்தருளிச் சமயச் சொற்பொழிவுகள் ஆற்ற வேண்டியதால் அங்கு எழுந்தருளினார்கள். சென்று சேர்ந்த காலம் முன்னிரவு. தங்கியிருக்க ஓர் வீடமைத்திருந்தனர். அவ்வீடு முழுவதற்கும் புதிதாக வெண்சுதை தீற்றப் பெற்றிருந்தது. பின்புறம் ஓர் குறடும், அதத்குக் கீழே மூன்றடி தாழ்ந்திருந்த ஓர் தாழ்வாரமும் இருந்தன. வெண்சுதை தீற்றப்பெற்றிருந்ததால் வேறுபாடறியாமல், குற்டு நெடுக இருப்பதாக எண்ணிச் சென்ற போது, வீழ்ந்துவிட்டனர். ஒரு காலின் எலும்பு முரிந்துவிட்டது. பாதத்திற்கும் முழங்காலுக்குமிடையே அம்முரிவு ஏற்பட்டுவிட்டது. குடியேற்றம் வைத்தியரும், திருத்தணிகை வைத்தியரும் வந்து பார்த்துக் கால் எலும்பு பொருந்துவது கடினமென்றும், வேலூர் டேனிஷ் மிஷன் வைத்தியசாலை மருத்துவர் முயன்றால் நலமாகக் கூடும் எனவுங் கூறிவிட்டனர். அவ்வண்ணமே வேலூருக்கு வந்து மருத்துவரிடம் காட்டப் பெற்றது. அங்கு X-Ray வழியாக முரிவினைக் கூர்ந்து கவனித்த மருத்துவர், எலும்பு முரிந்து ஒன்றன்மேல் ஒன்றாக ஏறி நிற்பதையறிந்து இது ஒருக்காலும் கூடாதெனவும், காலை முரிந்த பகுதிக்குமேல் நீக்கி எடுத்துவிட்டால் உயிர் பிழைக்கக் கூடுமெனவும் தெரிவித்து, அவ்வாறு செய்துவிடலாமா? என்றபோது அடிகளார், ‘முருகன் செயல் அங்ஙனம் ஊறுபட்ட நிலையில் இருக்க விடாது. ஆகவே, பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறி முரிபட்ட காலுடன் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்தனர். உடனே எலும்பு முரிவுத் தனி வைத்தியர் வருவிக்கப் பெற்றார். அவர் புத்தூரினர், தனக்கேயுரிய வைத்தியம் செய்தனர்.

சுவாமிகளோ தம்பிரதம குருமூர்த்திகளை இடைவிடாது தியானம் செய்தும், ஆறுமகப் பரம் பொருளை வேண்டிக் கொண்டும் வைத்தியர் கூறியவாறே இருந்தார்கள். குருவருள் கூட்டுவித்தது. சில மாதங்களில், கட்டையூன்றி நடக்கத் தொடங்கினார்கள். பின்னும் சில மாதங்கள் கடந்த பின் கோலூன்றி நடந்தும், கால் ஊனம் சிறிது மின்றிப் பழைமை போலாகி நடக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கால் ஊனமின்றித் திருவருள் பாலித்தருளுமாறு தம் ஆதீன முதற்குரவரை வேண்டிப் பாடப்பெற்ற வெண்பாக்கள் பல. அவற்றுள் 49 கிடைத்தன. அவை இப்புத்தகத்திற் பிற்சேர்க்கையாக இணைக்கப் பெற்றுள்ளன. அவை, படுக்கையிலிருந்த்வாறே சில காகிதங்களில் அவ்வப்போது சுவாமிகளால் எழுதப் பெற்றவை 'குரு துதி' எனும் பெயரின.

இந்த நிகழ்ச்சியில் ஓர்சிறப்பு என்ன வெனில், வேலூர் உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையில் எலும்பு, நரம்பு தனிப் பிரிவின் மருத்துவர்கள் ஆராய்ந்து, இவ்வெலும்பு கூடவே வாய்ப்பில்லை; ஒன்றன் மேல் மற்றொன்று ஏறிக்கொண்டது. காலைத் துண்டித்தால் தான் உயிர்பிழைக்கலாம்; இல்லை யெனிற் சில நாளுக்குள் புரையோடி, உயிர்க்கே தீங்கு நேரும் எனக் கூறிய பிறகும் அடிகளார் குருநாதன், முருகன் மீது கொண்ட அடங்காத பக்தியால் சுகம் பெற்றார்கள் என்பதேயாகும்.

இவ்வாறு நலம் பெற்ற பிறகு, திருவண்ணாமலையை நடந்தே வலம் வரவேண்டுமெனச் சுவாமிகள் திருவுளம் கொண்டருளினார்கள். 1934ல் , எழுந்தருளியபோது, 8 மைல் சுற்றளவுள்ள தொலைவு நடக்க வேண்டுமெனச் சிலர் மறுத்தமையால் நகர்வலம் வந்து தீப தரிசனம் செய்தார்கள். ஆனால் 1941 அக்டோபர் மாதத்தில் (விஷு கார்த்திகை) தீப தரிசனத்தன்று அதிகாலை புறப்பட்டுக் காற்று மழையையும் கருதாமல் பாராயணத்துடன் மலைவலம் சூழந்தார்கள். அக்காலை அவர்கள் 68 ஆண்டுகளைக் கடந்தவர்களென்பதும், சிறிது தொலைவேனும் நடந்தறியாதவர்க ளென்பதும், பாதக்குறடு அணியாமல் வெறுங்காலுடன் நடந்து வலம் வந்தபின் மழையைப் பொருட்படுத்தாமல் கோபுரத்தின் வெளியே அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம் செய்தபின்னரே, தாம் எழுந்தருளிய விடத்திற்கு மீண்டார்க ளென்பதும் கருதத்தக்கன. இது பின் வருவோர்க்கெல்லாம் நல்வழி காட்டும் நிகழ்ச்சிகளுள் ஒன்று.

துன்பம் சுடச்சுட நோக்கிற்பவர்

யாரொருவர், நிறைந்த அன்புடன் இறைவனைத் துதிப்பதையே கடனாகக் கொள்கிறாரோ, அவர் துன்பம் அடைதலே உலகியற்கை. நல்லதற்கு இடையூறு நாற்புறமும் உண்டென்பதும் பழமொழியன்றோ? அவ்வாறே நம் அடிகளார்க்கும் சில சில உடல்நலக் கேடுகள் வந்ததும் உண்டு.

இயல்பாகவே, அவர்களுக்குச் சர்க்கரை வியாதி இருந்தது. அது அவர்களது 50 வயதிற்குமேல் பல உணவுக் கட்டுப்பாடுகளை உண்டாக்கி விட்டது.

1929ஆம் ஆண்டில் சுவாமிகள் புறமுதுகில் கட்டி (ராஜ பிளவை)யால் துன்புற நேர்ந்தது. அது மிக மிக ஆபத்தான நிலைக்குக் கொண்டுவந்து விட்டது. அதற்கு அறுவைச் சிகிச்சை செய்தவருள் ஒருவர், சுவாமிகளிடம் மிகப் பற்றுக்கொண்ட திரு பாலவேலாயுதம் பிள்ளையவர்கள். மற்றவர் திரு. கிருஷ்ண அய்யங்கார். அறுவைச் சிகிச்சைக்கு முன்னர், அடுத்த பட்டங் குறித்து உயிலும் எழுதிவைக்கப் பெற்றுவிட்டது. ஆனால் இறையருள் நம்பால் இருந்தது. அதன்பிறகு அவர்களது சொல்லருந் தொண்டுகளால் தமிழன்னை அரியணை வீற்றிருக்க வேண்டு மென்பதற்காகவே முற்றும் நலம் கிடைத்தது. பிறகும் அவர்கள் 12 ஆண்டுகள் நமக்கெல்லாம் வழிகாட்டும் பேறுபெற்றோம்.

1932ஆம் ஆண்டில் கார்க்கூரில் ஏற்பட்ட கால்முரிவு பற்றி முன்னமே குறிப்பிடப்பட்டது.

1937டிசம்பரில் வேலூரில் கூடிய சைவ சித்தாந்த மகா சமாச ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கிய அடிகளார்க்குச் சுரநோய் வந்துற்றது. அது இரவில் மிகுதியுற்றும், பகலிற் குறைந்தும் காணப்பட்டது. அன்பர்கள் சுவாமிகளிடம் , கூட்டத்திற்குச் செல்ல வேண்டா எனவும் வற்புறுத்தினர். ஆனால், இறைவன் திருவருள் நமக்குத் துணை இருக்கும்; அவன் திருவருள் நம் கடனாற்றும் போதே உயிர் நீங்க வேண்டுமென்றிருந்தால் அப்படியே நேரட்டும்; தன் கடன் அடியேனையும்தாங்குதல், எம் கடன் பணிசெய்து கிடப்பதே: என்று விடையிறுத்திப் பணியில் முனைந்தார்கள். மூன்று நாட்களும் வாட்டிய வெப்புநோய் கூட்டம் முடிந்த பின்னர் எங்கொளித்ததோ வழக்கம் போலவே பணிகளில் ஈடுபட்டு வந்தனர் நம் அடிகளார்.

1939-ஆம் ஆண்டில், சைவ சித்தாந்த மகா சமாசச் செயலராக இருந்த திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் கோவூர் (குன்றத்தூர் சேக்கிழார்) திருமேனிச் சுரர் கோயில் தருமகர்த்தராக இருந்தார். 1935ல் சுவாமிகள் எழுந்தருளியது போலவே மீண்டும் எழுந்தருள வேண்டு மென்ற அவரது அழைப்பிற்கிணங்கச் சுவாமிகள் ஆங்கு எழுந்தருளினார்கள். திருவிழாவின் அங்கமாகப் பல சொற்பொழிவுக ளாற்றினார்கள். அங்ஙனமே சென்னை சென்று பற்பல அன்பர் வேண்டுகோளை நிறைவேற்றுவான் தொடங்கிப் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். அவற்றுள் ஐக்கிய நாணய சங்க ரிஜிஸ்டரார். திரு. கீ. தெய்வ சிகாமணி முதலியாரவர்களின் வேண்டுகோளின் வண்ணம் அவரது இருப்பிடத்தில் 'மெய்கண்டார்’ என்னும் பொருள்பற்றி ஆற்றிய சொற்பொழிவு கேட்டோர் யாவரையும், இத்தகைய சொற்பொழிவினை வேறு எவரிடமும் கேட்டலரி தெனத் துணிய வைத்தது. பற்பல இடங்களிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்தியருளிக் கொண்டிருந்த சுவாமிகள், கோடைக்காலம் காரணத்தாலும், மிகுதியான சொற்பொழிவுகளில் ஈடுபட்ட காரணத்தாலும் இடது துடையில் தோன்றிய ஓர்பெரிய கட்டியால் துன்புற்றனர். அது சத்திர சிகிச்சையால் நலம் பெற்றது. முருகன் திருவருள் சுவாமிகளை மீண்டும் தொண்டுகளில் ஈடுபடுத்தியது.

31.5.1941-ல் திருவோத்தூர், பரிதிபுரத்தில் நடைபெற்ற பாதுகவி மாணவர் கழகத்தின் பன்னிராண்டாம் ஆண்டு விழாத் தலைமைப் பணியை யாற்றிவிட்டுப் பற்பல இடங்களிலும் தொண்டு செய்து திருக்கோவலூர் மீண்டு கொண்டிருந்த சுவாமிகளுக்கு வயிற்றுப்போக்கு வந்துற்றது. கண்விழிப்பு, காலந்தவறிய உணவு, கவனித்து வேளை தவறாமல் உணவு முதலிய நல்ல முறையில் அளிக்கப் பெறாமை, இடையறாத பணி ஆகியவையே அதற்குக் காரணமாயின. இடைவழியில் வயிற்றுப் போக்கு நேர்ந்ததால், போகிகள், தம் துன்பம் பொருட்படுத்தாதவராய் இரவோடிரவாக நடைகொண்டு, அதிகாலை 5 மணியளவில் திருக்கோவலூர் மடாலயத்திற் சேர்ப்பித்தனர். அப்போது சுவாமிகள் உடம்பிற் சூடில்லை. மிகவும் தளர்ந்த நிலையில் பேசவும் இயலாத நிலையிலிருந்தனர். உடனே டாக்டர் வருவிக்கப் பெற்றார் . அவர் மருந்து கொடுத்து வயிற்றுப் போக்கை நிறுத்தி, சூடுஉடலிலும் வரப்பெற்றார்கள். சில தினங்கள் கடந்தபின் உடல்நலம் பெற்றது. சுவாமிகள், சமயம் வாய்த்த போதெல்லாம் டாக்டர் துரைசாமி முதலியாரின் அருஞ்செயலைப் போற்றி நன்றி பாராட்டுவார்கள்.

தனக்கென வாழாமை :

‘உடலினை யான் இருந்து ஒம்புகின்றேனே’ என்றும், ‘உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்றும் கூறிய திருமந்திரங்களில் உடலின் அருமையும் அதனைப் போற்றும் முறைகளும் கூறப்பட்டுள்ளனவேனும், நம் சுவாமிகள் தம் உடலைப் பேணுவதிற் கருத்துச் செலுத்தாதவர்களாய், பிறர் உயிரை - ’பிறர் உடம்பினுள் உத்தமனைக் காண’த் தக்க பேரொளியை வளர்த்துக்கொண்டே நாடெங்கணும் பவனி வந்தார்கள்.

திருப்பாதிரிப்புலியூரில் தங்கியிருந்த காலங்களில் மட்டுமல்லாது, சென்ற சென்ற இடங்களிலெல்லாம் எந்த நேரத்தில் எவர்வேண்டினும் அவருக்குப் போதிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். இந்தத் தகைமை எவரிடங்காண இயலும்?

"..,. கடவுட் பக்தியும் சிறப்பாக முருகப் பெரு மானிடத்துப் பேரன்பும் உடையவர்கள் கல்வியறிவு டையோரை நன்கு மதித்து அளவளாவும் இளிய குணம் உடையவர்கள். தமிழ்மொழியில் பேரார்வத்தையும் சைவ சமயப் பற்றையும்தமிழ் மக்களுக்கு விளைத்து வந்த இவர்கள் அரிய சொற்பொழிவுகள், இத் தமிழபு நாட்டில் நிகழாத இடம் இல்லையென்றே சொல்லாம். மடாதிபதிகள் செய்யவேண்டிய அரிய செயல்களெல்லாம் திரு. ஞானியாரிடத்து நன்கு காணப்பட்டன. இக்காலத்துள்ள மற்றைய மடாதிபதிகள் இவர்கள் முறையைப் பின்பற்றுவார்களாயின் தமிழ்உலகத்திற்கே சிறந்த பயன் விளையும். இவர்கள் ஒழுகிய நெறி ஏனையோ ருக்குச் சிறந்த வழிகாட்டியதாக உள்ளதென்று கூறலாம்...”

.....இவர்கள் நினைவுக்குறியாக ஒரு தமிழ்க் கலைமாடம் சென்னையம்பதியில் நிறுவப்படுமாயின் தமிழர் நன்றியறிவு சிறந்தொன்றாகத் திகழ்வதாகும். எனக் குறிப்பிட்டுச் சுவாமி களது பெருமையை வியந்து போற்றியவர்கள் பண்டிதமணி - மு. கதிரேசச் செட்டியாரவர்கள்'.

“.... அவர்களுக்கு இவ்வளவு பெருமை ஏன்? அவர்கள் நன்கு படித்தவர்கள், ஆங்கிலம் தெரியும். வடமொழி நன்கு தெரியும். தமிழில் அவர்கள் படிப்பு மிகப் பரந்தது, ஆழமானது. இத்துடன் உலகியலறிவும் உண்டு. கற்றார்க்கும், கல்லாதார்க்கும் பயன்படும் படி பேச வல்லவர்கள். இனிமையாகப் பேசவார்கள். அவர்கள் அன்பு நிறைந்தவர்கள், ! எல்லாருக்கும் புன்சிரிப்பு; சில நல்ல வார்த்தை மடாதிபதிகள் என்ற நினைப்பு அவர்கள் வார்த்தைகளையோ, செய்கைகளையோ சுட்டவில்லை. விருந்தினரை நின்று விசாரிப்பார்கள், உளறுபவர்க்கும் கோபமின்றி அறிவு புகட்டுவார்கள். எல்லாரும் அவர்களைப் பார்க்கமுடியும். எப்போதும் பார்க்கலாம்.

அவர்கள் செய்த தொண்டுகள் பல; தங்கள் மடத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார்கள். அதற்குப் பெரும் புகழ்தந்தார்கள். பலருக்குத் தமிழறிவு புகட்டினர். கிறிஸ்தவர்களும் அவரிடம் படித்திருக்கிறார்கள். பலருக்குச் சமய அறிவு புகட்டினர். அநேகர்மனதில் அன்பெனும் விதையை நட்டார்கள். பற்பலர் வாழ்க்கையைத் திருத்தியமைத்தனர். அவர்களிடம் உபதேசம் பெற்றோர் கணக்கற்றவர். அவர்கள் சொற்பொழிவு கேட்டோர் பல்லாயிரவர்.

ஊர்தோறும் சென்று சைவ உண்மைகளைப் பரப்பியவர் சமய குரவர் மூவர். அவர்களுக்குப் பின்னர் அத்தொண்டு செய்தோர் ஒருவரையும் எனக்குத் தெரியவில்லை. அத்தொண்டை இக்காலத்தில் செய்தவர்கள் ஞானியார் சுவாமிகள்....”

இங்ஙனம் குறிப்பிட்டெழுதியவர், திருவாளர் கா. இராமநாதன் செட்டியார் B.A., B.L. ஆவர்.

அயல் மதத்தார், குறிப்பாகக் கிருஸ்துவ மதத்தார், ஆண்டுதோறும் ஓரிடத்தில் ஒரு பேரவை கூட்டிப் பல வகையில் மதச் சீர்திருத்தத்திற்கும், ஆக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் வழியமைப்பதுபோல, நம் சைவ சமயத்திலும் கூட்டப் பெறல் வேண்டுமென்பதனை அந்நாளிலேயே நம் அடிகளார் வற்புறுத்தினர். அங்ஙனம் ஓர் சபையைத் தாமே நடத்திக் காட்டியமை. 1929-ல் மே திங்களில் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. ஆயின் பல மடாதிபதிகளும் ஒருங்கு கூட வேண்டுமென்பதும் அடிகளாரின் எண்ணம். அது இன்றைய தெய்வீகப் பேரவையாக மிளிர்கின்றது.

தாமே பலமடங்களுக்குச் சென்று மடாதிபதிகளைச் சந்தித்து ஆக்க வேலைகளுக்கு வழி காணுமாறு தூண்டியதுண்டு.

1916-ஆம் ஆண்டில் சுவாமிகள் மயிலத்திற்கு எழுந்தருளி, ஆங்கு மூன்று நாள் தங்கியிருந்து சொற்பொழிவுகள் ஆற்றியும் சமயப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டும் மீண்டதுண்டு.

அதே ஆண்டில் திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மஹரிஷிகளை, விருப்பாட்சி குகையிற் சந்தித்து அளவளாவினார்கள்.

1925-ல் பேரூர் ஸ்ரீ சாந்தலிங்க அடிகளார் மடத்திற்கு எழுந்தருளி ஆண்டு விழாவை நிகழ்த்தினார்கள்.

1927-ல் புதுவை அம்பலத்தாடும் சுவாமிகள் மடத்திற்கு எழுந்தருளி அப்போதைய தலைவர்களுடன் அளவளாவிச் சமய வளர்ச்சிக்குத் துணை தேடுமாறு வற்புறுத்தினார்கள்.

திருவோலக்கப் பொலிவு

‘...முருகன் சேவடி வருடி யுருகும் ஈரநெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்குஞ் செவியும், பொன்னொளிரும் மணி மார்பும்,கருமைக் கதிர் விரிக்குந் திருமேனியும், ‘சண்முகா - சண்முகா' என்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு என் உள்ளத்தில் ஓவியமெனப் படிந்து நிற்கிறது. அஃது எவர் உள்ளத்தையும் கவரும்; எவர்க்கும் எளிதில் இன்பூட்டும் .....’ -

‘ஸ்வாமிகளின் உருவத் தோற்றத்தைப் பார்த்ததுமே “இதோ ஒரு பெரியார் இருக்கிறார்” என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகும். அவருடைய வாய்மொழிகளைக் கேட்டு, அவருடைய வாழ்க்கை முறையையும் கவனித்தோமானால் அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனாகும். "அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா?” என்று எண்ணி எண்ணி வியப்போம்.

'கல்கி' ஆசிரியர். ரா. கிருஷ்ணமூர்த்தி,

1939 நவம்பரில் ஆனந்த விகடனில் எழுதியது

“ஞானம் - மெய்ஞ்ஞானம் -துவராடை தாங்கிய மேனி-அங்க இலிங்கம் - தாழ்வடங்களின் தனியிடம் - திருநீற்றின் பொலிவு - தமிழ் மணங் கமழும் புன்முறுவல் - இதோ தோற்றுகின்றது....’

வித்துவான் - மு. . இரத்தின தேசிகர், குடவாயில்

'......காட்சியளவில் இவர்தம் வடிவும், அழகும் மனத்தைக் கவர்ந்தன. சிறிதே சிவந்து நிமிர்ந்த உருவம், துவராடை உடுத்த துகள்தீர்மேனி, பருமையும் மெலிவுமின்றிப் பாங்குற அமைந்த உடல் விரிந்த கொள்கையின் பரந்த நெற்றி. ஆழ்ந்த நோக்குடன் அன்பொழுகு கண்கள். நேர் நிமிர்ந்து முனைவளையாக் கூர் அறிவு காட்டும் கூரிய மூக்கு. தமிழ்ப் புலமை பூக்கும் தனி வாய். தெய்வ ஒளி வீசும் திருமுகம். இவர் முகத் தோற்றத்தை உற்று நோக்குக. இதில் தோற்றுவது யாது? சங்கத் தமிழின் தீங்களிப்போ? சிந்தை சேர்ந்த சிவத் தொளியோ அன்பு பழுத்த அகத் தெளிவோ! அறிவு பழுத்து அமைவளமோ தமிழின் பழுத்த தனியழகோ யாதெனப் புகல்வது? இவை யாவும் திரண்டெழுந்த “ஞானத்தின் திருவுருவோ நம் எதிரே தோன்றுவது? கண்டன யாவையும் வாரி வாரி உண்டன. கண்கள். கொண்டன களிப்பு.

......எழுத உரிய வடிவும் அழகும் இயற்கையிற் பெற்ற இவர் காதில் அசைந்தது குண்டலம். கழுத்தில் தவழ்ந்தது கண்டிகைத் தாவடம்.....’

சென்னை, டிப்டி கலைக்டர், ராவ் சாஹிப்,

கே. கோதண்டபாணி பிள்ளையவர்கள்.

ஆலயத் தொடர்பு

பண்டை நாளில் மடங்களோடு ஆலயங்களைச் சீரிய முறையில் நடத்தும் பொறுப்பும் மடாதிபதிகளுக்கு இயைவிக்கப் பெற்றன. அவர்களும் நன்குபேணி வளர்த்துச் சீரிய தொண்டு பல புரிவர். இடைக்கால நிலைவேறுபட்ட காரணத்தால் தோன்றியதே இந்து அறநிலையக் கழகம். சில காலம் 1935 முதலாம் ஆண்டுகள் என நினைவு. அக் கழகத்தின் தலைவராகத் திருச்சி திருவாளர் T.M. நாராயணசாமிப்பிள்ளை, MA, B.L., அவர்கள் தலைமைப் பதவியிலிருந்தார்கள். கோவை திரு. C.M. இராமச்சந்திர செட்டியார் (கோவைகிழார்) B.A., B.L., அவர்கள் ஆணையராக இருந்தார்கள் அவ்விருவரும் சமய வளர்ச்சிக்காம் அரும் பணிகளைக் குறித்துச் சுவாமிகளிடம் அடிக்கடி வந்து கலந்துரையாடுவார்கள். அவர்களுக்குச் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியனவே ஆலயங்களுக்கு ஆணை மூலம் அறிவிக்கப் பெற்றன. அவற்றுட் சில :

1. அந்தந்தத் தல தேவார - பிரபந்தப் பாக்களைக் கூடியவரை ஆலயச் சுவர்களில் எழுதிவைத்தல். அவையில்லாத ஆலயங்களில் பொருத்தமுள்ள பாடல்களை எழுதி வைத்தல்.

2. தலத் தொடர்பான நிகழ்ச்சிகளையும், பொதுவான சமய நிகழ்ச்சிகளையும் சொற்பொழிவு, கதை முதலிய வாயிலாக மக்களிடையே சமயப்பணிகளைப் புரிதல்.

3. அந்தந்தத் தல வரலாறு அந்தந்தக் கோயிலில் எழுதப் பெற்றோ அச்சிடப் பெற்றோ போற்றி வைக்கப் பெறல். அது கழக ஒப்புதல் பெற்றிருத்தல் சிறப்பு.

4. திருமுறைகள் - பிரபந்தப் பாக்களைப் பூசைவேளைகளில் முறையோடு பாடச் செய்தல்.

5. விழாக் காலங்களில் சமயச் சொற்பொழிவு முதலாயவை அமைத்துச் சமயப் பிரசாரம் புரிதல்.

6. சமயப் பிரசாரங்கள் கோயில்களிலும், மடங்களிலும் அவ்வவற்றின் சார்பில் நடத்துதல் - முதலியனவாம்.

மேற்கூறப் பெற்றவாறெல்லாம் திருப்பாதிரிப்புலியூர் ஆலயத்தில் நடைமுறையிற் கொண்டுவரலும் பிற இன்றியமையாத பணிகளும் சுவாமிகள் தலைமையில் மேற்கொள்ளல், ஆலய முன்னேற்றத்தால் மக்கள் முன்னேற்றத்திற்கு வழியாகுமெனக் கருதினர் பலர். சுவாமிகளை தருமகர்த்தராக்க முனைந்தனர். அடிகளாரும் ஒப்புக் கொண்டார்கள். 1936-37ஆம் ஆண்டுகளில் அவர்கள் தலைமையில் திருப்பாதிரிப்புலியூர்த் திருக்கோயிலில் பலவகைப் பணிகள் நிறைவேற்றப் பெற்றன.

1. மின் விளக்குகள் அமைக்கப் பெற்றுத் தொடர்பு பெறப்பெற்றது.

2. திருக்கோயில் வெளிச் சுற்றின் தென்பாலும், மேற்பாலும் திருமதில் அமைத்துத் திருநந்தனவனம் அமைக்கப் பெற்றது. (முன்னைத் திருப்பணியாளரால் தம் சொந்தப் பொறுப்பில் அமைக்கப் பெற்றுப் புஷ்ப கைங்கரியம் நடைபெற்று வந்ததுண்டு. 1929-க்குப் பிறகு அவர்களது சொத்துகள் பிறர் வயப்பட்டபோது அதுவும் பிறருடையதாயிற்று. அதனால், கோயிலில் பூக்களை வாங்கியே பயன்படுத்தும் நிலையிலிருந்தது.)

3. திருமண முதலிய காலங்களில் வருவாயாக வந்த பொன் முதலியவை அவர்களுடைய சிறந்த மாணவராம் அரங்கைய பத்தரவர்கள் மூலம் திருவாபரணங்களாக்கப் பெற்றன.

4. கூடியவரை செலவுகளைச் சுருக்கிப் புதிய வருவாய்களுக்கு வழிகோலப் பெற்றன.

1936,37 ஆண்டுப் பெருவிழாக்களுக்கு வேண்டிய பொருள்களை எந்தக் கடைக்காரர் எந்தப்பொருளைக் குறைந்த விலைக்குக் கொடுக்க முன் வருகிறாரோ, அவரிடம் அப்பொருள்களை வாங்கச் செய்தார்கள் - அதற்கு முன், ஒரு கடைக்காரர் யாவும் கொடுத்து விட்டு அவர் குறிப்பிட்ட விலைப்படியே பணம் பெற்று வந்தமை நிறுத்தப் பட்டது.

5. கொடியேற்றத்திற்கு முன் அமாவாசையிரவு, எல்லைக் காப்பு காரணமாகப் பலி சோறிறைக்கும் வழக்கம் உண்டு. அதற்கென உயிர்ப்பலி கொடுக்கப் பெற்று வந்தமை நிறுத்தப் பெற்றது. பூசணிக்காய் பலியிடும் வழக்கம் நடை முறைக்கு வந்தது.

6. கோயிற் கணக்குகளை ஒழுங்கு படுத்திச் சிறந்த முறையில் கணக்குகள் வைக்கப் பெற்றன.

7. விழாக் காலங்களில் ஆலயச் சார்பில் ஆலயத்திலேயே சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெற்றன. 1936-ல், பெருவிழா நிகழ்ச்சி அச்சிடப் பெற்றது. சங்க இலக்கியங்களிலும் தோத்திர நூல்களிலும் காணப்படும் விழாப் பற்றிய குறிப்புகளையெல்லாம் அந்நிகழ்ச்சி நிரலில் திரட்டியளித்தார்கள். அது ஓர் புதிய முறை மட்டுமன்றி விழாக்களைப் பற்றிப் பண்டையோர் கொண்ட கருத்துக்களையும் சிறப்புக்களையும் திரட்டிய ஓர் கருவூலமா யமைந்தது.

இன்னும் பலவிதங்களிற் சீர்திருத்தம் செய்து வந்த சுவாமிகளை 1937 ஆண்டில் ஓர் அதிகாரி அணுகினார். கோயிற் கணக்குகளைப் பரிசோதிக்க வேண்டுமெனக் கேட்டார். சுவாமிகள் அவரிடம் கோயிலுக்கே சென்று பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்கள். அவரோ, சுவாமிகளின் தன்மைகளையறியாதவர் போலும்! தானும் சமயத்தில் ஊன்றிய பற்று இல்லாதவர். பெரியோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் புறக்கணித்தவர் போலும் ! நான் கணக்குக் கேட்டால் நீங்கள் வருவித்துக் காட்ட வேண்டுமேயல்லாமல் என்னைக் கோயிலுக்குப் போய் மானேஜரைக் கேட்கச் சொல்கிறீர்களே என்று கேட்டார். சினக்குறி காட்டினார். உடனே சுவாமிகள், 'முருகப் பெருமான், உங்களைப் போன்றவர்களுக் கெல்லாம் கீழ்ப் படிந்து செயலாற்றும் நிலையில் எம்மை வைக்கவில்லை. எனவே, இப்பொறுப்பு இனி எமக்கு வேண்டுவதில்லை' யென அறிவித்து, அப்போதே ஒரு விலகல் கடிதம் (ராஜினாமா) எழுதி அவரிடம் தந்து விட்டார்கள்.

வந்தவர், வேறு செய்வதறியாது ஆலயம் சென்றார். மானேஜர் வாயிலாகக் கணக்குகளைச் சரிபார்த்தார். யாவும் செம்மையாக வைக்கப் பெற்றிருந்தமை கண்டார். மானேஜர் வாயிலாகச் சுவாமிகளின் இயல்புகள் சிலவற்றைக் கேட்டறிந்தார். தன் செயலுக்கு வருந்தி, மீண்டும் மடாலயம் வந்தார். சுவாமிகளைப் பதவியில் நீடித்திருக்குமாறு வேண்டினார். ஆனால் சுவாமிகள் 'ஒரு முறை நமக்கு முருகன் புத்தி புகட்டிவிட்டான். இனியொரு முறையும் அங்ஙனம் நேரக் கூடாதென்பது அவன் கட்டனை. இனி, இப்பொறுப்பு நமக்கு வேண்டாம்' என்று கூறி அவருக்கு விடை கொடுத்து விட்டார்கள்.

என்னே அறியாமை தம்மைச் செறுக்கால் உயர்த்திக் கொண்டும், ஆலயத் தொடர்பு கொண்ட யாராயிருந்தாலும் தமக்குக் கீழ்ப்பட்டவரென மதித்தும் அகந்தை கொள்வோரின் கெடுபிடிகளால் மக்களுக்கு ஏற்படும் நல்லன பல நசுக்கப்படுவதே உலகியல்போ?

திருவதிகைத் தலத்திடத்தும், திலகவதியம்மையாரிடத்தும் நம் சுவாமிகளுக்கு நிறைந்த பற்று உண்டு. 1938 வாக்கில் ஆலயத் திருப்பணிகள் நிறைவேறிவிட்டன. பண்ணுருட்டி வணிகப் பெருமகனார் ஆ. அ. குப்புசாமி செட்டியார் 45 ஆயிரத்திற்கு அதிகமாகச் செலவிட்டார். பாண்டியன் கோபுரத்தையும் புதுப்பித்தார். ஆனால் கும்பாபிஷேகத்தை நடத்தாமல் காலங்கடத்திவந்தார். வழக்கம் போல் திருவதிகை சென்ற சுவாமிகள், இராசகோபால்செட்டியாரை வருவித்துத் 'தாங்கள் முன்னின்று கும்பாபிஷேகத்தை நடத்திவைக்க' எனக் கூறினார். அவரும் சுவாமிகள் கட்டளையச் சிரமேல் தாங்கி 23-6-40ல் சிறப்புறக் கும்பாபிஷேகத்தை நிறைவேற்றிவைத்தார். அதன் அங்கமாகச் சுவாமிகள் தலைமையில் சைவ மாநாடு ஒன்றும் 3 நாள் நடந்தது. திருப்பெருந்துறை - மடாலயத் தலைவர் நமசிவாயத் தம்பிரானும், திருவதிகை குமாரசாமித் தம்பிரானும், சுவாமிகளின் அன்பர், சென்னை திருவொற்றியூரானடிமை - திரு. த. ப. இராம சாமிப் பிள்ளையர்களும் முன்னின்று கும்பாபி ஷேகத்தைச் சிறப்புற நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேக நினைவாகத் தல மான்மியம் வெளியிடப்பெற்றது. அதை உரை நடையில் எழுதியவர் சுவாமிகளின் மாணவர் சோழவல்லி ப. பாலசுந்தர நாயனார். அவர் அங்ஙனம் வெளியிடுவதையறிந்த சுவாமிகள் திலகவதியம்மையார் பேரில் சில பாட்டுகள் இயற்றித் தந்து சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். ஆறு விருத்தப் பாக்களும் ஒரு வெண்பாவுங் கொண்ட திலகவதி அம்மை துதி பிற்சேர்க்கையாக இணைக்கப்பெற்றுள்ளது.

அடியர்களுக்காகச் சுவாமிகள் கொண்ட விழாக்கள்

அறுபானாண்டு நிறைவு :

சுவாமிகளுக்கு அறுபது ஆண்டுகள் நிரம்பின. மாணவர் பலரும் அப்பெரு நாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டுமெனச் சுவாமிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டனர். சுவாமி ளும் அடியவர் பொருட்டு அதனை யேற்றுக் கொண்டனர்.

ஸ்ரீமுக ஆண்டு வைகாசிமூல நாள் (1933, மே ௴) திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம் விழாக் கோலம் பூண்டது. மாணவர்களும் அன்பர்களும் திரண்டனர். வெளியூரினர் பற்பலர் குழுமினர். சுவாமிகள் அதிகாலை நீராடித் தம் ஆன்மார்த்த பூசை முடித்துக் கொண்டு, வண்டிப்பாளையம், குருமூர்த்தி தோட்டத்திற் கெழுந்தருளித் தம் மடாலய முன்னோர்களை வழிபட்டுக் கொண்டு வந்து, மடாலயத்து எழுந்தருளும் ஸ்ரீ வல்லி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமண்ய மூர்த்திக்கு ஆராதனைகள் புரிந்து யாவர்க்கும் திருநீறளித்தனர்.

பிற்பகல், பேரவை கூடிற்று, வடமொழி- தென்மொழி வல்லுநராய மகாமகோபாத்தியாய, பண்டிதமணி- திருவாளர் மு. கதிரேசன் செட்டியாரவர்கள் அவைத் தலைவர். பேரறிஞர் பலர், சுவாமிகளின் தொண்டுகள், அறிவாற்றல்களைச் சிறப்பித்துப் பேசினர். பற்பல சங்கங்களிலிருந்தும், அறிஞர் பலரிடமிருந்தும் வந்திருந்த பாராட்டு வாழ்த்துரைகள் படித்தளிக்கப் பெற்றன. பேரவை முடிந்தவுடன், அறிஞர் யாவரும், மாணவரும் புடைசூழ்ந்துவர, சுவாமிகள் ஸ்ரீ பாடலேசப் பெருமானையும், பெரிநாயகித் தாயாரையும் வழிபட்டு அருளேற்று அன்பர்களுக்கும் பிரசாதம் வழங்கி ஆசிபுரிந்தருளினார்கள்.

கரந்தைத் தமிழ்ச்சங்க ஸ்தாபகரும், புரவலருமாகிய திரு. த. வே. -உமாமகேசுரம் பிள்ளை, B.A., B.L., அவர்களுக்குச் செந்தமிழ்ப் புரவலர் என்ற சிறப்புப் பெயரளித்தது அந்நாளில்தான். சிறுவர் கல்வியறிவு பெற்றுப் பின் வித்துவான் தேர்வுகட்குச்செல்ல வாய்ப்பாக இருக்குமாறு ஞானியார் கலாசாலை என்று ஓர் கல்வி நிலையத்தைத் தம் மடாலயத்தில் தொடங்குவதற்காகப் பத்தாயிர ரூபாய் வைப்பு நிதியாக அளித்தார்கள்.

பொன்விழா :

சுவாமிகள் பட்டம் ஏற்று 50 ஆண்டுகள் நிறைவுற்றன. 1939, நவம்பர் 18, 19 இரு நாட்கள் சுவாமிகள் பொன்விழா நடைபெற்றது. முன்போலவே மாணவர் சுவாமிகளிடம் அநுமதி பெற்றுத் திரு. K. சீதாராம் ரெட்டியாரவர்களைத் தலைவராகவும், டாக்டர் யு. வே. தேவராஜ முதலியார், கிழக்கு மருதூர் - தி. கி. நாராயண சாமி நாயுடு ஆகியோரைச் செயலர்களாகவுங் கொண்டதோர் குழு அமைக்கப் பெற்றது.

முதல் நாள், அவர்கள் பட்டமேற்ற 51-வது ஆண்டின் தொடக்க நாள். அந்நாளில் அதிகாலையிற் சுவாமிகள் நீராடிப் பூசை முடித்து மடாலயத்து முருகனுக்குத் தம் திருக்கரங்களாலேயே அபிடேக ஆராதனைகளைச் செய்தருளினார்கள்.

மாணவர், சுவாமிகளை ஓர் பீடத்திலமர்த்தி, அவர்களில் வீரசைவ மாணவராம் திரு. உருத்திரசாமி அய்யரவர்களைக் கொண்டு அபிடேக ஆராதனை முதலிய புரிவித்தார்கள். மாணவர் யாவரும், விநாயகரகவல், திருமுருகாற்றுப் படை முதலாய நூல்களைப் பாராயணஞ் செய்து அரஹர முழக்கமிட்டனர். யாவையும் ஏற்றுக் கொண்ட அடிகளார், ‘முருகன் திருவிளையாடல்' பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். திருமுருகாற்றுப்படையின் மாண்பு பற்றி அப்போது குறிப்பிட்டு யாவருள்ளத்தினும் அந்நூலின் மீது தனிப்பற்று விளையுமாறு செய்தார்கள்.

மாலை பேரவைக்குத் தலைவர், ரசிகமணி T.K. சிதம்பரநாத முதலியாரவர்களாவர். சுவாமிகளின் நாவன்மை, கல்வித் திறன் முதலியவை பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுத் தலைமையுரையாற்றினார். மடாதிபதிகளும், பல கழகங்களும், அன்பர் - பேரறிஞர்களும் மாணவர்களும் பாராட்டு- வாழ்த்துரைகள் படித்தளித்தார்கள், வர இயலாத சிலர் அனுப்பிய பாராட்டுகள் படிக்கப் பெற்றன. -

சுவாமிகளிடம் பயின்று வித்துவான் பட்டம் பெற்ற தேவார ஓதுவார் - திரு. மு. நடராஜ தேசிகர் இடையிடையே, திருமுறைகளையும், திருப்புகழ்களையும் ஓதி, அவையினரை அரனிடத்து அன்பு கொள்ளுமாறு செய்தார்.

முதற் குருநாதர் மீது, அவர் மாணவர் அவிநாசிநாதர் இயற்றிய நெஞ்சுவிடுதூது முதலாம் தோத்திரக் கொத்து அச்சிடப்பெற்று யாவர்க்கும் இலவசமாக அளிக்கப் பெற்றது. திருமதி. க. ர. ஆதிலட்சுமி யம்மையார், கந்தரனுபூதி நூலைச் சுவாமிகளிடம் பாடங் கேட்டவாறு உரையுடன் அச்சிட்டுக் கொண்டுவந்து யாவர்க்கும் வழங்கினார்கள்.

அன்றிரவு, அறிஞர், மாணவர் புடைசூழச் சுவாமிகள் ஆலயதரிசனம் செய்தருளினார்கள். .

இரண்டாநாள் காலைநிகழ்ச்சி திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் தலைமையில் தொடங்கிற்று. சில வாழ்த்துரைகளும், வணக்கப் பாடல்களும், பாரட்டுகளும் படித்தளிக்கப் பெற்றன. பின்னர், பண்டிதமணி திரு. மு. கதிரேசன் செட்டியாரவர்கள் தலைமையில், சேலம் கல்லூரி விரிவுரையாளர், திரு. ஆந்திரக் காசியப. திம்மப்ப அந்தணனார் இயற்றியிருந்த 'ஆசானாற்றுப்படை' அரங்கேற்றப் பெற்றது. அதில் அடிகளாரின் நற்பண்புகள் பல சுவைபடப் பாராட்டப் பெற்றிருந்தன.

பிற்பகலில் திரு.டி.கே.சி. தலைமையில், ந. மு. வேங்கட சாமி நாட்டாரவர்களும், ச. சச்சிதாநந்தம் பிள்ளையவர்களும் பிறரும் சொற்பொழிவாற்றினர். -

சர். பி. டி.இராசன், த. வே. உமாமகேசுவரம் பிள்ளை, ஈ. வே. இராமசாமி நாயக்கர், டி. எம். நாராயணசாமிப்பிள்ளை, யாழ்ப்பாணம்- நடேசப் பிள்ளை முதலாயினோர் மழை, வெள்ளம் காரணமாகப் போக்குவரவு நிலை கெட்டிருந்த காரணத்தால் வர இயலாமைகுறித்து அனுப்பியிருந்த தந்தி முதலியவை படிக்கப்பெற்றன.

அச்சியற்றிய சில நூல்கள்

1. திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் :

சுவாமிகள், திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணைவன் மீது நீங்காப் பற்றுக்கொண்டவர்கள். தல வரலாறு பற்றித் தாம் பட்டமேற்றுக் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதே அறிந்தனர். பட்டமேற்ற சில ஆண்டுகளுக்குள் வடமொழிப் புராணம் மட்டுமே கிடைத்தது. தம் ஆசிரியர் வழி, திருவாவடுதுறை யாதீனத்திலிருந்து ஒரே பிரதியைப் பெற்றார்கள். அதனைப் பரிசோதித்துத் திருத்தியும், தம் ஆசிரியரைக் கொண்டு பாட்டுகளைத் தழுவி எழுதுவித்த உரைநடையையும் 1897-ல் ஆச்சிட்டார்கள். சுவாமிகள் முன்னுரை எழுதியுள்ளார்கள். ஆசிரியர் சுவாமிநாதையரவர்கள் சாற்றுக் கவிகள் அளித்துள்ளார்கள்.

2. திருப்பாதிரிப்புலியூர்த் தோத்திரக்கொத்து :

ஆலய வழிபாடு கொள்வோர்க்குத் தல மூர்த்திகளின் மேல் பாக்களைப் பாட எளிதாயிருப்பது கருதிப், பல ஆன்றோர் பல பல சமயங்களிற் பாடிய பாக்களையெல்லாம் திரட்டித் 'திருப்பாதிரிப்புலியர்த் தோத்திரக் கொத்து’ எனும் பெயர் சூட்டி அச்சிட்டு 1917-ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது யாவர்க்கும் அன்பளிப்பாக வழங்கச் செய்தார்கள்.

3. அற்புதத் திருவந்தாதி :

காரைக்காலம்மையார் என்று யாவராலும் கூறப்பெற்று வந்த வயது முதிர்ந்த ஓர் அம்மையார் மடாலயத்தில் இருந்தார்கள். அவர்கள் திருவருளிற் கலந்து மோட்ச தீபம் நடைபெற்ற அன்று சிறு வடிவில் அதனை அச்சிடுவித்து யாவர்க்கும் வழங்கச் செய்தார்கள்:

4. ஞானதேசிக மாலை :

மடாலயத்தின் இரண்டாம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளின் ஆலயம் திருப்பணி நிறைவேற்றிக் கும்பாபிஷேகம் செய்வித்த போது, தாம் இயற்றிய ஞானதேசிக மாலையை அச்சிடுவித்து யாவர்க்கும் வழங்கச் செய்தார்கள்.

5. அவிநாசி நாதர் தோத்திரக் கொத்து :

1939-ல் பொன் விழா நடைபெற்றபோது வெளியிடப் பெற்றது. அதில் அடங்கிய சிகாமணிப் பதிகம் மட்டும் திருக்கோவலூர் ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்களாலும் அச்சிடுவித்தது உண்டு.

6. கந்தர்சட்டிச் சொற்பொழிவு :

இது அடிகளின் சொற்பொழிவுகள் சில. பேராசிரியர் முத்து இராசாக்கண்ணனார் குறிப்பெடுத்து எழுதியது.

இன்னும் சில பண்புகள்

இதுவரை எழுதப்பெற்றவை யெல்லாம் சுவாமிகளுடைய பெருமைகளுள் ஒரு சில பகுதிகளேயெனலாம். எந்த இடத்தில், எந்த நேரத்தில், எத்தகையார் வரினும் அவர் வேண்டிய நூல்களிற் பாடம் போதித்தல் ஒரு தனிப் பண்பாடு, அதிலும், அவர்கள் புத்தகம் எதனையும் பிரித்து வைத்துக் கொள்ளாமல், கேட்க வந்தோரையே பாட்டைப் படிக்கச் செய்து, வழக்கம் போலப் பயனிலையை முன் கூறிப்பின்னர் முறை முறையே கூறி, வந்தவர் ஐயமின்றிப் பொருள் விளங்கிக் கொள்ளும் அளவும் போதிப்பதைக் கேட்டோர் பலரும் வியந்து போற்றுவர். எழுதியும் உளர்.

இங்ஙனமே சிற்சில ஐயங்களைத் தெளிவித்தலும் சிறப்பு :

மடாலய மரியாதைகள் பல. பல்லக்கு, மேனா, குடை, கொடி சாமரை, தீவர்த்தி முதலியவை முதற்சுவாமிகளுக்கு ஆற்காட்டு நவாப்பினால் அளிக்கப் பெற்றவை. நம் சுவாமிகள் அவற்றை ஆடம்பரம் கூடாதென்றோ - ஏனோ நிறுத்தி விட்டார்கள். திருச்சின்னமுங் கூடத் தென்னாட்டு யாத்திரைக்குப் பின் பயன்படுத்த பெறவில்லை. உறுதி மொழிபற்றி மேனா இவர்தலை மட்டும் கைவிடவில்லை.

விசய தசமியன்றும், மாட்டுப் பொங்கலன்றும் திருக்கோயில் இறைவன் எழுந்தருள்வதுண்டு. மடாலய முகப்பில் வரும் போது வழக்கம் போல் தரிசித்துவிட்டுச் சென்று, முதற் சுவாமிகள் அணிந்து கொண்டிருந்த, தலை மாலை, மார்பு மாலைகளாம் சில கோவை களை யணிந்து பூசனை புரிந்துவிட்டுக் கொலு விருப்பார்கள். அடியார்கள் வணங்கத் திருநீறளித்தபின் அவைகளைக் களைந்து எப்போதும் போலவே இருப்பார்கள்.

விலை மதிப்புமிக்க ஆடைகளையோ, ஆபரணங்களையோ அணிவதில் ஒருபோதும் விருப்பம் கொள்ளார்கள்.

தொடக்க காலத்தில் முருகேச நகர், ப. க. பழநியாண்டி முதலியாரும், வெ. க. மாணிக்க முதலியாரும் விரும்பிச்செய்து அணிவித்த தங்கச் செச்சை மட்டும் மார்பகத்தில் விளங்கிக் கொண்டிருக்கும்.

தரிசிக்கவரும்.அன்பர்கள் கையுறையாகக் கொண்டு வரும் பழம் முதலிய பொருள்கள் யாவர்க்கும் வழங்கப் பெறும். கொண்டு வந்தோர்க்கும் பிரசாதமாகச் சில அளிக்கப்பெறும்.

யாவரும் தமிழ் மொழியினைத் திருத்தமுறப் பேச வேண்டுமென்பது சுவாமிகள் அடங்கா ஆர்வம். தாமும் ஒரு சிறு கொச்சைச் சொல்லும் பயன்படுத்த மாட்டார்கள். பழகுவோர், மாணவர் முதலாயினோர் யாவரும் அவ்வண்ணமே பேசுவரேயன்றி ஒரு சிறிதளவும் மாறாதவாறு தம்மைத் தாமே கவனித்துக் கொள்வார்கள்.

ஆண்டவனுக்கு இயன்ற அளவு நிறையப் பொருள்களை அபிஷேகிக்க அவாவுவது அவர்கள் இயல்பு. சிறப்புக்காலங்களில் அங்ஙனமே செய்வார்கள்.

ஏதொன்றையும் கணக்குப் பார்த்தே செலவிடுவார்கள். வீண் செலவுகள், ஆடம்பரங்கள் அவர்களுக்குப் பிடியாதன.

நோயுற்றோரும், சில முறையான விருப்பங்கொள்வோரும் சுவாமிகள் திருக்கைத் திருநீறு பெற்றுச் சிறந்தாராவர். புதுவண்டிப்பாளையம் அ. வேங்கடாசல முதலியாரவர்கள், கண்ணொளி மங்கியபின், நாள்தோறும் சுவாமிகளை வந்து தரிசித்தும், குருமூர்த்திகளின் ஆலய தரிசனம் செய்தும் முற்றும் நலம் பெற்றுத் திகழ்ந்தனர்.

மாணவர்

முன்னரே குறிப்பிட்டவாறு சுவாமிகள எப்பாலவரையும் மாணவராக எற்றார்கள். அறிந்தவரை சிலரை இங்குக் குறிப்பாம்: திரு. ம. ரா. குமாரசாமிப்பிள்ளை - இவரே சுவாமிகளின் புகழைப் பரப்பியவர். 1929ல் சுவாமிகள் ஆரணி யிலிருந்தபோது, புறமுதுகில் கட்டி தோன்றியதால் துன்புற்றார். ஆரணியிலிருந்து சுவாமிகள் அவரைக் காணும் நோக்கத்துடன் திருக்கோவலூர் மீண்டு எழுந்தருளும்போது, திருவண்ணாமலை சேர்ந்தபோதே ம. ரா. கு. இறைவனடியடைந்து விட்ட செய்தி சுவாமிகளுக்கு அறிவிக்கப்பெற்றது.

அடிகளார் மனங்கலங்கிக் கண்ணீரும் பெருக்கினர். திருக்கோவலூர் எழுந்தருளி மாணவர் குடும்பத்தவரிடம் பரிவுரை கூறியவுடன், ஆங்குத் தங்கியிருக்கப் பொறாராய்த் திருப்பாதிரிப்புலியூர் மீண்டருளினார்கள் வந்த சில நாள்களுக்குள் சுவாமிகளுக்கும் அவ்வாறே புறமுதுகிற் கட்டி தோன்றித் துன்புறுத்தியது, திருவருளும் குருவருளும் நலம் தந்தன.

புலிசை மடாலயம் திரு. ப. கந்தசாமி அய்யரவர்கள். இவர்களே பின் ஆறாங் குருநாதராகப் பட்டத்தி லெழுந்தருளியிருந்தவர்கள். திரு. ப. ஆறுமுக அய்யர், சோழ வல்லி- திரு. ப. பால சுந்தர நாயனார், தோட்டப்பட்டு-திரு. முத்துகிருஷ்ண ரெட்டியார், திரு. மு. சா. முத்து கிருஷ்ண அய்யர், காஞ்சிபுரம் திரு. சிவஸ்வாமி தேசிகர், கூடலூர் திரு. வடிவேல் செட்டியார், திருச்சி திரு. மு. நடேச முதலியார், திருவெண்ணெய் நல்லூர் திரு. வடிவேல் முதலியார், வண்டிப்பாளையம் திரு. பாலகிருஷ்ண முதலியார், தோணி-கந்தசாமி முதலியார், புலிசை-திரு. ஆ. பா. அரங்கைய பத்தர், திரு. ஆ. இரத்தினவேற் பிள்ளை, திரு. ஆ. இராஜேசுவரம் பிள்ளை, திரு. மு. நடராஜ தேசிகர், திரு. டாக்டர் இராமலிங்க செட்டியார் என்னும் பாப்பைய செட்டியார், வண்டிப்பாளையம் - திரு. ம. உருத்திர சாமி அய்யர், திரு. பாலசுப்பிரமணிய தேசிகர், திரு. பொ. இரத் தினசபாபதி முதலியார், திருக்கண்டேசுவரம்- திரு. T. M. ஜம்புலிங்க முதலியார், திருத்தினைநகர்-திரு. தம்புசாமி நாயுடு, வெள்ளையூர்-திரு. V.J. சொக்கலிங்க உடையார், திருவருணை-திரு. இரத்தினசபாபதி ஐயர், கோவல் வீரட்டானம் - திரு. துரைசாமி அய்யர், சென்னை திரு. துரைசாமி அய்யர், புதுவை - திரு. வீ. துரைசாமி முதலியார், புதுப்பேட்டை - திரு. சிவசிதம்பர செட்டியார், சிதம்பரம்-திரு.முத்தையா, முதலியார், பண்ணுருட்டி - திரு. இராஜகோபால் செட்டியார், காட்டுமன்னார்கோயில் - பண்டிட், P. மாணிக்கம் பிள்ளை, திரு. சங்கரய்யர் இவர்கள் பழைய மாணவராவர்.

ஸ்ரீ பாடலேச்சுரர் தரும பாடசாலையிற் பயின்று பின் வித்துவான் பட்டம் பெற்றவர்கள்:

திரு. ந. ஆறுமுக முதலியார், திரு. அ. நடேச முதலியார், திரு. பாலசுப்பிரமணிய தேசிகர், திரு. மதண்டபாணி முதலியார், திரு. முருகேச முதலியார், திரு. பழநியாண்டி முதலியார் முதலாயினோர்.

தனித்துச் சுவாமிகளிடம் நேரில் சிலகாலம் பாடம் கேட்டுப் பின் பட்டம் பெற்றோர்: திரு. முத்து இராசாக் கண்ணனார், M.A., B.O.L., திரு. மு. நடராஜ தேசிகர், திருவிடை மருதுர், திருமதி-இலக்குமித் தாயாரம்மை, சென்னை, க. பா. வேல்முருகன் முதலியோர். அவருள் முத்து இராசாக் கண்ணனார் என்பவர் சுவாமிகள் தம் மடாலயத்தில் 1941-ல் கந்தசஷ்டி விழா நாட்களில் ஆற்றிய சொற்பொழிவுகளைக் குறிப்பெடுத்து விரித்தெழுதிக் கந்தர் சட்டிச் சொற்பொழிவுகள் என்ற பெயருடன் வெளியிட்டார். திருவண்ணாமலையில், சுவாமிகள் அதைப் பார்த்து அணிந்துரையும் வழங்கினார்கள்.

1933-ல் நிறுவப்பெற்ற ஸ்ரீமத் ஞானியார் கலாசாலையில் புகுமுகத் தேர்விற்குப் பயின்றும் பின்னர் கல்லூரிகளிற் பயின்று புலவர் பட்டம் பெற்றும் சிறந்தோர் :

திரு. ஆ. சிவலிங்கனார், திரு. சுந்தரசண்முகனார், திரு. க. செந்தில் நாயக முதலியார், திரு. தண்டபாணி முதலியார், திரு. பா. ஏகாம்பரம், க. சம்பந்தம், மதுராந்தகம், திரு. ந. ஆறுமுக முதலியார், செங்கற்பட்டு, ந. திருநாவுக்கரசு, சென்னை, திரு. சக்ரபாணி (ஆயிரரூபா பரிசு பெற்றவர்), சிந்தாதிரிப்பேட்டை- சென்னை, திரு. வை. இரத்தினசபாபதி, எம்.ஏ.பி.ஓ.எல்., திரு. ப, திருநாவுக்கரசு, குடந்தை, திரு. நா. கருணாநந்தம், திரு. ந. தண்டபாணி, திரு. முத்தைய முதலியார், நெல்லிக்குப்பம், திரு. பா. செந்தில் நாயக நாயனார், திரு. தட்சிணாமூர்த்தி முதலாயினோர்.

பலர், உயர்நிலைப் பள்ளியிலும், சிலர் கல்லூரிகளிலும் பணியாற்றும் புலமை நிரம்பியவர்களாவர். அவ்வவரும் பற்பலரைத் தமிழ் பயிற்றுவிக்கும் பணிகளிலீடுபட்டுத் தமிழன்னைக்கு அரும் பணியாற்றியும் அருஞ் சமயத் தொண்டுகளி லீடுபட்டும் வருகின்றனர்.

சுவாமிகளிடம் பேரன்பு பூண்ட செல்வர் சிலர்

திரு. ஸர். பி. டி. ராஜன் அவர்கள், மதுரை

"⁠T.M. நாராயணசாமி பிள்ளை அவர்கள், திருச்சி

"⁠T. M. ஜம்புலிங்க முதலியார்.அவர்கள், திருக்கண்டேசுவரம்

"⁠T.M. பழநிசாமி முதலியார், திருக்கண்டேசுவரம்

"⁠ப.க. பழநியாண்டி முதலியார் "⁠ முருகேசநகர்

"⁠வெ. க. மாணிக்க முதலியார் "⁠ "⁠

"⁠T.M.தம்புசாமிநாயுடு "⁠ திருத்தினை நகர்

"⁠கிரந்தே - சிவசச்சிதா நத்த செட்டியார் அவர்கள், புதுவை

"⁠பங்காரு பத்தரவர்கள் ⁠"⁠

"⁠முனிசாமிப்பிள்ளை அவர்கள், பூரணாங்குப்பம்

"⁠இராஜகோபால் செட்டியார்.அவர்கள், பண்ணுருட்டி

"⁠சின்னசாமி ரெட்டியார், திருவெண்ணெய் நல்லூர்

"⁠நெ. சு. பொன்னுசாமி உடையார்அவர்கள் நெற்குன்றம்

"⁠மாசி உடையார் அவர்கள், சிறுமதுரை

"⁠T. V. ஆதிசேஷ முதலியார் அவர்கள் சென்னை

"⁠T. P. இராமசாமிப்பிள்ளை "⁠ "⁠

⁠(திருவொற்றியூரானடிமை)

"⁠சிம்புமல் செளகார் "⁠"⁠

முதலாயினோர்.

முடிவுரை : - சுவாமிகள் தமிழ்மொழியினிடம் அடங்காப் பற்றுக் கொண்டமையே இவ்வளவு அருந்தொண்டுகட்குக் காரணமாயின. மொழியின்றிச் சமயம் இல்லை. உலகெங்கும் சைவ சமயமே கடைப்பிடிக்கப் பெற்றிருந்திருக்க வேண்டு மென்பது அடிகளார் கொள்கை. அந்தப் பழஞ் சமயத்தோடு ஒன்றியுள்ளதே வைணவம். அவ்விரு சமயங்களும் இந்து மதத்தின் இருகண்களாம் எனச் சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

தாம் வீரசைவரே யாயினும் வைணவத் தொடர்பாகச் சொற் பெருக் காற்றுங்கால் அவர்களைச் சைவசமயி என எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். திருவரங்கத்திலும், திருவகீந்திர புரத்திலும் அடிகளார் பாராட்டப் பெற்றமையே இதற்குச் சான்று.

மார்கழி மாதம் சிறப்புடைய மாதம். அம் மாதத்தில் இந்துக்கள் யாவரும் ஆன்றோர் கடைப்பிடித்தவாறே பூசை, பாராயண முதலியவற்றை மேற்கொள்ள வேண்டுமென்பதை வற்புறுத்துவார்கள். சொல்லி விட்டால் போதுமா? தாமே அதற்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டுமெனக் கருதினார்கள். 1934ஆம் ஆண்டு முதல், மார்கழி மாத முழுவதும் காலை 6.00 மணிக்குச் சொற்பொழிவு தொடங்கி விடுவார்கள். மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல் பற்பல அன்பர்கள் வந்து கேட்டு மகிழ்வர். இவ்வாறு சுவாமிகள் ஒவ்வோராண்டும், தாம் எழுந்தருளும் இடங்களிலும் பணியாற்றுவார்கள். ஒவ்வொரு நாளும் - சைவத் தொடர்பான பாட்டு ஒன்று, வைணவத் தொடர்பான பாட்டு ஒன்று - ஆக இரு பாட்டுகளே விரித்துரைக்கப் பெறும். திருப்பள்ளி யெழுச்சி 10, திருவெம்பாவை 20, ஆக 30ம், திருப் பாவை 30ம் ஆக இருப்பதால் ஒரு மாதம் அவைவிரித் துரைக்கப் பெறும். தை விஷு புண்ணிய நாளில் நிறைவு விழா நடைபெறும்.

இதுவே, பாவை மாநாடுகள் நடைபெறுதற்கு அடிப் படையாய் அமைந்தது.

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் இந்நிலவுலகில் ஆற்றிய தொண்டுகள், இனி அவர் மரபினராலும், மாணவர்களாலும் ஆற்றப் பெறல் வேண்டுமென இறைவன் எண்ணியதன் பயனோ-ஏதோ ஒரு சில மாங்களுக்குள் பற்பல பணிகளையேற்றுக் கொண்டு, ஏற்றவற்றைக் காலங்கடவாமல் நிறைவேற்றிக் கொண்டு எழுந்தருளினார்கள்.

திருச்சிராப்பள்ளியில் சைவ சித்தாந்த மகா சமாஜ முப்பத்தாறாம் ஆண்டுவிழாவின் மூன்று நாள்தலைமை யேற்றருளிய பின், தைப் பூச நன்னாளில் பழநிப் பண்ணவனைப் பரவத் திருவுளங்கொண்டருளி வழிக்கொண்டார்கள். அங்ஙனமே சில நாள் கண்டு கண்டு, உருகி உருகி, அவனைத் திருவுள்ளத்தில் கொலு வீற்றிருக்குமாறு செய்து கொண்டார்கள். 31-1-1942 மாலை அவனருள் வலத்தால் தெய்வத் திருவாக்காகச் சுவாமிகள் திருவாயமுதம் ‘சிவராஜ யோகம்' என்ற தலைப்பில் எழுந்தது. இந்த வேண்டுகோள், பழநியிற் பரமகுருவின் பாததாமரையல்லாது வேறு பற்றில்லையெனத் தாமும் உணர்ந்து, மன்பதைகட்கும் உணர்த்தி உலாவிக் கொண்டிருந்த ஸ்ரீசாது சுவாமிகளுடையது. சொற்பொழிவு முடித்துக் கொண்ட பின், வெள்ளி இரதக் காட்சி, அதன் பின் மலையேறி ஆண்டவனுடைய அர்த்த ஜாம தரிசனம், எழுந்தருளியிருந்த சிவகங்கை ஜமீன் தாரவர்களின் விடுதிக்கு மீளும் போது இரவு 12 மணிக்கு மேலாகி விட்டது.

அதிகாலை 3 மணிக்குப் பயணமெனக் குறிப்பிட்ட நேரத்திற் புறப்பாடு. நீ வந்த வேலைகளை முடித்துக் கொண்டு விட்டாயா? புறப்படு, புறப்படு. என்னைவிட்டு எங்கே புறப்பாடு? என்று ஆண்டவன் கூறிய குரல் உள் அந்தரங்கத்தில். 'ஆம் க. அரங்கசாமி முதலியார் மகள் திருமணம்! காமாட்சி திருமணம் முன்னரே கட்டுரை எழுதிக் கொடுத்து அச்சாகிவிட்டதே! அந்தத் திருமணத்தை நடத்தி வைக்க ஒப்புக் கொண்டவாறு செல்ல வேண்டாமோ? அடிகளார்வினா. 'செல்வதா? போதும் போதும் சென்று, சென்று திக்கெட்டும் தமிழ் பரப்பியது போதும் இனி உன் அன்பர்கள் அப்பணியை ஈடேற்றுவர். இனி தமிழ் - அதுதான் அமிழ்து அரியணை ஏறும். போதும் நீ அலைப் புண்டது' இது ஆண்டவன் கட்டளையாயிற்று.

ஒப்புக் கொண்டால் அதை எந்த உடல் நலக்கேடு தடுத்தாலும், பிற எந்த இடையூறு நேர்ந்தாலும் உறுதியுடன் பணியாற்றும் திருமேனி! இனித் தாங்காது எனப் பழநியாண்டவன் நினைத்தான். அந்த உள்ளததிலும் ஓர் கலக்கம் உறுதி வென்றது. மேனாவில் எழுந்தருளினர். வழக்கம் போல் சண்முகா சண்முகா தான். அவனையன்றி இப் பூதவுடலுக்கு இயக்கம் ஏது? 8 மைல் விஷு (விஷமே தான் மற்றை யோர்க்கு, அண்ணலுக்கு அதுவே அமுதம்)ஆண்டு, தைப்பூசம் (31-1-1942) பொழுது புலரவில்லை.

கலங்கினர் போகிகள் - திருக்கோவலூர் மடாலய பூசகர், சொக்கலிங்க அய்யர் ஆகியோரைப் பார்த்து, 'ஏன் கலக்கம்? முருகன் திருவருள் இங்ஙனமாயின் அதற்கு நாம் என்ன செய்யக்கூடும்?’ என்ற ஆறுதல் மொழிகள்.

காலைக் கடன்கள், உடல் நலமில்லையென்று திரு. அரங்கசாமி முதலியாருக்கு அறிவியுங்கள் எனத் திருவாக்கு எழுந்தது, ஒரு வாய் வெந்நீர் அருந்தினார்கள். அடுத்த வாய் உள்ளே இறங்கவில்லை. திருவருள் தடுத்தாண்டு தன் திருவடிகளில் அணைத்துக் கொண்டுவிட்டது.

முதற் குருநாதர், ‘பரமென விளங்கும் புதல்வன்’ எனப் பழநியாண்டவனால் அவரது முன்னோர்க்கு அருளிச் செய்யப் பெற்றதன்றோ? அந்த முதற் குருநாதரே தான், சீர் கெட்டிருந்த மடாலயத்தைச் செம்மைப் படுத்தவும், அழிந்து போகும் நிலையிலிருந்த தமிழைக் கொலு வீற்றிருக்கச் செய்யவும் எழுந்தருளினார்கள். அந்தத் தைப் பூசத்திலே - பழநியம் பதிச்சூழலிலே பரம் பொருளுடன் கலந்தார்கள் என்று கூறத் தயக்கம் ஏன்?

சற் புத்திர மார்க்கத்தை உலகினுக் குணர்த்த முருகக் கடவுளே - அபர சுப்ரம்மண்ய மூர்த்தியே - திருஞான சம்பந்தராக வந்தருளியமை உலகறிந்த செய்தி. அவர் திருமணக் கோலத்தோடு சோதியிற் கலந்த நாள் வைகாசி மூலத்தில் சுவாமிகளது தோற்றம்.

திருப்பாதிரிப்புலியூர்க் குருபீடங்கள் எழுந்தருளியிருக்கும் கோயிலில் இரண்டாம் குருநாதர் மூலவர், மூன்றாமவர் திருநந்தி தேவர், நான்காம் சுவாமிகள் திருச்சுற்றில் விநாயகர் இருப்பிடமான வலப்பக்க மூலை. நம் ஐந்தாம் சுவாமிகளுக்கு முருகன் எழுந்தருளும்இடம் இடப்புறத்துப் பிரகார மேற்கே. இந்தவாய்ப்பினையும் நாம் கருதுங்கால் சுவாமிகள் முருகனேயன்றி வேறல்லர் என்பதை உணர்கிறோம்.

அவர்கள் ஏற்றி வைத்த ஒளி விளக்குகள் யாண்டும் ஒளி பரப்புகின்றன. அவ்வொளி விளக்குகள் ஒவ்வொன்றினும் பற்பல விளக்குகள் ஒளிரத் தொடங்கிவிட்டன. திக்கெட்டிலும் நெடுந்தூரம் ஒளி கான்று கட்புலனாகும் திருவருணைத் திருக்கார்த்திகை விளக்கெனவே புகழ் பரவி யாவர்க்கும் கட்புலனாகாமல் தோன்றாத் துணையாகி நிற்கும் எம் சுவாமிகளின் திரு நாமம் யாண்டும் ஒலிக்க அவர் திருவுள்ளம் பரந்தவாறே தமிழமுதம் யாங்கணும் மாந்தப் பெறுக ! அவர்களது ஆன்மலிங்கக் கோயில் ஒளி வீசித் திகழ்ந்தாங்கே சிவமணம் - தமிழ் மணம் - யாண்டும் என்றும் பரவுக !

வாழ்க அவர்களது திருநாமம்

சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க.

முற்றும்

சில கட்டுரைகள்

சிவத்திரு ஞானியாரடிகள் ஐந்தாம் குருமூர்த்தமாக எழுந்தருளி அருளாட்சி நடத்தி ஐம்பது ஆண்டுகள் நிறைந்து பொன்விழா நடைபெற்றது. அப்போது பல அன்பர்கள் அடிகளார் அருள்நலம்பற்றிப் போற்றிப் புகழ்ந்தனர். அவருள் சிலர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

1. ஞானியார் மடத்தில் பொன்விழா

(திரு. வி. கலியாணசுந்தர முதலியார்)

நமது நாட்டில் அறப்பள்ளிகள் பல உண்டு. அவைகளுள் ஒன்று திருக்கோவலூரிலிருப்பது. அஃது ஆதி ஞானியாரால் காணப்பெற்றது. அதன் தொடர்பு கொண்ட பள்ளி திருப்பா திரிப்புலியூரில் திகழ்வது.

இப்பொழுது கோவற்பள்ளித் தலைவராக வீற்றிருப்பவர் ஞானியார் சுவாமிகளென்னும் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். சுவாமிகள் அப்பள்ளித் தலைமை ஏற்று அரை நூறாண்டாகிறது. ஆகவே பொன் விழா எங்கணும் பொலிவதாக.

ஞானியார்சுவாமிகளை யான்கால்நூற்றாண்டாக அறிவேன். சுவாமிகள் அடியின்கீழ் நின்று பேசும் பேறும், அவருடன் நெருங்கி உரையாடும் பேறும் எனக்குப் பல முறை வாய்த்ததுண்டு. அடிகளின் ஆசி பெற்றவருள் சிறியேனும் ஒருவன்.

முருகன் சேவடி வருடியுருகும் ஈரநெஞ்சம் அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறுதுதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங் குஞ் செவியும், பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக் கதிர் விரிக்குந் திருமேனியும், 'சண்முகா - சண்முகா' என்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளின் திரு வோலக்கப் பொலிவும், என்னுள்ளத்தில் ஓவியமெனப் படிந்து நிற்கிறது. அஃது எவர் உள்ளத்தையுங் கவரும்; எவர்க்கும். எளிதில் இன்பூட்டும்.

ஞானியார் சுவாமிகளின் புலமை வியக்கத்தக்கது. அவர் தமிழில் பெரும் புலவர்; வடமொழியில் வல்லவர்; ஆங்கிலமும் தெரிந்தவர்; காலக் கலையில் பண்பட்டவர்.

பழம்பெரும் புலவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தத்தம் நுண்மதியை விளங்கச் செய்து சென்றனர். அப்புலவர் பெருமக்களின் கலைகளெல்லாம் ஞானியார் சுவாமிகளிடத்தில் மருவி நிற்கின்றன. அம் மருவல் இக்காலத் தமிழகத்தின் திருவென்றே கூறுதல் வேண்டும்.

ஞானியார் சுவாமிகள் மாணாக்கருக்குப் பாடம் சொல்லும் போதும், சொற்பொழிவு நிகழ்த்தும் போதும், தொல் காப்பியனாராகவும், நக்கீரராகவும், திருவள்ளுவராகவும், இளங்கோ அடிகளாகவும், கச்சியப்பராகவும், கம்பராகவும், சேக்கிழாராகவும், வியாசராகவும், நீலகண்டராகவும், சிவ ஞான முனிவராகவும் பிறராகவும் முறையே விளங்கி இலக்கிய இலக்கண சாத்திர நுட்பங்களை வெளியிடுவதைக் கேட்டுக் கேட்டுப் புலவரானவர் பலர். பழம் புலவர் பலரும் ஞானியார் ஒருவரிடம் விளங்குதல் வியப்பன்றோ?

கோவலடிகளின் பேச்சுத் திறத்தை என்னென்று சொல்வேன் ! அதைச் சிறப்பிக்க எனக்குச் சொற்கள் கிடைக்கவில்லை, என் செய்வேன்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவன்மையிற் சிறந்தவர் இருவர் என்று சொல்லப்பட்டனர். அவர் கிளாட்ஸ்டனும் சுரேந்திர நாதருமாவர். அவ்விருவர்தம் நாவன்மை ஞானியார் நாவன்மையைக் கண்டதில்லை; கேட்டதில்லை; கண்டிருப் பின் - கேட்டிருப்பின் வணக்கஞ் செய்திருக்கும்.

சுவாமிகள் அறப்பள்ளித் தலைமை ஏலாது, உலகியலில் நுழைந்து, ஆங்கில நாவராய், உலகை வலம்வந்திருப்பரேல், அவர் கிளாட்ஸ்டனும், சுரேந்திரநாதரும் சேர்ந்த ஒருவர் என்று போற்றப்பட்டிருப்பர். கோவற்பள்ளி, சுவாமிகளைச் சிறைப் படுத்தி விட்டது.

சுவாமிகளின் பேச்சுத்திறனை எதற்கு ஒப்பிடுவது? கடல்மடைத் திறப்புக்கா - வெண்கலக் கோட்டையில் அரசுவா புகுதலுக்கா-பெரும் புயலுக்கா- ஓயா மழைக்கா? எதற்கு - எதற்கு ஒப்பிடுவது? பலர் பலவாறு கூறுப.

திருப்பாதிரிப் புலியூரில் வீற்றிருந்து அடியவர்க்கருள் புரியும்கோவலடிகள் கருமைபூத்த ஒரு பொறுமை மலை, அம் மலையினுச்சியில் - மூளையில் - கலை மேகங்கள் பொழிந்த அறிவு மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங் கொண் டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து அருள் அலை கொழித்துக்கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கிலெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத் தன் தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலுறும் மின்விசையால், பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது. திருப்பாதிரிப்புலியூரில் பலதிற விழாக்கள் நடைபெறும். அவ் விழாக்களில் கலந்து கொள்ளப் போதரும் அடியவர் 'ஞானியார்' மடத்தில் அமுதுண்பர். அவ்வேளைகளில்அடிகள் சோறிடுந் தொண்டர்களுடன் தாமும் ஒருவராகக் கலந்து அடியவர்க்கு இன்சொலால் அமுதூட்டுவது நாடறிந்த தொன்று.

சுவாமிகள் தென்னாட்டிலுள்ள பலதிருப்பதிகள் சென்று, இறைவனை வழிபட்டு, ஆங்காங்குள்ள மக்கட்கு நல்லுரை பகர்ந்து தமிழுக்கும் செந்நெறிக்கும் ஆக்கந் தேடியதை அறியாதாரில்லை. -

அடிகளிடத்துப் பல நல்லியல்புகள் செறிந்து கிடக்கின்றன. அவைகளுள் குறிக்கத்தக்கன கருத்து வேற்றுமைக்கு மதிப்பளித்தல், அவ் வேற்றுமை காரணமாகப் பிணங்காமை, சமயப் பூசல்களில் மனஞ் செலுத்தாமை, பொது நோக்கு, எவர்க்கும் எளியராந்தன்மை, பொறுமை, இன்ன பிற, இவ்வியல்புகளே பெரிதும் அடிகளிடம் என்னை அணுக்கனாக்கின என்று கூறல்மிகையாகாது.

சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ஆண்டவன் அருள்வழி நின்று, ஐம்பதாண்டாகத் தம் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், தமிழ் நாட்டைட் பல வழியிலும் ஓம்பிய ஒருவர் - ஓர் அறவோர் - ஒரு பெரு தொண்டர். அவர் தம் அறத்தொண்டு மேலும் மேலும் ஓங்கி வளர்தல் வேண்டும். அறுமுகப் பெருமான் அருள் சுரப்பானாக சுவாமிகளுக்கு எனது வணக்கம்.

ஓர் உண்மை – ஞானி

(ஏஸ். வையாபுரிப் பிள்ளை)

திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான தேசிக மூர்த்திகளின் சிறப்பியல்புகளை யெல்லாம் ஒருசிறு சொற்றொடரால் அடக்கிக் கூறுதல் எளிதன்று. எனினும் அவர்களை "உண்மை ஞானி’ என்று கூறுவோ மாயின், அச்சிறப் பியல்புகளிற் பெரும்பாலனவும் அதன்கண் அடங்கி விடுமென்றே கருதுகின்றேன். இதனைக் காட்டிலும் வேறொரு தகுதியான தொடரைக் காணுதல் அரிது.

ஞானியார் சுவாமிகளைத் தரிசித்தவுடன் ஒருவனுக்கு முற்படத் தோன்றுவது அவர்களது அன்புடைமையாகும். தம்மிடம் வருபவர் யாரேயாயினும், அவர்களிடம் தமது முழு அன்பையும் காட்டி அவரவர்களுக்கு வேண்டும் நன்மொழி கூறி, அவர்களையும் தமது கருணை நோக்கினால் பரவசப்படும்படி செய்யுங் காட்சியானது ஒவ்வொருவரும் கண்டு மகிழ்தற்குரியது. காண்போர் மனத்தில் மேலெழுந்தும். அடி தாழ்ந்தும் நிலையாக உறைந்து வரும் தீக்குணங்களனைத்தும் உருத்தெரியாதபடி மறைந்து விடுகின்றன. சுவாமிகளுடைய அன்பு நம்மை அடிமையாகச் செய்து விடுகின்றது.

‘அன்பென்ப தொன்றின் தன்மை அமரரும் அறிதல் தேற்றார்" என்று கம்பர் கூறியிருப்பது எவ்வளவு உண்மையான தென்று சுவாமிகளுடைய சந்நிதியிலேயே தெரிந்து கொள்ளலாம்.

இனி இரண்டாவதாக நமக்குத் தோன்றுவது சுவாமிகள் மனமொழி மெய்களில் தூயராய் இருக்குந் தன்மை. இளம் பருவந்தொட்டே தமது வாழ்க்கையைப் பண் படுத்தி, எவ்வகையான தீய இயல்புகளும் தம்மை அணுகாதபடி பாதுகாத்து, மாசின்றி விளங்குந் திங்கள் போலச் சாந்த மூர்த்தியாய்ச் சுவாமிகள் விளங்குகின்றார்கள். அவர்களைக் காணச் செல்லும் போது சகல மங்கள குணங்களுக்கும் உறைவிடமாகிய இறைவன் இருக்கும் திருக்கோயிலுக்குச் செல்வது போன்ற ஓர் உணர்ச்சி நமக்கு உண்டாகின்றது.

மூன்றாவதாக நாம் காணும் சிறப்பியலாவது சுவாமிகளுடைய பதி ஞானமும் பத்தியுமாகும். "தெய்வமொடு நீயுறையுந் திருக் கோயில்" என்று ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் கூறுகின்றார்கள். தெய்வத்தோடு உடனுறையுந் தெய்வமெனச் சுவாமிகளைக் கூறினால் அது மிகவும் பொருத்த முடைய தாகவே தோன்றும், சாஸ்திர ஆராய்ச்சி, சாஸ்திர உபதேசம், சிவ பூசை முதலிய சிறந்த செய்கைகளின் மயமாகவே அவர்களுடைய வாழ்க்கை இருந்து வந்திருக்கிறது. பிறரை இழித்துப் பேசுவதும், பிறர் யாது செய்கின்றார்கள் என ஒற்றாள் மூலமாய் ஒற்றியுணர்வதும், தம்மை யொப்பார் பிறரில்லை யென்னும் தருக் குணர்ச்சியும், தாம் விரும்பாதனவற்றைப் பிறர் செய்வாயின் அவர்களுக்கு நரகங்களைச் சிருட்டிக்கும் அமானுஷ்ய விருப்பமும், பொறாமையும், தம் பெருமையை நோக்க உலகம் தம்பாற் காட்டும் மதிப்பும் நன்றியறிவும் மிகச் சிறிதென் றெண்ணி அவ்வுலகத்தோடு தீராப் பகை கொண்டிருப்பதும் ஆகியவற்றையே சிறப் பியல்புகளாகக் கொண்டுள்ள பெரியோர்கள் வாழும் நமது நாட்டில், சுவாமிகளைப் போன்ற பெரியோர்கள் ஒரு சிலர் இருப்பது பாலைவனத்திற்குள் பசும் புல்லின் திடர் காணுவது போல்வதாகும்.

சுவாமிகளிடத்தில் பரசமய தூஷணை யென்பது இல்பொருளாகும். தாம் மேற்கொண்டுள்ள சாஸ்திரக் கருத்துக்களின் சிறப்புக்களைக் கூறி வருவார்களேயன்றி, அந்நிய சாஸ்திரக் கருத்துக்களை யெடுத்து அவற்றின் கண் குற்றங்களை ஆரோபித்து 'ஸ்வமத ஸ்தாபனம்’ என்னும் இயல்பு அவர்களிடத்து இல்லை. இதனால் அந்நிய சாஸ்திரங்கனை அவர்கள் கற்றறியாதவர்களென்றும் எண்ணுதல் தவறு. அவ்வகை சாஸ்திரங்களையும் நன்கு கற்றவர்களே யென்பது அவற்றின் கண் உள்ள நுட்ப விஷயங்களைக் குறித்து சுவாமிகளிடத்து விசாரிக்க லுற்றார் நன்கறிவர்.

சுவாமிகளது தெய்வபக்தி போலித்தன்மையுடையதன்று, உலகத்தை வஞ்சித்து, மதிப்புப் பெறல் வேண்டித் தெய்வ பக்தியுடையார் போல்நடிக்கும் வேஷதாரிகளை நாம் மிகுதியாகக் காணுகிறோம். இவ் வேஷதாரிகளுள் ஒருவரல்லர் சுவாமிகள் அவர்கள் பக்தி செய்யு முறையினாலே இது அறியலாகும். நிறை குடம் நீர் தளும்பல் உண்டோ? உடல் பொருளாவியை இறைவன் பால் ஒருங்கு சமர்ப்பிக்கும் பக்தி; இவ்வரிய தன்மைகளை யுடையதாகும் சுவாமிகளது பக்தி.

இறுதியாக நாம் கூறவேண்டுவது உலகிலுள்ள வுயிர்களுக்குச் சமயத்தொண்டு புரிவதே உண்மையான பக்தியென்று சுவாமிகள் கொண்டுள்ளமை. இச் சமயத் தொண்டுக்குப் பயன்படும் படியாகவே தமது சமய சாஸ்திர ஞானத்தையும் அறிவாற்றல்களையும் பக்குவஞ் செய்து சுவாமிகள் வைத்திருக்கிறார்கள். இத் தொண்டு முக்கியமாக பிரசங்க ரூபமாகத் திகழ்கின்றது. இவ்வுயர்ந்த தொண்டிலே சுவாமிகள் ஈடுபட்டி ருக்கும்போது யாதொரு விதமான உபாதியும் எவ்வகையினும் அவர்களை அணுக இடங்கொடுப் பதில்லை. அவர்களது பொன்மொழிகளைக் கேட்கும் பேறு பெற்றவர்கள் அறிவு நிரம்பிய தத்துவ ஞானியாரவர்கள் என்பதில் தடையில்லை.

ஈண்டுக்குறித்த அன்புடைமை, தூயவொழுக்கம், பதிஞானம், பக்தி, சமயத்தொண்டு என்ற சிறப்பியல்புகளால் ஞானியார் சுவாமிகள் ஓர் உண்மை ஞானி யென்பது விளங்குகின்றது.

சுவாமிகள் பட்டத்திற்கு வந்து இப்போது ஐம்பது ஆண்டுகள் சென்றுவிட்டன. அவர்களை இன்னும் பல்லாண்டுகள் நம் பொருட்டு உதவவேண்டு மென்று இறைவனை நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.

பாவலர் போற்றும் நாவலர் திலகம்

ம. பாலசுப்பிரமணிய முதலியார்

ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள், திருக்கோவலூர் ஆதீனத்துப் பெருந் தவத்திரு அரசு கட்டிலேறி, ஞானச் செங்கோ லோச்சித் தமது சீடப் பெருங்குடி மக்களைச் சிவநெறிக்கண் நிறுத்தி, அவர்கட்கு நல்வாழ்வை அளித்து, ஆறெழுத் தருமொழியாம் சீருடைப் பெருவாளேந்தித், திரு நீற்றுக் கவசம் பூண்டு, மாயப்படை வாராமற் காத்துத் தமிழ் மண்டிலமெங்கணும் தாவிப் பரக்கும் பெரும் புகழுடையராகத் திருப்பாதிரிப் புலியூரில் வீற்றிருப்பது நண்பர்கள் அறிந்ததொன்று. சுவாமிகள் இவ்வாதீனத் தலைமை பூண்ட ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா திருப்பாதிரிப்புலியூரில் 1939௵ நவம்பர்௴ 18, 19-ம் தேதிகளில் கொண்டாடப்படும். அவ்விழாவிற் கலந்து கொண்டு நமது சமாஜம் ஒரு வணக்கப் பத்திரம் வாசித்தளிக்கும். அக்காலை நமது சமாஜத்தினர் பெருந்திரளாகக் கூடியிருந்து சுவாமிகளுடைய பொன்மொழிகளைச் செவிமடுத்துச்சுவாமிகள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பேரறிஞர் பலரும் பல கழகப் பிரதிநிதிகளும் வந்து நம்மோடு கலந்து கொள்வார்கள். இவ்விழாவின் நடைமுறை விவரங்களை மற்றோரிடத்திற் காண்க.

இவ்விழாவைக் கொண்டாடும் வகைகள் பலவற்றுள் ஒன்று சுவாமிகளுடைய குணாதிசயங்களைக் காய்தல், உவத்தல், கூட்டல், குறைத்தலின்றி உள்ளவாறே தெரிவித்தல். இம்முறையில் யான் அறிந்தவற்றைச் சுருங்கக் கூறுவது இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரையைக் கண்ணுறும் அன்பர்கள் தத்தம் கருத்துக்களைத் தெரிவித்து நன்றி செலுத்துவார்களென்று நம்புகிறேன்.

⁠1. சுவாமிகள் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் சிறந்த புலமையுடையவர்கள் என்பதை அனைவரும் அறிவர். தமது சொற்பொழிவுகளில் சுவாமிகள் கூறும் அடிப்படையான கொள்கைகட்கு வேதம், சிவாகமம், புராணம், திருமுறை, சித்தாந்த சாத்திரம் முதலியவற்றிலிருந்து தெளிவான ஆதாரங்கள் காட்டுவதை அறிஞர்கள் குறிப்பெடுத்துக் கொள்ளும் காட்சியை நம்மிற் பலர் பல முறை கண்டிருக்கிறோம். ஏனையோர் தங்கள் உபந்நியாசங்களில் பிரமாணங்களைக் கூறும்போது தங்கட்கு அவற்றின் பொருள் விளங்குவதாகப் புலப்படுத்துவதில்லை; கேட்போரும் பலர் உபந்நியா சங்களில் வடமொழிப் பிரமாணங்களும் பிறவும் கிளிப்பிள்ளை வாக்காகவே உபந்நியாசகர்களால் கூறப்படு கின்றனவோ என்று ஐயுற நேரிடுகிறது. சுவாமிகளுடைய உபந்நியாசங்களில் இவ்வித சந்தேகம் எஞ்ஞான்றும் எழுந்ததில்லை.

பற்பல உபநிடத மேற்கோள்களைப் பதம்பதமாகப் பிரித்துப் பொருள் கூறுவதோடமையாது அவற்றிற் கூறப்படும் உண்மைகள் புராணங்களில் எவ்வாறு உபப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளன. வென்பதையும், தேவார ஆசிரியர்களும் சந்தான குரவர்களும் அவைகளை எவ்வாறு அழகுபட விவரித்துள்ளார்கள் என்பதையும் சுவாமிகள் விவரிப்பதைக் கேட்கும் அன்பர்கள் "ஈதன்றோ செவிச் செல்வம், இத்தகைய சொற்பொழிவுகளை நமது செவிகள் கேட்கவும் பெறின், "மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்தமாநிலத்தே" என்று தமது நெஞ்சுக்குரைப்பார்கள். சுவாமிகள் வேத சிவாகம புராண வாக்கியங்களை விளக்குங்கால் வேதம் போம் வாயார் அங்காந்த வாயராகிப் பிரமித்துத் தம்பித்திருக்கும் காட்சியையும் நம்மிற் சிலர் காணும்பேறு பெற்றுள்ளோம்.

⁠2. சுவாமிகள் மிகத் தெளிவாகப் பேசும் பேராற்றலுடையவர்களென்பதை மகளிரும் சிறாரும் கூறுவர். முப்பொருளுண்மை அத்துவித இலக்கணம் போன்ற கடினமான பொருள்களை விளக்குங்கால் இருப்புக் கடலையை மெல்வது போன்ற துன்பமான முறையை அறவே விடுத்து மிகச் சுலபமான சொற்களால் பல சாதாரண உவமைகளின் துணை கொண்டு எளிய நடையில் பொருளின் நுட்பம், புதைந்த கருத்து, தருக்கமுறை முதலியவற்றைச் சுவாமிகள் விளக்கும் போது இளம்பிள்ளைகளும் பெண்மக்களும் கண் சாம்பாது முகஞ்சுளியாது ஒளிவீசுங் கண்களோடும் மலர்ந்த முகங்களோடும் செவிவாயாகச் சொல்லமிர்தம் பருகுங் காட்சியைக் கண்காள் காண்மின்களோ வேறு சிலர் உபந்நியாசங்களில் நுவலப்படும் பொருளை அறியமாட்டாது இடர்ப்பட்டுக் கேட்போர் பலர் தம்முள் வேறு பொருள்களைப்பற்றிப் பேசிச் சந்தடி செய்து கேட்கும் சிலரையும் கேட்கவொட்டாது தடை செய்யும் காட்சியைக் கண்காள் காணற்க 'அவையறிந் துரைத்தல்" என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் “ஒளியார்முன் ஒள்ளியராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்" என்னுங் குறளுக்கு இலக்கியமாயுள்ளவர்கள் சுவாமிகளேயென்பதைக் காண்டல் கருதல் உரையென்னும் மூவகைப் பிரமாணத்துள் காட்சியளவிலேயே அறியக்கூடு மென்பதை வற்புறுத்தவே காட்சிகள் சிவலற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கூறினேன்; பின்னும் கூறுவேன்.

⁠3. சுவாமிகள் தமிழில் நிரம்பிய பற்றுடையவர்கள் என்பதை யறியாதார் யாரேயுளர்? திருமுறைகளிலும் கந்தரநுபூதி போன்ற பனுவல்களிலும் சிவஞானச் செல்வர்கள் திருவாக்கிலுமுள்ள சொல்லாழம், பொருளாழம், சொன்னயம், பொருணயம் முதலியவற்றைச் சுவாமிகளைப் போல வேறு யாவரே எடுத்துக் கூறுவர்? ஒரு சொல்லின் முழுப் பொருளையும் முழு நயத்தையுமறிய ஒரு நாள் போதாதே சுவாமிகள் பெரிய புராணத்திற் சில செய்யுள்களையும் கந்தரநுபூதிப் பாக்களையும் பாடமாகக் கூறக்கேட்டோர் தாம் "கற்றது கைம்மண்ணளவு கல்லாதது கடலளவு” என்றல்லது வேறென்ன கூறுவர்? “தம்மினுங் கற்றாரை நோக்கிக் கருத்தமிழக எற்றே இவர்க்கு நாம் என்று" எனத்தமது மனத்துத் குரைத்தலைக் தவிர சுவாமிகளைக் கண்ட புலவர் வேறென் செயவல்லார்? கண்ணப்ப நாயனார் புராணப் பிரசங்கத்தில் நாயனார்க்குத் திண்ணன் என்ற பிள்ளைத் திருநாமம் ஏற்பட்டதை விளக்கித் தமிழ்ப்பற்றை யூட்டும்போது சுவாமிகள் தமிழார்வத்தைக் கண்டு மகிழாதார் யாவர்? பேபி யென்றும் ரோஸ் என்றும் அறியாது பெயரிட்ட தாய் தந்தையர் வெட்கித்தலை குனிவதைக் காணாதவர் யாவர்?

⁠4. சுவாமிகள் நுண்ணிய பொருள்களை விளக்குமிடத்தும் பிறாண்டும் எளிய உவமைகளைத் துணையாகக் கொள்ளும் பேராற்றலுடையவர்கள். சிலர் எளிய பொருள்களை விளக்கப் புகுந்துழி சிக்கலான உவமைகளை எடுத்துக் காட்ட முயன்று இடர்ப்படுவர். கண்ட உருவத்தைக் கொண்டு காணாத கடவுளையறிகிறயவன் புத்திசாலியென்று சுவாமிகள் கூறுவதுண்டு. இதற்குவமையாகப் பள்ளிக்கூடத்தில் இரண்டு பிள்ளைகளுள் பழகிய மாணவன் "ட" என்ற எழுத்தைப் பார்த்ததும் "ட" என்ற ஒலியை உச்சரிப்பதையும், பழகாத புதிய மாணவன் ஒருவன் அவ்வொலியை உச்சரிக்கமாட்டாது அவ்வெழுத்தைப் பார்த்து அது ஒரு கோடு என்பதையும் எடுத்துக்காட்டி, கோடு என்று எண்ணுவது பொய்யல்ல ஆனால் தாழ்ந்த அறிவுநிலை யென்றும், கண்ட எழுத்தைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாது காதுக்கே புலப்படும் ஒலியைறிவதே உயர்ந்த அறிவுநிலையென்றும், இவ்வாறே திருக்கோயிலிலும் உருவங்களைக் கல்லென்றும் செம்பென்றும் நினைப்பது தாழ்ந்த நிலையென்றும் கடவுளென்று தொழுவது உயர்ந்த நிலையென்றும் சுவாமிகள் மிகத் திறமையாக விளக்குவதைக் கேட்பவர் உள்ளம் கேட்குந் தோறும் பூரிக்கும். மும்மலங்களினுண்மைக்கு "அவன் ஆணவம் பிடித்துத் திரிகிறான்" "அவன் கருமம் அவனை விடுகிறதா", "அவன் மாயையிலே மூழ்கிக் கிடக்கிறான்" என்று தமிழ்நாட்டுக் கிழவிகளும் கூறும் பழக்கத்தைச் சுவாமிகள் சுட்டிக் காட்டுவதை நாம் பன்முறை கேட்டின்புற்றுள்ளோம். -

⁠5. சுவாமிகள் உபந்நியாசங்களில் அவ்வப்போது நகைச்சுவை பொருந்தப் பேசுவதையும் நாம் மறத்த லாகாது. சிலர் நகைச்சுவைக்கென்றே முயன்று வேண்டாத கிளைக் கதைகளை வருவித்துக் கொண்டு வீணாகப் பொழுது போகிறதே! யென்று அறிஞர்கள் நினைக்கும்படி செய்வதுண்டு. சுவாமிகளுடையை முறை அத்தகையதல்ல. தாழ்ந்த அருவ்ருப்பான பொருள்களை அறவே விடுத்துக் கற்பூரத்தில் தீப்பற்றுவதுபோல்புத்தி கூர்மைமிக்கவர்கள் சடுதியிற் பற்றி இன்புறக்கூடியவைகளாகவே சுவாமிகளுடைய நகைச்சுவை மொழிகள் மிளிரும். இவற்றைக் கோவையாக்கி ஒரு நூல் வெளியிடலாம். தாலிபுலாக நியாயமாக ஈண்டு ஒன்றே கூற விரும்புகிறேன். அஷ்ட புஷ்பங்களுள் ஒன்று பாதிரி. இதில் சிவப்புப் பாதிரி, வெள்ளைப் பாதிரி என இருவகையுண்டு. சிவப்புப்பா திரியே பூசைக்குகந்தது; வெள்ளைப் பாதிரி நீக்கப்படுவது இதைக் குறிக்குமிடத்து "வெள்ளைப் பாதிரி ஒவ்வாதது வேறொரு பொருளிலும் என்று சுவாமிகள் கூறியபோது குழுமியிருந்த கூர்த்தமதியினர் புன்னகை செய்தனர். ஏனையோர் புன்னகையின் காரணத்தையறியாது விழித்தனர். வெள்ளைப் பாதிரிப் புஷ்பமும் ஆகாத வஸ்து, நமது சமயத்தைக் குறைகூறி ஏமாற்றித் தாழ்ந்த வகுப்பினர்களைத் தனது சமயத்துக்கு ஈர்த்துச்செல்லும் வெள்ளைப் பாதிரியும் (வெள்ளைக்காரப் பாதிரியார்) ஆகாது என்றுணர்ந்தவரே புன்னகை செய்த வராவார்.

⁠6. இவ்வளவில் சுவாமிகளுடைய உபந்நியாசங்களின் தன்மை முதலியவற்றைச் சுருக்கிக் கொண்டு இனிச் சுவாமிகள் தமது சீடர்களோடும் ஏனைய அன்பர்களோடும் அளவளாவி நடந்துகொள்ளும் முறைகள் சிலவற்றைக் குறிக்க விரும்புகிறேன். முதன்முதலாவதாக நாம் கண்டு வியப்புறக்கூடியது சுவாமிகளுடைய ஞாபக சக்தி. உபநிடதங்களையும் தோத்திர சாத்திர பாடல்களையும் ஞாபகம் வைத்திருப்பதே நம்மிற் பலருக்கு அசாத்தியாமான காரியம். அவற்றோடு ஒவ்வொரு வருடைய வாழ்க்கை நிலைவிவரங்களையும் நினைவிருத்தி அவரவரோடு அளவளாவுங் கால் அவற்றைப் பற்றி விசாரிக்கும்போதும் சுவாமிகள் இனிய சொற்களால் மிகுந்த விநயத்தோடும் பரிவோடும் அவரவர்கள் சுகதுக்கங்களில் தமக்குள்ள ஈடுபாட்டைக் காட்டும்போதும் கேட்போர் மனங்குளிர்ந்து உவகை யெய்துவர். "சுவாமி குழந்தைபோலப் பேசும் என்று கூறாத கிழவியுமில்லை, குமரியுமில்லை. "சொல்லின் செல்வன்" என்று மேடைமீதேறிப் பிரசங்கம் செய்யும் ஆற்றல் மிக்கவர்களைப் புகழ்வதுண்டு, மேடை மீதிலும், மேடை விட்டிழிந்த பின்னும், மேடை மீதேறும் வரையிலும் எஞ்ஞான்றும் இன்சொற் பகர்ந்து செஞ்சொற் பெருக்கி வன்சொற்கடிந்து பொன்சொல் வழங்கும் சுவாமிகளுக்கே "சொல்லின் செல்வன்" என்ற பட்டம் பொருந்தும்.

⁠7. சுவாமிகள் சாந்தம், பொறை, வெகுளாமை முதலிய நற்குணங்கள் நிறைந்த தத்துவக் குணக்குன்றெனக் கூறல் மிகையாகாது. "யாகாவா ராயினு நா காக்க" என்ற முதுமொழியை வாழ்க்கையில் நடத்திக் காட்டும் உயர்வு சுவாமிகட்கேயுரித்து. சுவாமிகளிடம் உபகாரம் பெற்று வாழ்ந்தவர்கள், தங்கள் தீவினை வசப்பட்டு நன்றியை மறந்து மறம்செய்து தவறிழைத்துப் பின்னர் அரச தண்டத்துக் குட்பட்டுச் சரணாகதியென வந்த காலத்து நமது சுவாமிகள் தலைநாளிற் காட்டிய அன்புடனேயே அவர்களை ஏற்று மன்னித்த தெய்வச் செயல்களைப் புலிசைவாசிகளும் வேறு பல நண்பர்களும் நன்கறிவர். குறளர் ஒருவர் "கைதவமறியாச் செய்தவ முடையோய் நினது கடிதங் கண்டாம்” எனத் தொடங்கும் குறும்புக் கடிதமெழுதியதற்கு வெகுளாது அவரிடமிருந்து ஒரு மகாநாட்டைத் தலைமை வகித்துச் செம்மையாக நடத்திக் கொடுத்துப் பிறகு பத்தாண்டுகள் கழிந்த பின்னர் அன்னார் ஒரு கழகத்துக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்க்க வேண்டிய இச் செய்தியை வெளியிட்டு அன்னாருடைய உண்மை நிலையைப் பலர் அறியும் படி வெளிப் படுத்தியதைக் கண்டு அன்பரணை வரும் வியப்பெய்தினர். 1927௵ சென்னையில் சைவசித்தாந்த மகா சமாஜத்தின் கீழ்ச் சொற்பொழிவாற்றிய ஹைகோர்ட்டு ஜட்ஜி ராமேசம் அவர்கள் தமது சொற் பொழிவில்சுவாமிகள் திருவதனத்தில் சாந்தம் நிறைந்த பொலிவு காணப்படுகிறதென்று வாயாரப் புகழ்ந்து கூறியதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

⁠8. சுவாமிகள் இக்காலத்திய உலகப் போக்கை நன்கறிந்து அதற்கேற்பப் பிற மக்களோடு ஒழுகும் பேராற்றலுடையவர்கள். இக்காலத்திய துறவிகளில் இரு வகையினரை எளிதிற் காணலாம். பலர் நீறில்லாப்பாழ் நெற்றிராய் நாடோறும் முகக்ஷவரம் செய்த பொலி வுடையராய் உட்சட்டை மேற்சட்டை காற்சட்டை உடற்சட்டை மேற்போர்வை முதலிய ஆடைப் பெருக்குடையராய்ச் சமயப் பற்றை மட்டும்விட்டு ஏனைய பற்றுக்களை விடாதவராய்க் காணப்படுகின்றனர்; வேறு சிலர் ஜோசியம் சொல்லுதல், மருந்து தருதல், மந்திரித்தில் முதலிய பல தொழில்கள் செய்து செல்வர்களையடுத்து அவர்களுடைய பரிவார நிழலில் வாழ்கின்றனர். வேறு பல வகையான ஒழுக்கமுடைய கல்லாடை புனைந்த கள்வர்களுமுண்டு. இவர்களெல்லாம் உலகத்தோடு ஒட்ட ஒழுகுவோராகத் தங்களைக் கூறிக்கொள்வதண்டு. அறிவுபடைத்த உலகம் இவர்கள் ஒழுக்கத்தைத் துரும்பாக மதிக்கும். சுவாமிகள் இத்தகைய துறவிகளை நோக்க வேறொரு பிறவி, வேறொர் உலகத்தவர்என்றே கூறல்வேண்டும். இவ்விருபதாம் நூற்றாண்டில் காலம் தாழ்க்காது காரியங்களைச் செய்யும் கொள்கை வேரூன்றி வருகிறது. நமது சுவாமிகள் குறித்த கால வெல்லை களைப் பாராட்டி நடக்கும் நவநாகரிகம் நிரம்பப் பெற்றவர்கள். தங்களுடைய சமய ஒழுக்கத்துக்கும் துறவொழுக்கத்துக்கும் இன்றிமையாதனவற்றை ஒரு சிறிதும் நெகிழ விடாது ஏனைய வழிகளில் அன்பர்கள் விண்ணப்பத்துக் கிணங்கி அவர்களை மகிழ்வித்துத் தாமும் மகிழும் பெருமை வாய்ந்தவர்கள். சில அறிஞர்களைக் கழகங்கள் அழைப்பதென்றால் மிகுந்த பணச் செலவும் உடலூழியமும் வாய்ந்த ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். சுவாமிகள் அவ்வாறின்றி அன்பர் கட்கெளியராக விரும்பிப் போந்து தொண்டாற்றி ஆசீர்வதிப்பதைத் தமிழ்நாடு நன்கறியும். தங்கள் திருமடத்தில் அன்பர்களையும் காணவரும் பேரறிஞர்களையும் ஆரவாரமின்றி உள்ளன்போடு சுவாமிகள் உபசரிப்பதைக் கண்டு இல்லறத்தார் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

⁠9. சுவாமிகள் தம்மையடைந்த இளைஞர்கட்குக் கல்விபுகட்டி அவர்களை நல்வழிப்படுத்தித் தகுந்த உத்தியோகங்களில் தக்கார் துணைகொண்டு அவர்களை அமர்த்தி அவர்களுடைய நல் வாழ்க்கையைக் கண்டு இன்புறுவதை நம்மிற் பலரறிவர். சில பெரும் புலவர்கள் தம்மை யடைந்தவரை ஓம்பாது அவர்களைத் தங்கள் சாசுவத அடிமைகளாகப் பாவித்துத் தங்கள் புத்தக வேலை, அச்சுவேலை, ஆராய்ச்சி வேலை முதலியவைகளில் அவர்களைச் சிற்றாள்களாகப் பணிவித்து வேலைக்கேற்ற ஊதியமோ, புகழ்ச்சொல்லோ நன்றியோ செலுத்தாத வன்கண்ணராக வெறுக்கப்படுவதையும் நாமறிவோம். சுவாமிகளுடைய உதவியால் கல்வி பெற்றவர்களையும் வேலையிலமர்ந்தவர்களையும் இத் தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணலாகும். மந்திரி முதல் மந்தமதியிறாகவும் லக்ஷாதிபதி முதல் பிக்ஷாதிபதியிறாகவும் உள்ள பலதிறப்பட்ட பலதரமுடைய மக்களோடும் பழகி அவர்கள் நன்மதிப்பைப் பெற்றுத் தம்மையடைந்தவர்கட்கு உபகாரம் செய்யும் வழி அவர்கள் நட்பையும் தமது செல்வாக்கையும் பயன்படுத்திப் புகழ் கொள்ளும் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராகச் சுவாமிகள் திகழ்கின்றார்கள்.

⁠10. சுவாமிகள்தம்மையடைந்து வேண்டுவார் வேண்டுவதே ஈயும் கொள்கையுடையவர்கள். விரும்பிக் கேட்போர் வசதி ஒன்றையே நோக்கிக் தங்கட்கு ஏற்படும் சிரமத்தை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது கேட்போர் விண்ணப்பத்துக்கிணங்குவ தொன்றையே சுவாமிகளுடைய பெருங்கருணையறியுமல்லாது பிறிதொன்றில்லை. மிருகவைத்திய சாலையிற் பணி புரியும் நண்பர் ஒருவர் ஒரு சிறு நூலைப் பாடங் கேட்க விரும்பி நண்பகல் பதினெட்டு நாழிகையே தமக்கு வசதியான நேரமென்று தெரிவிக்க, அவருடைய வேண்டுகோளுக்கிறங்கி அவருடைய அறிவு நிலைக்கேற்ற முறையில் அச்சிறு நூலிலுள்ள செம்பொருள்கள் அனைத்தையும் பாடமாகச் சொல்லி முடித்து அவர்களைச் சுவாமிகள் ஆசீர்வதித்தார்கள். இவரைப் போல வேறு நூல்களைப் பாடங்கேட்டவர்கள் ஆயிரக்கணக்கிலடங்காதவர்கள். எவ்வித கைம்மாறுமின்றிக் கேட்போர் உயிர் நலமொன்றையே கருதித் தமது உயர்ந்த அறிவு நிலையி லிருந்து பல படிகளிறங்கிக் கேட்போர் நிலைக்கேற்ற சொற்கள், பொருள்கள் அவர்கட்குப் பாடஞ் சொல்லும் செயல் இறைவனது தடத்தலக்கணத்தை நினைவூட்டுகிறது.

சுவாமிகளுடைய குணாதிசயங்களைப் புகழ்வதற்கு என் போலியரால் இயலாது. இயன்றவரை சிற்சில கூறினேன். வேறு பல புலவர் பெருமக்கள் விரிவாக எழுதவும் பேசவும் கூடுமாதலின் இம்மட்டில் அமைகின்றேன். பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடிக்கக் கருதும் பூஞையின் ஆசை போன்றதே என்னை எழுதத் தூண்டியது.

தமிழ் நாட்டினரனைவரும் நமது சமாஜத்தினரனைவரும் ஏனை கழகங்களின் உறுப்பினரனைவரும் ஒருங்கே கூடி இக்கட்டுரையில் தொடக்கத்திற்குறித்த நிறைவு விழாவிற் கலந்து கொண்டு பாவலர் போற்றும் நாவலர் திலகமாகிய ஸ்ரீலஸ்ரீசுவாமிகள் நீடுழி வாழ்ந்து நமக்கு உய்யுநெறி காட்டும் உபதேச மொழிகளை எஞ்ஞான்றும் வழங்குமாறு ஞானபண்டித சுவாமிகளாகிய முருகப்பெருமானாரது முத்தி தரும் திருவடிகளை வாழ்த்தி வணங்குவோமாக. சுபம். ஆனந்த விகடன்

‘கல்கி' ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தியவர்கள் வெளியிட்டது.

சைவ சித்தாந்தமும், ஞானியார் சுவாமிகளும்

சில நாளைக்கு முன்பு நான் ஒரு சைவ சித்தாந்தியின் பிரசங்கம் கேட்டேன். பிரசங்கி, சர்க்கார் உத்தியோகம் பார்த்துப் பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கும் பெரியார். அவர் சைவ சித்தாந்தத்தின் அருமை பெருமைகளை விஸ்தாரமாக விவரித்தார். உலகத்தில் வேறு எந்த சமயமும் சைவ சமயத்துக்கு ஈடாகாதென்று விவாதித்தார். கடைசியில் ஆவேசம் வந்தவரைப்போல் “ஆகா இப்பேர்ப்பட்ட சைவ சித்தாந்தத்தை அந்த அடால்ப் ஹிட்லருக்கு யாரும் எடுத்துப் போதிப்பாரில்லையே? ஹிட்லர் மட்டும் சைவ சித்தாந்தத்தை அறிந்து கொண்டாரானால் இப்பேர்ப்பட்ட விபரீதமான காரியங்களைச் செய்வாரா? உலகத்தை யுத்தத்தில் ஆழ்த்து வாரா? அந்தோ பரிதாபம் என்று கதறினார். இதைக் கேட்ட சபையோரில் சிலர் கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தார்கள்.

ஆனால், எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவருக்கு மட்டும் பிரசங்கி சொன்னது பிடிக்கவில்லயென்று தோன்றிற்று, “ஆமாம், ஆமாம், ஹிட்லருக்குச் சைவ சித்தாந்தத்தைப் போதித்துவிட்டால் ரொம்ப நல்லதுதான். அவருடைய விரோதிகளைப்பீரங்கி வாயில் வைத்துச் சுடுவதற்குப் பதிலாகக் கழுவிலேற்றிக் கொன்றுவிடுவார் செலவு குறைச்சல்“ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார். (சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்ற கதையை நினைத்துக்கொண்டுதான் அவர்அப்படி முணுமுணுத்திருக்க வேண்டும்.)

எனக்கு அந்தசமயம் என்ன தோன்றிற்து என்பதையும் சொல்லிவிடுகிறேன். “ஆகா இந்த உலகத்திலே கடவுள் என்னென்ன அக்கிரமங்களையெல்லாம் வைத்திருக்கிறார்? எப்பேர்ப்பட்ட மூர்க்கர்களையும் மூடாத்மாக்களையும் படைத்திருக்கிறார்? எவ்வளவு பாவங்களையும், தீமைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்? அந்தோ அந்தக் கடவுளுக்கு மட்டும் சைவ சித்தாந்தத்தை யாராவது போதித்து விட்டால், இந்தமாதிரி அக்கிரமங்கள் எல்லாம் உலகில் நடக்குமா? ஐயோ! கடவுளுக்குச் சைவ சித்தாந்தத்தைப் புகட்டுவதற்காக இந்த சைவப் பிரசங்கியை உடனே கடவுள் பால் அனுப்பினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நான் எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.

விஷயம் என்னவென்றால், இந்த நாளில் நாமெல்லோரும் பிறருக்குப் போதனை செய்யவே தயாராயிருக்கிறோம். அந்தப் போதனையை நமது வாழ்க்கையில் கொண்டுவரத் தயாராயிருப்பதில்லை. மேற்படி சைவ சித்தாந்தப் பிரசங்கியை எடுத்துக்கொள்வோம். அவர் ஏன் சைவ சித்தாந்தத்தை ஹிட்லருக்குப் போதிக்க விரும்புகிறார்? நம் ஊரில் எத்தனையோ பேர் சைவ சித்தாந்தத்தைக் கரைத்துக் குடித்து விட்டிருக்கிறார்களே, அதன் பயன் என்ன? சைவ சித்தாந்தம் பிறந்த தமிழ்நாடு இன்று ஏன் அடிமை நாடாயிருக்கிறது? இங்கே ஏன் இவ்வளவு சாதி-மத-துவேஷங்கள் குடிகொண்டிருக்கின்றன? இந்நாட்டு ஜனங்கள் ஏன் அன்னிய பாஷை மோகத்தில் வீழ்ந்திருக்கிறார்கள்? இங்கே ஏன் இவ்வளவு வேஷதாரிகளும், வஞ்சகர்களும், தேசத் துரோகிகளும் இருக்கிறார்கள்? நம் ஊரில் நிலைமை இப்படி இருக்கும் போது, ஹிட்லருக்குச் சைவ சித்தாந்தத்தைப்போதிக்க மேற்படி பிரசங்கியார் இவ்வளவு கவலைப்படுவானேன்? இருக்கிறது; காரணம் இருக்கிறது. அடால்ப் ஹிட்லர் ஒருவேளை ஜயித்து, அதனால் பிரிட்டிஷ் சாம்ராஜய்த்துக்குக் கேடுவந்து, அதன் விளைவாகத் தம்முடைய பென்ஷனுக்கு ஆபத்து வந்துவிடப் போகிறதே என்று இந்தப் பிரசங்கிக்குக் கவலை! அந்தக் கவலையினால் தான் ஹிட்லருக்கே சைவ சித்தாந்தத்தைப் போதித்து விடலாமென்று அவர் ஆசைப்பட்டது. அதே காரணத்தினால்தான், சேம்பர்லினுக்கும் சர்ச்சிலுக்கும் அவர் சைவ சித்தாந்தத்தைப் போதிக்க ஆசைப்படவில்லை.

இம்மாதிரி எத்தனையோ சைவ சித்தாந்தப் பிரசங்கிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் அன்பு மதமாகிய சைவ சித்தாந்தத்தைப்பற்றித் தேனொழுகப் பேசுவார்கள்.

"அன்பும் சிவமும் இரண்டென்பர்அறிவிலார்

அன்பே சிவமாவதாரு மறிகிலார்

அன்பே சிவமாவதாரு மறிந்தபின்

அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே"

என்ற திருமூலர்பாட்டைச் சொல்லி, "இம்மாதிரி அன்பே கடவுள் என்று போதிக்கும் மதம் உலகத்தில் உண்டோ?” என்று கேட்பார்கள். ஆனால் விபூதிக்குப் பதிலாக நாமத்தைப் போட்டுக் கொண்டு ஒருவர் வந்துவிட்டால் அவரைச் சுண்ணாம்புக் காளவாயில் போடுவதற்குத் தயாராயிருப்பார்கள். !

தமிழ்நாட்டுச் சைவ சித்தாந்த பிரசங்கிகளில் சிலர் இங்கிலீஷ் பாஷையையும் கரைகண்டவர்கள். ஸ்பென்ஸர், ஹக்ஸ்லி முதலிய மேனாட்டுத் தத்துவ சாஸ்திரிகள் கூறிய முடிவுகளெல்லாம் சைவ சித்தாந்தததில் பொதிந்து கிடப்பதை அவர்கள் கண்டுபிடித்துச் சொல்வார்கள், டார்வின் கொள்கையை எத்தனையோ காலத்திற்கு முன்பு சைவ சித்தாந்தம் ஸ்தாபித்து விட்டது என்று நிரூபிப்பார்கள். ஆனால், தங்களுடைய உத்தி யோகத்திற்கோ, சம்பளத்துக்கோ, பென்ஷனுக்கோ ஏதாவது ஆபத்து வருவதாயிருந்தால், அதற்குக் காரணமாயிருப்பவர்களை ஒரு தடவையல்ல, ஏழு தடவை கழுவிலேற்றத் தயாராயிருப்பார்கள்.

இவ்வாறு சைவ சித்தாந்தப் பிரசங்கம் செய்பவர்களில் அநேகர், "சைவத்தின் உண்மையை அறிந்தவர்களுமல்ல." சைவத்தை வாழ்க்கையில் அனுஷ்டிப்பர்களுமல்ல’ என்ப தைப் பார்க்கிறோம்.

வைஷ்ணவ சித்தாந்த பிரசங்கம் செய்கிறவர்களும் சைவ சித்தாந்திகளுக்குக் கொஞ்சமும் மேற்படி விஷயங்களில் சளைத்தவர்கள் அல்ல. சைவ சித்தாந்திகளாவது மற்ற சித்தாந்தக்காரர்களைத்தான் சுண்ணாம்புக் காளவாய்க்கு அனுப்புவார்கள். வைணவ சித்தாந்திகளோ தங்களுக்குள்ளேயே வடகலையாரைத் தென்கலையாரும், தென்கலையாரை வடகலையாரும் கழுவேற்றத் தயாராயிருப்பார்கள்.

இதெல்லாம் பொதுவாக நாம் பார்த்திருக்கும் விஷயங்கள். ஆனால், விதி விலக்காக சைவத்திலும் வைஷ்ணவத்திலும் சில பெரியார்கள் இருக்கிறார்கள், அவர்கள் உண்மையாகவே சமய தத்துவங்களை உணர்ந்தவர்கள். சமய வாழ்க்கை நடத்துபவர்கள். இப்படி விதிவிலக்காயுள்ள சமயப் பெரியார்களுக்குச் சிறந்த உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமானால் திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீ ஞானியார்சுவாமிகளைத் தான் குறிப்பிடவேண்டும்.

அடிகளின் உருவத் தோற்றத்தைப் பார்த்ததுமே, “இதோ ஒரு பெரியார் இருக்கிறார்" என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகும். அவருடைய வாய் மொழிகளைக் கேட்டு அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனாகும். ‘அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா!" என்று எண்ணி எண்ணி வியப்போம்.

ஒவ்வொரு சமயமும் ஒரு தத்துவத்தை வெளியிடுகிறது: அத்துடன், ஒரு வாழ்க்கை முறையையும் உபதேசிக்கிறது. உலகத்தின் சிருஷ்டி மக்களின் வாழ்க்கை, கடவுளின் ஸ்வரூபம் இவற்றைக் குறித்துச் சொல்லும் பகுதி தத்துவப் பகுதி. சமய தத்துவத்துக்கிணங்க வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டு மென்றுபோதிப்பது அனுஷ்டானப் பகுதி. எல்லா சமயங்களிலும் போல் சைவ சமயத்திலும் இந்த இரண்டு பகுதி இருக்கின்றன. பசு, பதி, பாசம் (ஜீவாத்மா, பரமாத்மா, மாயை) என்னும் மூன்று அம்சங்களை சைவ சமயம் குறிப்பிட்டு, இவற்றுள் பதியிலிருந்து பசுவும் பாசமும் தோன்றிப் பதியிலே மறைகின்றன என்ற சித்தாந்தப் படுத்துகிறது. இது சைவ சமயத்தின் தத்துவப் பகுதி. பசுவாகிய ஜீவன் தன்ன்னையொத்த மற்ற ஜீவன்களிடத்திலெல்லாம் அன்பு செய்வதாலும், இறைவனை பக்தியினால் வழிபடுவதினாலும், அடியார்களுக்குத் தொண்டு செய்வதினாலும்; மாயை நீங்கிப் பதியை அடையலாம் என்று சைவ சமயம் போதிக்கிறது, இது அனுஷ்டானப் பகுதி.

மேலே நாம் பார்த்ததுபோல், சைவ சமயத்தின் தத்துவ ஆராய்ச்சியில் கரை கண்டவர்கள்தங்கள் வாழ்க்கையில் அச்சமய போதனையை அனுஷ்டிப்பதில்லை. சைவ வாழ்க்கை முறையைக் கைப்பற்றி ஒழுகும் பக்தர்களுக்கும் சைவ சமய தத்துவங்கள் தெரிந்திருப்பதில்லை. தத்துவமும் தெரிந்து வாழ்க்கையிலும் சைவர்களாயிருப்பவர்களுக்கு, அந்த் உண்மைகளை சகலரும் அறிந்து கொள்ளும் படியாக எடுத்துச் சொல்வதற்கு வேண்டிய வாக்குவன்மை இருப்பதில்லை. இந்த மூன்று விதமான பெருமைகளையும் உடையவர் ஸ்ரீ ஞானியார் சுவாமிகள். அவர் சைவ சமயத்தின் தத்துவங்களை நன்கு அறிந்தவர்; வாழ்க்கையில் அச்சமய போதனைக் கிணங்கி நடப்பவர்; சைவ சமயத்தின் தத்துவங்களையும், போதனைகளையும் பற்றி அபார வாக்கு வன்மையுடன் பிரசங்கம் செய்யக் கூடியவர்.

"சோனா மாரியாகப் பொழிவார்" "கடல் மடை திறந்தாற்போல் பேசுவார்" என்பதெல்லாம் சுவாமிகள் விஷயத்தில் உபசார மொழிகள் அல்ல. ஐந்து வருஷத்துக்கு முன்பு அவர்கள் பட்டினத்தடிகளைப் பற்றிச் செய்த பிரசங்கத்தை நான் கேட்டேன். அதில் அவர் கூறிய விஷயங்கள் இன்னும் என் மனதைவிட்டு அகலாமல் இருக்கின்றன. சிலபேர் பிரசங்க மாரி பொழிவார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது மட்டும் கேட்பவர்களுக்குத் தெரியாது, "பெரியவர் அபாரமாய் பேசினார்; ஆனால், அவ்வளவு பெரிய விஷயங்கள் நமக்கெல்லாம் புரியுமா?" என்று சொல்லிக் கொண்டு பேசுவார்கள். ஆனால், சுவாமிகள் பேச்சு இப்படியல்ல, அவர்கள் பிரசங்கத்தைப் படித்தவர்களும் ரஸிப்பவர்கள்; பாமரர்களும்விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்வார்கள். மணிமணியாக, முத்து முத்தாக சுவாமிகள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் மனதில் என்றும் அழியாதவாறு பதிந்துவிடும். எப்படிப்பட்ட சிக்கலான சமய உண்மையையும் சிக்கறுத்துச் சொல்வார்கள்.

"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

வாக்கினிலே ஒளி யுண்டாகும்"

என்னும் கவியின் வாக்கை சுவாமிகள் சொற்பொழிவுகள் மெய்ப்படுத்தும்.

ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் திருப்பாதிரிப்புலியூர்மடாதி பதியாகி இந்த மாதத்தோடு ஐம்பது வருஷங்கள் பூர்த்தியாகின்றன. இந்த ஐம்பது வருஷ காலத்தில் சுவாமிகள் ஆயிரக்கணக்கான சமயப் பிரசங்கங்கள் செய்திருப்பார்கள். லட்சக்கணக்கான ஜனங்களுக்கு சைவ சமயத்தின் உண்மைகளை எடுத்துப் போதித்திருப்பார்கள். எவ்வளவோ பேருடைய வாழ்க்கையைத்தமது உபதேசங்களால் புனிதப் படுத்தியிருப்பார்கள். சுவாமிகள் சமயப்பணி செய்வதுடன் தமிழ்ப்பணியும் செய்து வருகிறார்கள். எத்தனையோ பேருக்குத் தமிழ் அன்பையும், தமிழ் அறிவையும் ஊட்டி யிருக்கிறார்கள். அரசாங்க உதவியின்றி ஒரு தமிழ்க் கல்லூரியும் நடத்தி வருகிறார்கள்.

சுவாமிகளின் தமிழன்பு, தமிழ்ச் சுவையின் அனுபவ உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. "தமிழ், பரமசிவன் அருளிய மொழி என்பதற்காக மட்டும் அவர் தமிழைப் போற்றுகிறவர் அல்ல. இத்தகைய தமிழன்பர்களும் சிலர் இருக்கிறார்கள். பரமசிவன் அருளிய தமிழாயிருந்தாலும், அதில் வேறு தெய்வங்களைப் போற்றும் நூல்களை அவர்கள் மதிப்பதில்லை. இராமாயணத்தின் கதாநாயகன் இராமன் என்பதற்காகவே அவர்கள் கம்பராமாயணத்தை "மட்டம்" என்று தள்ளிவிடுவார்கள். ஆபாசங்கள் நிறைந்த எட்டாந்தர ஸ்தல புராணமானாலும், விஷ்ணுவைக் கொஞ்சம் மட்டந்தட்டியிருந்தால் அதைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள். ஸ்ரீ ஞானியார் சுவாமிகளின் ஆழ்ந்த தமிழன்பில் இத்தகைய குறுகிய சமயப் பற்று குறுக்கிடுவது கிடையாது. உண்மைக் கவிதைக்கும், வெறும் செய்யுளுக்கும் அவர்கள் நன்றாக வித்தியாசம் அறிந்தவர்கள் எதெதற்கு எந்த அளவில் மதிப்புக் கொடுக்க வேணுமோ, அவ்வளவுதான் கொடுப்பார்கள்.

இந்தியாவின் புராதனமான ஆதிசமயம், சைவ சமயம். உபநிஷதங்கள் கூறும் வேதாந்த மதமும் சைவ சமயமும் ஒன்றேதான் வடநாட்டார் கோதுமையை ரொட்டி தட்டிச் சாப்பிடுகிறார்கள். தென்னிந்தியர்கள் சிலர் அதே கோதுமையைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் இரண்டும் கோதுமைதானல்லவா? இவ்வாறே வட இந்தியாவில் வேதாந்தமாகத் தழைத்த சமயந்தான், தென்னாட்டில் சைவமாக வளர்ந்தோங்கிற்று. ஸ்நாதன தர்மத்தின் இந்த இரண்டு பகுதிகளுக்கும் பொதுவான ஒரு சிறப்பு உண்டு. வேதாந்த மதம் எல்லா மதங்களையும் கடவுளை அடையும் வழிகளாக ஒப்புக் கொள்கிறது: சைவ சமயமும் அவ்வாறே புதிதாக உண்டான மதங்கள் தங்களுடைய பெருமையை நிலை நாட்டுவதற்காகப் பிற மதங்களுடன் சண்டையிடுவது அவசியமாயிருக்கலாம். அந்த அவசியம் ஆதி சமயங்களுக்கு இல்லையல்லவா? அண்ணன் தம்பிகள் பாகப்பிரிவினைக்காகச் சண்டை போட்டுக் கொள்வது இயற்கை; ஆனால் தகப்பனாரே பிள்ளைகளுடன் பாகத்துக்குச் சண்டை போட்டால் அதைவிட மூடத்தனம் வேறென்ன இருக்கிறது? ஆகையினால்தான் வேதாந்தத்திலும் சைவ சமயத்திலும், "சர்வ மத சம்மதம்" என்னும் அரிய கொள்கையை நாம் காண்கிறோம். ஆனால், சைவத்தின் இந்தத் தனிப் பெருமையைக் குலைக்க விரும்பும் சில சைவப் பெரியோர்களும் இருக்கிறார்கள். மற்ற மதங்களைக் குறைத்துச் சொன்னால்தான் சைவத்தைப் பெருமைப்படுத்தியதாகும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் 'வீர சைவர்' ஆனபோதிலும் அத்தகைய வீரப் பிரதாபங்களை அவர்களிடம் காணமுடியாது. சர்வ மத சமரஸ் ஞானமுடைய உண்மை ஞானியார் அவர்.

"வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைபெற்ற

வித்தகச் சித்தர் கணத்"

தைச் சேர்ந்த பெரியார் என்றும் சொல்லவேண்டும்.

ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் பட்டத்துக்கு வந்த ஐம்பதாவது வருஷ பூர்த்திக் கொண்டாட்டத்தைச் சென்ற 18-19 ௳களில் சுவாமிகளின் சீடர்களும், தமிழன்பர்களும் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடினார்கள். முறையே அறுபதாவது, எழுபதாவது, எண்பதாவது வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களையும் நடத்துவதற்குத் தமிழ் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இறைவன் அருள்புரிய வேண்டும்.

சிவத்திரு ஞானியாரடிகளின்

பொன்விழா ஆசிமொழி

உலகம் உயிர் இறை என முப்பொருள் உண்டு. இவற்றினும் வேறு பொருளில்லை. இம்முடிபு வேதாகமாந்த முடிபு. ஆன்றோர்கள் அறுதியிட்டு அறைவது. இம்மூன்றனுள் உலகம் இருத்தலை மட்டும் உடையது; உயிர் இருத்தலையும் அறிவினையும் உடையது; இறையோ இருத்தலையும் அறிவினையும் இன்பத்தினையும் உடையது. உயிரினறிவு சிற்றறிவு. இறையறிவு முற்றறிவு. உலகம் அறியாமை உடையது. உயிர் அறிவும் அறியாமையும் உடையது. இறை அறிவினையுடையது. எங்கெங்கு அறிவு உண்டோ அங்கங்கு அநுபவம் உண்டு. அறிவினளவே இன்ப அளவு; நீரின் அளவே நீர்ப்பூவின் தண்டின் அளவு. அமுதுபடி வெண்ணிறம் உடையது. உயிர் அறிவினையுடையது. அமுதுபடியின் வெண்ணிறம் விளங்காதவாறு உமி மூடியிருக்கும். உயிரினறிவு விளங்காதவாறு அறியாமை மூடியிருக்கும். மூடியிருக்கும் உமி நீக்கத்தக்கது; மூடியிருக்கும் அறியாமை நீங்கத்தக்கதே. தானே உமி நீங்காது. தானே அறியாமை நீங்காது. குற்றுவோரின்றி உமி நீங்காது. ஞானாசாரியரின்றி அறியாமை நீங்காது. குற்றுவோர் ஒருமுறைக்குப் பலமுறை குற்றி உமியை நீக்கல்வேண்டும். ஒருமுறைக்குப் பலமுறை உபதேசித்து இறையாகிய ஞானாசாரியர் அறியாமையை அகற்றல் வேண்டும். குற்றுவோனுக்கு உமியைப் போக்க முழுப்பலம் வேண்டும். ஞானாசாரியர்க்கு அறியாமையைப் போக்க முழு ஞானம் வேண்டும். அமுது படியின் வெண்ணிறம் தானே விளங்காது. விளக்க விளங்கும். உயிரறிவும் தானே விளங்காது. விளக்க விளங்கும் உயிரினறிவை விளக்க மற்றொரு உயிர்க்கு ஆற்றலில்லை. சேற்றை மற்றொரு சேறு கழுவாது; தண்ணீர் வேண்டும். சீவகாருண்யம் உடைய இறைவேண்டும் உயிர்க்கு அறியாமையைப் போக்கவும் அறிவை விளக்கவும் இன்றிய மையாது இறைவேண்டும்.

ஒருவர்க்குக் குற்றும் ஆற்றலிருப்பினும்குற்றுந் தொழில் நிகழ்ந்தபோதே நெல்லுக்கு உமி போதலும் வெண்ணிறம் விளங்குதலும் நேரும். இறை தொழில் செய்தபொழுதே உயிரின் அறியாமை நீங்குதலும் அறிவு விளங்குதலும் ஆம். உருவமின்றி அறிவோடு கூடிய தொழில் நிகழாது. உருவம் வந்தபோது பெயர் வரும். எனவே, உரு, பெயர், தொழில் இம் மூன்றும் இறைக்கு இருப்பின் உயிர்க்கு அறியாமை நீங்கும்; அறிவு விளங்கும். இறையோ உருவொடு பெயர்தொழில் ஒன்றும் இலான். என் செய்வது உயிர்கள்? இந்நிலையில் இறை காரணம் பற்றாக் கருணையினால் உரு பெயர் தொழில் ஆம் இவைகளை மேற்கொள்ளுகின்றது. இறை உயிர்களின் நலம் பொருட்டுக் கொள்ளும் உருவமும் நிலையியலுருவமும் இயங்கியலுருவமும் என இரண்டு வகையாம். ஒன்று இருந்து நலஞ்செய; மற்றொன்று சென்று நலம் செய. இருந்து நலஞ்செயும் உருவம் இலிங்கம் முதலிய. சென்று நலஞ்செயும் இயங்கியல் உருவமும் குரு சங்கமம் என இரண்டு வகையாம். குரு வடிவம் தானல்லாத உடலைத் தானெனும் அகங்காரத்தைப் போக்க; சங்கம வடிவம் தனதல்லாத பொருளைத் தனது என்னும் மகாரத்தைப் போக்க அகங்காரம் மமகாரம் போக உயிர்க்கு முத்தி சித்திக்கின்றது. "யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த வுலகம் புகும்" என்பது திருவள்ளுவர் பொய்யாமொழி யன்றோ? இறைக்குள்ள வடிவங்கள் மூன்று. ஒன்று இலிங்க வடிவம்; ஒன்று குருவடிவம்; மற்றொன்றோ சங்கம வடிவம். மூன்றையும் குருலிங்க சங்கமம் என்று சொல்வது நூல் வழக்கும் உலக வழக்கும் ஆம். இம்முறை காரணத்தோடு கூடியதே. குருஇல்லையேல் இலிங்கத்தின் பெருமையும் அடியாருயர்வுந் தோன்றா. ஆதலின் குருவை முதலில் வைத்தனர். குரு என்பதன் பொருள்களுள் சிறந்தவை மூன்று. ஒன்று “கவுரமாயிருத்தலினாற் சிவாசாரியர்க்குக் குரு என்னும் இப்பெயர் எய்திற்று" இது லிங்கபுராணம் உத்தரகாண்டம் இருபதாவது அத்தியாம் 19-ஆம் சுலோகத்திற் கண்டது. மற்றொன்றுகு எனும் அஞ்ஞானத்தைப் போக்கிரு எனும் ஞானத்தைத் தருபவன் என்பது. "குகரம் அந்தகாரம். ருகரம் ஒளியாம். அதனால் குலவும் இருளோட்டியொளி கொடுப்பதுவே குருவாம்” (வீரசிங்காதன புராணம் வீரபத்திரச் சுருக்கம் 158ஆம் செய்யுள்) இன்னொன்று சம்ஸ்கிருத வாக்கியத்தாலும் பிராகிருத வாக்கியத்தாலும் தேவபாஷை முதலிய உபாயங்களாலும் சிஷ்யர்களறிவைத் தெரிந்து போதிக்கிறவனே குரு என்பது. இப்பொருள் வட மொழிச் சிவதருமோத்திரம் எனும் உபாகமத்திற் கண்டது.

குருவின் பெருமையுள் சில : “உயர்ந்த பக்தி எப்படி ஈசுவரன் மீது அப்படி குருவின் மீது“ - சுவேதாசுவதரம் ஆறாம் அத்தியாயம் “இஷ்டம் சித்தித்தற் பொருட்டுக் குருவைத் தியானிக்குக - தக்ஷிணாமூர்த்தியுபநிஷத். ‘பக்தியொடு தன் குருவை வணங்கி“ - கைவல்யோபநிஷத். “குருவினுரு வங்குறித்த அப்போதே திரிமலந் தீர்ந்து சிவனவனாமே“ - திருமந்திரம். “சிவனென யானுந் தேறினன் காண்க“ - திருவாசகம். “மன்னுமருட் குருவாகி வந்தவரினிக்கி, மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்“ - சித்தியார். “எட்டுதற்கரிய சற்குரு அருளால் இயம்புமோர் மொழியினைப் பெற்றே, நிட்டை சாதித்தே சகல கேவலங்கள் நீங்கிடிற் பிறப் பிறப்பறுமே” - நிஷ்டாநுபூதி. வேதாகமங்களின் முடிவிலுண் டாகும் ஐயத்தை அகற்றுபவன் குரு; இருட்பிணி அவிப்பவன் குரு; தன்னை உணர்த்துபவன் குரு; தலைவனை உணர்த்துபவன் குரு; இயமமாதிகளை வருவிப்பவன் குரு; பேரின்பத்தை யடைவிப்பவன் குரு. ஏனைய வடிவங்களினும் குருவடிவஞ் சிறந்தது. அடிமை என்று தன்னையறியாது தான்கொண்ட உடம்பே மேல் எனக்கருதுபவர்க்கு அமுதும் நீருந்தந்து பசி தாகங்களைப்போக்கித், தன்னை அடிமை என்று கருதினவர்கட்குப் பசி தாகங்களைப் போக்குவதேயன்றிச் சாத்திரோபதேசத்தால் இறைவனது இருவகை யிலக்கணங்களையும் உணர்த்திச் சாதனை வகையால் அநுபவத்திலிருத்திக் குரு மூர்த்தியிருக்கும்இடமே மடம் எனப் பெயர்பெறும். இங்ஙனம் கூறுவது காமிகாகமம். மடம் - முனிவாசப் பேர் என்பது மண்டல புருடோத்தமன் நிகண்டு.

இவ்வித மடங்களில் வசிக்குங் குரு மூர்த்திகள், வழிபாடு செய்து, தம் அடியார்களை வழிப்படுத்தத் தாம் வசிக்கும் மடத்தோடு ஆலயங்களை அமைத்தனர். அதனால் மடாலயம் எனும் வழக்கம் வந்தது முற்காலத்தில். “மடம் பெற்றபேறு திருக்கோயிற் கில்லையிம் மாநிலத்தே" என்பது பழைய பாட்டு. வடநாட்டிலும் தெனாட்டிலும் பல ஆயிர ஆண்டுகளாக மடாலயங்கள் உண்டு. இம் மடாலயங்களுள் ஒன்றே இந்த ஞானியார் மடாலயம். இத் தென்னடாம் தமிழ்நாட்டில் அடியார் பலர் சமய உணர்ச்சியிற் சிறந்து முத்தியடையதற்குச் சற்குருவை அடைந்து ஞானோ பாய சாதனங்களை அறிந்து சாதித்துப் பதமுத்தியையும் பரமுத்தியையும் அடைந்துவந்தனர். சுமார் 300 ஆண்டுகளின் முன்னர் அடியார் பலர் ஞானாசாரியர் இல்லாது தவித்தனர். அக்காலத்து முருகப்பிரான் திருவருளால் திருக்கோவலூரில் கலி 4774-ஆம் ஆநந்த௵ கார்த்திகை மாதம் கிருத்திகைத் திருநாளில் அருணையில் தீபம் விளங்குந்தருணம் குருமூர்த்தி அவதரித்தனர். இம்மூர்த்திகளே இம்மடாலய முதல் குருபரர். ஞானோபதேசம் செய்யவே அவதரித்தமையின் “ஞானியார்” எனச் சிறப்பாகச் சொல்லப்பெற்றனர். அம்மூர்த்திகள் வழிவழி வந்த எங்களிடத்தில் மெய்யன்பு நிறைந்த அறிஞர்பலர் இம்மடாலய ஆசாரிய சம்பந்தம் எங்கட்குக்கிடைத்து ஐம்பதாண்டு நிறைந்தமையை யுணர்ந்து பொன் விழாக் கொண்டாட முயன்று இன்றையதினம் செவ்வையாக நடத்துகின்றனர். அவ்வன்பர்கட்கு யாங்கள் செய்வது என்? குன்றுதோறமர்ந்து எங்கள் உள்ளத்திலும் குடிகொள் குமரவேளையும் அப் பெருமான் இருபாங்கரும் அமர் அன்னைமாரையும் குருமூர்த்திகளையும் எண்ணித், துதித்து, வணங்கி இவ்விழாவில் மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் முயன்று, பொருளையும் தந்து, கொண்டாடும் அன்பர் பலரும் அவர் தம்மைச் சார்ந்தாரும் வேண்டுவன பெற்று இன்புறச் செயல் வேண்டுமெனத் துதிக்கின்றோம். மெய்யன்பர்கள் பலரும் நன்று வாழ்குக. பல் ஆண்டு இன்பத்துடன் வாழ்குக அவர் தம்மைச் சார்ந்தாரும் . உலகம் வாழ்குக.

சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க.

சிவமயம்

சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க.

மடாலய வரன்முறை

முதற் குருமூர்த்திகள் : (மடாலயம் நிறுவியவர்கள்)

ஸ்ரீலஸ்ரீ - ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் தோற்றம், கலி 4774, ஆநந்த ஆண்டு, கார்த்திகை கிருத்திகை மாலை திருவிளக்கிடு நேரம்.

திருவருள் நிலையிலிருந்த காலம் : 97 ஆண்டுகள்

திருவருட் கலப்பு : கலி 4870, விகுர்தி மாசி 27௳ வியாழன்

இயற்றிய நூல்கள் : நிட்டானுபூதிசார முதலாம் 31 நூல்கள் . 1146 பாடல்கள்

இரண்டாங் குருமூர்த்திகள் : (சண்முக ஞானியார்)

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், பிள்ளைப்பெயர் முதலியன அறியும் வாய்ப்பில்லை.

அருளாட்சியேற்றமை : கலி 4870 விகுர்தி, மாசி 27 அநுடம் வியாழன்

அருளாட்சி : 63 ஆண்டுகள்.

திருவருட்கலப்பு : கலி 4933 நந்தன , கார்த்திகை, அசுவினி மூன்றாம் செவ்வாய்,

இயற்றிய நூல்கள் : விநாயகர் மாலை, முருகரந் தாதி முதலாம் 7 நூல்களும் 401 பாடல்களும் அறியக் கூடியன.

மூன்றாங் குருநாதர் :

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சங்கணவசவ மெய்ஞ்ஞான

சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், பிள்ளைப் பெயர் முதலியன அறியும் வாய்ப்பில்லை.

அருளாட்சியேற்றமை : கலி 4933, நந்தன, கார்த்திகை அசுவினி மூன்றாம் செவ்வாய்.

அருளாட்சி : 16 ஆண்டுகள்

திருவருட்கலப்பு : கலி 4949, கீலக புரட்டாசி கடைசிச் சோமவாரம்,

நான்காங் குருநாதர் :

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான

சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், பிள்ளைப் பெயர் முதலியன அறியும் வாய்ப்பில்லை.

அருளாட்சியேற்றமை : கலி 4949 கீலக, புரட்டாசி, கடைசிச் சோமவாரம்.

அருளாட்சி : 41 ஆண்டுகள்

திருவருட்கலப்பு : கவி 5090 விரோதி, ஐப்பசி 26௳ (10-11-1889) மிருக சீரிடம் ஞாயிறு.

ஐந்தாங் குருநாதர் :

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், கலி 4974, ஸ்ரீமுக, வைகாசி 4௳ வியாழன் மூல நாள் (17-5-1873)

பெற்றோர் : சிவத்திரு. அண்ணாமலைஅய்யர்

திருமதி. பார்வதியம்மையார்

பிள்ளைத் திருநாமம் : சிவத்திரு பழநியாண்டி அய்யர்

அருளாட்சியேற்ற நாள் : 4990 விரோதி,ஐப்பசி 26௳ (10-11-1889) ஞாயிறு.

அருளாட்சி : 53 ஆண்டுகள்

திருவருட்கலப்பு : கலி 5044, விஷு தைப்பூசம் 19௳ ஞாயிறு (1-2-1942)

இயற்றிய நூல்கள் : கிடைத்தவை:-

பாட்டுகள்

குரு துதி 49

ஞான தேசிக மாலை 23

திலகவதியம்மை துதி 7

----

79

புதிய நூல்கள் வேண்டாம்; ஆன்றோர் நூல்களைப் படிப்பதே போது மென்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்களாதலால், மேற் கூறிய சில துதிப் பாடல்களையன்றிப் பிற ஏதும் இயற்றத் திருவுளங்கொள்ளவில்லை போலும்.

ஆறாம் குருநாதர்

ஸ்ரீலஸ்ரீ சிவசண்மு சத்தியஞான சிவாசாரிய சுவாமிகள்

பெற்றோர் : சிவத்திரு - பழநியாண்டி அய்யர் (மாமா சுவாமி)

திருமதி-அமிர்தம் அம்மை யார் (மாமி)

தோற்றம் : விரோதி,பங்குனி 11, பானு வாரம், பரணி (23-3-1890)

அருளாட்சியேற்றமை : கலி 5044, விஷு தை (1-2-1942)

அருளாட்சி : 9 ஆண்டுகள்

திருவருட்கலப்பு : விகுர்தி, கார்த்திகை 29௳ வெள்ளி, சதயம் (15-12-1950)

பல திருப்பணிகளை நிறைவேற்றினார்கள்.

ஏழாம் குருநாதர் !

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக ஆறுமுக மெய்ஞ்ஞான

சிவாசாரிய சுவாமிகள்

பெற்றோர் : சிவத்திரு அண்ணாமலை அய்யர்

திருமதி சிவகாமியம்மையார்

தோற்றம் : கீலக சித்திரை3௳ புதன் அஸ்தம் (15-4-1908)

அருளாட்சியேற்றமை : விக்ருதி, கார்த்திகை 29௳ (15.12.1950)

அருளாட்சி : 36 ஆண்டுகள்

திருவருட்கலப்பு : 17.6.1986 (அட்சய ஆண்டு ஆனிமாதம் 3ம் நாள்)

எட்டாம் குருநாதர் !

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான

சிவாசாரிய சுவாமிகள்

பெற்றோர் : சிவத்திரு. ஆறுமுகம்

திருமதி தில்லையம்மாள்

தோற்றம் : 15.7.1934 (பவ ஆண்டு ஆனி 31௳)

அருளாட்சியேற்றமை : 18.5.1986 (அட்சய ஆண்டு ஆனி மாதம் 4௳)

24.10.1988 (விபவ ஆண்டு ஐப்பசி 8ம் தேதி) ஞானியார் மடத்தின் குடமுழுக்கும், மடாலயத்தில் எழுந்தருளியிருக்கும் அமி, சுப்பிரமணிய சுவாமிக்கும் குருமூர்த்தி தோட்டத்திலுள்ள 2முதல் 7வரை உள்ள குருமூர்த்தி சுவாமிகளுக்கும் குடமுழுக்கு பணி செய்துள்ளார்.

இந்நூலுக்கு ஆதாரமான நூல்கள்

1. மறைமலையடிகள் வரலாறு (1959) மறை. திருநாவுக்கரசு

2. சைவத்திரு ஞானியார் அடிகள் வரலாறு புலவர். க.பா. வேல்முருகன் (1973)

3. கோவில் ஆதீனக் குருமணி (1967) புலவர். க.பா. வேல்முருகன்

4. சைவ ஆதீனங்கள் ஊரன் அடிகள் (2002)

5. ஓம் சக்தி மாத இதழ் ஜூலை (1986)

6. கந்தர் சஷ்டி சொற்பொழிவுகள் (1941)

7. இதய ஒலி - டி.கே.சி. (1942)

8. புலிசை ஞானியார் அடிகளார் (1973) முனைவர். சுந்தர சண்முகனார்

9. ஞானியார் அடிகள் முனைவர். சுந்தர சண்முகனார் (1993)

10. தவத்திரு ஞானியாரடிகள் வெள்ளையாம்பட்டு சுந்தரம் (1982)

11. சித்தாந்தம் மாத இதழ் (சனவரி 2002)

12. முதல் குடி அரசு சில பிரச்சனைகள்-விமர்சனங்கள் (1988). முருகு. இராசாங்கம்

13. ஞானியார் அடிகள் நினைவுகள் (1995)